Friday, September 1, 2017

விவேகம் - பாவம் அஜித்!

'நான் கெட்டவன் இல்லை..கேடுகெட்டவன்’ன்னு சிவா டயலாக் எழுதி, அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடியபோதே நினைச்சேன், இன்னும் பெருசா அந்தாளு செய்வார்னு! ...செஞ்சுட்டார்!


அஜித்தின் தொப்பையை பலரும் கேலி செய்திருக்கிறார்கள். சில பேட்டிகளில் நேரடியாகவே கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் உடம்பைக் குறைக்காத அஜித், இந்த படத்திற்காக குறைத்திருக்கிறார். காரணம், உண்மையிலேயே சிவாவையும் இந்த படத்தையும் நம்பியிருக்கிறார்...பாவம்!

வேகமான ஒரு கமர்சியல் படம் கொடுக்க வேண்டும், அதில் அஜித்தை ஹாலிவுட் ஹீரோ மாதிரிக் காட்ட வேண்டும் எனும் ஆர்வம் எல்லாம் ஓகே தான். ஹாலிவுட் படம் தயாரிப்பதற்கான ஆர்ட், கேமிரா, எடிட்டிங் ஒர்க் எல்லாம் செய்துவிட்டு, கதை-திரைக்கதை-வசனத்தை தெலுங்கு மசாலா ரேஞ்சுக்கு யோசித்தது நியாயமா? 

பொதுவாக ஒரு ஷாட் மனதில் நிற்க நாலு செகண்ட் வேண்டும் என்பது நடைமுறை. இதை ஹாலிவுட்டில் உடைத்து, ஒரு செகண்டிற்கும் கீழே ஷாட்ஸ் வைத்து வெற்றிபெற்றது Bourne Identity. அதில் இருந்து ஆக்சன் படங்கள் என்றாலே கேமிராவை ஆட்டணும், ஷாட் லென் த்தை குறைக்கணும் என்று ஆனது. அதை விவேகத்தில் சின்சியராகவே முயற்சித்திக்கிறார்கள். 

சண்டைக்காட்சிகளில் மட்டும் அதைச் செய்திருந்தால் பரவாயில்லை. வசனக்காட்சிகளில்கூட கேமிராவை அங்கும் இங்கும் அலைபாய்ந்ததில், எதுவுமே மனதில் நிற்காமல் எரிச்சல் வந்தது தான் மிச்சம். படத்தின் பெரிய மைனஸ், இந்த கணக்கீடு இல்லாத ஷாட் காம்போசிசன் தான். சுடுகிற குண்டு எங்கே போகிறது, எங்கிருந்து அடியாள் வருகிறான் என்று எதையுமே புரிந்துகொள்ளாத அளவில் தான் சண்டைக்காட்சிகளும் இருக்கின்றன. அஜித்தே பல வருடம் கழித்து, காலை தூக்கி எல்லாம் அடித்திருக்கிறார்; அந்த உழைப்பை நீங்ககூட மதிக்கலேன்னே எப்படி ப்ரோ?

இன்னொரு பெரும் கொடுமை, வசனங்கள். இவ்வளவு கடுப்பேற்றும் வசனங்களை ஒரே படத்தில் நான் கேட்டதேயில்லை. புருசன் பொண்டாட்டி பேசும்போதுகூடவா பஞ்ச் டயலாக் வைக்கிறது. ஒன்று கேமிராவில் மூஞ்சியை வைத்துப் பேசும் பஞ்ச் டயலாக் அல்லது ஹீரோவை வில்லனே புகழும் பில்டப் டயலாக்ஸ். எதுவுமே ஒரு அளவுக்குள் தான் இருக்க வேண்டும். இது டூ மச்..முடியல.

அந்த ‘கோட்டைசாமி’ சீன் எல்லாம் எப்படித்தான் யோசித்தார்களோ...ஏனய்யா, டேமை பார்த்தவுடனே லிங்கா ஞாபகம் வரவேண்டாமா? அலெக்ஸ்பாண்டியனில் ஓப்பனிங் சீனில் கார்த்தி குதித்தபோதும், குருவியில் விஜய் வைரத்தை திருடி குதித்தபோதும், லிங்காவில் பைக் டூ பலூனில் தலைவர் குதித்தபோதும் என்ன ஆச்சுன்னு சிவாவுக்கு உண்மையிலேயே தெரியாதா? ஒரே ஒரு அஜித் ரசிகரைக் கூப்பிட்டு டேம் சீனை சொல்லியிருந்தால்கூட, சிவா காலில் விழுந்தாவது நிறுத்தியிருக்க மாட்டாரா? 

இது எல்லாத்தையும்கூட பொறுத்துப்பேன்..ஆனால் கிளைமாக்ஸ் ஃபைட்டில் ஹீரோயினை பாட விட்டீங்களே..அந்த கொடுமையை மட்டும் மன்னிக்கவே மாட்டேன். ஹாலுவுட் தரம்னு சொல்லித்தானே கால்ஷீட் வாங்கிட்டு, பரவை முனியம்மா ரேஞ்சுக்கு பாட விட்றுக்கீங்களே...பாட்டாவது நல்லா இருந்தால் தப்பிச்சிருக்கலாம். தியேட்டரிலேயே சிரிக்கிறாங்க.

மேலே சொன்ன 5 பத்திகளைத் தவிர, மத்தபடி படம் நல்லா இருக்கு...நல்லாத் தானே இருக்கு.ஆமா, ஆமா!

அஜித்துக்கு இரண்டே வேண்டுகோள்கள் தான் :

1. நீங்க ஜனா, ஆழ்வார், பில்லா-2 எடுத்தால்கூட ரசிகர்கள் தியேட்டருக்கு வந்திடுவாங்க. அதனால் வெறுமனே ரசிகர்களுக்காக படம் எடுக்காமல், எங்களையும் கொஞ்சம் மனசுல வைங்க. அப்புறம் அந்த சிவா தம்பிகிட்டே ‘ஏம்ப்பா, என் ரசிகர்களுக்காக படம் எடுத்தியா? இல்லே, விஜய் ரசிகர்களுக்காக இந்த படத்தை எடுத்தியா?’ன்னு மறக்காமல் கேட்டிடுங்க.

2. உங்களை பலரும் மதிக்கக்காரணமே, சொந்தக் காலில் நின்று முன்னேறி மேலே வந்தவர் என்பது தான். அப்படிப்பட்ட நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால், உங்களை மாதிரியே பெரிய பின்புலம் இல்லாமல் முன்னேறப் போராடும் இயக்குநர்களுக்குத் தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அது தான் நியாயமாக இருக்கும். இந்த விஷ்ணுவர்த்தன், சிவா மாதிரி பணக்கார வீட்டு செல்லப்பிள்ளைகளை வளர்த்துவிட்டது போதும். கொஞ்சம் குனிந்து கோடம்பாக்கத்தைப் பாருங்கள். வியர்க்க, விறுக்க எத்தனையோ பேர் உங்களுக்காக நல்ல கதையுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள்! 

உங்க செல்லப்பிள்ளைகள் உங்களை வச்சுச் செய்றாங்கன்னு இன்னுமா உங்களுக்குப் புரியல?
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.