Wednesday, February 10, 2016

திரைக்கதை சூத்திரங்கள் - முடிவுரை


 72. சூத்திரங்கள் அவசியமா?

அதுவொரு மதிய வேளை. ஒரு சாலையில் 'நோ யூ டர்ன்' போர்டு இருக்கிறது. நீங்கள் உங்கள் குழந்தையை ஹாஸ்பிடலில் காட்ட போய்க்கொண்டிருக்கிறீர்கள். அங்கே யூ டர்ன் செய்தால், ஹாஸ்பிடலை உடனே அடைந்துவிடலாம்; இல்லையென்றால், இரண்டு கிலோமீட்டர் கழித்து வரும் சிக்னலில் தான் யூ டர்ன் எடுக்க வேண்டியிருக்கும். டாக்டர் ஒருவேளை கிளம்பிவிடலாம். எனவே அங்கே ரூல்ஸை மீறி, யூ டர்ன் எடுக்கிறீர்கள். ஹாஸ்பிடல் போய் டாக்டரை கடைசி நிமிடத்தில் பிடித்துவிடுகிறீர்கள்.

மேலே சொன்ன சூழ்நிலையை ஆராய்வோம். அங்கே ஒரு விதிமுறை மீறல் நடந்திருக்கிறது. ஏறக்குறைய சில நோடிகளில் முடிவு எடுத்து, அதைச் செய்திருக்கிறீர்கள். அந்த சில நொடிகளில் நடந்த சிந்தனை ஓட்டம் என்ன?
அங்கே ஒரு தேவை இருக்கிறது. அந்த அவசரத்திற்கு ஒரு நியாயம் இருக்கிறது. யோசிக்காமல் திரும்பினால் என்ன ஆகும்?

உங்கள் பின்னால் வரும் வாகனம், நீங்கள் திடீரென திரும்புவதால் நிலைகுலைந்து உங்கள் மேல் மோதலாம்.

யூ டர்ன் எடுக்கும்போது, எதிர்திசையில் இருந்து வரும் வாகனம் உங்கள் மேல் மோதலாம்.

போக்குவரத்து காவலர் இருந்தால், உங்களைப் பிடிக்கலாம்.

யூ டர்ன் எடுப்பதில் அனுபவம் இல்லையென்றால், நீங்கள் கீழே விழலாம்.

அந்த சிலநொடிகளில் ஒரு அனலைசிஸ் நடக்கிறது.

மதிய வேளை..கூட்டமில்லை.

பின்னாலோ, எதிர்திசையிலோ வாகனம் இல்லை.

போலீஸும் இல்லை.


நம்மால் யூ டர்ன் எடுக்க முடியும்...திருப்பு!

இந்த அனலைஸிஸ்க்கு அடிப்படை, நோ யூ டர்ன் சிம்பல் பற்றிய உங்கள் அறிவு தான். அந்த சிம்பல் பற்றித் தெரியாத ஒருவன், மேலே சொன்ன எதுபற்றியும் அறியாமல் யோசிக்காமல் திரும்பி விபத்திலோ அல்லது போலீஸிடமோ சிக்கலாம்.

எனவே தான் விதிகளுக்கு எல்லாம் மேலான விதியாக இதைச் சொல்கிறார்கள்:

ஒரு விதியை மீறும் முன்பு, அதுபற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

'திரைக்கதை எழுத ரூல்ஸ், சூத்திரம், மெத்தட் எல்லாம் ஒன்னும் கிடையாது' எனும் வசனத்தை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கு இணையான இன்னொரு வசனம் ' பணம் சம்பாதித்தால் நிம்மதி போய்விடும்' என்பது.

இந்த பணம் பற்றிய வசனத்தைப் பேசுபவனைப் பார்த்தால், பெரும்பாலும் பணக்காரனாகத்தான் இருப்பான். 'ஏண்டாப்பா, அவ்ளோ கஷ்டமா இருந்தால் என்கிட்டே கொடுத்திடேன்' என்று கேட்டால் தெறித்து ஓடிவிடுவார்கள். கஷ்டம் என்பது வாழ்க்கையின் அங்கம். ஏழையின் கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறீர்களா, பணக்காரனின் கஷ்டத்தை அனுபவிக்கப்போகிறீர்களா என்பதே உங்கள் முன் உள்ள கேள்வி.

'பணம் தேவையில்லை' என்று பேசுபவர்களை இரண்டு வகையாக நாம் பார்க்கலாம்:

1. பணக்காரர்கள்

2. பணக்காரர்கள் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளையாக திருப்பிச் சொல்லும் பரதேசிகள்.

முதல்வகையினர் தான் புத்திசாலிகள் என்பது தெளிவு. 'பணம் மட்டுமே சந்தோசத்தைக் கொண்டுவராது. எனவே பணம் சம்பாதிப்பதற்காக, அடிப்படை மனித இயல்புகளையும் குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் இழந்துவிடாதீர்கள். இல்லையென்றால், பணம் இருக்கும்; நிம்மதி இருக்காது.' என்பது தான் பணக்காரர்கள் சொல்ல முயல்வது. 'பணம் வந்தால் தூக்கம் வராது' என்பது பரதேசிகள் புரிந்துகொள்வது; வறுமை என்பது தூக்க மாத்திரையா, என்ன!

திரைக்கதை விதிகள் பற்றிப் பேசுபவர்களையும் அப்படியே இரண்டு வகையாக பிரிக்கலாம்.

1. திரைக்கதை சூத்திரங்கள் பற்றிய அறிவுடையோர். அடிப்படைகள் பற்றிய தெளிவிருந்தால், ஒவ்வொரு விதிகள் பற்றியும் கவலைப்படாமல் கதையின் போக்கிற்கு ஏற்றபடி முடிவு செய்துகொள்ளலாம் என்பதை அறிந்தவர்கள்.

2. முதல்வகையினர் சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்லும் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த தொடரை எழுதி வருகிறேன். 'திரைக்கதைக்கு சூத்திரமா? இதெல்லாம் ஏமாற்று வேலை' எனும் கமென்ட்டை தொடர்ந்து கேட்டு வருகிறேன். அந்த சமயத்தில் எல்லாம், சொல்பவர் எந்தவகை என்று தான் பார்ப்பேன். முதல்வகை என்றால், 'நீங்கள் சொல்வது உண்மை தான்' என்று ஏற்றுக்கொள்வேன். இரண்டாம்வகை என்றால் 'சிரிப்பான்' தான்.

எந்தவொரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றாலும், முதலில் அதன் அடிப்படைகளில் தெளிவாக வேண்டும். எக்ஸ்பீரியன்ஸ் கூடக்கூட கற்றுக்கொண்டது எல்லாம் இயல்பான ஒன்றாக ஆகும். உதாரணமாக சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

இடுப்பை வளைக்காமல் நேராக உட்கார வேண்டும்.

சக்கரம் சுற்றும்வரை சைக்கிள் ஓடும், ஸ்லோ ஆனால் விழுந்துவிடும்.

வளைவைப் பொறுத்து, வேகத்தை குறைக்க வேண்டும். - என்பவை எல்லாம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொடுக்கப்பட்டவை. பிறகு கொஞ்ச காலத்திற்கு சைக்கிள் ஓட்டும்போது, இந்த ரூல்ஸும் நம்முடன் வந்துகொண்டே இருக்கும். எக்ஸ்பீரியன்ஸ் ஆனபின், ‘லாலாலா’ என்ற பாட்டுடன் போய்க்கொண்டிருப்போம். ‘சைக்கிள் ஓட்டும் சூத்திரங்கள்’என்று யாராவது ஆரம்பித்தால், சிரிப்போம். பொறியியல் துறையிலும் கல்லூரியில் மனப்பாடம் செய்தவை எல்லாம், அனுபவத்தில் இயல்பான ஒன்றாக ஆனதைக் கவனித்திருக்கிறேன். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும், யாரும் ஸ்டேடண்டர்ட்/ரூல்ஸ் புக்கை திறப்பதில்லை.


அதுவே இந்த தொடருக்கும் பொருந்தும். இதில் உள்ளவற்றைப் பயன்படுத்தி, சில திரைக்கதைகளை எழுதுங்கள். ஒரு கட்டத்தில் ‘இதில் புதுசா ஒன்னுமே இல்லை’என்று சொல்லி, இந்த தொடரை/புத்தகத்தை நீங்கள் தூக்கிப்போடுவது தான், இந்த தொடரின் உண்மையான வெற்றி.

திரைக்கதை எழுதுவது என்பது ஒரு மர்மமான விஷயமாகவே பலருக்கும் இருக்கிறது. நாவல் எழுதுவது போன்றது என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் திரைக்கதைக்காக பல புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழிலும் அப்படி கிடைக்கவேண்டும், ஆங்கிலம் அறியாதோருக்கும் பயன்பட வேண்டும் என்பதே இந்த தொடரின் அடிப்படை நோக்கம். எனக்கு வந்த மெயில்கள், இன்பாக்ஸ் மெசேஜ்கள் மற்றும் ஃபோன் கால்கள் மூலம், இதில் ஓரளவு நான் வெற்றி பெற்றுவிட்டதாகவே உணர்கிறேன்.

திரைக்கதை பற்றிய சில ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தபோது, நான் உணர்ந்த விஷயம், சில ஆசிரியர்கள் எல்லாவற்றையும் பொதுவில் வைப்பதில்லை. சில முக்கியமான டெக்னிக்குகளை ஒரு வரியில் கடந்து செல்வதைக் கவனித்திருக்கிறேன். இன்னும் சிலர், ’படிப்பவனுக்கு புரிந்துவிடவே கூடாது; ஆனால் எனக்கு விஷயம் தெரியும்ன்னு மட்டும் அவன் புரிஞ்சிக்கணும்’எனும் ரேஞ்சி எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். எனவே இந்த தொடர் எழுத ஆரம்பிக்கும்போது, நான் முடிவு செய்த ஒரே விஷயம் ‘எதையும் மறைக்காமல், நான் அறிந்த எல்லாவற்றையும் பொதுவில் வைக்க வேண்டும்’ என்பதே! 

சில நண்பர்கள் ‘இவ்வளவு விரிவாக எல்லாவற்றையுமே சொல்ல வேண்டுமா?’என்றுகூட கேட்டிருக்கிறார்கள். இருப்பினும் நான் அறிந்த அனைத்தையும் இங்கே பொதுவில் வைத்துவிட்டேன். இனி ஏதாவது தெரிய வந்தால், அதையும் எழுதுவேன். இதைப் படித்து, என்னை விட பெட்டராக நீங்கள் திரைக்கதை எழுதினால், அதைவிட எனக்கு சந்தோசம் தரும் விஷயம் வேறு ஏதும் இல்லை.

சில நண்பர்கள், மொத்தமாக இதைப் படிக்க வேண்டும் என்று காத்திருப்பதாகச் சொன்னார்கள். திரைக்கதை சூத்திரங்கள் - CONTENTS-ஐ அப்டேட் செய்திருக்கிறேன். மேலும், இது விரைவில் புத்தகமாக வரும். இனி அவர்கள் படிக்க ஆரம்பிக்கலாம்.

ஒன்றரை வருடங்களாக இந்த தொடரை எழுதி வந்திருக்கிறேன். தொடர்ந்து பின்னூட்டம் மூலமும், ஃபேஸ்புக்கிலும் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி. சில டெக்னிகல் விஷயங்களைப் பற்றிய விவாதத்தில் உதவிய என் மரியாதைக்குரிய நண்பர்களான கேபிள் சங்கருக்கும் வினையூக்கி செல்வகுமாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சில நல்ல தமிழ்ப் படங்களின் திரைக்கதையைப் பற்றிய அலசல் கட்டுரைகளை அடுத்து எழுதலாம் என்றிருக்கிறேன். ஹிட்ச்காக் படங்கள் பற்றிய தொடரும் பாதியில் நிற்கிறது. அதையும் தொடர்வோம். 

தொடர்ந்து இணைந்திருப்போம்...நன்றி, வணக்கம்!

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - முடிவுரை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, February 8, 2016

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 71

71. திரைக்கதை எழுதிய பின்...!

கதைக் கருவில் ஆரம்பித்து, பீட் ஷீட்டைத் தாண்டி, வசனத்தை எழுதி திரைக்கதையை ஒருவழியாக முடித்துவிட்டீர்கள். முதலில் உங்களுக்கு வாழ்த்துகள்!

’அடுத்து என்ன செய்வது?’எனும் கேள்வி மிகவும் பூதாகரமாக எழுந்து நிற்கும் நேரம் இது. ஏதோ இத்தனை நாள் ‘ஸ்க்ரிப்ட் எழுதறேன்’ என நண்பர்களிடமும், வீட்டிலும் படம் போட்டாகிவிட்டது. கல்லூரியில் கடைசி நாளில் ஒரு பயம் அடிவயிற்றைக் கவ்வுமே, அதே ஃபீலிங்கை மீண்டும் அடைந்திருப்பீர்கள். இனி செய்ய வேண்டியவை பற்றி, சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

1. திரைக்கதையை தயார் செய்யுங்கள்:

எழுதி முடித்த திரைக்கதையில் இருக்கும் எழுத்துப்பிழைகளைத் திருத்துங்கள். ஃபார்மேட் செய்ய வேண்டியிருந்தால், செய்யுங்கள். நல்ல தோற்றம் வந்தவுடன், ப்ரிண்ட் செய்யுங்கள்.

2. ஆடியன்ஸின் கருத்துக்களைக் கேளுங்கள்:

'சினிமாவுக்கு விமர்சனம் எழுதுவது, திரைக்கதை பற்றி தொடர் எழுதுவது அல்லது அதைப் படிப்பது, ஃபேஸ்புக்/ட்விட்டரில் தீவிரமாக புரட்சி செய்வது' போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாத, ஆனால் சினிமா பார்க்கும் ஆர்வமும் படிக்கும் பழக்கமும் உள்ள நண்பர்கள் அல்லது சொந்தங்களை தேடிப்பிடியுங்கள். அவர்கள் தான் தமிழ் சினிமாவின் உண்மையான ஆடியன்ஸ். அவர்களிடம் முதலில் உங்கள் ஸ்க்ரிப்ட்டைக் கொடுங்கள். சிலருக்கு சினிமா என்றாலே வெறுப்பு இருக்கும். அந்த மாதிரி நபர்களிடம் சிக்காமல், நல்ல படம் வந்தால் தியேட்டருக்கு ஓடும் ஆட்களிடம் மட்டும் கொடுங்கள். உங்கள் ஜெனருக்கு ஏற்ற ஆட்களை அதிகமாகப் பிடிப்பதும் நலம்.

அவர்கள் படித்து முடித்ததும், அவர்களை நேரில் சந்தித்து ‘உண்மையான’ கருத்தை கேட்டு வாங்குங்கள். ‘நல்லா இருக்குப்பா’ அல்லது ‘நல்லா இல்லைப்பா’ என்று ஒருவரியில் தப்பிக்க விடாதீர்கள். ஃபோனில்/மெயிலில் கேட்டால், அந்த பதில் தான் கிடைக்கும். எனவே நேரில் சந்தித்து, ’எந்த சீகுவென்ஸ் போரடித்தது/நன்றாக இருந்தது? இருப்பதிலேயே எது பெஸ்ட்/ஒர்ஸ்ட்?’ என்று முடிந்தவரை கேட்டு வாங்குங்கள். அவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

3. எக்ஸ்பர்ட்ஸின் கருத்துக்களைக் கேளுங்கள்:


உலக சினிமா, சினிமா விமர்சனம், திரைக்கதை என்றெல்லாம் உருண்டு புரளும் ஆட்களைப் பிடியுங்கள். அவர்களால் நேரம் ஒதுக்கி, உங்கள் ஸ்க்ரிப்ட்டைப் படிக்கா முடியுமா என்று கேளுங்கள். உங்கள் திரைக்கதையில் உண்மையிலேயே சில டெக்னிகல் பிரச்சினை இருக்கலாம். அதை இவர்கள் சொல்லலாம். இதே போன்ற சாயல் உள்ள அயல் சினிமாக்கள் பற்றிய விவரங்களும் கிடைக்கலாம். இதே போன்ற டெக்னிகல் பிரச்சினையால் தோல்வியடைந்த படங்களின் விபரங்களும் உங்களுக்கு கிடைக்கலாம். உங்கள் திரைக்கதை ஸ்ட்ரக்சரில் உள்ள பிரச்சினைகள், ஃபண்டமெண்டலில் உள்ள பிரச்சினைகள் பற்றி இவர்களிடம் கருத்துக்களை கேட்டுப்பெறுங்கள். இவர்கள் சொல்வதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

4. கருத்துக்களை ஆராயுங்கள்:

எப்போதும் ஒரே ஒரு ஆளின் கருத்தை மட்டும் கேட்காதீர்கள். மேலே சொன்னபடி, பலவகையான ஆட்களின் கருத்துக்களைப் பெறுங்கள். இப்போது, ஒரே மாதிரி கமெண்ட்கள் வந்திருக்கின்றனவா என்று பாருங்கள். உதாரணமாக, ஆடியன்ஸில் மூன்று பேர் ‘அந்த மர்டர் சீன்ல இருந்து, ஸ்க்ரிப்ட் செம ஸ்பீடு’ என்று சொல்லியிருக்கலாம். எக்ஸ்பர்ட்களில் சிலர் ‘செட்டப் ஸ்லோ & க்ளிஷே..கால் ஃபார் அட்வென்ச்சரில் இருந்து செம!’ என்று சொல்லியிருக்கலாம். இவர்கள் அனைவரும் சொன்னதன் அர்த்தம் ஒன்று தான். ஆக்ட்-1 செட்டப்பில் பிரச்சினை இருக்கிறது. அதன்பின் திரைக்கதை நன்றாகச் செல்கிறது. ஒரே ஒருவர் மட்டும் ‘காமெடி சுமார்’ என்று சொல்ல, மற்றவர்கள் ‘காமெடி ஓகே/சூப்பர்’ என்று சொல்லியிருக்கலாம். எப்போதும் மெஜாரிட்டி கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப, திரைக்கதையில் மாற்றங்களைச் செய்யுங்கள். (மறுபடியுமா!!)

5. கதைத் திருட்டு எனும் அபாயம்:

மேலே சொன்னதைச் செய்வதில் உள்ள ஒரே சிக்கல், உங்கள் கதை களவு போகலாம். சிலர் தெரிந்தே திருடலாம்; சிலர் அறியாமல் உங்கள் கதையை லீக் செய்துவிடலாம். கதை, கவிதை, தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள வாத்தியாரான என் உறவினர் ஒருவரிடம் ஒரு திரைக்கதை ஆடியன்ஸ் ஒப்பீனியனுக்காக வந்தது. படித்து கருத்தை சொல்லிவிட்டார். பிறகு நான் அவரைச் சந்தித்தபோது, விலாவரியாக அந்த கதையைச் சொன்னார். ’இப்படி வெளியில் சொல்லாதீர்கள்’ என்று அறிவுரை சொன்னேன். அதில் இருக்கும் கதைத்திருட்டு ஆபத்து அவருக்கு புரியவேயில்லை. (அதுவொரு மொக்கைக்கதை என்பது வேறுவிஷயம்!) தமிழ் சினிமாவில் தெரிந்தே நடக்கும் கதைத்திருட்டு பற்றியும் நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். எனவே, எச்சரிக்கையாக இருங்கள். மிகவும் நம்பிக்கையான ஆட்களிடம் மட்டும் திரைக்கதையைக் கொடுங்கள்.

6. பட்ஜெட் எனும் பூதம்:

உங்கள் முதல் திரைக்கதையை நம்பி பலகோடிகளை முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் பயப்படுவார்கள். ‘ஓப்பன் செய்தால், ஒரு ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகிறது. அப்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் வேகமாக அந்த ஃப்ளைட்டை நோக்கி வருகின்றன. டமார்...டைட்டில் போடுறோம் சார்’ என்று கதை சொன்னால், ஒரு கும்பிடு போட்டு அனுப்பிவிடுவார்கள்.

எனவே உங்கள் ஸ்க்ரிப்ட்டைப் படமாக்க என்ன பட்ஜெட் ஆகும் என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். கோலிவுட்டில் இதற்கென எக்ஸ்பெர்ட்ஸ் உண்டு. அல்லது, இதே போன்ற படங்கள் என்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிந்துகொள்ள முயலுங்கள். ஜிகர்தண்டாவிற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் தான் பீட்சா கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதினார். எனவே, முதல் திரைக்கதையை அளவான பட்ஜெட் கொண்டதாக உருவாக்குங்கள்.

7. உங்கள் பயோ-டேட்டா:

எவ்வளவோ பேர் திரைக்கதை எழுதுகிறார்கள், வாய்ப்புக்காக அலைகிறார்கள். அப்படி இருக்கும்போது, உங்களை ஏன் ஒரு தயாரிப்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும்? ‘சூப்பர் கதை...திறமை’ என்பதையெல்லாம், உங்கள் முதல் படம் வெளியான பிறகே தெரிந்துகொள்ள முடியும். முதல் பட வாய்ப்பு தானே பிரச்சினையே? எனவே ‘நீங்கள் யார், ஏன் உங்களை தயாரிப்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும்?’ என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். அதற்கு ஒரு பயோடேட்டா தேவை.

நீங்கள் யாரிடமாவது உதவி இயக்குநராக இருந்தால், அதைக் குறிப்பிடுங்கள். ’ரெஃபரென்ஸ்/ரெகமண்டேசன்’ அளவுக்கு சினிமாவில் கைகொடுப்பது வேறில்லை. (மோசமான திரைக்கதை இருந்தாலும், வாய்ப்பை வாங்கிவிட முடியும் சோக சூழல்!)

உதவி இயக்குநரோ இல்லையோ, ஷார்ட் ஃபிலிம் எடுங்கள். வெரைட்டியான ஜெனர்களில் எடுங்கள். அதில் சிறந்த ஐந்து படங்களை இணையுங்கள். உங்கள் விஷுவல் குவாலிட்டிக்கு ஆதாரமாக அவை இருக்கும்.

நீங்கள் ஏதேனும் கதை, கவிதை, நாவல் அல்லது சினிமா பற்றி புத்தகங்கள் எழுதியிருந்தால், அதையும் குறிப்பிடுங்கள். உங்கள் க்ரியேட்டிவிட்டிக்கு ஆதாரமாக அவை இருக்கும்.

இவற்றை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். யாரும் பயோடேட்டாவை பேப்பரில் கேட்பதில்லை. பேசும்போதே, மேலே சொன்னவற்றை சரியான பில்டப்புடன் நீங்களே சொல்லுங்கள். ஆதாரங்களை அவர்கள் முன் வைத்து, வாய்ப்புக் கேளுங்கள்.

தமிழ் சினிமாவில், வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!


8. விளம்பரம்:

நமது தலைமுறையின் பெரும் வரப்பிரசாதம், இணையம் தான். முன்பெல்லாம் பத்திரிக்கைகளுக்கு கதை அனுப்பி, பிரசுரம் ஆகுமா என்று காத்திருக்க வேண்டும். இப்போது நீங்களே இணையத்தில் கதை, கவிதை, கட்டுரை, ஷார்ட் சிலிம் என எல்லாவற்றையும் பிரசுரிக்கலாம். வலைப்பூ, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை உங்களை விளம்பரப்படுத்தும் ஒன்றாக பயன்படுத்துங்கள். இணையம் போன்ற சில விஷயங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவை நம்மை பயன்படுத்திவிடும். சினிமா தொடர்பான ஆட்களின் நட்பு வட்டத்தில் இணையுங்கள். இணையத்தில் விழிப்பாக இருந்தால், சில நல்ல நட்புகளை கண்டறியலாம்.

உங்களைப் பற்றி ஒருவர் அறிந்துகொள்ள விரும்பினால், இந்த சுட்டிகளை நீங்கள் கொடுக்கும் அளவிற்கு பிம்பத்தை மெயிண்டெய்ன் செய்யுங்கள். (வீட்டுக்காரர் அனுமதியுடன் மட்டுமே இணையத்திற்கு வந்து புரட்சி செய்யும் பெண்ணியவாதி ஒருவரை நான் அறிவேன்..அது!)

9. டீம் ஒர்க்:


சினிமா என்பது ஒரு டீம் ஒர்க். நீங்கள் ஒருவரே அஷ்டவாதானியாக எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்காதீர்கள். நல்ல டெக்னிகல் நட்பு வட்டத்தை உருவாக்குங்கள். நடிப்பு, இயக்கம், ஒளிபதிவு, எடிட்டிங் போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளோரைக் கண்டுபிடித்து இணைந்துகொள்ளுங்கள். இன்றைக்கு சினிமாவைக் கலக்கும் கார்த்திக் சுப்புராஜ்-விஜய் சேதுபதி-நலன் - பாபி சிம்ஹா எல்லாம் அப்படி ஒன்றாக கிளம்பி வந்தவர்கள். அப்படி ஒரு நல்ல டேலண்ட்டான ஆட்கள் கிடைத்தால், உங்கள் திரைக்கதை அவர்கள் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.

 10. திரைக்கதை புத்தகங்கள்:
எப்போதும் ஏதேனும் ஒரு திரைக்கதை புத்தகத்தை படித்துக்கொண்டே இருங்கள். ஒரு திரைக்கதை எழுதியபின், மீண்டும் இந்த தொடரைப் படியுங்கள். சில நண்பர்கள் ஆங்கிலப் புத்தகங்களின் பெயரைக் கேட்டார்கள். இந்த தொடருக்கு நேரடியாகவும், மறைமுகவாகவும் உதவிய புத்தகங்களை பட்டியலிடுகிறேன். இவற்றைப் படியுங்கள்:

1. Save the Cat! The Last Book on Screenwriting You'll Ever Need - By Blake Snyder

2. Save the Cat! Goes to the Movies: The Screenwriter's Guide to Every Story Ever Told - By Blake Snyder

3. Save the Cat! Strikes Back: More Trouble for Screenwriters to Get Into… and Out Of - By Blake Snyder

4. Screenplay - Syd Field

5. The Art of Dramatic Writing - By Lajos Egri

6. Alternate Scriptwriting - By Ken Dancyger & Jeff Rush
7. Story - By Robert Mckee
8. Blue Print for Screenwriting - By Rachel Ballon
9. The Coffee Break Screenwriter - Pilar Alessandra
10. Screenwriting : Sequence Approach - By Andrew Marlowe 


11. அடுத்த திரைக்கதை:

ஒரு திரைக்கதை வேலை முடிந்ததும், உடனே அடுத்த வேலையை ஆரம்பியுங்கள். பெரும்பாலான இடங்களில் கதை சொல்லும்போது, ‘வேறு கதை இருக்கிறதா?’எனும் கேள்வியும் வருகிறது. மேலும், தொடர்ந்து திரைக்கதைகளை எழுதும்போது தான் இந்த தொடரில் உள்ள விஷயங்களையும் பழைய படங்களையும் ரெஃபரென்ஸாக பயன்படுத்துவது இயல்பானதாக ஆகும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்!

நாளை, இறுதியாகச் சில விஷயங்களைப் பார்ப்பதுடன் தொடரை நிறைவு செய்வோம்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 71"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, February 7, 2016

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 70

70. வரி..வட்டி..கிஸ்தி!

 "மௌனப் படக் காலங்களில் சினிமா என்பது விஷுவல்களால் கதை சொல்வதகாக, தூய்மையான சினிமாவாக இருந்தது. பேசும் படம் கன்டுபிடிக்கப்பட்டதை, சினிமாவின் துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேன்டும். அதுவரை விஷுவல் மீடியமாக இருந்த சினிமா, அதன்பின் 'வசனம் பேசும் நடிகர்களை, அதாவது நாடகத்தை பதிவு செய்யும் மீடியமாக மாறிவிட்டது. ஒளிப்பதிவு, நடிப்பு, கலை,இசை மற்றும் இயக்கம் மூலம் மக்களுக்கு கதை சொல்வதே உண்மையான, தூய்மையான சினிமா. " - அல்ஃப்ரெட் ஹிட்ச்காக்.


வசனம் எழுத ஆரம்பிக்கும் முன்பு, ஹிட்ச்காக் சொன்னதை மனதில் இருத்திக்கொள்வது அவசியம். வசனம் எழுதுவதற்கான அடிப்படையே, சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது தான்.

ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களே சினிமாவாக ஆக்கப்பட்டன. முழுக்க பாடல்களால் நிரம்பியது ஆரம்ப கால தமிழ் சினிமா. பெரும்பாலும், மக்கள் ஏற்கனவே அறிந்த நாடகங்கள் மற்றும் கதைகளே திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. சமூகக் கதைகள் வர ஆரம்பித்ததும், பாடல்களின் இடத்தை நீண்ட, செந்தமிழ் வசனங்கள் எடுத்துக்கொண்டன. கேமிராவில் பதிவு செய்யப்பட்ட நாடகங்களாக அவை ஆகின.

இவற்றைப் பற்றி முன்பே பார்த்திருக்கிறோம். அந்த சமயத்தில் அந்த நாள் போன்ற படங்கள் பாடல்களும் இல்லாமல், நீண்ட அடுக்குமொழி வசனங்களும் இல்லாமல் நியூ நுஆர் த்ரில்லராக வந்தது. ஏறக்குறைய இன்றைய படங்களின் தரத்தில் வந்த படம், அந்த நாள்.  விளைவு, படம் பெரும் தோல்வி அடைந்தது.

நீண்ட வசனங்கள் பேசிய படங்களையும், நடிகர்களையும் இன்றைக்கு கிண்டல் செய்கிறோம். ஆனால் இன்றைய தரத்தில் அன்றே படங்கள் கொடுத்தவர்களுக்கு நம் மக்கள் கொடுத்த பரிசு, நஷ்டம் தான். அறிந்ததில் இருந்து அறியாததற்கு எனும் கான்செப்ட் பற்றிப் பார்த்திருக்கிறோம். மொத்தத்தில், ஆடியன்ஸின் தரமும் வணிக சினிமாவில் முக்கியப் பங்களிப்பாக இருக்கிறது.

எனவே ஹாலிவுட் திரைக்கதை மேதைகளும் ஹிட்ச்காக்கும் சொல்லிவிட்டார்கள் என்று 'இஸ்க்..புஸ்க்' வசனங்களை வைத்தீர்கள் என்றால், விலையில்லா ஆபத்தை வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். அவர்கள் சொல்வதன் பொருள் என்ன, அவர்கள் சொன்னதை எப்படி எடுத்துக்கொள்வது என்று பார்ப்போம்.


ஒருவர் தனியே தன் வீட்டிற்கு வருகிறார். வீடு பூட்டப்பட்டிருக்கிறது.

"அட, வீடு பூட்டிக்கிக்குதே..எங்கே போய்ட்டா?" என்கிறார்.

"மணி என்ன?" என்றபடியே வாட்ச்சைப் பார்க்கிறார்.

'பத்து மணியா? அப்போ ரேசன் கடைக்குத்தான் போயிருப்பா" என்கிறார்.

ரேசன் கடை நோக்கிப் போகிறார்.

- இதில் உள்ள ஒரு வசனம் கூடத் தேவையில்லை. வீடு பூட்டப்பட்டிருப்பதையும், அவர் ஆச்சரியம் அடைவதையும், வாட்ச்சைப் பார்ப்பதையும், அவராக ஒரு முடிவுக்கு வந்தவராக எங்கோ கிளம்பிப்போவதையும் காட்சியாகவே காட்டிவிட முடியும். அதை ஆடியன்ஸ் புரிந்துகொள்வார்களா என்பதை மட்டுமே நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே ஆடியன்ஸ் பார்த்து புரிந்துகொள்ளக்கூடிய விஷயங்களை  வசனத்தில் சொல்ல வேண்டியது இல்லை.வசனம் அதிகம் ஆகும்போது நாடகத்தன்மை கூடிக்கொண்டே போகிறது.


 வசனம் எப்படி அமைய வேண்டும் என்பதை இரண்டு அடிப்படை விஷயங்கள் தான் முடிவு செய்கின்றன.
 1. ஜெனர்: காமெடி, குடும்ப செண்டிமெண்ட் போன்ற கதைகளுக்கு சுருக்கமான ஒரு வார்த்தை வசனங்கள் பொருந்தாது. அதே நேரத்தில் த்ரில்லர், ஆக்சன் போன்ற ஜெனர்களில் வசனத்தை முடிந்தவரை குறைக்கலாம். இதனால் தான் ஜெனர் பற்றிய தெளிவு முதலிலேயே நமக்கு தேவைப்படுகிறது.

2. மக்களின் எதிர்பார்ப்பு: ஒவ்வொரு ஜெனரில் வரும் கதாபாத்திரங்கள் இப்படித்தான் பேசும் எனும் யதார்த்த எதிர்பார்ப்பு ஆடியன்ஸிடம் இருக்கும். ஒரு ரொமாண்டிக் காமெடியில் கேஷுவலாக கேரக்டர்கள் பேசுவதையே எதிர்பார்ப்பார்கள். வசனத்தில் புரட்சி என்று இறங்கும் முன்பு, எந்த அளவுக்கு மக்களின் ரசனையை வளைக்கலாம் என்பதை முன் ஜாக்கிரதை உணர்வுடன் முடிவு செய்வது அவசியம்.


தனியாக வசனகர்த்தா எனும் ஆசாமி திரைக்கதைக்குத் தேவையில்லை. திரைக்கதையில் வசனமும் ஒரு அங்கம். இருந்தாலும், இந்திய சினிமாக்களில் வசனகர்த்தா எனும் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அத்தனை இயல்புகளையும் அறிந்தவரே பொருத்தமான வசனகர்த்தாவாக இருக்க முடியும். பொதுவாக, திரைக்கதை உருவாக்கத்திலும் பணியாற்றியவரையே வசனகர்த்தாவாக க்ரெடிட் கொடுக்கிறார்கள். திரைக்கதையில் தன் பெயரை மட்டும் போட்டுக்கொள்ளும் ஆசை தான் இதற்குக் காரணம் என்பதை நாம் விளக்கவேண்டியதில்லை. ஆனால் ஹாலிவுட்டில் மூன்று அல்லது நான்கு பேருக்குக்கூட திரைக்கதையாசிரியர் எனும் க்ரெடிட் கொடுக்கிறார்கள். இங்கும் அது சீக்கிரம் வரும் என்று நம்புவோம்.

திரைக்கதை என்பது இறுதிவரை மாறிக்கொண்டே இருக்கும் விஷயம். மூன்று டிராஃப்ட் எழுதியபின், புதிதாக ஒரு ஐடியா தோன்றலாம். அது கதையைவே மாற்றலாம். திடீரென சிக்கும் ஒரு வசனம், ஒரு கேரக்டரின் இயல்பையே மாற்றிவிடலாம். (இது நடக்கும்போதெல்லாம் சீன் போர்டையும் பீட் ஷீட்டையும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.). திரைக்கதையின் அழகும் ஆபத்தும், இந்த நிலையற்ற தன்மை தான். எனவே தான் வசனகர்த்தா என்பவர், திரைக்கதையில் பணியாற்றாத ஒருவராக இருப்பது சிரமத்தையே உண்டாக்கும். தமிழ் சினிமாவின் கெட்ட பழக்கத்தை மறந்துவிட்டு, நல்ல வசனத்தைக் கொடுப்பது திரைக்கதையாசிரியரான உங்களின் பொறுப்பு என்று செயலில் இறங்குங்கள். (உத்தம வில்லன் தான் வசனகர்த்தாவை தனியாகக் குறிப்பிடாத முதல் தமிழ்படம் என்று நினைக்கிறேன்.)


வசனம் எழுதுவதை தனியாக ஒரு டிராஃப்ட் எழுதுவது போல் வைத்துக்கொள்ளுங்கள். முதல் சில டிராஃப்ட்களில் அப்போதைக்குத் தோன்றுவதை எழுதிக்கொள்ளுங்கள். பெரும்பாலும் அது சரியாகவே இருக்கும். சொல்ல வரும் விஷயம் என்னவென்பதை அது சரியாக சுட்டிக்காட்டும். அதை வேறு வார்த்தைகளில், சுவையாகவும் அந்த கேரக்டரின் இயல்புக்கேற்பவும் மாற்றுவதே ’வசனம் எழுதுவது’.


வசனம் எழுதும்போது நினைவில் வைக்க வேண்டிய சில விஷயங்கள்:

1. எல்லா அல்லது பெரும்பாலான கேரக்டர்களும் உங்களை மாதிரியே பேசுவது தான் நீங்கள் சந்திக்கும் முதல் பிரச்சினை. ஒவ்வொரு கேரக்டருக்கும் முடிந்தவரை தனி ஸ்டைலைக் கொடுங்கள். உங்கள் கற்பனைக் கதாபாத்திரத்திற்கு அதைச் செய்ய முடியவில்லையென்றால், நீங்களாகவே நடிகர்களை கற்பனை செய்யுங்கள். தனுஷும், லட்சுமி மேனமும் ,ஊர்வசியும், மனோபாலாவும் நடிப்பதாகக்கூட கற்பனை செய்துகொள்ளுங்கள். அதன்மூலம், வெவ்வேறு ஸ்டைல் எளிதாகக் கிடைக்கும்.

2. வசனங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் தான். ஆனால் வாழ்க்கையில் நாம் பேசும் பேச்சு, பெரும்பாலும் போரடிக்கும் விஷயமாகவே இருக்கிறது. ஆனால் சில நொடிகள் யோசித்தபின் பதில் சொல்லும் வாய்ப்புக்கிடைத்தால், இன்னும் கொஞ்சம் தெளிவாக நாம் பேசுவோம். (உதாரணம், இண்டர்வியூ!). வசனம் எழுதும்போது, ஒவ்வொரு கேரக்டருக்கும் சில நொடி அவகாசம் கொடுங்கள். வளவளவென்று சொன்ன விஷயத்தை, அதே கேரக்டர் சரியாகப் பேசும்!

3. ஒரு கேரக்டர் பேசும்போது, இன்னொரு கேரக்டர் நின்று அதைக் கவனித்துப் பதில் சொல்வதாக வைப்பது ரொம்ப போரடிக்கும் விஷயம். அந்த இன்னொரு கேரக்டருக்கு வேறு ஏதாவது வேலை கொடுங்கள். அவசரமாக பஸ்ஸைப் பிடிக்க வேண்டியிருக்கலாம் அல்லது போலீஸ் அவரை நெருங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது அந்த ரூமில் கட்டிலுக்குக்கீழே அவரின் காதலி ஒளிந்திருக்கலாம். வெறுமனே ஒருவர் பேச இன்னொருவர் கவனிக்கிறார் என்று இல்லாமல், அதை எப்படி சுவாரசியமாக்கலாம் என்று பாருங்கள்.

4. உங்கள் வாழ்க்கையில் பார்த்த கேரக்டர்கள் அல்லது வேறு படைப்புகளில் பார்த்த/படித்த கேரக்டர்களின் பேசும் ஸ்டைலை உபயோகிக்க முடியுமா என்று பாருங்கள்.

5. சில நேரங்களில் நீண்ட வசனங்கள் அல்லது வாக்குவாதங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும். தேவர் மகனில் சிவாஜி-கமல் பேசிக்கொள்ளும் சீன் ஒரு உதாரணம். படத்தின் கருவே அந்த காட்சி தான். எனவே அதை உணர்வுப்பூர்வமாக எழுத வேண்டும். பேசுவது படிக்காத கிராமத்துப் பெரியவர். எனவே மணிரத்னம் ஸ்டைலில் பேசக்கூடாது. முழுக்க எழுதியபின்னும் மூன்று பக்கத்திற்கு வசனம் மட்டுமே இருக்கலாம். அதைப் பார்த்தததும் நமக்கே பீதியாகும். அதை இன்னும் டிராமடிக்காக, பார்ப்பதற்கு போரடிக்காத விஷயமாக எப்படி ஆக்கலாம்? ஒரு கிராமத்து வீட்டில் அப்பாவும் மகனும் சண்டை போட்டால், மொத்தக் குடும்பமும் வந்து சமாதானம் செய்யும் அல்லது வேடிக்கையாவது பார்க்கும். தேவர் மகன் சீனில் அவர்கள் ஏன் இல்லை என்று யோசியுங்கள். மழை எப்படி அந்த சீனை இன்னும் டிராமடிக்காக ஆக்கியிருக்கிறது என்று பாருங்கள். (மழை, இயக்குநரின் ஐடியாவாகவும் இருக்கலாம்.) இந்த மாதிரி நீண்ட வசன காட்சிகளை எடுத்துப்பாருங்கள். என்ன செய்திருக்கிறார்கள் என்று ஸ்டடி செய்யுங்கள்.

6. ஒரு கேரக்டர் ரகசியமாக சில செயல்களைச் செய்வதாக இருக்கலாம். அந்த மாதிரி கேரக்டர்கள் (நல்ல) டபுள்மீனிங்கில், தன் ரகசியச் செயல்களுக்கும் பொருந்துவதாகப் பேசுவது போல் வசனங்களை அமைப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

7. எக்ஸ்போசிசன் எனப்படும் முன்கதையைச் சொல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். இதைப்பற்றி விரிவாக ‘Exposition எனும் நவீன வெளிப்பாடு’ (http://sengovi.blogspot.com/2014/08/20.html) பகுதியில் பார்த்திருக்கிறோம்.

8. வசனங்கள் சரியான லயத்தில் அமைந்திருக்கிறதா என்று பார்ப்பதற்கான எளிய வழி, அவற்றை வாய்விட்டு சொல்லிப்பார்ப்பது தான். எழுதி முடித்தபின், அந்த் கேரக்டர்கள் போன்றே வசனங்களை (தனியாக!) பேசிப்பாருங்கள்.

9. ஜெனர் எப்படி இருந்தாலும், சில கதாபாத்திரங்களை நாம் வளவளவென்று பேசும் பாத்திரங்களாக படைக்கலாம், சிலரை அதிகம் பேசாத டெரர் ஆட்களாகவும் படைக்கலாம். எனவே வசனம் எழுதும் முன்பு, கதாபாத்திரத்தின்  இயல்பு என்னவென்று பார்ப்பது அவசியம்.

10. நீங்கள் என்ன தான் வசனம் என்று எழுதினாலும், அதை இறுதிசெய்யப்போவது நடிகரும் இயக்குநரும் தான். ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான பேசும் ஸ்டைல் இருக்கும். அவர்களின் போக்கிலேயே விடும்போது, நடிப்பு இன்னும் இயல்பானதாக ஆகும். எனவே வசனத்தை முழுக்க மாற்றாமல், ஃப்ளோவிற்கான மாற்றங்களை இயக்குநரும் நடிகரும் செய்ய வேண்டிவரும். அது இயக்குநரின் தலைவலி என்றாலும், நீங்களும் இணைந்து மாற்ற வேண்டி வரலாம்.

ங்க எழி முடிப்பன்மூலம், ஏறக்குறைய ிரைக்கை எழும் பெரும்பியை நிறைவு செய்கிறீர்கள்...ாழ்த்ுகள்!

ிரைக்கையை வெற்றிகாக எழி முடித்ுவிட்டீர்கள்.  அடத்ு என்னெய்வு என்று அடத்ியில் ார்த்ுவிட்டு, இந்த ொடை முடிப்போம்.

(நாளை....தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 70"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, February 5, 2016

விசாரணை - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:
நம் மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், விசாரணை. சர்வதேச திரைப்பட விழா முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற விசாரணை, இன்று முதல் நம் பார்வைக்கும் வந்திருக்கிறது.
ஒரு ஊர்ல :
கோவை ஆட்டோ டிரைவர் சந்திரகுமாரின் உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து, விசாரணையின் கதையை அமைத்திருக்கிறார்கள். ஆந்திராவில் சாதாரண மளிகைக்கடையில் வேலை செய்யும் தினேஷையும், அவரது நண்பர்களையும் போலீஸ் அள்ளிக்கொண்டு போகிறது. அதன்பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.

உரிச்சா:
நம்மை படம் முழுக்க பதற வைக்கும் விஷயம், இது கற்பனை அல்ல; உண்மையிலேயே நடந்த விஷயம் என்பது தான். சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கை, காரணமேயின்றி எப்படி வேண்டுமானாலும் திசை திரும்பலாம் என்பது தான் இந்த வாழ்க்கையின் அபத்தம். அதிகாரத்தில் இருப்போர் மக்களை எந்த அளவிற்கு பகடைக்காயாக ஆக்கி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று இந்தப் படம் தோலுரித்துக் காட்டுகிறது.

ஒரு பெரிய கொள்ளைக்கேஸை முடித்துக்கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஆந்திர போலீஸ். திருடர்கள் தமிழர்களாய் இருக்கலாம் என்பது தான் கிடைத்திருக்கும் ஒரே க்ளூ. எனவே ஹீரோவையும் அவரது நண்பர்களையும் ஸ்டேசனுக்குக் கொண்டுபோய் அடித்தே ஒத்துக்கொள்ள வைக்க முயற்சிக்கிறார்கள். நால்வரும் மறுக்க, ட்ரீட்மெண்ட் மோசமாகிக்கொண்டே போகிறது. இண்டர்வெல்வரை இவர்களை லாக்கப்பில் வைத்து விதவிதமாக அடிப்பது தான் படமே. போலீஸ் அடி, போலீஸிடம் குவிந்திருக்கும் பவர், சாமானியர்களை அவர்கள் மனிதர்களாக மதிக்காமல் இருக்கும் அவலம் என இண்டர்வெல்வரை படம் பேசும் விஷயங்கள், நம்மை பதற வைப்பவை.

தமிழக போலீஸான சமுத்திரக்கனி தற்செயலாக அங்கே வந்து காப்பாற்றுகிறார். ‘அப்பாடி’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடும்போது, அடுத்து தமிழக போலீஸின் ‘மனித நேய’ நடவடிக்கைகள் ஆரம்பிக்கின்றன. இண்டர்வெல்லுக்கு அப்புறம், படம் ஒரு த்ரில்லராக நகர்கிறது. அரசியல்வாதிகளின் ஆடிட்டரான கிஷோருக்கும் சமுத்திரக்கனிக்கும் நடக்கும் போராட்டமும், அதிலும் இந்த அப்பாவிகள் கொஞ்சம் கொஞ்சமாக சிக்கிக்கொள்வதும் பரிதாபம்.

’நாம நல்லவங்க..யாருக்கும் கெடுதல் செய்ததில்லை. அதனால் நமக்கு நல்லதே நடக்கும்’என்று ஆரம்ப லாக்கப் அடிக்குப்பின் ஹீரோ சொல்கிறார். கிளைமாக்ஸில் ஹீரோவின் நண்பன் கேட்கிறான், ‘நாம நல்லவங்க..ஒன்னும் ஆகாதுன்னியே..நமக்கு ஏன் இதெல்லாம் நடக்குது?’ என்று. படம் முடிந்த பின்னும் அந்தக் கேள்வி நம்மைத் துரத்துவது தான், இயக்குநரின் வெற்றி. வெற்றிமாறனைத் தவிர்த்துவிட்டு, இனி தமிழ் சினிமா வரலாற்றை எழுதிவிட முடியாது!


தினேஷ்:

அப்பாவியான முகம்..சிம்பிளான ஒரு காதல்..எளிய வாழ்க்கை என்று ஆரம்பித்து, போலீஸில் சிக்கிச் சின்னாபின்னமாவது வரை யதார்த்தமான நடிப்பு. அதிலும் அவ்வளவு அடிவாங்கியும் ‘ஒத்துக்கொள்ள மாட்டேன்’ என்று நிற்கிறாரே, அபாரம்! அட்டக்கத்திக்குப் பின், அவர் பெயர் சொல்லும் ஒரு படம். கோர்ட்டுக்குப் போவதற்கு முன், நண்பர்கள் முன் அவர் வாங்கும் அடி பயங்கரம். கடைசிவரை ஒரு சாமானியனாக வாழ்ந்திருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


சமுத்திரக்கனி:

இடைவேளைக்குப் பின், இவர் தான் ஹீரோ. மனிதர் பின்னியிருக்கிறார். ஒரு இன்ஸ்பெக்டராக, நல்லவனாக, கெட்டவனாக, கையாலாகாதவனாக நடிப்பில் நவரசங்களையும் காட்டியிருக்கிறார். ஒரு முழுமையான நடிகனாக அவர் ஆகியிருக்கும் படம் இது என்றே சொல்லலாம். அட்டகாசம்!

முருகதாஸ்:
படத்தின் இன்னொரு ஹீரோ, ஹீரோவின் நண்பராக வரும் முருகதாஸ். சில நேரங்களில் தினேஷை விடவும் அற்புதமான நடிப்பு. போலீஸ் அடியில் பல் உடைந்தபின், அவர் பேசும் வசனங்கள் துயர நகைச்சுவை. போலீஸ் ‘விடுதலை’ செய்ததும் அவர் காட்டும் சந்தோசமும், ஹோட்டலில் வெளுத்துக்கட்டுவதும் பார்க்கப் பார்க்க நமக்கும் அந்த குஷி ஒட்டிக்கொள்கிறது.


சொந்த பந்தங்கள்:
ஆனந்தி, தினேஷின் காதலியாக இரண்டு சீன்களில் வந்து போகிறார். பாந்தமான நடிப்பு. வெற்றிமாறனின் படங்களில் எப்போதும் கலக்கும் கிஷோரும் இதில் வந்து கலக்குகிறார். சமுத்திரக்கனிக்கு சரியான போட்டியாக இவர் நடிப்பு. ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அந்த கொடூர மொட்டை ஆசாமியை இன்னும் கொஞ்ச நாளைக்கு மறக்க முடியாது.


 நெகடிவ் பாயிண்ட்ஸ்:

- இண்டர்வெல்வரை விதவிதமான போலீஸ் அடிகள் தான். சும்மா அடித்து நொறுக்குவதில் ஆரம்பித்து, தலைகீழாக கட்டி வைத்து அடிப்பது, ஜட்டியோடு நிற்க வைத்து அடிப்பது என எல்லாவித ட்ரீட்மெண்டையும் காட்டுகிறார்கள். அதுவே முதல்பாதி முழுக்க வருகிறது. விருதுக்கு ஓகே. கமர்சியலுக்கு..?

- ஆந்திரா சீன்களில் பெரும்பாலும் தெலுங்கு வசனங்கள். அட்லீஸ்ட் வாய்ஸ் ஓவரிலாவது தமிழ் வசனங்களை கொடுத்திருக்கலாம். சப்-டைட்டில் படித்தே மண்டை காய்கிறோம்.

- இது உண்மைக்கதை. அதை நேர்மையாக எடுத்திருக்கிறார்கள். எனவே வன்முறை தவிர்க்க முடியாத விஷயம். அது லேடீஸ் & குழந்தைகள் ஆடியன்ஸ் வருகையைக் குறைக்கும். இருந்தாலும், பாலா போன்று வன்முறையை வலிந்து, சைக்கோத்தனமாக காட்டாமல், கலைநேர்த்தியுடன் செய்திருக்கிறார்கள்.


 பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- நேர்மையாக உண்மையை உள்ளபடி எடுத்திருப்பது.
- தினேஷ், முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் என அனைவரும் அவர்களின் பெஸ்ட் நடிப்பை வழங்கியிருப்பது
- ஜி.வி.பிரகாஷின் நம்ப முடியாத(!), அருமையான பிண்ணனி இசை.
- வலியை நமக்குள் கடத்தும் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும்.
- இறுதியில் உண்மையான சந்திரகுமாரையே காட்டுவது டச்சிங்!
- வெற்றி மாறன்.

பார்க்கலாமா?
கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். ( சென்ற வாரம் இறுதிச்சுற்று..இந்த வாரம் விசாரணை. தமிழ் சினிமாவின் பொற்காலமா இது? )
மேலும் வாசிக்க... "விசாரணை - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.