Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...5



வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்.
- நம்புங்க, இது படத்தோட பெயர்!
நண்பர் ஒருவர் இன்பாக்ஸில் வந்து, இந்த படத்தைப் பார்க்கும்படி சொன்னார். படத்தின் பெயரைப் பார்த்து மிரண்டு போய், பார்க்கவில்லை. மீண்டும் இன்னொரு நண்பர் இந்தப் படத்தை பரிந்துரைத்தார். அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்த படம்...
ஹீரோவுக்கு பணத்தேவை. அவன் தன் முன்னாள் காதலியை பணம் கேட்டு மிரட்டுகிறான். அவளிடம் பணம் இல்லாததால், அவளின் கணவன் செய்த ஒரு க்ரைமைச் சொல்லி, கணவனை மிரட்டச் சொல்கிறாள். அவனிடமும் பணம் இல்லை. அவன் இன்னொருவரை வேறு காரணத்திற்காக மிரட்ட, இப்படியே போய் ஒரு பெரிய தாதாவின் கைக்கு மேட்டர் போகிறது. தாதா மிரட்டல் விஷயத்தை ரிவர்ஸில் நூல் பிடித்து வர, என்னாகிறது என்பது கதை!
சுமாரான படம் தான்..ஒரு நல்ல ஒன்லைன் சிக்கியுள்ளது. திரைக்கதைக்காக அதிகம் மெனக்கெடாமல், களமிறங்கியிருக்கிறார்கள். கொஞ்சம் பிரபல ஹீரோ நடித்திருந்தால், இன்னும் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கலாம்.
படம் சொதப்பக் காரணங்கள்:
1. படத்தின் பெயர். ஏதோ கோமாளித்தனமான, அரைவேக்காட்டுப்படம் எனும் பிம்பத்தையே இந்தப் பெயர் கொடுத்தது.
2. ஹீரோ முன்னாள் காதலியை மிரட்டுவதில் ஆரம்பித்து, ’மிரட்டல்கண்ணியில்தொடர்ந்து ஆறு-ஏழு பேர் மிரட்டப்படுகிறார்கள். இதை மூன்று பேருடன் முடித்திருக்கலாம். ஒரு கட்டத்திற்கு மேல், குழப்பமாகவும் சலிப்பாகவும் ஆகிவிட்டது. இண்டர்வெல்வரை இதிலேயே ஓட்டிவிட்டார்கள். டெல்லிக்கே போகாமல், கதை சென்னையிலேயே முடிந்திருக்கலாம்.
3. நிறைய மிரட்டல் கதைகள் வந்ததால், எதையும் ஆழமாகச் சொல்லாமல் போகிறது. ரிவர்ஸில் வரும்போதும், தாதா ஜஸ்ட் லைக் தட் எல்லோரையும் பிடிப்பதும் சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது.
4.கிளைமாக்ஸில் ஹீரோ தாதாவிற்கு விடும் சவால் சூப்பர். ஆனால் அதில் ஹீரோ ஜெயிக்கும் சீன்கள் வெகுசுமார்.
மிரட்டல் எண்ணிக்கையைக் குறைத்து, நல்ல சீன்களாகப் பிடித்திருந்தால், சூப்பர் ஹிட் படமாக வந்திருக்கும். ஒரு ஹை கான்செப்ட் சிக்கிவிட்டதிலேயே திரைக்கதையாசிரியர் திருப்தி அடைந்தது தான் பிரச்சினை.
இப்போதும் யாராவது இந்த கதையை பட்டி டிங்கரின் பார்த்து, நல்ல சீன்களுடன் தமிழிலோ அல்லது பிற மொழிகளிலோ ரீமேக் செய்யலாம்.
ஜஸ்ட் மிஸ் மூவி!

-------------
கேள்வி: அண்ணே, பாலா படம் ரிலீஸ் ஆகிடுச்சே..போகலியா?
பதில்: நல்லநாளும் அதுவுமா, நான் ஏன்யா சுடுகாட்டுக்குப் போறேன்?
பாலா படத்தைப் பார்ப்பதைவிட, அதற்கு வரும்பலியாடுகளின்விமர்சனங்களைப் படிப்பது தான் சுகம். ஆம் வெயிட்டிங்!
----------
கெட்டவர்களுடன்கூட வேலை செய்துவிடலாம்; முட்டாள்களுடன் வேலை செய்வது ரொம்பக் கஷ்டம்!
ஏனென்றால் கெட்டவர்கள் தனது எதிரிகளுக்கு மட்டும் தான் கெடுதல் செய்வார்கள்; முட்டாள்கள் தனக்கும் தன்னைச் சுற்றி இருப்போர்க்கும் சேர்த்து கெடுதலை வரவைக்கும் ஆற்றல் பெற்றவர்கள்!
- இஞ்சினியரிங் அனுபவம்!
--------------------------
தமிழ் சினிமாவில் நான் மதிக்கும் இயக்குநர்களில் ஒருவர், சுந்தர்.சி. இதை நான் சொல்லும்போதெல்லாம் நண்பர்கள் அதிர்ச்சி ஆகிறார்கள். பிடித்த இயக்குநர்கள் வரிசையில் பாரதிராஜா, மகேந்திரன், மிஷ்கின் போன்றோருடன் சுந்தர்.சியைச் சேர்ப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.
நகைச்சுவை என்பது மிகவும் கஷ்டமான விஷயம். த்ரில்லர், காதல், சோகம் போன்றவற்றைவிட, நகைச்சுவை ஜெனர் மிகவும் ரிஸ்க்கானது. அதில் ஒருவர் இருபது வருடங்களுக்கு மேலாக வெற்றிப்படங்களைக் கொடுக்கிறார் என்றால், அது சாதாரண விஷயமே அல்.
ஹிட்ச்காக் காலத்தில் அவரைவெறும்த்ரில்லர் பட இயக்குநராகவே பலரும் பார்த்தார்கள். ஆனால் அந்த ஒரு ஜெனரில் அத்தனை வெரைட்டியாகவும் டெக்னிகலி மிரட்டலாகவும் அவர் செய்த சாதனைகள் பின்னரே புரிந்துகொள்ளப்பட்டன. அதே போன்று, சுந்தர்.சியின் பெயரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இடம்பெறும்.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் அவர் பல நல்ல அறிவுரைகளை குறும்பட இயக்குநர்களுக்கு வழங்கியிருக்கிறார். அப்போதே, இவர் ஏன் டெக்னிகல் பேட்டிகளைக் கொடுப்பதில்லை என்று
நினைத்திருக்கிறேன். இப்போது BOFTA ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் அவர் கொடுத்திருக்கும் இரண்டு மணி நேர உரை, என் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளது. ‘பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோரே சும்மா இருக்கும்போது, நாம் அலட்டலாமா?’என்ற எண்ணத்திலேயே டெக்னிகலாகப் பேசாமல் அமைதியாக இருப்பதாக அவர் சொல்கிறார்.
இந்த அருமையான பேட்டியில், அவருடன் இந்த இடத்தில் மட்டும் மாறுபடுகிறேன். முன்னோர் செய்த தவறை நாமும் செய்ய வேண்டியதில்லை. ஃபிலிம் ஸ்கூலில் சேர முடியாத பலருக்கும், இத்தகைய டெக்னிகல் பேட்டிகள் பேருதவியாக இருக்கும் என்றால் மிகையில்லை. குறைந்தது இணைய மீடியாக்களிலாவது, தமிழ் சினிமா டெக்னிஷியன்கள் இத்தகைய உபயோகமான பேட்டியைக் கொடுக்க வேண்டும் என்பதே என் பல வருட வேண்டுகோள்.
சுந்தர்.சியின் இந்த அருமையான பேட்டியையும், தொடர்ந்து பாலா, ஆர்யா போன்றோரின் பேட்டியையும் எடுத்ததோடு நில்லாமல், இணையத்திலும் வெளியிட்ட BOFTA-விற்கும், ’யுடிவிதனஞ்செயனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
(இதே போன்று பாலா பேட்டியும் இருக்கிறது. ஆனால் சுந்தர்.சி அளவிற்கு டெக்னிகலாக அவர் ஒன்றும் பேசவில்லை. விகடன் பேட்டிகளில் வந்த விஷயங்களே மீண்டும்...!! )
யூடியூப் லின்க்ஸ்:
https://www.youtube.com/watch?v=4z15UluasxU
https://www.youtube.com/watch?v=Pn8i0-E4qOA
https://www.youtube.com/watch?v=fAXs6baey6s
https://www.youtube.com/watch?v=W2e8y0NhJH8
அனைத்து வீடியோக்களையும் காண:
https://www.youtube.com/watch…


-------------------------
பொங்கல் படங்கள் - ஒரு பார்வை
1. ரஜினி முருகன் :
நீண்ட போராட்டத்திற்குப் பின், தியேட்டருக்கு வரும் படம். டி.இமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட். ’பொங்கலை சந்தோசமாகக் கொண்டாட ஏற்ற படம்எனும் இமேஜை .வா.சங்க கூட்டணி ஏற்படுத்தியிருப்பது பெரும் ப்ளஸ். லிங்குவிற்கு நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டதா என்று தை பிறந்தால் தெரிந்துவிடும். மற்ற படங்கள் எல்லாம் ஓடினால் தான் சாதனை, இந்தப் படம் ரிலீஸ் ஆவதே ஒரு சாதனை தான் என்பதால், வாழ்த்தி வரவேற்போம்!
2. கெத்து:
இந்த படத்தை நான் எதிர்பார்க்க முக்கியக் காரணம், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் தான். படங்கள் அதிகம் கைவசம் இல்லாததாலோ என்னவோ, அட்டகாசமான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அடியே பாடல் மட்டும் தான் பழைய ஹாரிஸ் ட்யூன் சாயல். மற்றவை எல்லாம் புதிதாக இருக்கின்றன. தென் காற்று பாடலைக் கேட்கும்போது, வித்யாசாகரின் மெலோடி ஞாபகம் வருகிறது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம் என கலக்கியிருக்கிறார்.
மேலும், மான் கராத்தே இயக்குநரின் இரண்டாவது படம் இது. மான் கராத்தேவின் மேக்கிங்கில் அசத்தியிருந்தார்கள். மிகவும் ஸ்டைலிஷாக எடுக்கப்பட்ட படம் அது. எனவே இதிலும் விஷுவல்ஸ் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.
3. தாரை தப்பட்டை:
இசைஞானியின் இசை தான் இப்படத்திற்கு பலம். பாலா படம் பற்றி ஏதாவது குறை சொன்னால், சாமி கண்ணைக் குத்திவிடும் என்பதால்........உஸ்ஸ்!
4.கதகளி:
பசங்க பாண்டிராஜின் படங்களில் எனக்குப் பிடித்ததுவம்சம்தான். பசங்க, மெரீனா போன்ற ஸ்கூல் டிராமாக்களைவிட, வம்சம் படம் தரத்தில் பல மடங்கு உயர்ந்தது. ஏனோ அதிகம் கவனிக்கப்படாத, நல்ல படம். கதகளியை அந்த தரத்தில் கொடுப்பார் என்றால், பொங்கல் கொண்டாட்டமாக இது அமையும்!

---------------------------
ஆளாளுக்கு பாக்கியராஜை திரைக்கதை மன்னன் என்று புகழ்கிறார்களே ஒழிய, யாரும் அவர் ஏன் திரைக்கதை மன்னன், அப்படி என்ன செய்தார் என்று விளக்குவதில்லை.கும்பலில் கோவிந்தா போடுவது போல், அப்படியே திருப்பிச் சொல்கிறார்கள்’ - எனும் ரேஞ்சில் நேற்று ஒருவர் புலம்பியிருந்தார்.
அவரது படங்கள் நல்ல கதையுடனும், அழுத்தமான முடிச்சுகளுடம், சுவாரஸ்யமான காட்சி & வசனங்களுடன் இருப்பது தான் அவர் திரைக்கதை மன்னன் என்பதற்குச் சாட்சி! - இது சாமானிய ரசிகனின் விளக்கம்.
உங்களுக்கு டெக்னிகலாக விளக்கம் வேண்டுமென்றால், எனது திரைக்கதை தொடரில் வந்த இந்த இருபகுதிகளைப் பார்க்கலாம்:
பாக்கியராஜை ஏன் திரைக்கதை மன்னன் என்கிறோம்? :
http://sengovi.blogspot.com/2014/06/7.html
பாக்கியராஜும் Blake Snyder-ன் Beat Sheet-ம்:
http://sengovi.blogspot.com/2015/02/ii-38.html
அவரது எல்லாப் படங்களையும் காலவரிசைப்படி பார்த்து ஸ்டடி செய்துவருபவன் நான். நேரம் கிடைக்கும்போது, அதைப்பற்றி விரிவாக எழுதுவேன்!


--------------
ஒரு பிராமண நண்பரின் வீட்டில் விருந்துச் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
டிவியில் இது நம்ம ஆளு!
ஒரு மாமியிடம் ஆர்மோனியப்பெட்டியை வைத்து பாக்கியராஜ்தன் ஸ்டைலில்விளக்கம் கொடுக்கும் சீன் ஆரம்பமாகிறது.
விருந்தில் இருக்கும் எல்லோருக்குள்ளும் தர்மசங்கடம் பரவுகிறது.
பாக்கியராஜ் டபுள் மீனிங்கில் ஒரு டயலாக் சொல்கிறார்.
விருந்து வீட்டில் இருந்த வயதான பாட்டி, அடக்கமுடியாமல் குபீரெனச் சிரிக்கிறார். தொடர்ந்து மொத்தக்கூட்டமும் சிரிக்கிறோம்.
அது தான் பாக்கியராஜின் ஸ்பெஷலிட்டி.
டபுள் மீனிங் டயலாக்ஸும் ஏடாகூட சீன்களும் அவரது அடையாளங்களுள் ஒன்றாக இருந்தாலும், ஏராளமான பெண் ரசிகைகள் அவருக்கு இருந்தார்கள். அவரது குறும்பை ரசித்தார்கள். முந்தானை முடிச்சு கதை வசனம், பல வீடுகளில் பலநூறு முறை ஓடக் கேட்டிருக்கிறேன். அதன் வசனங்கள் அத்தனையும் எனக்கு மனப்பாடம் எனலாம்.
ஒரு சிக்கலான பிரச்சினையைக்கூட சிரிக்கச் சிரிக்கச் சொல்லும் வித்தகர் அவர்.
எங்கள் ஆசான்களில் ஒருவரான திரைக்கதை மன்னனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.