Friday, November 28, 2014

காவியத் தலைவன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
தமிழ் சினிமாவில் உள்ள மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான வசந்தபாலனின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் - நீரவ் ஷா - ஜெயமோகன் என பெருந்தலைகளின் கூட்டணியில் இன்று வெளியாகியிருக்கும் படம், காவியத் தலைவன்.
ஒரு ஊர்ல..:
நாடகசபா நடத்தி வரும் நாசரின் சீடர்கள் சித்தார்த்தும், பிருத்விராஜும். சீனியரான பிருத்விராஜுக்கும் சித்தார்த்திற்குமான இடையிலான நட்பும், உரசலும் தான் மையக்கதை. வெறுப்பையும் வஞ்சத்தையும் பிருத்விராஜ் வளர்த்துக்கொண்டே வர, அன்பை மட்டுமே பதிலுக்குக் கொடுக்கும் சித்தார்த் எனும் நாடகக் கலைஞனைப் பற்றிப் பேசுகிறது படம்.

உரிச்சா....:
உண்மையைச் சொல்வதென்றால், இந்தப் படத்திற்கு பயந்துகொண்டே தான் சென்றேன். ட்ரெய்லரைப் பார்க்கும்போது, படமும் நாடகம் போன்று இருக்குமோ என்ற பயம் இருந்தது. ஆனால் படத்தின் ஆரம்பத்தில் வரும் நாடகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் செம இண்டரஸ்ட்டிங். நாடகசபா நடத்தும் ஸ்வாமிகளாக நாசரும், அவரது சிஷ்யர்களாக ப்ருத்விராஜூம், சித்தார்த்தும் அந்த கேரக்டர்களாகவே மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள். நாசர் சித்தார்த்தை பாராட்டும்போதெல்லாம், ப்ருத்விராஜ் கடுப்பாவதை ஒரு சீனிலேயே புரிய வைத்துவிடுகிறார்கள்.

அடுத்து அதே நாடகசபாவிற்கு நடிகையாக வந்து சேர்கிறார் வேதிகா. அவர் மேல் ப்ருத்விராஜ் காதல் கொள்ள, அவரோ சித்தார்த்தை விரும்புகிறார். இது எதுவும் அறியாத சித்தார், ஜமீந்தார் பெண்ணான இளவரசியை காதலிக்கிறார். அந்தக் காதல் நாசருக்குத் தெரியவர, அதன்பின் நடக்கும் ரணகளம் அட்டகாசம். அந்தக் காதல் எல்லோருடைய வாழ்க்கையையும் புரட்டிபோடுகிறது. குறிப்பாக இண்டர்வெல் ப்ளாக் அருமை. அதுவரை படம் நல்ல விறுவிறுப்புடன் செல்கிறது.

நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை முறையை போரடிக்கமால் காட்சிப்படுத்தியிருப்பதும், அவர்களின் வித்யாகர்வமும் குருபக்தியும் அற்புதமாக திரையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ப்ருத்விராஜ் மனமாற்றத்தை ராவண ஓவியம் தீட்டப்படும் ஷாட்களுடன் சொல்வது அருமை.
ஆனால் இடைவேளைக்குப் பிறகு,  நாடகசபாவிலிருந்து விரட்டப்பட்ட சித்தார்த், மீண்டும் அங்கே வந்து சேரும் சீனுக்குப் பிறகு, ஒரு சலிப்பு வந்துவிடுகிறது. சித்தார்த் தேசபக்தி நாடகம் போடுவதும், போலீஸ் அவரை அடிப்பதும், மிரட்டுவதும் எவ்வித சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தவில்லை. கிளைமாக்ஸில் நாடகத்தன்மையே வந்துவிடுகிறது. கிளைமாக்ஸைவிட, ப்ருத்விராஜின் கிளைமாக்ஸ் நெஞ்சைத் தொட்டது.

கலை, இசை, எடிட்டிங், நடிப்பு, வசனம், இயக்கம் என எல்லாவற்றிலும் நல்ல குவாலிட்டி தெரிகின்றது. படத்தை ரசிக்க வைப்பதும் அது தான்.வசந்தபாலன் படங்களில் எதையும் நெகடிவ்வாக அணுகும் ஒரு போக்கு இருக்கும். இதில் அப்படியில்லாமல், பாசிடிவ்வாக படம் நகர்வது பெரும் ஆறுதல்.

கிட்டப்பா - கே.பி.சுந்தராம்பாள் காதல்கதையை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருந்தாலும், அந்த காதல்கதையில் விஷுவலாகக் காட்ட விஷேசமாக ஏதும் இல்லை என்பதே சோகம்!

சித்தார்த்:

இதுவரை ‘பாய்ஸ்’ சித்தார்த்தாக இருந்த இவரை இனிமேல் காவியத் தலைவன் சித்தார்த் என்று அழைக்கலாம். அருமையான நடிப்பு. அப்பாவியாகவும், நடிப்பு மேல் வெறி கொண்டவராகவும், காதலனாக, குற்றவுணர்ச்சியால் வாடுபவராக, நாடகக் கலைஞனாக பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். நாடக மேடையில் இவர் வரும் வெவ்வேறு வேஷங்கள் கச்சிதமாகப் பொருந்துகின்றன.(அந்த கட்டபொம்மன், திப்பு சுல்தான் தவிர்த்து!!). குறிப்பாக சூரபத்மனாக ப்ருத்விராஜ் ஓவர் ஆக்ட்டிங் செய்ய, இவர் இயல்பான நடிப்பை நடித்துக்காட்டி நாசரிடம் பாராட்டுப் பெறும் இடத்தில் கலக்கிவிட்டார். தீயா வேலை செய்யணும் குமாரு-ஜிகர்தண்டா- எனக்குள் ஒருவன் என இவர் படங்களை செலக்ட் செய்யும் விதத்தைப் பார்த்தால், தமிழ் சினிமாவில் வலுவாகக் காலூன்ற முடிவுசெய்துவிட்டார் என்றே தெரிகிறது. அதை இந்தப் படத்தில் காட்டியிருக்கும் நடிப்பிலும் பார்க்க முடிகிறது.

ப்ருத்விராஜ்:
சித்தார்த்துக்கு ஈகுவலான, ஆனால் கொஞ்சம் நெகடிவ்வான கேரக்டர். நடிப்பிற்கு நல்ல வாய்ப்புள்ள கேரக்டர் என்பதால், பல காட்சிகளில் கலக்குகிறார். ஸ்த்ரீ பார்ட்டாக, ராஜபார்ட்டாக அவர் போடும் வேஷங்களும், நாடகத்திற்கு கூட்டம் வரவில்லையென வெம்பும் காட்சிகளும் நன்றாக உள்ளன.

வேதிகா:

பரதேசியில் கிடைத்த வாய்ப்பை கெடுத்துக்கொண்டவர், இதில் கிடைத்த வாய்ப்பில் புகுந்து விளையாடியிருக்கிறார். அவரது அறிமுகக்காட்சியில் அவர் ஆடும் நடனமும், முகபாவங்களும் ஒரு நல்ல நடிகையாக அவர் வலம்வருவதற்கான தகுதிகொண்டவர் என்று நிரூபிக்கின்றன. என்ன நடந்தாலும், எத்தனை வருடங்கள் கடந்தாலும் சித்தார்த்தை நினைத்தே வாழும் அந்த கேரக்டரைசேஷன் அருமை.

சொந்த பந்தங்கள்:
நாசர் குருவாக வருகிறார். கண்டிப்பும், அன்பும், நாடகத்தின் மேல் பக்தியுமாக அவர் வரும் காட்சிகளில் நம் மனதைக் கொள்ளை கொள்கிறார். தம்பி ராமையா கொஞ்சம் சிரிக்க வைக்கிறார், சிங்கம்புலி கூட இருக்கிறார். ஜமீன் இளவரசியாக வரும் அனைகாவும் அவர் வரும் காட்சிகளும் அழகு.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- ஜமீன் வீட்டுக்கு இரவில் சித்தார்த் கேஷுவலாகப் போய் காதல் செய்துவரும் காட்சிகளில் லாஜிக்கே இல்லை. காவலாளி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அம்மா-அப்பா கூடவா அங்கே இருக்க மாட்டார்கள்? காதலைச் சொல்வது தான் முக்கியம், மீதியை ஆடியன்ஸ் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.
- யூகிக்க வைக்கும் காட்சியமைப்புகள்.
- இடைவேளைக்குப் பின் கதை நகராததால், வரலாற்றுப்பட ‘போர் ஃபீலிங்’ வருவது.
- உணர்ச்சிகரமான(!) கிளைமாக்ஸ்
- சித்தார்க்கும் ப்ருத்விராஜுக்கும் இடையிலான ‘அன்பு-வெறுப்பு’ போராட்டத்தைப் பார்க்கும்போது கடல் படத்தின் ‘அரவிந்தசாமி-அர்ஜுன்’ ஞாபகம் வருகிறது.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையையும் அந்த காலகட்டத்தையும் கண்முன்னே கொண்டுவந்தது
- சுவாரஸ்யமான முதல்பாதி..குறிப்பாக சித்தார்த்தின் ஜமீன் காதல் நாசருக்குத் தெரிந்ததும் வரும் காட்சிகள்
- நாசர், சித்தார்த், பிருத்விராஜ் ஆகிய மூவரின் அற்புதமான நடிப்பு
- ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும், பிண்ணனி இசையும். (அதிக பாடல்கள் என்றாலும், பார்ப்பதற்கு அலுக்கவில்லை)
- சந்தானத்தின் கலை இயக்கம், நாடக மேடை, தனித்திருக்கும் ப்ருத்விராஜின் வீடு, நாடக கொட்டகை என நல்ல உழைப்பு
- நீரவ் ஷாவின் குளிர்ச்சியான, ஃப்ரெஷ்ஷான ஒளிப்பதிவு

பார்க்கலாமா?
பார்க்கலாம்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

  1. தல சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.இன்னிக்கு கோயிங்

    ReplyDelete
  2. கடல் ஞாபகம் வருகிறதா அய்யய்யோ

    ReplyDelete
  3. வார இறுதியில் படம் பார்த்து விட்டு.....................

    ReplyDelete
  4. பார்த்தேன்.உங்கள் விமர்சனம் சோடை போகவில்லை,படமும் தான்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.