Tuesday, March 1, 2016

உள்ளே வெளியே : கெத்து (2016)

டிஸ்கி: விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட படம், கெத்து. எனவே, இது விமர்சனம் அல்ல!

ப்பா மீது விழுந்த கொலைப்பழியை மகன் துடைத்தாரா? எனும் ஒன்லைனுடன் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை, கெத்து. ஹீரோ, அவனுக்கென்று ஒரு குறிக்கோள், அவன் எதிர்நோக்க இருக்கும் சவால்கள் என்று சுவாரஸ்யத்தைத் தூண்டும் ஒன்லைன் தான் இது.


கூடவே ஒரு நல்ல (சுட்ட) ஹை கான்செப்ட்டும் உண்டு. ’அப்துல் கலாமைக் கொல்ல, ’Day of Jackal'வில்லன் வந்தால்..........?’ என்பது தான் அது. கேட்டவுடன், ‘சூப்பர்’ என்று சொல்ல வைக்கும் ஹை கான்செப்ட் தான் இது. ஜேக்கல் மாதிரி வலுவான கேரக்டரை இன்ஸ்பிரேசனாக எடுத்துக்கொண்டது நல்ல முடிவு தான். ஆனால் இன்ஸ்பையர் ஆகி, நாம் கொடுக்கும் அவுட்புட் ஒரிஜினலுக்கு மரியாதை சேர்ப்பதாக இருக்க வேண்டும்; கஜினி போல். அந்த கேர்க்டரைசேசனில் சொதப்பியது பெரும் தவறு.


ஹீரோ நான்வெஜ் கூட சாப்பிடாத, ஒரு சாமானியன்; லைப்ரேரியன். அவன் அப்பா ஒரு நேர்மையாளர், கோபக்காரர். தான் வேலை பார்க்கும் ஸ்கூலுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக்கை இடம் மாற்றச் சொல்லி, அவர் ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கிறார். டாஸ்மாக் ஓனர்(வில்லன் குரூப்-2)-க்கும் அவருக்கும் முட்டிக்கொள்கிறது. அப்பாவை வில்லன்கள் அடிக்க, வெஜ் ஹீரோவுக்கு கோபம் வந்து, அவர்களை வச்சு செய்கிறார். இது ஒரு பாட்ஷா முமெண்ட். ஒரு அப்பாவி, பாட்ஷா ஆகி அடிபின்னுகிறான் என்பது ஸ்க்ரிப்ட்டில் நன்றாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

(அது படத்தில் புஸ்ஸ் ஆனதற்குக் காரணம், உதயநிதி தான். ‘பாட்ஷா முமெண்ட்டில் முக்கியமான விஷயம், ஒரு ஆக்சன் ஹீரோ அப்பாவி வேடத்தைக் களைந்து பாட்ஷா ஆவது தான். ஆனால் உதயநிதிக்கு ஆக்சன் ஹீரோ இமேஜ் கிடையாது. இது தான் முதல் ஆக்சன் படம். முதல் சீனிலேயே சட்டை இல்லாமல் ‘பாடீ(!)’ காட்டி அறிமுகம் ஆகிறார். அதுவொரு பச்சை மண்ணு என்று அங்கேயே நமக்கு உறுதியாகிவிடுகிறது. அதன்பிறகு, அவர் எதிரிகளை பந்தாடுவது தமாஷாகவே தெரிகிறது. அதிலும், சத்யராஜ் மாதிரி ஸ்ட்ராங்கான நடிகரை அருகில் வைத்துக்கொண்டு இதைச் செய்யலாமா?)

அந்த பாட்ஷா முமெண்ட்டில் அடிப்பது ஹீரோ..சண்டை முடிந்தபின் ‘கொன்னுடுவேன்’ என்று மிரட்டுவது அப்பாகார். அடுத்த சீனிலேயே அந்த டாஸ்மாக் ஓனர் கொல்லப்பட, கொலைப்பழி அப்பா மீது விழுகிறது. (அடித்த ஹீரோவையும் ஏன் அரெஸ்ட் செய்யாமல் விட்டார்கள் என்றெல்லாம் கேட்கப்படாது.)

ஹீரோவின் சாமானிய வாழ்க்கை(ஆக்ட்-1) இப்போது கலைத்துப்போடப்பட்டு விட்டது. இப்போது ஹீரோவிற்கு இருக்கும் குறிக்கோள், அப்பா நிரபராதி என்று நிரூபிப்பது. அதற்கு உண்மையான கொலைகாரனை கண்டுபிடிக்க வேண்டும். உண்மையான கொலைகாரனோ, ஜேக்கல் வில்லன். ஒரு சாமானியன் எப்படி அந்த சர்வதேச கிரிமினலைப் பிடிப்பான்? செமயான இண்டரஸ்ட்டிங்கான கான்ஃப்ளிக்ட் இது.

இந்த மாதிரிக் கதைகளை சுவாரஸ்யமானதாக ஆக்குவது, வலுவான வில்லன் கேரக்டர் தான். கெத்து திரைக்கதையாசிரியருக்கும் இது தெரிந்தே இருக்கிறது. அதனால் தான் ‘டே ஆஃப் ஜேக்கல்’ வில்லனை இங்கே களமிறக்கியிருக்கிறார். இந்த இடத்தில், அந்த ஒரிஜினல் வில்லனைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். அவன் பெயர் என்னவென்றுகூட யாருக்கும் தெரியாது. காற்று மாதிரி, தன்னைப் பற்றிய தடயம் எதுவும் இல்லாமல் ஓரிடம் விட்டு இன்னோரிடம் நகர்பவன் அவன். பயங்கர புத்திசாலி. அவன் ஃபோட்டோகூட யாரிடமும் கிடையாது. கொடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பவன். இப்படிப்பட்ட ஒருவனை கெத்து லைப்ரரியன் ஹீரோ பிடிக்க வேண்டும் என்றால், அது எத்தனை சவாலான விஷயம். கேட்கவே ஜிவ்வென்று இருக்கிறதல்லவா?

’காப்பி’ என்று கூக்குரல் வரும் என்று பயந்தார்களா என்று தெரியவில்லை. ஜேக்கல் வில்லன், இந்த கெத்து வில்லனை தன் அடியாளாகக்கூட சேர்த்துக்கொள்ள மாட்டான். அப்படி ஒரு கதாபாத்திர வடிவமைப்பு.

அப்துல் கமால் எனும் விஞ்சானியைக் கொல்வது தான் வில்லனின் அசைன்மெண்ட். அவர் பாதுகாப்பு வளையத்திற்குள், இஸ்ரோவிலேயே இருப்பவர். அவரை வெளியே வரவைக்க வேண்டும். அவரது ஆசிரியர் ராஜேஸ். (உதயநிதி வேலை பார்க்கும் லைப்ரரி ஓனர்!) ராஜேஸைக் கொன்றால், விஞ்சானி அஞ்சலி செலுத்த வருவார். சுடுகாட்டுக்கு அருகிலே இருக்கும் ஒரு பங்களா, டாஸ்மாக் வில்லனுக்குச் சொந்தம். எனவே, அவனைக் கொன்று அந்த பங்களாவை தன் திட்டத்திற்கு உபயோகிப்பது மெயின்வில்லனின் ப்ளான். படத்தின் கிளைமாக்ஸ்வரை, ஏன் டாஸ்மாக் ஓனரை வில்லன் கொன்றான் என்பது மர்மமாகவே இருந்தது. அதை கடைசிவரை, திறமையாக திரைக்கதை மெயிண்டெய்ன் செய்திருந்தது. (ஆரம்பக் காட்சிகளில், சுடுகாடு பக்கத்திலே தான் இருக்கு எனும் வசனம் வரும். பே ஆஃப்!)

கொலைத்திட்டம் பக்காவாக இருக்கிறது. கொலைப்பழியை ஹீரோவின் அப்பா மேல் போட்டுவிட்டு, கூலாக தன் திட்டத்தை தொடர்வதும்கூட சபாஷ் மேட்டர் தான். ஆனால் ஹீரோ வில்லனை நெருங்குவதற்கான, க்ளூக்களில் தான் முதல் பிரச்சினை.


டாஸ்மாக் ஓனரைக் கொல்லும்போது, தன் ஃபாரின் லைட்டரை அங்கேயே போட்டுவிட்டுப் போகிறான் வில்லன்.

வில்லன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து ஹீரோ நெருங்கும்போது, வில்லன் அங்கிருந்து இடத்தைக் காலி செய்துவிட்டுப் போய்விடுகிறான். ஆனால் அப்துல் கமால் எழுதிய புத்தகத்தை பாதி மட்டும் எரித்துவிட்டுச் செல்கிறான். (ஸ்கூல் டிராமாவில்கூட இப்போது இப்படி சீன் வைக்க மாட்டார்கள்)

இவையெல்லாம் வில்லன் ஒரு கேணக்க்க்கழுதை எனும் பிம்பத்தைத் தான் நமக்குக் கொடுக்கின்றன. பேரரசு பட வில்லன்கூட, இதைவிட புத்திசாலியாக வருவான். எனவே, ஒரு முட்டாள் வில்லனைப் பிடிப்பது தான் ஹீரோவிற்கு இருக்கும் சவால் என்று ஆகிறது. அட்டகாசமான ஆரம்ப வில்லன் பில்டப், ஆரம்ப செட்டப் காட்சிகள், வில்லனின் பக்காவான மர்டர் ப்ளான் என எல்லாமே வேஸ்ட்டாகப் போய்விடுகின்றன.

ஒரு கடையில் சிசிடிவி ஃபுட்டேஜில் வில்லன் இருக்கிறான் என்று ஹீரோ கிளப்பிவிட்ட புரளியை நம்பி, வில்லன் அங்கே வருகிறான். வில்லன் கடைக்குள் போகும்வரைகூட காத்திருக்காமல், ஹீரோவின் அப்பா விரட்டுவது அபத்தத்தின் உச்சம். (இது தேறாது எனும் முடிவு நமக்கு வந்தது அப்போது தான்!)



அடுத்த பிரச்சினை...

வில்லனைப் பிடிக்க ஹீரோவும் அப்பாவும் முயல்கிறார்கள் என்பது சிசிடிவி கடை சீனிலேயே வில்லனுக்குத் தெரிந்துவிடுகிறது. அதற்கு அந்த வில்லனின் ரியாக்சன் என்ன?..........நத்திங். மேலேயிருந்து வவ்வால் மாதிரி குதித்து, நடந்து போனால் போதுமா? வில்லன் ஹீரோவை கொஞ்சம்கூட கண்டுகொள்வதேயில்லை. ஹீரோ அதிபயங்கர புத்திசாலி(!)யாக வில்லன் விட்டுச்சென்ற கேவலமான தடயங்களைக் கண்டுபிடித்து, வில்லனை நெருங்குகிறான். ஆனால் வில்லனிடமிருந்து எந்த ரியாக்சனும் கிடையாது. அது ஓரளவு லாஜிக்கலாக கரெக்ட் (இந்த சுள்ளான்கூட எல்லாம் ஜேக்கல் மோத மாட்டார்!) என்று வைத்துக்கொண்டாலும்கூட, படம் சுவாரஸ்யமே இல்லாமல் நகரும் ஃபீலிங் வந்துவிடுகிறது. வில்லனுக்கும் ஹீரோவுக்கும் மோதலே கிடையாது. வில்லனால் ஹீரோவுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. ஹீரோ இடையில் ஃபாரினுக்கெல்லாம் போய் டூயட் வேறு பாடிவிட்டு வருகிறார்.

வில்லன் ஒரு பக்கம் போக, ஹீரோ இன்னொரு பக்கம் தடவிக்கொண்டிருக்க, கெத்து வெத்து ஆகிவிடுகிறது. ஹீரோவுக்கும் வில்லனுக்குமான கண்ணாமூச்சி ஆட்டத்தில் கோட்டை விட்டது தான் திரைக்கதையில் முக்கியப் பிரச்சினை.

அடுத்து, பாடல்கள் எனும் கொடுமை.

நான் இந்த படத்தைப் பார்க்க நினைத்ததற்கு இரண்டே காரணங்கள் தான். ஒன்று, இயக்குநர் திருக்குமரன் மான் கரேத்தேயில் கொடுத்த விஷுவல் ட்ரீட். கெத்து ட்ரெய்லரும் விஷுவல்ஸ்காகவே பார்க்க வேண்டும் எனும் ஆவலைக் கொடுத்தது. அடுத்து, ஹாரிஸ் கொடுத்த கலக்கலான பாடல்கள். ஆடியோ கேட்டதுமே, இதற்கு விஷுவல்ஸ் எப்படி இருக்கும், இவற்றை திரையில் பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது.

என் மகனுக்கு ஆறு வயது. ‘தில்லு முல்லு, வாட்ஸப்’ ஆகிய இரண்டு பாடல்களும் அவனின் ஃபேவரிட் ஆகிவிட்டன. படத்தில் அந்த பாடல்கள் வந்தபோது, அவன் என்னிடம் கேட்டான்: ‘இப்போ ஏன்பா பாடுறாங்க?’.

இந்த இடத்தில் பாடல்கள் வரக்கூடாது என்று ஆறு வயது பையனுக்குக்கூட தெரிகிறது. பாடல்களுக்காகவே படம் பார்க்க வந்த அவனால்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. அப்படியென்றால், அந்த அளவிற்கு கேர்லெஸ்ஸாக படத்தை எடுத்திருக்கிறார்களா எனும் கேள்வி தான் எழுகிறது. ஹீரோயின் ஹீரோமேல் ஒருதலையாக காதல் கொள்கிறாள். பாடல் ஆரம்பிக்கிறது. ‘தில்லுமுல்லு பண்ணலே’ என்று ஹீரோ ஒருதலைராகம் பாடுகிறார்.அட்லீஸ்ட், ஒரு பாடகியை வைத்தாவது பாட வைத்திருக்கக்கூடாதா?


கொஞ்சம்கூட உடலை வருத்தி உழைக்காமல் எழுதப்பட்ட சீன்களால் தான், படம் வீணாகப் போனது. பல அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு உள்ளேயும் ஹீரோ சர்வசாதாரணமாக கிளைமாக்ஸில் நடமாடும்போது, நமக்கு ஆச்சரியம் ஏதும் வரவில்லை. இந்தப் படம், ஏதோ கொயந்தப்பசங்க டிராமா எனும் தெளிவு நமக்கு அதற்கு முன்பே வந்துவிடுகிறது. இந்த படத்தின் விஷுவல்ஸ்க்காகவே பார்க்க வேண்டிய படம் இது. கூடவே, திரைக்கதை ஸ்டடிக்காகவும் ஒருமுறை பாருங்கள்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.