Sunday, June 26, 2016

’ரசிகன்’விஜய் டூ ‘இளைய தளபதி’ விஜய் - ஒரு அலசல்


ன்றைக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக, வசூல் நாயகனாக வெற்றிக்கொடி நாட்டியிருப்பவர் நடிகர் விஜய். இணையத்தில் அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்டியிருக்கும் சூழலில், விஜய் வந்த  பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்!


1. பிட்டுப் பட காலகட்டம் (1992-1996):


‘இந்த மூஞ்சியை எல்லாம் காசு கொடுத்துப் பார்க்க வேண்டியிருக்கு’ என்பது தான் விஜய்க்கு கிடைத்த முதல் விமர்சனம். விமர்சனம் செய்தது காமாசோமா ப்ளாக்கர் அல்ல, தமிழின் மிகப்பெரிய இதழான குமுதம். இப்படி அட்டகாசமான வரவேற்புடன் தான் ஆரம்பித்தது விஜய்யின் சினிமா வாழ்க்கை. அவரது முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ சூரமொக்கை என்பதால், ஹீரோவான விஜய்யும் அப்படித் தெரிந்திருக்கலாம். முதல் படம் ஊத்திக்கொண்ட நிலையில், எஸ்.ஏ.சி. புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். விஜயகாந்த்தை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து ‘செந்தூரப்பாண்டி’யை எடுத்தார். விஜயகாந்த்துக்காக ஓரளவு ஓப்பனிங் கிடைக்க, யுவராணியின் ‘ஓப்பனிங்’காரணமாக படம் ஓரளவு ஓடியது. நாளைய தீர்ப்பு பார்க்காதவர்கள்கூட செந்தூரப்பாண்டியை பார்க்க, பி&சி ஏரியாவில் விஜய் என்று ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்துபோனது.

அடுத்து வந்த ‘ரசிகன்’ விஜய்க்கு நல்லதையும் கெடுதலையும் ஒரே நேரத்தில் செய்தது. இளைஞர் பட்டாளத்தை விஜய் பக்கம் திருப்பிய அதே நேரத்தில், பெண்களை தெறித்து ஓட வைத்தது. கோவில்பட்டி மூர்த்தி தியேட்டரில் அடிக்கடி ரீ-ரிலீஸ் ஆகும். வரும்போதெல்லாம் போய்ப் பார்ப்போம். அந்த தியேட்டர், பிட்டுப்படத்திற்கு புகழ் பெற்றது! ஆடியன்ஸ் மட்டுமல்ல, திரைத்துறையில் இருக்கும் ஹீரோயின்ஸ்கூட ‘விஜய்யா..அவர் பிட்டுப்பட நடிகராச்சே’ என்று விலகிப்போனார்கள். எஸ்.ஏ.சி. ஒரு மூத்த இயக்குநர், பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். அவர் ஏன் ஆரம்பத்தில் இப்படி ஒரு காரியத்தைச் செய்தார் எனும் வருத்தம் விஜய் ரசிகர்களுக்கே உண்டு. ஆனால் அவருக்கு என்று ஒரு செயல்திட்டம் இருந்தது. அது வெற்றிகரமானது என்று அவருக்குத் தெரியும். ஏனென்றால்...


விஜயகாந்த்தை தமிழ் சினிமாவில் மூன்றாவது இடத்துக்கு கொண்டுவந்தவர் எஸ்.ஏ.சி. ரஜினி-கமல் படங்களைவிட பி&சி ஏரியாவில் விஜயகாந்த்திற்கு மவுசு அதிகம். அதற்கு முக்கியக் காரணம், எஸ்.ஏ.சி. தான். இன்றைய விஜயகாந்த் ரசிகர்களுக்குக்கூட தெரியாத விஷயம், விஜயகாந்த்தும் விஜய் போல் அஜால்குஜாலில் ஆரம்பித்து ஆக்சன் ஹீரோவாக ஆனவர். எஸ்.ஏ.சி படங்கள் ஆக்சனுக்கும் கிளுகிளுப்புக்கும் பெயர் பெற்றவை. பின்னாளில் ‘போராளி இயக்குநர்’ போன்ற இமேஜ் வரவும் தான் அவற்றைக் குறைத்துக்கொண்டார். உதாரணமாக...

விஜய்யின் புகழ்பெற்ற பிட்டுக் காட்சிகள், ரசிகனில் சோப்பு போடும் சீன், யுவராணியுடன் மழை சாங் மற்றும் கபடி சீன். முதல் இரண்டு சீன்களும் விஜயகாந்த்தின் ஆரம்ப காலப் படமான சாட்சியில் எஸ்.ஏ.சி.யால் வைக்கப்பட்டவை. கபடி சீனை எஸ்.ஏ.சியின் இன்னொரு விஜயகாந்த் படமான நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தில் பார்க்கலாம். இவையெல்லாம் இளைஞர்களையும் பி&சி செண்டரையும் இழுத்துவரும், பிறகு புரட்சிப் படங்கள் மூலம் ஆக்சன் இமேஜை வளர்த்தெடுக்கலாம் என்பது தான் எஸ்.ஏ.சி.யின் செயல்திட்டம். விஜயகாந்த்தை அப்படித்தான் அவர் பெரிய ஸ்டாராக ஆக்கினார்.

எல்லோரும் பழைய படங்களைத் தான் ரீமேக் செய்வார்கள். எஸ்.ஏ.சி. பழைய ‘சீன்’களை ரீமெக் செய்தார். எதிர்பார்த்த மாதிரியே தமிழ் சினிமாவை அவை கலக்கின. ஆனால் பிட்டுப்படம் கைகொடுத்த அளவிற்கு மாண்புமிகு மாணவன் போன்ற புர்ச்சிப் படங்கள் கைகொடுக்கவில்லை. விஜய்யின் பொடியன் தோற்றமும் ஒரு காரணம், எஸ்.ஏ.சியின் டெக்னிக்குகள் பழகினவையாக, பழையவையாக ஆகியிருந்ததும் ஒரு காரணம். இருப்பினும் தேவா, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்ளே போன்ற படங்கள் வெளியாகி விஜய்யை ஒரு ஆவரேஜ் ஹீரோவாக நிலைநிறுத்தின.

2. ‘லா..லா..லா’ கால கட்டம் (1996-2003):


அதே காலகட்டத்தில் புதிய மன்னர்கள் எனும் புரட்சிப் படத்தை எடுத்து படுதோல்வியைச் சந்தித்தார் இயக்குநர் விக்ரமன். பாரதிராஜாவின் என் உயிர்த்தோழன், கமலின் சத்யா போன்ற புரட்சிப்படங்களும் தோல்வியைத் தழுவிய நேரம் அது. ஆனால் புதிய மன்னர்களுக்கு முன் விக்ரமன் எடுத்த மென்மையான படமான (ஃபீல் குட் மூவி) புது வசந்தம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. மக்களின் ரசனை அமைதியான படங்களை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த காலகட்டம். புது வசந்தம் ஸ்டைலில் இன்னொரு படம் எடுப்போம் என்று பூவே உனக்காக படத்திற்குத் தயாரானார் அவர். ஒரு பெரிய ஸ்டார் உருவாவதற்கான அடித்தளமாக இந்தப் படம் இருக்கப்போகிறது என்று விக்ரமனுக்கும் தெரியாது, நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்க்கும் தெரியாது. விஜய்யை புக் செய்யவும், இண்டஸ்ட்ரியே விக்ரமனை மிரட்டியது. அப்போது நடந்த கூத்துக்களை கீழே உள்ள இமேஜில் பார்க்கலாம்:

படம் ரிலீஸ் ஆனது. பட்டி தொட்டி எங்கும் சூப்பர்ஹிட். ‘அடுத்த வீட்டுப் பையன் போல இருக்கான்யா’ என்று விஜய்யை ரசிக்க ஆரம்பித்தார்கள். (அப்படீன்னா ரசிகன் போன்ற படங்களில் எல்லாம் ஒருத்தனும் விஜய்யைப் பார்க்கலைன்னு அர்த்தம்!!) விஜய்க்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கே புது ட்ரெண்ட்டை ஆரம்பித்த படம் பூவே உனக்காக. இதே நேரத்தில் வெளிவந்த காதல் கோட்டையின் வெற்றியும் மக்களின் ரசனை மாற்றத்தை உறுதி செய்தது. உடனே எல்லோருக்கும் லவ் ஃபீலிங் பிய்த்துக்கொண்டது. தமிழ் சினிமாவே காதல் மழையால் நனைந்தது.

அடுத்து சில படங்கள் சொதப்பினாலும் லவ் டுடே ஓரளவு விஜய்யை காப்பாற்ற, காதலுக்கு மரியாதை வெளியாகி விஜய்யை உச்சத்துக்கு கொண்டுபோனது. தனியாகப் படம் பார்த்தவன் எல்லாம் அடுத்து குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு போனான். குடும்பத்துடன் போன லேடீஸ், தன் ஃப்ரெண்ட்ஸுடன் தனியாகப் போனார்கள். ரிப்பீட் ஆடியன்ஸால் தியேட்டர்கள் நிறைந்தன. மினிமம் கேரண்டி நாயகர்கள் வரிசையில் விஜய்க்கு இடம் கிடைத்தது. தொடர்ந்து நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், நிலாவே வா(ஆவரேஜ்) என வெற்றிகளில் மிதந்தார் விஜய். அடுத்து ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் இன்னொரு காதலுக்கு மரியாதை எனும் அளவிற்கு வெற்றி பெற்றது. ஆர்,பி.சௌத்ரி ‘விஜய் என்றாலே வெற்றி தான்’ என்று தமிழ்நாடு முழுக்க போஸ்டர் அடித்தார்.

எப்போதெல்லாம் விஜய் உச்சத்தை நோக்கி நகர்கிறாரோ, அப்போதெல்லாம் இரண்டு கெட்ட காரியங்களைச் செய்வார். ஒன்று, அப்பா எஸ்.ஏ.சி.க்கு கால்ஷீட் கொடுப்பது. இரண்டாவது, அரசியல் ஆசையை வெளிக்காட்டும் படங்களை எடுப்பது. நெஞ்சினிலே படம் மூலம் உப்பிக்கொண்டிருந்த வெற்றிப் பலூனில் ஒரு ஓட்டையைப் போட்டார் எஸ்.ஏ.சி. கமர்சியல் கிங் கே.எஸ்.ரவிகுமாரின் மின்சாரக்கண்ணாவும் புறாவுக்கே மணியடித்து விஜய்யை காலி செய்தது. விஜய் மிக மோசமான நிலையில் இருப்பதை கண்ணுக்குள் நிலவு உறுதி செய்தது. ஏனென்றால் அது காதலுக்கு மரியாதை சூப்பர் ஹிட் கூட்டணி இணைந்த படம். ’விஜய் அவ்வளவு தான்..இவர் இன்னொரு சுரேஷ், மோகன்’ என்று பேச்சு கிளம்பியது.

அப்போது தான் அதிரடியாக இறங்கியது குஷி. தொடர்ந்து ப்ரியமானவளே. இரண்டுமே சூப்பர் ஹிட் ஆக, அடுத்த ரவுண்ட் ஆரம்பித்தது விஜய்க்கு.

காதலுக்கு மரியாதை ஹிட் ஆன சமயத்தில்கூட ‘ஒரு ஆக்சன் ஹீரோவாக நடிக்கத்தான் எனக்கு ஆசை’ என்று பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார் விஜய். அப்போது நாங்கள்கூட ‘காதல் படங்கள் தான் நல்லா ஓடுதே..இவருக்கு ஏன் வேண்டாத ஆசை’ என்று பேசியிருக்கிறோம். வெறும் ரொமாண்டிக் ஹீரோவாக இருந்த சுரேஷ், மோகன், அர்விந்தசாமி, மாதவன் போன்றோரின் இன்றைய மார்க்கெட் வேல்யூவைப் பார்க்கும்போது, விஜய் & எஸ்.ஏ.சி.யின் தொலைநோக்குப் பார்வையை நாம் புரிந்துகொள்ளலாம். கையால் ரோஜாப்பூவை வைத்து சுற்றிக்கொண்டிருந்தால் காலியாகிவிடுவோம்..புர்ச்சிப் படங்களும் ஓடுவதில்லை. எப்படி ஆக்சன் ஹீரோ ஆவது என்ற குழப்பத்தில் விஜய் இருந்த நேரம். கொஞ்சம் ஸ்டியரிங்கைத் திருப்பி ‘ஷாஜகான், பத்ரி’யில் ஆக்சனை மிக்ஸ் செய்தார், காதலையும் விட்டுவிடாமல். ரிசல்ட், அட்டர் ஃப்ளாப்!

தொடர்ந்து தமிழன், யூத் படங்களும் ஊற்றிக்கொள்ள, அடுத்து வந்த பகவதி வெற்றிப்படமானது. பகவதி படம், பாட்ஷாவை உல்டா செய்து வந்த லோ-கிளாஸ் ஆக்சன் படம். அது வெற்றிபெற, அடுத்து வந்த ஃபீல் குட் மூவியான வசீகரா தோல்விப்படமானது. எப்போது டிவியில் பார்த்தாலும் ரசிக்க முடிகிற படம், வசீகரா. ஆனால் அது ஓடவில்லை. 

கடந்த பத்து வருடமாக ஆக்சனை விட்டு காதலில் திளைத்த தமிழ் சினிமா, மீண்டும் ஆக்சனை நோக்கித் திரும்பியதின் அறிகுறி தான் பகவதியின் வெற்றியும், வசீகராவின் தோல்வியும்.



3. ’மலை..திருமலைடா’காலகட்டம் (2003 - 2010):


விஜய்யால் மறக்க முடியாத படம், திருமலை. தன் கரியரை சரியான பாதையில் திருப்பிய படம் என்று இப்போதும் பேட்டிகளில் சொல்வார். ரஜினி-கமல் மாதிரி விஜய்-அஜித் உருவாகிக்கொண்டிருந்த நேரம் அது. முன்னோர் ஸ்டைலில் ரசிகர்களுக்குள் மோதல்கள் நடக்க ஆரம்பிக்க, ‘எவண்டா இங்கே தல?’ என்று கேட்டபடி திருமலை எண்ட்ரி ஆனார். ரஜினிக்கு எப்படி அண்ணாமலையோ, அப்படியே விஜய்க்கும் திருமலை ஒரு ஸ்டைலைக் கொடுத்தது. ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக், ஆக்சன் பாதையில் பயணிக்க ஆரம்பிக்க, திருமலையின் வெற்றி தான் முக்கியக் காரணம்.


இன்றும் பார்க்க போரடிக்காத கில்லி, அடுத்து வந்து சொல்லியடித்தது. மீண்டும் வசூல் மன்னன் ஆனார் விஜய். வெற்றியின் உச்சத்தையும், தோல்வியின் பாதாளத்தையும் விஜய் பார்த்த காலகட்டம் இது. தொடர்ந்து வந்த மதுரை சுமாராகப் போனாலும், திருப்பாச்சியும் சிவகாசியும் பட்டையைக் கிளப்பின. இடையில் வந்த இன்னொரு நல்ல ஃபீல் குட் மூவியான சச்சினும் தோல்வியடைய, காதல் படங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு ஆக்சனில் இறங்கினார் விஜய். இடையில் வந்த ஆதிக்கு கெட்டவார்த்தையில் விமர்சனம் வந்தாலும் அடுத்து வந்த போக்கிரி, விஜய்யை உச்சத்திற்கு கொண்டுபோனது.

அதன்பிறகு ஆரம்பித்தது விஜய்க்கும் நமக்கும்(!) கெட்ட நேரம். கில்லி இயக்குநருடன் மீண்டும் இணைந்த குருவி, போக்கிரி இயக்குநருடன் மீண்டும் இணைந்த வில்லு ஆகிய இரண்டுமே அட்டர்ஃப்ளாப் ஆனது. பாசிலின் கண்ணுக்குள் நிலவு தோற்றபோது விழுந்த அடி, இப்போதும் விஜய்க்கு விழுந்தது. அப்போது இரண்டாவது மாடியில் இருந்தார் என்றால், இப்போது டாப் ஃப்ளோரில் இருந்தார். ‘அதெல்லாம் நல்லாத் தான் இருக்கு’ என்று ரசிகர்கள் தாங்கிப்பிடித்தாலும் வேட்டைக்காரன் வந்து ரசிகர்களையும் டரியல் ஆக்கியது.

’குருவி நல்லாயிருக்கு’ என்ற ரசிகர்களே வில்லு வரவும் ‘குருவி மாதிரி இல்லே..இது நல்லாயிருக்கு’ என்பார்கள். வேட்டைக்காரன் வரவும் ‘வில்லு மாதிரி கிடையாது..இது சூப்பர் படம்’ என்பார்கள். எத்தனை அடி விழுந்தாலும் வலிக்காத மாதிரியே நடித்த அவர்கள்கூட, சுறா வரவும் கலங்கிப் போனார்கள். விஜய்க்கு மட்டுமல்ல, விஜய்யின் ரசிகர்களுக்கும் மோசமான காலகட்டம் இது.

இந்த நேரத்தில் இரண்டு விஷயங்கள் உறுதியாகத் தெரிந்தன. ஒன்று, விஜய் தன் பாதையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இரண்டாவது, என்ன நடந்தாலும் விஜய்யைக் கைவிடாத ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது. ரஜினியின் தளபதி படத்தை மனதில் வைத்து எஸ்.ஏ.சி. கொடுத்த பட்டம் தான் ‘இளைய தளபதி’. அதற்கு அர்த்தமே இளைய சூப்பர் ஸ்டார் தான். இளைய சூப்பர் ஸ்டார் என்பதை பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ளாவிட்டாலும், இளைய தளபதி என்பதை ஒத்துக்கொண்டார்கள்!!

காதல் படங்களின் கால கட்டத்தில் ரஜினி ரசிகனாகவும், அண்ணாமலை சீனை நடித்துக்காட்டியே அப்பாவிடம் சான்ஸ் பெற்றதாகவும் பெருமையுடன் சொல்லிவந்தார் விஜய். திருமலை காலகட்டத்தில் ஒரு அதிரடி அரசியலில் இறங்கினார். அது அவருக்கு அதிக எதிர்ப்பையும், அதிக மார்க்கெட்டையும் உருவாக்கியது. ஆம், ரஜினியை தன் போட்டியாளராக மறைமுகமாக அறிவித்தார். எலியுடன் போட்டியிட்டு ஜெயிப்பதைவிட புலியுடன் போட்டியிட்டு தோற்பது பெருமை என்று களத்தில் இறங்கினார். ரஜினியே கடுப்பாகி அஜித்தை முன்னிறுத்தினார். இன்றும், விஜய் அதே நிலையில் தான் இருக்கிறார். விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தின் வசூலை விட, ரஜினியின் தோல்விப்படத்தின் வசூல் அதிகம். ஆனாலும் விஜய்யின் இந்தப் போக்கு, அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது உண்மை.

ரஜினி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். ரஜினியின் வளர்ச்சி, ஏனோ அவருக்கு பிடிக்கவில்லை. எனவே எம்.ஜி.ஆர் கமலஹாசனை முன்னிறுத்தினார். தன் வாரிசு அவர் தான் என்பதாக தன் ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்தார். ஆனால் அதன்பின் நடந்த கதை உங்களுக்கும் தெரியும், எஸ்.ஏ.சிக்கும் தெரியும். எனவே தான் ரஜினிக்கு எதிராக விஜய்யை நிறுத்த ஆரம்பித்தாரோ எனும் சந்தேகம் எனக்கு உண்டு. சவலைப்பிள்ளையாக ரஜினியை அண்டிக்கொண்டிருப்பதை விட,  சண்டைக்கோழியாக விஜய் நிற்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். (சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கு கபாலி டீசரிலேயே தெரிந்தாலும்!) ஒரு ரஜினி ரசிகனாக விஜய்யின் இந்தப் போக்கை நான் வெறுத்தாலும், இதில் இருக்கும் நுணுக்கமான, புத்திசாலித்தனமான அரசியலை நான் ரசிக்கிறேன்!

4. ‘மாற்றம்..முன்னேற்றம்..வளர்ச்சி’ காலகட்டம் (2011-2016):

காதல் படங்களும் ஓடுவதில்லை, ஆக்சன் படங்களும் ஓடுவதில்லை என்றால் ஒரு மனுசன் என்ன தான் செய்வது? வேட்டைக்காரன் - சுறா போன்ற துன்பியல் சம்பவங்களுக்குப் பிறகு, விஜய் தன் பாதையை மறுபரிசீலனை செய்தார். ரஜினியே அண்ணாமலை ஃபார்முலாவை விட்டு வெளியேறி எந்திரனாக மாறிவிட்டார். ஓப்பனிங் ஷாங் - பஞ்ச் டயலாக்கை எல்லாம் சிவாஜியிலேயே கைவிட்டிருந்தார். எனவே விஜய்யும் திருமலை ஃபார்முலாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம். எனவே, சுத்தபத்தமான சைவப்பிள்ளையாக காவலனில் களம் இறங்கினார். ரிலீஸ் நேரப் பிரச்சினையால் கொஞ்சம் வசூல் பாதித்தாலும், நல்ல படம் எனும் பெயருடன் வெற்றியும் வந்தது.

வேலாயுதத்தில் ஹீரோயிசத்தில் அடக்கி வாசித்தாலும், படம் சுமாராகவே போனது. ஷங்கருடன் நண்பனில் இணைந்தார். ஷங்கர் பட்ஜெட்டை வழக்கம்போல் இழுத்துவிட, ஹிந்தியில் ஹிட் அடித்த படம் தமிழில் நஷ்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால் விஜய் ‘இளமையான ஹீரோ’வாக திரும்பி வந்தார். அதில் இருந்து இன்றுவரை விஜய்க்கு படங்களில் வயது குறைந்துகொண்டே போவது மேஜிக்.

கில்லி, போக்கிரி மாதிரி வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் எனும் பல வருட ஏக்கத்தை தீர்த்தது ‘துப்பாக்கி’. வசூலில் நூறு கோடியைக் கடந்து, விஜய்யை மீண்டும் வசூல் மன்னனாக ஆக்கியது துப்பாக்கி. இந்த காலகட்டத்தில் விஜய்க்கு உறுதியான ஃபேமிலி ஆடியன்ஸ் உருவாகியிருந்தார்கள். தலைவா, ஜில்லா, புலி எல்லாம் நல்லாயில்லை என்று விமர்சனங்கள் வந்தாலும் ‘சரி, அதையும் போய்ப் பார்ப்போமே’ என்று பல குடும்பங்கள் தியேட்டருக்கு கிளம்பி வந்தன. ‘படம் நல்லா இருக்கோ, இல்லையோ..அவர் படம் வந்தால் தியேட்டருக்குப் போவோம்’ எனும் நிலையை இன்று விஜய் எட்டியிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

இங்கே குவைத்தில் முதல்நாள், முதல் ஷோ போகும்போது நான் கவனிக்கும் விஷயம், யாரெல்லாம் படம் பார்க்க வருகிறார்கள் என்பது. சில நடிகர்கள் (இங்கே பெயர் வேண்டாம்) ரெண்டு ஹிட் கொடுத்ததுமே, அடுத்த படத்திற்கு தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும். ஆனால் அவர்களே அடுத்து இரண்டு ஃப்ளாப் கொடுத்தால், தியேட்டரில் முதல் ஷோவிற்கு ஆளே இருக்காது. ஆனால் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, கூட்டத்தை ஈர்க்கும் நடிகர்களில் ஒருவராக விஜய் இன்று ஆகியிருக்கிறார்.

கத்தி, புலி, தெறி என சமீப காலமாக விஜய் தேர்ந்தெடுக்கும் படங்களைப் பார்த்தாலே, அவர் திருமலை ஃபார்முலாவை விட்டு விட்டு, வித்தியாசமான ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் படங்களை செய்ய ஆரம்பித்திருப்பது புரியும். புலி படம் விஜய் ரசிகர்களுக்கே திருப்தி தரவில்லை. ஆனாலும் அவர் புலி படம் செய்தது சரியென்றே நான் சொல்வேன். பல வீட்டுக் குழந்தைகளையும் விஜய் ரசிகர்களாக புலி ஆக்கியிருக்கிறது. ரஜினியின் ஓல்டு டெக்னிக் தான். இதை என் வீட்டில் நானே பார்த்தேன். முதல் பையன், புலி படத்தை டவுன்லொடு ஐம்பது முறைக்கு மேல் பார்த்தது வரலாறு. அது பரவாயில்லை.

இரண்டாவது பையனுக்கு இரண்டு வயது. அம்மா-அப்பா தாண்டி இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. புரியாத சில வார்த்தைகளை அவ்வப்போது சொல்வான். சில நாட்களாக சன் மியூசிக் ஓடும்போது என்னிடம் வந்து ‘புய்..புய்’ என்றான். ஏதோ சும்மா சொல்கிறான் என்று விட்டுவிட்டோம். ஒருநாள் கத்தி பாடல் ஓடும்போது டிவிக்கு அருகே போய் ‘அப்பா..புய்’ என்றபோது தான் அவன் விஜய்யை ‘புலி’ என்கிறான் என்பது உறைத்தது. புலி படம் பார்த்தபிறகு, எங்களுக்கே தெரியாமல் அவன் விஜய் ரசிகன் ஆகியிருக்கிறான்!

புலி படத்திற்காக விஜய் சோஷியல் மீடியாக்களில் எப்படி ஓட்டப்பட்டார் என்று நமக்குத் தெரியும். ‘புளி..கொட்டை எடுத்த புளி’ என தாளித்து எடுத்தார்கள். இத்தகைய கிண்டல்களும் அவமானங்களும் விஜய்க்குப் புதிதில்லை. முதல் படத்திலேயே அவர் இதைவிட மோசமான விமர்சனத்தைப் பார்த்துவிட்டார். 
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், அவர் அவ்வப்போது கீழே விழுந்தாலும் மெதுவாக தனது ரசிகர் வட்டத்தை கூட்டிக்கொண்டே செல்கிறார் என்பது. அதற்கு உதாரணம் தான் தோல்வியடைந்த புலி. அது தான் மேலும் பல சிறுவர்களையும், குடும்பங்களையும் விஜய் பக்கம் திருப்பியது. செங்கல்பட்டு ஏரியாவில் ரிலீஸ் ஆகாவிட்டாலும், தெறி வெற்றிப்படமாக ஆவதற்கு புலி போன்ற விஜய்யின் புத்திசாலி மூவ்கள் தான் காரணம். அது ஒருநாளும் அறிவுஜீவிகளுக்குப் புரியாது!


ஹேப்பி பர்த் டே விஜய்.

மேலும் வாசிக்க... "’ரசிகன்’விஜய் டூ ‘இளைய தளபதி’ விஜய் - ஒரு அலசல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, June 25, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...28

அப்போது நான் கோவையில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் வேலைபார்த்த ஆபீஸில் திடீரென சிக்கன நடவடிக்கைகள் ஆரம்பம் ஆகின. ‘நிறைய காஃபி, டீக்கு செலவாகுது. அதனால இனிமே ஒருநாளைக்கு ஒருத்தருக்கு இரண்டு காஃபி தான்’ன்னு மீட்டிங்ல அனவுன்ஸ் பண்ணாங்க.
எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. ஒருநாளைக்கு பன்னிரெண்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறோம். அதற்கு ஓ.டி.யும் கிடையாது. இப்போது காஃபியும் கிடையாது என்றால் என்ன அர்த்தம்? நான் ஒரு காஃபி வெறியன். அதனால் ‘போங்கடா..உங்க ரெண்டு காஃபி கூட வேண்டாம். நான் வெளில போய் குடிச்சுக்கிறேன்’னு சொல்லிவிட்டேன்.
அதில் இருந்து, எல்லோரும் காஃபி/டீ குடித்தாலும், நான் ஆபீஸில் குடிப்பதில்லை. அந்த நேரத்தில் தான் ஒரு பொண்ணு புதிதாக வேலையில் ஜாயின் செய்தது.
கொஞ்சநாளிலேயே அது என்னுடன் நட்பாகிவிட்டது. ஒருநாள் அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது தான் அந்த சத்திய சோதனை ஆரம்பம் ஆனது!
அந்தப் பெண்ணின் அம்மா சமையல்கட்டில் இருக்கும்போதே, எனக்கு காஃபி வாசம் வந்துவிட்டது. வீட்டு காஃபி சாப்பிட்டு பல மாதங்கள் ஆகியிருந்தது. ‘வாசமே இப்படி இருக்கே...வரட்டும், வரட்டும்’ன்னு ரெடியாகி உட்கார்ந்திருக்கிறேன்.
அந்த அம்மா ஒரு காஃபி ட்ரேயில் அழகாக வைத்து, காஃபியை எனக்குக் கொண்டுவருகிறார். குணா கமல் லட்டுக்கு நின்றது போல், கையேந்தாத குறையாக நான் அவரைப் பார்க்கிறேன்.
அந்தம்மாவைப் பார்த்த பெண் டென்சன் ஆகிவிட்டார். “அம்மா..ஏன்ம்மா காஃபி போட்டே?” என்றார். ‘அதுல உனக்கு என்னம்மா பிரச்சினை?’ன்னு நான் யோசிக்கும்போதே, அந்தப் பெண் சொன்னது :”அவர் காஃபி, டீ எதுவும் சாப்பிடமாட்டார். வெரி ஹெல்த் கான்ஷியஸ் பெர்சன்!”.
”அவ்வ்..அடிச்சண்டாளி...அப்படியெல்லாம் பேசாதடீ”ன்னு நான் மனசுக்குள் கெஞ்சறேன். ம்ஹூம். அந்தம்மாவும் ‘பரவாயில்லைம்மா..ஒரு தடவை சாப்பிடட்டும்”ன்னு சொல்றாங்க. ’புண்ணியவதி நல்லா இருக்கணும்’னு நான் நினைக்கிறேன். ஆனாலும் மகள் விட்டால் தானே?
“நோ..நோ..அப்படியெல்லாம் கம்பெல் பண்ணக்கூடாது. அவருக்கு எந்த கெட்டபழக்கமும் கிடையாது தெரியுமா?”ன்னு அடுத்த குண்டு விழுகிறது.
‘மூஞ்சிகிட்ட வரைக்கும் கொண்டுவந்துட்டு ஏம்மா அக்கப்போர் பண்றீங்க? ஒரே ஒரு காஃபியை குடிச்சா, உலகமா அழிஞ்சிடப்போவுது?’ன்னு கண்ணீர் விடாமல் மனதுக்குள் கெஞ்சுகிறேன், கதறுகிறேன்.
அந்தம்மாவும் சொல்லிப்பார்க்கிறார். நான் காஃபியையும் அந்த பெண்ணையும் மாறிமாறி பரிதாபமாகப் பார்க்கிறேன். கடைசியில் ஸ்லோமோசனில் அந்த காஃபி பின்வாங்கி, கிச்சனுக்கே போய்விட்டது.
பிறகு அந்தப் பெண் சொன்னது : ‘சார்..வீட்டுக்கு வந்துட்டு நீங்க சும்மா போகக்கூடாது. தண்ணியாவது குடிக்கணும்!”
இனிமே வீட்டுப்பக்கம் வரவேண்டாம்னா நேரா, டீசண்டா சொல்லு..அதை விட்டுப்போட்டு இப்படியா பண்றது? என்றா உலகம் இது!


-------------
இயக்குநர்கள் என்ற பெயரில் பலர் வந்தாலும், சிலர் தான் ஃபிலிம் மேக்கர், Auteur போன்ற வார்த்தைகளுக்கு தகுதியானவர்கள் ஆகிறார்கள். அந்த வகையில் வந்த ஹிட்ச்காக், ஸ்பீல்பெர்க், ஸ்கார்செஸி போன்றவர்கள் எல்லாம் சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.
அதன்பின் புதிய தலைமுறை ஒன்று உருவானது. அதில் முக்கியமானவர் Paul Thomas Anderson. PTA என்றும் PT Anderson என்றும் அவரது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். சென்ற ஒரு மாதமாக அவரது படங்களில் தான் மூழ்கிக்கிடந்தேன். ஒரு இயக்குநரின் படங்களை காலவரிசையில் பார்க்கும்போது, அவர்களின் வளர்ச்சியை கண்கூடாகப் பார்த்து ரசிக்க முடிகிறது.
Hard Eight என்ற சிம்பிளான படத்துடன் ஆரம்பித்தாலும், அடுத்து அவர் கொடுத்த படங்கள் எல்லாம் மரணமாஸ். அதில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்:
1. Boogie Nights :
போர்னோகிராபி உலகிற்குள் இறங்கி, அந்த உலகத்தை அலசி ஆராய்ந்த படம். அந்த மாதிரிப் படத்தின் ஹீரோ தான் கதை நாயகன். அவனது மற்றும் அவனின் குழுவின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் நீட்டான ஸ்க்ரிப்ட்டில் சொல்லியிருப்பார். ’கிளைமாக்ஸில் மிரட்டிவிட்டார்’ என்று சொல்வார்களே, அது இந்த படத்திற்கு சாலப் பொருந்தும்!
2. Magnolia:
அப்பாக்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவைப் பற்றிப் பேசியபடம். அதற்காக ‘பசங்க’ போன்ற படம் என்று நினைத்துவிடாதீர்கள். PTA எழுதியதிலேயே கஷ்டமான திரைக்கதை இது தான் என்பது என் முடிவு. இரண்டு அப்பாக்கள், அவர்களின் பிள்ளைகள், அந்த பிள்ளைகளின் உலகம் என்று துண்டு துண்டாக நடக்கும் சம்பவங்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றாகக் கலப்பது அழகு.
3. There Will Be Blood:
பெட்ரோலியக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், அதைப் பயன்படுத்தி பெரும் பணக்காரன் ஆன ஒருவனின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் பேசிய படம். ஹீரோ என்று யாருமில்லை. மெயின் கேரக்டர் வில்லன் தான். ஆனாலும் அந்த கேரக்டரில் நடித்த Day-Lewis ரசிக்க வைத்தார்; ஆஸ்கார் வென்றார்.

-------------------------
PTA இயக்கிய The Master படத்தினை நேற்று இரவு பார்த்தேன். அதற்குரிய மனநிலையுடன் பார்த்தால், அதுவொரு அருமையான படம்.
’அதற்குரிய மனநிலை’ என்றால்...
பொதுவாக நமது படங்கள் எல்லாமே Plot Driven வகைகள் தான். இயல்பு வாழ்க்கையில் இருப்பார்கள். ஏதோவொன்று நடக்கும். அது வாழ்க்கையைப் புரட்டிப்போடும். அதில் இருந்து மீண்டுவருவார்கள். மீண்டும், எதிர்சக்தி அவர்களை கீழே இழுத்துப்போடும். இறுதியாக வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில், குறிப்பிடும்படியான சம்பவங்களுடன், கதையில் சில விஷயங்கள் நடக்கும்.
இன்னொருவகை, Character Driven..சில கேரக்டர்களின் வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களைப் பதிவு செய்வது தான் இவ்வகைப் படங்களின் நோக்கம். கீ இன்சிடெண்ட், ஆல் இஸ் லாஸ்ட், லொட்டுலொசுக்கு இல்லாமல், அமைதியான ஆறுபோல் வாழ்க்கையின் போக்கிலேயே போய் ‘இங்கே, இப்படி நடந்தது’ என்று சொல்பவை இவ்வகைப் படங்கள்.
சில சுவாரஸ்யமான சம்பவங்களும், (சில படங்களில்) ஃபீல் குட் உணர்வும் தான் கமர்சியல் அம்சங்கள். சராசரி ரசிகன், இரண்டு தூக்கம் போட்டு எழுந்தாலும் கதை அதே இடத்தில் தான் நிற்கும். ஒன்றும் ஆகிவிடாது.
நேற்று ’The Master’ பார்த்தேன். கூடவே தங்கமணியும் அமர்ந்திருந்தார். அரைமணி நேரத்தில் வெறுத்துப்போய், ‘போய்யா..நீயும் உன் உலக சினிமாவும்’ என்று திட்டிவிட்டுப் போய்விட்டார். ஆனாலும் விதி வலியது அல்லவா?
இன்று ஒரு தமிழ்ப்படத்திற்குப் போனோம். அதே ’The Master’வகைப் படம். படம் ஆரம்பித்து, ஒருமணி நேரம் கழித்து தியேட்டரில் ஒரு குரல் ‘என்ன இது, ஒன்னுமே நடக்கலை?’. படம் ஸ்மூத்தாகப் போகிறது. சில அற்புதமான தருணங்கள், சிரிக்க வைக்கும் சில காட்சிகள், ஹீரோ-ஹீரோயின் இருவரின் அட்டகாசமான பெர்ஃபார்மன்ஸ் என எல்லாம் இருந்தும், ’Nothing happens' ஃபீலிங் தான் பலருக்கும்.
நான் படத்தினை எஞ்சாய் செய்து பார்த்தேன். கிளைமாக்ஸில்கூட ஒன்றும் நடக்காது என்று The Master புண்ணியத்தில் புரிந்துபோய்விட்டது. எனவே Plot-ஐ எதிர்பார்க்காமல், சம்பவங்களை ரசித்துப் பார்த்தேன். தங்கமணி உள்ளிட்ட ஆடியன்ஸ் தான் பொறுமையிழந்து போனார்கள். கமர்சியல் சினிமாவில் இது புதிய முயற்சி என்பதால் பாராட்டலாம்.
அந்த படத்தின் இயக்குநருக்கு விமர்சனம் பிடிக்காது. எனவே.....பார்க்கலாம்!

--------------
இங்கே ஒருநாள் முன்பே படங்கள் ரிலீஸ் ஆகிவிடும். நமது விமர்சனங்களின் மகிமையாலோ என்னவோ, இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை மாலைக்காட்சியில் தான் படங்களை ரிலீஸ் செய்கிறார்கள். அதற்குள் நம் ஊரில் இருந்தே விமர்சனங்கள் வந்து (காப்பாற்றி) விடுகின்றன.
ஆனாலும் போக்கிரி ராஜாவை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஜீவாவின் 25வது படம் என்பதாலும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் இயக்குநரின் படம் என்பதாலும்!
வெள்ளிக்கிழமை வேறுவேலை இருந்ததால் போக முடியவில்லை. நண்பர்கள் நான்குபேர் போனார்கள். பாதிப் படத்திலேயே வெளியேறி வந்துவிட்டார்கள். அவர்கள் மட்டும் வந்தால் பரவாயில்லை, நான்கு வரிசைகளில் இருந்த ஆட்கள் மொத்தமாக வெளியேறியிருக்கிறார்கள். (புலியைவிட மொக்கையா இருக்கிறதே என்று கமெண்ட் அடித்தார்களாம்..என்ன ஒரு கேவலம்!)
அஞ்சானுக்குப் பிறகு, ரசிகர்களின் கடும் கண்டனத்தை வாங்கிய படமாக போக்கிரி ராஜா ஆகியிருக்கிறது. இத்தனைக்கும் ‘ தமிழுக்கு..அழுத்தவும்’ படத்தில் அழுத்தமான திரைக்கதை இருந்தது. மூன்று வெவ்வேறு கதைகளை அழகாக கோர்த்து திரைக்கதை அமைத்திருந்தார் ராம்பிரகாஷ் ராயப்பா. இந்த தலைகீழ் மாற்றம் நமக்கு மிகுந்த அதிர்ச்சி கொடுக்கிறது.
ராம், கற்றது தமிழ் என ஜீவா முன்பு அருமையான படங்களாக தேர்ந்தெடுத்து செய்துகொண்டிருந்தார். திடீரென கமர்சியல் ஹீரோ ஆசை வர, கச்சேரி-தெனாவட்டு என மொக்கை ரூட்டில் இறங்கினார். அதில் இருந்து சறுக்கல் தான். நம்முடைய ஆசையெல்லாம் அவர் ‘பழைய ஜீவா’வாக வரவேண்டும் என்பது தான். விகடன் விமர்சனத்தில் சொன்னது போல...ப்ளீஸ், இன்னொருமுறை இப்படிப் பண்ணாதீங்க ஜீவா!

---------------
இந்த வார ரிலீஸ்களில் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம், மாப்ள சிங்கம்.
நண்பர் டான் அசோக், தன் சுவாரஸ்யமான எழுத்துக்களால் வலைப்பூ காலத்திலிருந்தே நம்மைக் கவர்ந்தவர். அவரது வசனத்தில் மாப்ள சிங்கத்தின் ட்ரெய்லரிலேயே கலகலப்பு தெறிக்கிறது.
நீண்ட நாட்களாக ஒரு வெற்றிக்கு போராடும் விமலுக்கு இந்த படம் ஒரு பிரேக் கொடுக்கும் என்று நம்புகிறேன். (ஏற்கனவே இண்டஸ்ட்ரியில், படம் பற்றி பாசிடிவ் டாக்!)
படம் வெற்றி பெறவும், நண்பர் மென்மேலும் வளரவும் எமது வாழ்த்துகள்!

-----------
அண்ணே, ரசிகனுக்கும் தொண்டனுக்கும் என்ன வித்தியாசம்ணே?
அடேய், ’பொட்டி எப்ப வரும்?..படம் எப்போ ஆரம்பிக்கும்’ன்னு காத்திருக்கிறவன் ரசிகன். ‘பொட்டி எப்போ வரும்?..பிரச்சாரம் எப்போ ஆரம்பிக்கும்’னு காத்திருக்கிறவன் தொண்டன்!
மேலும் வாசிக்க... "ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...28"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...27

//செய்தி-1:
காமராஜர் ஆட்சியை விட சிறந்த ஆட்சி அம்மா ஆட்சி - நடிகர் ஆனந்தராஜ் பேச்சு.
செய்தி-2:
நடிகர் ஆனந்த ராஜ் இறந்ததாக வதந்தி. அவர் மறுப்பு!
//
முதல் செய்தியை படிச்ச எவனோ தான் காண்டாகி, ரெண்டாவது வதந்தியைப் பரப்பிட்டானோ?
-----------------------
2013-ல் நான் எழுதியது இது:
// தமிழ் சினிமாவில் வந்த நல்ல த்ரில்லர்களில் ஒன்று 555. ஏற்கனவே பூ போன்ற தரமான படங்களைக் கொடுத்து, நம் மனதில் இடம்பிடித்த இயக்குநர் சசியின் இயக்கத்தில் வந்த படம் இது. நம் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில் திரைக்கதையில் கலக்கியிருந்தார்.
மற்ற இயக்குநர்கள் அளவிற்கு தடால் புடால் என்று பேசி, மீடியா வெளிச்சத்திலேயே வலம் வரும் நபரல்ல சசி. சில இயக்குநர்கள் கட்டி எழுப்பியிருக்கும் பிம்பத்தைப் பார்த்தால், அவர்களது குப்பைப் படத்தைக்கூட குறை சொல்ல பயமாயிருக்கிறது. அறிவுக்கொழுந்துகள் பாய்ந்து வந்து பிராண்டுகிறார்கள். ஆனால் தமிழில் உள்ள நல்ல இயக்குநர்களில் ஒருவரான சசியைக் காப்பாற்ற இங்கே ஆளில்லை. ‘தமிழன் ஒரு மடையன்..இங்கே எவனுக்கும் படம் பார்க்கத் தெரியாது..என்னை ஜப்பான்ல கூப்ட்டாங்கோ’ ரேஞ்சில் அள்ளி விட்டால்தான் இங்கே பிழைக்க முடியும்போல் உள்ளது.
சசி எடுத்த ஐந்து படங்களுமே வெவ்வேறு ஜெனர்களைச் சேர்ந்தவை. ஆனால் அத்தனை படங்களையும் மனிதர் பெர்ஃபெக்ட்டாக கொடுத்திருப்பார். அவரது இந்த நல்ல படமும் பெரிய வெற்றியை அடையமுடியாமல் போனது, தமிழ் சினிமாவிற்குத் தான் இழப்பு.//
இன்றைக்கு சசியின் ‘பிச்சைக்காரன்’ படத்திற்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் பாராட்டுமழை பொழிவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிச்சைக்காரன் - டோண்ட் மிஸ் இட்!

-----------------
சசிக்குமார் ட்விட்டரில் இணைந்திருக்கிறாராம். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
ஒரு பிரபலம் சமூக தளங்களுக்கு வருவதில் பல அனுகூலங்கள் உண்டு. ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கலாம்; தன் படங்கள் பற்றிய செய்தியை நேரடியாகப் பகிர்ந்துகொள்ளலாம். தன்னைப் பற்றிய எதிர்மறைச் செய்திகளை உடனுக்குடன் மறுக்கலாம்.
அதே நேரத்தில் இதில் ஒரு பெரும் சிக்கலும் உண்டு. ஒரு தனி மனிதராக பிரபலங்களுக்கும் விருப்பு, வெறுப்புகள் இருக்கும். கோப, தாபங்கள் வந்து போகும். இணையத்தில் நாம் இல்லையென்றால், சில நாட்களில் அவை மறைந்து, மறந்து போகும். இணையத்தில் இருந்தால், சட்டென்று ஸ்டேடஸ் போடத் தோன்றும். அது வரலாறாக நிற்கும்!
உதாரணமாக, அனுபம்கெர் தனக்கு பத்ம விருதுகள் கிடைக்காதபோது ‘எல்லாம் ஏமாற்றுவேலை’ ரேஞ்சில் ஒரு ஸ்டேடஸ் போட்டுவிட்டார். சமீபத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டபோது ‘பெருமையா இருக்கு’ என்றார். நம் மக்கள் பிடித்து, கழுவிக்கழுவி ஊற்றினார்கள்.
சமீபத்தில் விஷால்-லிங்கு பிரச்சினையில் விஷால் போட்ட ஸ்டேடஸும் துரதிர்ஷ்டவசமானது. இவையெல்லாம் தற்காலிக உணர்ச்சிகள். இதைப் பதிவு செய்யாமல் தப்பிக்க, நிதானமும் கொஞ்சம் சுரணையற்ற தன்மையும் வேண்டும்.
இதோ, எனது பிரேமம் பதிவிற்கு பின்நவீனத்துவ அறிவுஜீவிகள் முதல் ரசிகக்குஞ்சுகள்வரை எதிர்வினையாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மெல்லிய புன்னகையுடன் கடந்து போகிறேன். காரணம், எல்லாவகைப் பொங்கலையும் வலையுலகிலேயே செய்து டயர்டு ஆகி, இது நேர விரயம் என்று புரிந்ததால் தான்.
சசிக்குமார் ஒரு உணர்வுப்பூர்வமான மனிதர். அவருக்கு இணையம் சரிப்பட்டு வருமா என்று கவலையாக இருக்கிறது. பீ கேர்ஃபுல் ப்ரோ!
------------
கேரள அரசின் மாநிலதிரைப்பட விருதுகளில் ஒன்றுகூட பிரேமம் படத்திற்கு வழங்கப்படவில்லை. இதற்கு பலரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், தேர்வுக்குழுவின் முடிவை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன்.
டெக்னிகலாக பிரேமம் நல்ல படம். அல்போன்ஸ்புத்திரன், பஹத், நிவின்பாலி போன்ற இளைஞர்களின் வரவால், கேரள சினிமா புதிய தோற்றப்பொலிவை அடைந்திருப்பதற்கு பிரேமம் ஒருசாட்சி. கதையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினாலும், விஷுவலாக குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிய பழைய மல்லுவுட்டை புதிய பாதையில் இந்த இளைஞர்படை திருப்பியுள்ளது.
ஒரு கொண்டாட்ட மனநிலையில் எடுக்கப்பட்டு, அதே கொண்டாட்ட மனநிலையை ரசிகனுக்குள் கடத்திய படம் பிரேமம். எல்லோரும் ஜாலியாக அந்த படத்தை எடுத்துக்கொண்டிருந்தாலும், படத்தில் சில நெருடல்களும் இருந்தன.
பேரமத்தில் வரும் முதல் காதலைக்கூட இனக்கவர்ச்சியை பதிவு செய்தார்கள் என்று விட்டுவிடலாம். ஆனால் மீதி இரு காதல்களிலும் அறப்பிரச்சினை இருந்தது.
ஆசிரியைக்கும் மாணவனுக்கும் காதல் என்று காட்டுவது ஆபாசமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. பதின்பருவ மாணவர்களை உளவியல்ரீதியாக பாதிக்கக்கூடிய விஷயம் இது. அதை மலர் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொள்வது இன்னும் மோசமான முன்னுதாரணம் ஆகிறது.
அடுத்த காதலில் வரும் வயது வித்தியாசம் சகஜமானது தான். ஆனால் கிளைமாக்ஸில் அல்போன்ஸ் வைத்திருந்த விஷுவல்ஸ், வக்கிரமானது. சிறுகுழந்தையும் நிவின்பாலியும் பேசிக்கொள்ளும் அந்தக் காட்சியைப் பார்க்கவேஅருவெறுப்பாக இருந்தது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சகஜமான தேசத்தில், இத்தகைய விஷுவல்ஸை தவிர்க்கும் கடமை ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது.
பிரேமம் என்பது ஆட்டோகிராஃபும், அட்டக்கத்தியும் கலந்த கலவை தான். ஆனால் சேரனிடமும், ரஞ்சித்திடமும் இருந்த பொறுப்புணர்வு அல்போன்ஸ்புத்திரனிடம் இல்லை.
’ஜாலியா ஒரு படம், டெக்னிகலாக புதுவழியைக் காட்டும் படம், வாழ்க்கைக்கு நெருக்கமான ஒரு படம்’ என்று இளைஞர் பட்டாளம் பல காரணங்களுக்காக இந்த படத்தைக் கொண்டாடும்போது, யாரேனும் ஒரு பெரியவர் இதைக் கொண்டாடுவதில் உள்ள ஆபத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியது கட்டாயம்.
அதை கேரள அரசு சரியாகச் செய்திருக்கிறது. ”தொழில்நுட்பம் மற்றும் அழகிய ரீதியில் படங்கள் சிறப்பாக இருந்தாலும் கல்வி மற்றும் கலாசார விழுமியங்களைப் பிரசாரம் செய்வதையும் பரிசீலனை செய்யவேண்டும் ” என்று ஆணித்தரமாக தந்தரப்பை நியாயப்படுத்தி இருக்கிறது.
பாரதிராஜா எனும் மகாகலைஞன் ‘வாலிபமே..வா..வா’என்று படம் எடுத்தபோது, மக்களே படத்தை தூக்கி எறிந்தார்கள். பிறகு தான் நமக்கு முதல் மரியாதை போன்ற முத்துக்கள் கிடைத்தன. எனவே ஒரு திறமையான படைப்பாளி தவறான வழியில் போகும்போது, அவர்களை தலையில் குட்டி, நல்வழிப்படுத்துவது அவசியம்.
அதைத் தான் கேரள அரசு செய்திருப்பதாக நான் புரிந்துகொள்கிறேன். ‘பரிசீலனைக்குக்கூட தகுதியற்ற படம்’ என்று சொல்லியிருப்பது நிச்சயம் படக்குழுவிற்கு வலிக்கவே செய்யும். வலி, நல்வழியைக் காட்டும்.
அறத்தை மறந்தவன், நல்ல வியாபாரி ஆகலாம்; படைப்பாளி ஆகமுடியாது!


------------------
ஒருவழியாக, ஆஸ்காருக்கு இன்று ’டிகாப்ரியோ விருது’
கிடைத்துள்ளது.
ஆஸ்காருக்கு வாழ்த்துகள்!
---------------------
மாயா - must watch film
படம் பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் படம் கொடுத்த பிரமிப்பில் இருந்து மீள முடியவில்லை.
இழைத்து, இழைத்து செதுக்கப்பட்ட திரைக்கதை. இரண்டு கதைகள்..அவை இணையும் விதம்...திகில் கிளப்பும் சீன்கள்..அருமையான ஒளிப்பதிவு..அலற வைக்கும் எடிட்டிங்..நீண்ட நாட்களுக்குப் பிறகு, ரசிக்க வைத்த பிண்ணனி இசை.
நயந்தாரா...என்ன ஒரு மெச்சூரிட்டியான நடிப்பு.’அந்த கேரக்டராகவே வாழ்ந்தார்’ என்று சொல்வார்கள் இல்லையா? அப்படி நயந்தாரா வாழ்ந்திருக்கும் படம்.
சில படங்கள், நல்ல சினிமா பார்த்த திருப்தியைத் தரும். வெகுசில படங்கள் தான், அதன் இயக்குநருக்கு மரியாதையைத் தரும். அப்படிப்பட்ட படம், இந்த மாயா.
இயக்குநர் அஸ்வின் சரவணன் நம்பிக்கை தரும் இயக்குநராகத் தெரிகிறார்.
இவ்வளவு தரமான படத்தைக் கொடுத்த இயக்குநர் பற்றி அறிவோம் என்று இணையத்தில் தேடினேன். குமுதத்திற்கு அவர் கொடுத்த பேட்டி, கண்ணில் பட்டது. இந்த அற்புதமானஇயக்குநரிடம், அந்த அற்புதமான பத்திரிக்கை கேட்ட கேள்வி: ““சின்ன வயசா வேற இருக்கீங்க. நயன்தாராவுக்கு இப்போ பசங்க மத்தில பெரிய கிரேஸ். நீங்க நயன்தாராவை நேர்ல சைட் அடிச்சீங்களா..?”
விளங்கிரும்!
-------------------
ஏ புள்ளே, நீ எதிர்க்கட்சியைத் திட்டு..
மச்சான், நீ ஆளும்கட்சியைத் திட்டு..
நான், எல்லாரையும் திட்டறேன்.
இப்போ என்ன ஆச்சு?
எல்லாரும் குழம்பிட்டாங்க!
சியர்ஸ்!
மறுபடியும்...ஏ புள்ளே, நீ ஆளும்கட்சியைத் திட்டு..
மச்சான்....
மேலும் வாசிக்க... "ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...27"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.