Friday, September 30, 2016

மாகாளி - சிறுகதை

”முனி மொட்டைப் பனையில உக்கிரமா இருக்கு” என்றார் பேயோட்டி.

ராமசாமி திடுக்கிட்டு, ஆட்டோவில் இருந்தபடியே மொட்டை மரத்தைப் பார்த்தார். பொட்டல்வெளியில் பனைமரம் ஒன்று, வெயிலில் காய்ந்துகொண்டிருந்தது. மற்ற நேரமாக இருந்தால், ராமசாமி பேயோட்டியை கிண்டல் செய்தே ஓட வைத்திருப்பார். இப்போது ஒன்றும் சொல்ல முடியாமல் மென்மையாக “ஒன்னும் எனக்குத் தெரியலியே” என்றார்.

பேயோட்டி சிரித்தபடியே “ஒருவகையில பேயும் சாமியும் ஒன்னுதான்..ஒரு சின்ன திரை தான் நமக்கும் அவங்களுக்கும் இடையில!....இருக்குன்னு முழுசா நம்புனீருன்னா, திரை விலகிடும்” என்றார்.

ஆட்டோ ஊரை நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லையில் இருக்கும் காலனிப் பகுதி கண்ணிற்குத் தெரிந்தது. ராமசாமிக்கு பேயோட்டியுடன் ஊருக்குள் நுழைவது அவமானமாகவே இருந்தது. வம்பு நாத்திகம் பேசுவதில் வல்லவரான ராமசாமியே, தன் வீட்டிற்கு பேயோட்டியை அழைத்து வருகிறார் என்றால் ஊர்வாய் சும்மா இருக்குமா என்ன? ஆனாலும் மானத்தை பாசம் வென்றிருந்தது.

ஊருக்குள் நுழைந்த ஆட்டோவை டீக்கடை சீனி பார்த்தான். ஒரு கிண்டலான பார்வை போல் ராமசாமிக்குத் தெரிந்தது, பிரமையோ என்ற யோசனையை ஆட்டோ டிரைவரின் குரல் உடைத்தது.

“எப்படிப் போறது?”

“வடக்கே...கடைசில ஒரு கிணறு இருக்கும். அதுகிட்டே.”

வடக்கே திரும்பியதுமே ஒரு விக்கல் ஒலி கேட்கத்துவங்கியது. ஒலி என்று சொல்வதைவிட சத்தம் என்று சொல்லிவிடலாம். ‘ஏ...க்....ஏ....க்’ என ஒரு இழுவையான விக்கல் சத்தம், அந்த வடக்குத் தெருவையே நிறைத்திருந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் பேயோட்டி.

“எம்பொண்ணு தான்”என்று சொல்லும்போதே குரல் கம்மியது ராமசாமிக்கு.

வீட்டை நெருங்க நெருங்க, விக்கல் ஒலியின் சத்தம் தாங்கமுடியாத அளவிற்கு அதிகரித்தது.

ஆட்டோ நின்றதும், பேயோட்டி தன் பையுடன் இறங்கினார். அதில் இருந்த சவுக்கைப் பார்த்ததும், ராமசாமி மனம் துணுக்குற்றது.

“அடிப்பீங்களா?” என்றார்.

“இல்லை”

பொய் சொல்கிறாரோ என்று யோசனை எழுந்தாலும், அதில் கொஞ்சம் ஆறுதல் அடைந்தார் ராமசாமி.

இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். தெருவை விட வீட்டின் உள்ளே அனலாக தகித்தது. கூடத்தின் நடுவே விக்கியபடியே கற்பகம் படுத்திருந்தாள்.

“பேசறதே இல்லையா?” என்று அமர்ந்தபடியே கேட்டார் பேயோட்டி.

“இல்லை..ஒரே விக்கல் தான்”

உடுக்கை, சவுக்கு, விபூதிப்பொட்டலம் என பூஜை சாமான்களை ஹாலில் பரப்பிய பேயோட்டி, தன் குலதெய்வத்தை வேண்டியபடியே பூஜையை ஆரம்பித்தார்.

”அப்பா அய்யனாரப்பா..உம்பிள்ளை ஒரு காரியத்தில் இறங்கறேன். இது நல்லபடியா முடியவும், இது என் குலத்தை பாதிக்காம இருக்கவும் அருள் செய்யப்பா” என்று சொல்லி உடுக்கையை அடிக்க ஆரம்பித்தார்.

கற்பகத்தை கூர்மையாகப் பார்த்தபடியே உடுக்கையை வேகமாக அடித்தார். விக்கல் சத்தத்தை உடுக்கை ஒலி மிஞ்சியது. பக்கத்தில் அமர்ந்திருந்த ராமசாமிக்கு புல்லரித்தது. நரம்புகளின் வழியே ஊடுருவி, அடிமனது வரை உடுக்கை ஒலி பரவி, உலுப்புவது போல் இருந்தது.

பேயோட்டி ஒரு வார்த்தைகூட பேசாமல், நிலைத்த பார்வையுடன் தொடர்ந்து உடுக்கை அடித்தபடியே இருந்தார். விக்கியபடியே கிடந்த கற்பகத்தின் உடல் முறுக்கேறியது.

“ட்டேய்ய்ய்ய்ய்” என்று ஒரு அலறல் அவளிடமிருந்து எழுந்தது.

பேயோட்டி விடாமல் உடுக்கையை அடித்தபடியே இருந்தார்.

விக்கல் நின்றது. ஆனால் கொடூரமான குரலில் விட்டத்தைப் பார்த்தபடியே புரியாத மொழியில் கற்பகம் கத்த ஆரம்பித்தாள்.

“ய்யேஊஷ்கப்பத்தட்டாஆ...ஏய்”

உடுக்கை ஒலி தொடர்ந்தது.

“டேய்....நிறுத்துடா”என்றபடியே எழுந்து அமர்ந்தாள் கற்பகம்.

வயது வந்த பெண். மெல்லிய உடல். ஆனால் தலைவிரிகோலமாக, விறைத்தபடி அமர்ந்திருந்தாள். அவள் கண்ணில் இருந்த உக்கிரத்தை ராமசாமியால் தாங்கமுடியவில்லை. கண்ணீர்விட்டபடியே, மகளைப் பார்த்தாள்.

பேயோட்டி உடுக்கையை கீழே வைத்துவிட்டு, சவுக்கை கையில் எடுத்தார்.

”வெளியே போடா..உன் குடும்பத்தையே நாசமாக்கிடுவேன். போயிடு” என்று கத்தினாள் கற்பகம்.

சவுக்கைப் பார்த்த ராமசாமி, பேயோட்டியை கையெடுத்துக் கும்பிட்டார். சவுக்கை கீழே வைத்த பேயோட்டி, மீண்டும் உடுக்கையை எடுத்தார்.

“வேண்டாம்” என்று அலறினாள் கற்பகம்.

உடுக்கையில் இரண்டுமுறை ஒலி எழுப்பிய பேயோட்டி “அப்போ உன் பூர்வீகத்தைச் சொல்லு” என்றார்.

கற்பகம் முடிக்குள் முகத்தைப் புதைத்தவளாக, மவுனமாக அமர்ந்திருந்தாள்.

விபூதியை அள்ளி அவள் மேல் வீசினார் பேயோட்டி. தொடர்ந்து உடுக்கை ஒலிக்கத் துவங்கியது.

“சொல்றேன்..சொல்றேன்” என்று கதறினாள் கற்பகம்.

உடுக்கையை நிறுத்திய பேயோட்டி “சொல்லு” என்றார்.

“நான்....மாகாளி”

அதைக் கேட்ட ராமசாமி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார். வீட்டின் வெளியே கூடிருந்த கூட்டத்திலும் சலசலப்பு எழுந்தது.

பேயோட்டி அவளைப் பார்த்து “மாகாளியா? யார் நீ?” என்றார்.

ஒரு பெரும்சிரிப்பு அவளிடம் இருந்து வெளிப்பட்டது.

“என் ஊருக்கே வந்து, என்னையே யாருன்னு கேட்கிறியா? அவனைக் கேளு. சொல்வான்” என்று ராமசாமியைக் கைகாட்டினாள் கற்பகம்.
 
“மாகாளி..எங்க ஊர் பெரிய வீட்டுப் பொண்ணு” என்றபடியே ராமசாமி மாகாளியின் கதையை பேயோட்டியிடம் சொல்ல ஆரம்பித்தார்.

’நல்ல உயரம். உழைத்துத் திரண்ட ஓங்குதாங்கான உடம்பு. மாநிறம். அழகி. ஆனாலும் ஆளுமையான தோற்றம். களத்தில் கிடக்கும் நெல்மூட்டையை ஒற்றை ஆளாக தூக்கி, டிராக்டரில் போடும் வலிமை ‘ என மாகாளியைப் பார்த்து ஊர்வியக்க காரணங்கள் பல உண்டு. காளியம்மாள் தான் அவள் பெயர். பள்ளியில் படிக்கும்போது இனிஷியலுடன் மா.காளியம்மாள் என்று சொல்ல ஆரம்பித்து, அதுவே மாகாளியாக ஆகிப்போனது.

“இப்போத்தான் என் பேர் முழுமை அடைஞ்சா மாதிரி இருக்கு” என்று சொல்லிச் சிரிப்பாள் மாகாளி.

ஏகப்பட்ட சொத்துக்களுடன், ஒரே ஒரு தம்பியுடன் வளர்ந்த அவளை மணப்பதற்கு சுற்று வட்டாரத்தில் போட்டி பலமாக இருந்தது. அப்படி வந்த ஒரு மாப்பிள்ளைக்கு, கோலகலமாக வாக்கப்பட்டுப் போனவள், ஆறே மாதத்தில் புருசனை முழுங்கியவளாக திரும்பி வந்தாள். குடிகாரன், ஹார்ட் அட்டாக் என்று என்னென்னவோ காரணங்கள் பேசப்பட்டாலும், உண்மையை மாகாளி மட்டுமே அறிவாள்.


அடுத்த ஒரே மாதத்தில் பழைய கம்பீரத்துடன் அவள் அன்றாட வேலைகளில் மூழ்கினாள். அப்போது தான் அவள் தம்பி பாண்டிக்கு ஒரு விஷயம் உறுத்தியது. அது, முனுசாமி எனும் முனியன்.

முனியன் அந்த ஊர் சலவைத் தொழிலாளி. மாகாளியுடன் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவன். ஆனாலும் ‘தாயீ’ எனும் சொல்லுக்கு மறுசொல் பேசாதவன்.

அந்த முனியனை அக்கா தனிமையில் சந்திப்பதை விரைவிலேயே பாண்டி கண்டுகொண்டான். இது கல்யாணத்திற்கு முன்பிருந்தே நடப்பதா அல்லது தற்போது ஆரம்பித்த விஷயமா என்று அவனுக்குத் தெரியவில்லை. அக்காவிடம் கேட்கும் தைரியமும் அவனுக்கு இல்லை. அவனுக்கு மட்டுமல்ல, ஊரில் இருக்கும் யாருக்குமே இதுபற்றி அவளிடம் பேசும் தைரியம் கிடையாது. ஆனாலும் அரசல் புரசலாக பேச்சு ஊருக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ‘அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது’ என்றும் ‘இருக்குமோ’ என்றும் ஊர் குழம்பித் தவித்தது.

முனியன் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருந்ததும் புரளிக்கு வலு சேர்த்தது. ஆனால் அவனுடன் மாகாளி ஓடிவிடுவாள் எனும் எண்ணம் ஒருதுளிகூட, பாண்டிக்கோ ஊருக்கோ இல்லை. ஊருக்கு நடுவே வீற்றிருக்கும் அம்மன் சிலை போல, மாகாளி அந்த ஊரில் வலுவாக வேரூன்றி இருப்பதை எல்லோராலும் உணர முடிந்தது. முனியனும் அவன் அம்மாவும் வழக்கம்போல் ஊருக்குள் துணியெடுப்பது, துவைப்பது, இழவு வீடுகளில் ஈமச்சடங்குகள் செய்வது என எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

மாகாளியின் அந்தரங்கத்தை ஊரே மதித்து ஒதுங்கி நடந்தது ஆச்சரியம் தான். எல்லாமே சுமூகமாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், ஒரு சின்ன தெருச்சண்டையுடன் அந்த கொடூரநாள் விடிந்தது.

இரண்டு பெண்களுக்கு இடையே ஆரம்பித்த சண்டை, இரு குடும்பங்களுக்கு இடையேயான சண்டையாக உருவெடுத்தது. கெட்ட நேரம், பாண்டியை அங்கே கூட்டிச்சென்றது. பெரிய வீட்டுப் பிள்ளை எனும் தோரணையுடன் பாண்டி சமாதானம் செய்ய இறங்கினான். ஆனாலும் அந்த இரு குடும்பத்து ஆண்களும் பெண்களும் கோபம் குறையாமல் கத்திக்கொண்டிருந்தார்கள்.

பாண்டி யாரையும் சுடுசொல் பேசாத சாந்தசொரூபி. இந்த மாதிரி தெருச்சண்டைகளுக்குப் பழக்கமில்லாதவன். வெறுத்துப்போனவனாக ”ஏன்யா..ஒரே ஜாதிக்குள்ளயே இப்படி அடிச்சுக்கிட்டா எப்படிய்யா? அடுத்த ஜாதிக்காரன் பார்த்தால் என்ன நினைப்பான்? நம்மளை மதிப்பானா?” என்றான்.

சண்டையின் உக்கிரத்தில் இருந்த பெண்ணொருத்தி ”உன் அக்காவைப் பார்த்தால் மட்டும் நம்மளை மதிப்பானுகளா? அக்காவை வண்ணாக்குடியில மேய விட்டுட்டு, வந்துட்டாரு இங்க பஞ்சாயத்துக்கு” என்று பாண்டியைப் பார்த்து கத்தினாள்.

பாண்டிக்கு கோபம் தலைக்கேறியது. கோபம் தாங்காமல் உடல் நடுங்க ஆரம்பித்தது. வேகமாக வீடு நோக்கி நடந்தான். வம்ச, வம்சமாக இந்த ஊர் தன் குடும்பத்தைப் பார்த்து ஒரு சொல் பேசியதில்லை. இன்று ஊருக்கு மத்தியில் வைத்து செருப்பால் அடித்தது போல் ஒரு கேள்வி. மிகுந்த கோபத்துடன் வீட்டை நெருங்கினான்.

திண்ணையில் அமர்ந்திருந்த மாகாளி, அரிசி புடைத்துக்கொண்டிருந்தாள். வேகமாக வரும் தம்பியை அவள் பார்த்தாள். அவள் எதிரே வந்து நின்றவன், நடுங்கும் கைகளால் நிலைக்கட்டையைப் பிடித்தபடி மூச்சுவாங்க நின்றான். அவன் கையில் நிலையில் சொருகி வைத்திருந்த அரிவாள் தென்பட்டது. உட்கார்ந்திருந்த மாகாளி அவனை நிமிர்ந்து பார்த்து ”என்னடா?”என்றாள். அவள் கழுத்து தெரிந்தது.

அரிவாளை உருவியவன், அவள் கழுத்தில் இறக்கினான்.

ஒரு நொடி தான். அவள் திண்ணையில் இருந்து உருண்டு கீழே விழுந்தாள். அரிவாள் அவன் கையில் ரத்தக்கறையுடன் இருந்தது. அவன் திரும்பி, அரிவாளுடன் படியில் உட்கார்ந்துகொண்டான். அவன் காலடியில் மாகாளி கிடந்தாள். ரத்தம் பீறிட்டு அடிக்க, விக்கல் சத்தம் அவளிடமிருந்து வெளிப்பட்டது. கொஞ்ச நேரம் விக்கியபடியே உடல் துடித்தது. கொஞ்சம் கொஞ்சமாக விக்கலும் துடிப்பும் அடங்கியது.

வி..க்...வி...க்.

கற்பகம் மீண்டும் விக்கல் எடுக்க ஆரம்பித்தாள்.

“அவளுக்கு தண்ணி கொடும்” என்றார் பேயோட்டி. ஒரு சொம்பு நீரையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்.

“இப்போ இவ தம்பி எங்கே?” என்றார் பேயோட்டி.

“அவனும் அன்னைக்கே தூக்குல தொங்கிட்டான்” என்றார் ராமசாமி.

பேயோட்டி கற்பகம் பக்கம் திரும்பினார். “அம்மா, இது ஊர்க்குத்தமா, உன் தம்பி குத்தமா இல்லே சாமிக்குத்தமான்னு தெரியலை. ஆனா இந்த சின்னப்பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு? இதை ஏன் படுத்தறே? உன்னை சாந்தப்படுத்த, நாங்க என்ன செய்யணும்னு சொல்லு. செய்யறோம்” என்றார்.

“எனக்கு முனியனைப் பார்க்கணும்” என்றாள் அவள்.
 
தெருவில் கூடியிருந்த ஊர் விலகி வழிவிட, காலனியில் இருந்த முனியனை அழைத்துக்கொண்டு வந்தார் ராமசாமி. கண்ணில் நீர் வழிய, கையெடுத்துக் கும்பிட்டபடியே முனியன் நடந்துவந்தான். வீட்டின் உள்ளே நுழைந்த முனியனை கற்பகம் பார்த்தாள். சட்டென்று விழிவிரித்து “முன்னு” என்றாள்.

அவளின் குரலும் ‘ன்’னில் இருந்த அழுத்தமும் வந்திருப்பது யார் என்று முனியனுக்கு விளங்க வைத்தது. பதின்ம வயதுப்பெண்ணின் உடம்பில் இருந்து வரும் மாகாளியின் குரலைக்கேட்டு திகைத்து நின்றான்.

மீண்டும் அவள் “முன்னு..நான் தான் முன்னு” என்றாள். குரல் இளகியிருந்தது.

பேயோட்டி முனியனிடம் ‘பேசு’ என்று சைகை காட்டினார்.

“தாயீ” என்றான் முனியன்.

அவள் முகம் மலர்ந்தது. உடனே முகம் சுருங்கி “நான் வந்தேன் முன்னு. உன்கிட்டே வந்தேன் முன்னு” என்றாள்.

“தெரியும் தாயீ”

“நீ என்னை பார்க்கலை”

“இல்லை தாயீ..எனக்குத் தெரியும். நீங்க போகட்டும்னு தான் இருந்தேன்.”

அவன் முன் மண்டியிட்டு அமர்ந்த அவள் “உன்னை விட்டுப் போவனா?” என்று சொல்லிவிட்டு, அவன் கைகளைப் பிடித்து முத்தமிட்டாள்.

முனியன் பதறி விலகினான்.

“தாயீ..இது தப்பு தாயி..இப்போ சின்னப்பொண்ணு உடம்புல வந்திருக்கீக..இதெல்லாம் அந்த பொண்ணு வாழ்க்கையை பாதிக்கும். வேண்டாம் தாயி. போயிருங்க” என்று கையெடுத்து கும்பிட்டான் முனியன்.

அவள் கண்கலங்கி “உன்கூட இருக்கணும்” என்றாள்.

“எனக்கு மட்டும் உங்க நினைப்பு இல்லையா தாயி? என்னைப் பெத்தவளுக்கு கஞ்சி ஊத்தணுமேன்னு பொறுத்துக்கிடக்கேன். இல்லேன்னா, நானும் அறுத்திட்டு செத்திருக்க மாட்டேனா? கொஞ்சநாள் பொறுங்க தாயி. வந்திடுவேன்” என்றபடியே அழுதான் முனியன்.

அவளும் அவனை ஏக்கமாகப் பார்த்தபடியே அழுதாள்.

“இங்க இருக்காதீங்க தாயி..போயிடுங்க. நான் இனிமே யார் கூப்பிட்டாலும் இங்க வரமாட்டேன். இங்க இருக்காதீங்க, போயிடுங்க” என்று சொல்லிவிட்டு, திரும்பிப்பாராமல் முனியன் வெளியேறினான்.

“முன்னு...முன்னு” என்று கத்திய கற்பகம் மயங்கிச் சரிந்தாள்.

மறுநாள் விடிகாலையில் யாரோ எழுப்பியது போல் திடுக்கிட்டு விழித்தார் ராமசாமி. யாரும் இல்லை. அவருக்கு முனியனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ‘எவ்வளவு பெரிய மனுஷத்தன்மையுடன் நடந்துக்கிட்டான்’ என்று வியந்தார். அவனைப் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் போல் தோன்ற, காலனி நோக்கிப் புறப்பட்டார்.

அவன் வீட்டின் வெளியே நின்று ‘முனியா’ என்று கூப்பிட்டார். பதில் ஏதும் வரவில்லை. கதவில் கை வைத்தார். திறந்துகொண்டது. உள்ளே முனியனும் அவன் அம்மாவும் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. மீண்டும் ‘முனியா’ என்றார். பதில் இல்லை.

உள்ளே போய் அவனை உலுப்பினார். உடம்பில் உயிர் இல்லை. அவன் அம்மாவையும் அவனையும் மாறி, மாறிப் பார்த்தார். இருவர் உடலிலும் சிறு கீறல்கூட இல்லாமல் உயிர் பிரிந்திருந்தது. அவர் அமைதியாக, அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

---------------------முற்றும். -----------------------
மேலும் வாசிக்க... "மாகாளி - சிறுகதை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, September 25, 2016

ஜீபூம்பா - விமர்சனங்களின் தொகுப்பு


ஜீபூம்பா: 



சென்ற வாரம் வெளியான எனது குறும்படம் ஜீபூம்பாவிற்கு ஃபேஸ்புக் கமெண்டிலும், இன்பாக்ஸிலும் வந்த விமர்சனங்களின் தொகுப்பு இது, எனது ரெஃபரென்ஸுக்காக!

குறும்படத்தை பார்த்த மற்றும் கருத்துக்களைத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


பாசிடிவ் கமெண்ட்ஸ்:

- அருமை, மகிழ்ச்சி, சூப்பர், நல்லா இருக்கு..பிண்ணனி இசை தூள், சிறப்பான மேக்கிங். அழகான இசை. ரசிக்க வைக்கிற நடிப்பு.

- very impressive at first watch.. great work.. I enjoyed from the first frame till the end... I couldn't find any issues..!!

- Continue and see your name in big screen, முருகா சரணம்


- Lighting work is commendable in indoor


- //+ points
=======
* Story, * Background music,* Artist selection (adjacent house Kerala Christian lady including climax bird)

* Cone & Heroin in straight shot , next shot close up to heroin eyes ( Timing 2.40 to 2.42) //


- // + point

நடிகை.. நடிப்புக்கு முக்கியமே புருவம் தான்.. அதன் அசைவு.. ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும் கடைசி யோசிக்குற ஷாட்டில் சூப்பரா நடிச்சிருக்காங்க..

அந்த கோழிகுஞ்சு ( 😢 ) ஷாட்.. செம..

கேமரா ஆங்கிள் செம...

- கடைசியில் வரும் அந்த குழந்தை அழகு:)

- பெரும் மழையின் முதல் துளி... வாழ்த்துக்கள். மகிழ்ச்சி...//

- // கோவை ஆவி விமர்சனம்: செங்கோவி என்ற பிராண்ட் நேமிற்காக நிறைய எதிர்பார்ப்போடு பார்த்ததாலோ என்னவோ, எனக்கு கபாலி பார்த்து முடித்ததும் வெளிப்பட்ட அதே உணர்வுதான் இங்கேயும்! மிகவும் பிடித்தது எடிட்டிங், தூங்காமல் வேலை பார்த்த எடிட்டர் செங்கோவிக்கு ஒரு பூங்கொத்து.
.
இரண்டாவது இசை, ஆனால் இன்னும் கொஞ்சம் முயன்றிருக்கலாம். குறும்படம்தானே இதுபோதும் என்று விட்டுவிட்டாரோ?
.
மூன்றாவது நடிப்பு, Lead ரோல் செய்த பெண் நடிப்பிற்குப் புதிது என்றால் அருமையான நடிப்பு, முன்பே அனுபவம் உள்ளவர் என்றால் சுமார் தான்.
.

திரைக்கதை ஆசிரியர் செங்கோவி, வித்தியாசமாக என்ன கதை பண்ணலாம் என்று யோசிக்காமல், கதையில் என்ன வித்தியாசம் பண்ணலாம் என்று சிந்தித்து செதுக்கியிருக்கிறார். மனம் கவர்கிறார். ஆனால் Common ஆடியன்ஸ் அவர் கூறும் கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா என்று யோசித்தால் சற்றே பின்வாங்க வேண்டியிருக்கிறது.
.
எல்லாவற்றையும் விட முதலிடத்தில் டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்வது ஒளிப்பதிவாளர் செங்கோவியே. இயக்குனர் நினைத்ததை அப்படியே காட்சிப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார். அந்த கோழியை மூடும் காட்சி ஒன்றே அதற்குச் சான்று. வெல்டன்!!
.
படத்தில் அந்த பக்கத்து வீட்டு ஆண்ட்டி லிப்டில் சிரித்துக் கொண்டே செல்வது, சில இடங்களில் அமெச்சூர் நடிப்பு என ஆங்காங்கே சிறு குறைகள் இருந்த போதும் நல்ல முயற்சி.

(ஆனா தலைவரே, டயலாக் வைக்கும்போதுதான் உண்மையான பிரச்சனைகள் துவங்குது. நைஸா எஸ்கேப் ஆயிட்டீங்க.) ராஜா ஹரிச்சந்திராவிலிருந்து ஒரு ஆலம் ஆராவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். //

- Congrats bro...well try...miles to go...( I liked that bird shot.. hw taken?)

- ராதிகா ஆப்தே நடித்த அகல்யா நினைவுக்கு வருகிறது.

- எந்த ஒரு professional crewவும் helpம் இல்லாமல் technical முன்னனுபவமும் இல்லாமல் கேமரா, எடிட்டிங் எல்லாம் தானாகவே கற்று ஒரு குறும்படம் எடுப்பது மிகவும் பாராட்டுக்குரியது. கடினமான வேலை. அதை நீங்கள் செய்து இருக்குறீர்கள். இது சினிமா மேல் உங்களுக்கு உள்ள interest ஐ காட்டுகிறது. அதற்க்கு முதல் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தனி ஆளாக இருந்து ஒரு குறும்படம் எடுக்கையில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அப்படி சில குறைகள் இருந்தாலும் 'ஜீபூம்பா'வை ரசித்தே பார்த்தேன். வித்தியாசமான கதை, டயலாக் இல்லாமல் அட்டெம்ப்ட் செய்தது எல்லாம் குட். உங்கள் அடுத்த படம் இன்னும் betterராக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. All the best Sengovi.

- உண்மையில் நன்றாக உள்ளது.சில சில குறைகள் இருந்தாலும் அது பெரிதாக தெரியவில்லை.ஆனாலும் சில இடங்களில் வசனம் பயன் படுத்தி இருக்காலாம்.மற்ற படி படம் நன்றாக உள்ளது ஆரம்பம் எதோ ஒரு திர்லலர் ஆரம்பித்து பிறகு காமெடி ஆக்கிய திரைக்கதை அமைத்து உள்ளிர்கள். அதையும் வெளியிடலாம் குறும்படம் எடுப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் சீன் எப்படி பயமுறுத்த வேண்டும் என்பதற்கு!

- concept super... music sema mass


- // பன்னிக்குட்டி விமர்சனம் :

பிரபல பதிவர், இணைய எழுத்தாளர், சினிமா விமர்சகர், உலகப்பட ரசிகர், நமது நண்பர் செங்கோவி (Sengovi Guru) இப்போது தனது முதல் முயற்சியாக ஒரு குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருக்கிறார். நாமும் சினிமா விமர்சனம் என்ற பெயரில் அடிக்கடி கொத்துக்கறி போட்டிருப்பதால் இந்த படத்தையும் விட்டுவைக்காமல் ஏதோ நம்ம சிற்றறிவுக்கு எட்டிய அளவிற்கு முயற்சி பண்ணி இருக்கிறேன்.....

த்ரில்லர் படம் என்று டைட்டிலிலேயே உணர்த்தி விடுகிறார்கள்.... அதற்கேற்றார்போல படமும் தொய்வில்லாமல் போகிறது. வசனம் இல்லாததையே உணர முடியவில்லை. அடுத்து என்ன என்ற ஒரு த்ரில் இறுதிவரை வருகிறது. ஆனால் க்ளைமேக்ஸ் சாதாரணமாக முடிவது போல் உள்ளது. சிறுவன் கையில் தொப்பி மாட்டுவது த்ரில்லை குறைப்பதாகவே உணர்கிறேன். ஒரு சுவராசியத்திற்காக வேறு ஏதாவது வில்லங்கமான கேரக்டர் கையில் மாட்டுவதாக கூட வைத்து இருக்கலாம். மற்றபடி அதிகம் குழப்பாமல் தெளிவாக செல்கிறது படம்.

பெண்ணின் தலையில் வைத்தும் எதுவும் ஆகவில்லை. வெறும் பொம்மைகள்தான் மாயமாகின்றன, ஆனால் க்ளைமேக்சில் உயிருள்ள பறவையும்மாயமாகிறது. தொப்பிக்குள் முழுதாக சென்றால் எதுவானாலும் மாயமாகிவிடும் என்று தெரிகிறது. இதுவும் அடுத்து சிறுவன் கையில் இருக்கும் தொப்பியால் என்னென்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

ஹீரோயின் வீட்டிற்குள் சென்றதும் கதவை சாத்திவிட்டு யாரையோ தேடி காணோம் என்பது போல் ரியாக்ட் செய்து விட்டு உள்புறமாக கதவைத் தட்டுகிறார். ஏன்? இது கொஞ்சம் புரியவில்லை. சொந்த வீடுதானே நேரா வீட்டுக்குள்ள போக வேண்டியதுதானே? இதில் எதுவும் குறியீடு இருக்கிறதா.... அதே போல ஆரம்பக்காட்சியில் ஹீரோயின் கண்ணடிப்பதிலும் குறியீடு இருக்கிறதா....? (இல்லாவிட்டாலும் பரவாயில்லை... ஹீரோயின்கள் கண்ணடிப்பதில் தவறில்லை ஹி...ஹி...... )

ப்ளாஷ்பேக் நீளம். இன்னும் சுருக்கமா வெச்சிருக்கலாம். லைட்டிங் கொஞ்சம் அன்யூசுவலாக தெரிந்தாலும் த்ரில்லர் படத்திற்கான எஃபக்டை கொடுத்துவிடுகிறது. லோ ஆங்கிள் லைட்டிங் செய்யாமலே த்ரில்லர் எஃபக்ட் கொண்டுவந்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். இசை சில இடங்களில் சபாஷ், மற்ற இடங்களில் படத்திற்கு உறுத்தாமல் சரியாக இருக்கிறது.

ஆம மொத்தத்தில் மிகக்குறைந்த ரிசோர்சசை வைத்துக் கொண்டு சுவராசியமான படம் ஒன்றைத் தந்திருக்கிறீர்கள். வெல்டன் செங்கோவி. //


- அருமை. உரையாடலே இல்லாமல் நல்ல சஸ்பென்சோடு கதை நகர்ந்தது. கடைசி காட்சி நல்ல பஞ்ச்.இயக்குநருக்கு பாராட்டுகள். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவருக்கு இது முதல் குறும்படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நல்ல உடல் மொழி. அவருக்கும் பாராட்டுகள்.


- - தமிழ்வாசி விமர்சனம் : http://www.tamilvaasi.com/2016/09/Jeeboomba-Silent-Short-Film.html

- தனிமரம் விமர்சனம் : http://www.thanimaram.org/2016/09/blog-post_24.html

- Herotalkies.com has selected the short film in Fantacy Genre.

- //Positives 1. Story without dialog 2. Story with fantasy Element (And a simpler one at that - A hat) 3. Most of first timers (who became huge success later) focused on Story telling...And that comes out really well in this story... (and without dialogs it makes your "telling" focused and for audience without a distraction..4. Heroine...Pretty looking and didnt do much bad acting. Very capable...//

- first shot of Hariini winking at the elevator is pretty good...Overall I loved this movie. I see potential of a great movie maker. A thoughtful one. A moviemaker who can hold the audience in their seats.

- Biggest Plus
No one can leave the video without watching till the end...
THIS IS THE BIGGEST PLUS IN YOUR MOVIE...Hold on to this biggest plus

(this is similar to all Karthik Subbaraj's short films from his earliest days...you cannot switch off the movie...and get off...)


நெகடிவ் கமெண்ட்ஸ்:

- சாரி செங்கோவி ஏமாற்றம் ...எதிர்பார்த்த மாதிரி இல்லை .கதாநாயகி ஓவர் மேக் up .கேமரா இசை ஓகே
மற்றபடி ரொம்ப சுமார் . எது முதல் படி அடுத்து இது மாதிரி இல்லமா வேறு மாதிரி எதிர் பார்க்கிறோம் .
ஜி பு ம் பா .........பெரும் ஏமாற்றமே

- ஏமாற்றம் ...எதிர்பார்த்த மாதிரி இல்லை

- 1st try .Nxt la miratiruvaruu.

- // - Point
=====

* Lightings ( Light comes from heroin behind side , it reflects in tv screen ), * flash back doesn't create much impact .

* Predictable climax. My Marks 3.5 out of 5 .As a debut director , you won . But we are expecting more from you.//

- எல்லாம் கெரகம்..ஆடி போய், ஆவணி வந்தால் அவ ஃபுல்லா ட்யூனாகி கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிடுவான்!

- //பரவாயில்லை ராகம் தான் !! கேமெரா கோணங்கள் சிறப்பு! ஒளிப்பதிவு ஒரு FLOW வாக இல்லாமல் இருக்கிறது!! but we expect lot, congrats bro, keep going//

- முதல் முயற்சி என்பதால் ஓகே..இன்னும் கேமரா கோணங்களிலும் , படத்தொகுப்பிலும் கவனம் செலுத்தியிருக்கலாமே...விமர்சனம் எழுதுவதை விட உருவாக்குவது கடினம் பாஸ்...

- ஷாட் ஃபிலிம்'னு பாத்தா ஃபீல் குட்!
செங்கோவியோட ஷாட் ஃபிலிம்னு பாத்தா இன்னும் நிறைய எதிர்பாத்திட்டம் போல!
கேமரா அருமை! டைட்டில் கார்டை அடுத்த வாட்டி 'ஆஃப்ரட் எஃஎக்ஸ்' சாஃப்ட்வேரில் ல் செய்யுங்க.
வாழ்த்துக்கள்...அந்த நாட்டில் இருந்து கொண்டு இத்தனை வேலைகளையும் நீங்களே செய்தது சாதாரண விடையமல்ல!

- என்ன கொடும சார் இது “இந்த ஒலகப்பட அதி புத்சாலிங்கன்னாலே” இப்படித்தான் போல...பார்வையாளன் முடிவு பண்ணிக்கட்டும்னு விட்ருவாங்கே போல...ஸ்ஸ்ஸ் அபா!

-  Not upto expectation. May be due to budget and other constraints. But good and engaging one.

-  லைட்டிங்.. சில இடங்கள்ள இரண்டு ஷேடோ தெரியுது.. முகம் ரொம்ப பிரைட்டா இருக்கு.. indoor shooting ல கொஞ்சம் ஷேடோ வரணும் ஜி..கேமரா கொஞ்சம் ஷேக் ஆகுது. Pan shot ல..

பிளாஷ்பேக் சீனுக்கு transition யூஸ் பண்ணிருந்தா இன்னும் நல்லா இருக்கும் ஜி..கதை அமைதியா தொடங்கி திரில்லா காட்டி , காமெடி ஆகி கடைசியில் சஸ்பென்ஸாக முடிகிறது.. உடனடியாக genre விட்டு மாற முடியல ஜி..

- நீங்க, இந்த கதை எழுதியதே பொட்டு வைக்காத அந்த வில்லி கேரக்டருக்காகதான்னு தோணுது. மற்றபடி படம், "மீண்டும் ஒரு முறை உங்கள் நேரத்தை வீணடிக்க வீண்டாம்".
-  நல்ல முயற்சி.. 2.10 to 3.10 இந்த நேரத்துல ஒரு முழுமை தெரிஞ்சுது.. அது மொத்த படத்துலயும் இருந்திருந்தா இன்னும் ஈர்த்திருக்கும்..
- சிரிப்பும் வருது..பயமும் வருது..சஸ்பென்சும் இருக்கு..த்ரில்லிங்கும் இருக்கு..ஆனா எல்லாமே முழுமை இல்லாம இருக்கு..உங்க படத்தின் மீது என் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது குரு..ஆனா வசனமே இல்லாம படம் பார்த்தது புடிச்சிருக்கு

- திரில்லருக்கான முக பாவனைகள் தான் கொஞ்சம் மிஸ்ஸிங்.

- முதல் அட்டம்ப்ட்ன்ட்... ஒகே இன்னும் அதிகமா எதிர் பார்த்தோம் ஜி!! நடிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. சில இடங்களில் செயற்கை யாக இருக்கு..

- வசனம் இல்லாமல் படம் ஓகே, அதற்காக சின்ன சின்ன டயலாக்குகள் இல்லாமல் இருப்பது ரொம்பவே அன்னியப்படுத்துகிறது. அதாவது. ஆ, அவ், வாவ், போன்றவை, குழந்தை தொப்பி கிடைத்ததால் சந்தோஷிப்பது, எதிர் ப்ளாட் ஆண்ட்டி அடித்ததும் வலியில் கத்துவது போன்றவை டயலாக் பார்மேட்டில் வராது. அதை சேர்த்து இருக்கலாம்.

- Boss concept, story, is very good. But others all aspects are missing. Film is a visual medium if u use a best technicians this is one of the best short film. Still it is hold the attention. Good attempt. Just take manirathnam as your guru in this aspect(use of best technicians to enhance his quality of his movies). Excuses are not allowed(minimum resources) , Inga jeyikkurathan mukkiam you have to meet some what audiance expectations."Stuff only not enough execution important than knowledge "

- நிமிடத்தைக்குறைத்திருக்கலாம்,

- second role akkavoda acting patthala bro.

- எல்லாத்தையும் நாமளே செயுரத விட அது அதுக்கான தொழிநுட்ப தெரிந்தவங்கள பயன்படுத்திஇருந்தாஇன்னும் சிராப்பக இருக்கும்....

- எங்களின் கற்பனைக்கு விட்டது சரி. முழுதாக மறைந்தால் மட்டும்தான் மறையுமா? உயிருள்ள உயிரற்றவை எல்லாமே முழுதாக மூடியதும் மறைகிறது.. புறா மறைந்த பிறகு காரின் மீது இருக்கும் கறுப்பு ரப்பரும் மறையவேண்டும் தானே? அந்தப் பெண் பயப்படுவது, அடிவாங்கி எழுந்து உதறுவது எல்லாமே செயற்கையாக இருக்கிறது. சைல்ண்ட் மூவியாக இருப்பது செம. எதிர்த்த வீட்டு ஆண்ட்டிக்கு பதில் மாமியாராக இருந்திருக்கலாம். உங்க விமர்சனம்போல இல்லையென்றாலும்புது அனுபவம்..

- உண்மைல உங்க கிட்ட இருந்து சுவாரஷ்யமா எதையோ எதிர்பார்த்தேன்... ரொம்ப ஸ்லோ... தொப்பிய பத்தி அவங்க தெரிஞ்சுக்கறதுக்குள்ளயே இரண்டரை நிமிசம் ஓடிடுது... குறும்படத்துக்கு பொருந்தாத வேகம்... பொருமையா கண்ணடிச்சு சென்சார்ல கதவு திறக்கறதெல்லாம் எதுக்கும் உதவல... அப்புறம் அவங்களுக்கு நடிக்கத் தெரியலைங்கறது கூட விடுங்க... அடிபட்ட மாதிரி நடக்க கூட தெரியல.... அடுத்து பெஸ்ட்டா இருக்கும்னு நம்பறேன்...

- //
Eniyavai Kooral: டிவியில் ஹிட்ஹாக் படம் ஓடும் போது அந்தளவு திரில்லை எதிர்பார்த்தேன். தன்னோட வீடு தானே யாரோட வீடுமாதிரியே ஃபீல் செஞ்சு திறக்கறாங்க. பறவை ஆரம்ப காட்சியில் வந்து இறுதி காட்சியில் தோன்றி மறைகிறது. கட்டிடத்தின் மேல் இருந்து விழுந்தாலும் காற்றின் தடையால் பறவையை டக்குனு மூடும்னு சொல்ல முடியாது எதும் மேலேயாச்சும் விழுந்து பறவை மேல் விழுந்திருக்கலாம்....
பையனோட கையில் தொப்பி கிடைகுது அவ்ளோதான் அடுத்து என்ன ஆகுமோன்ற எதிர்பார்ப்பு ஏதும் பார்பவங்களுக்கு தோன்றாது அந்த தொப்பியால் என்ன ஆகும்றது தான் விளக்கப் பட்டாச்சே!//

- // குடந்தை சரவணன்: இருக்கு ஆனா இல்ல. ஆனாலும் இருக்கு. என்பதை சொல்கிறது நண்பர் செங்கோவியின் ஜீபூம்பா குறும்படம்.

எந்த பொருள் மீது வைத்தாலும்
மாயமாய் மறைய செய்யும் ஒரு தொப்பியை கண்டெடுக்கும் பெண் அதிர்ச்சி,பயம் என்ற நிலைகளை கடந்து சுவாரஸ்யமாகிறாள்.தன் எதிரியான எதிர் வீட்டு பெண்ணை அதன் மூலம் மறைய வைக்க முயற்சித்து பல்பு வாங்குபவள் அதில் ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்து, கீழே விட்டெறிகிறாள். அதன் சிறப்பை அறியாமலே.

இந்த கான்செப்டை ஆறு நிமிடங்களில் வசனங்கள் ஏதுமின்றி சொல்ல வேண்டும் சொல்லியிருக்கிறார். ( கேமரா, எடிட்டிங் எழுத்து இயக்கம் என்று அனைத்தையும் தானே மேற் கொண்டு)

கதையின் கான்செப்ட். கேமரா கோணங்கள், மற்றும் கிளைமாக்சில் பறவை மறைவது, அந்த தொப்பியின் சிறப்பை அறிய தரும் காட்சிகள். இதெல்லாம் நன்றாக இருக்கிறது. (டிவியில் ஓடும் the birds படத்திற்கும் பறவை மறைவதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா ? செங்கோவி)

ஆனால், அந்த எதிர் வீட்டு பெண்ணுடனான மோதல் வேறு விதமாக இருந்திருக்க வேண்டும். ( எப்படி என்கிறீர்களா? நாயகியின் மாமியாராக கூட அவரை காட்டியிருக்கலாம்.) வசனங்கள் இல்லாமல் தான் படமே என்ற கான்செப்ட் ஓகே தான். ஆனால் ஒரு சில வார்த்தைகளாவது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். (உதாரணத்திற்கு பையன் சிரித்த படி வெளிப்படுகையில் ஒரு ஹா, நாயகி பயத்தில் பின் வாங்கும் ஹூம் இப்படியான வார்த்தைகள் வெளிப்பட்டிருக்கலாம்) ஒரு பரபரப்பான விசயம் கையில் சிக்கும் போது நாயகியின் நடவடிக்கைகள் இன்னும். சுறுசுறுப்பாக இருந்திருக்க வேண்டும்.

இப்படி இன்னும் சில வேண்டும் கள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே இது செங்கோவியின் படம் என்பதால் தான்.

முயற்சிகளை தொடருங்கள். //


- // Congrats on ur first film.

it was interesting. there's lots i cud share. i will leave u with one thing that cud cause maxm improvement in ur next shot.

1. think of whether you need this shot or not. if u dont dont shoot or remove.

2. think of editing in script. how to crunch real time in reel time. again goes back to 1. do u need this?

Best wishes. Really shows u r serious abt film appreciation.//

- //  Negatives
1. Light on the TV is a huge distraction

2. Story telling: I know how this is kind of going to end.  (am talking about Epilogue
but it was still cute) (I didnt predict that there is a small boy who is pulling it out)..So you can consider #2 as negative or positive not a big deal

3. Biggest negative is I didnt understand which door who is opening. (That kind of confused. For such a natural flowing movie you could have picked a different simpl;er way to show door opening and closing) //

- விமர்சனம் செய்பவர்களுக்கு படம் எடுக்க வராது என்பார்கள். அதற்கு குறு உதாரணம், செங்கோவி. எடிட்டிங். மேக்கிங், கதை, இசை என அனைத்தும் மோசம். ( இதை எழுதியவர், அந்த போஸ்ட்டை அழித்துவிட்டார். ஞாபகத்தில் இருப்பதை எழுதியிருக்கிறேன்!! )

- // பிறந்த குழந்தையை விமர்சிப்பது முறையல்ல. ஆனாலும்....அடுத்த படத்தில் உங்களை விட உயர்வாக இருக்கும் தொழில் நுட்பக்கலைஞர்களை பணியமர்த்தி கொள்ளவும். அப்போதுதான் கற்றுக்கொள்ள முடியும்.  படமெடுக்க அவசரப்படாதீர்கள். பொறுமையாக இருங்கள். உங்கள் எழுத்து ஒரு கவுரவத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப்படம் அதை குலைத்து விடும். //


மேலும் வாசிக்க... "ஜீபூம்பா - விமர்சனங்களின் தொகுப்பு"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, September 16, 2016

ஜீபூம்பா - எனது ஷார்ட் ஃபிலிம்

எனது சுய திரைக்கலை கற்றலின் முதல் செய்முறைப் பயிற்சியாக, ஜீபூம்பா எனும் ஷார்ட் ஃபிலிமை எடுத்துள்ளேன்.

நண்பர்களின் பார்வைக்கு:


மேலும் வாசிக்க... "ஜீபூம்பா - எனது ஷார்ட் ஃபிலிம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, September 12, 2016

ரோடு மூவீஸ்: பையாவும் 10 எண்றதுக்குள்ளயும்

திரைக்கதை சூத்திரங்கள் தொடரில் ‘ரோடு மூவீஸ்’ ஜெனர் பற்றி எழுதவில்லையே என்று சென்னை சந்திப்பில் ஒரு நண்பர் கேட்டார். இரண்டு காரணங்களால் தான் அதைத் தவிர்த்தேன்.

1. ரோடு மூவீஸ் என்பது தனி ஜெனர் அல்ல..அது ஒருவகை கதைக்களம். ஒரு காதல் கதை அல்லது த்ரில்லர் ஜெனர் போன்ற ஏதோவொரு ஜெனர், ஒரு பயணத்தில் நடப்பதாக வரும்போது ரோடு மூவி ஆகிறது.

2. ரோடு மூவி என்பது நம் மக்களுக்கு சரிப்பட்டு வருமா எனும் சந்தேகம் எனக்கு உண்டு.


பயணம் என்பது தமிழர் வாழ்க்கையில் அவ்வளவு முக்கியமான விஷயமே இல்லை. டூர் என்றால் புளியோதரை கட்டிக்கொண்டு திருச்செந்தூருக்கோ அல்லது திருப்பதிக்கோ போவது தான் நம் வழக்கம். அதிலும் பஸ்ஸில் ஏறிய உடனே தூங்கிவிட்டு, கோவில் வந்ததும் இறங்கி ‘யப்பா..நல்ல தூக்கம்’ என்று பெருமைப்படும் அதிசயப்பிறவிகள் நாம். ‘டெஸ்டினேசன் தான் நம் ஆட்களுக்கு முக்கியம்; பயணம் அல்ல..எனவே ஒரு பயணத்தில் என்ன நடக்கிறது எனும் கதையில் நம் ஆட்கள் ஈஸியாக இன்வால்வ் ஆவதில்லை’ என்று இயக்குநர் கேபிள் சங்கர் 10 எண்றதுக்குள்ள பற்றிப் பேசும்போது சொன்னார். நிஜம்!

தமிழ் சினிமாவில் ரிஸ்க்கான சப்-ஜெனர், ரோடு மூவி என்று சொல்லலாம். அன்பே சிவம், நந்தலாலா, 10 எண்றதுக்குள்ள என்று கமர்சியலாக தோல்வியடைந்த ரோடு மூவிக்களே அதிகம். லிங்குசாமி ஒருவர் தான் ‘பையா’ மூலம் ரோடு மூவியை சக்ஸஸ் பண்ணிக்காட்டியவர். (மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி என்று ஒரு காமெடிப்படம் முன்பு ஜெயித்ததுண்டு). எனவே பையாவையும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தையும் கொஞ்சம் ஸ்டடி செய்தேன்.

Road Movies :

முதலில் ரோடு மூவி என்றால் என்ன என்று பார்ப்போம்.

படத்தின் முக்கிய கேரக்டர், ஏதோவொரு குறிக்கோளுடன் ஒரு பயணம் மேற்கொள்கிறது. அந்த பயணத்தில் அந்த கேரக்டர் சந்திக்கும் விஷயங்களையும், அந்த பயணத்தின் சுவாரஸ்யமான முடிவையும் சொல்வது தான் ரோடு மூவி.

ஆக்ட்-1 : ஒரு நார்மல் லைஃபில் இருக்கும் கேரக்டர்(ஹீரோ), ஒரு பயணத்தில் இறங்க வேண்டிய தேவை வருகிறது. அந்த ஹீரோவுக்கு ஒரு முன்கதை இருக்கும். அது ஆக்ட்-1ல் அல்லது ஆக்ட்-2ன் முடிவில் சொல்லப்படும்.

ஆக்ட்-2 : பயணம்..அதில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்.

ஆக்ட்-3: எதை எதிர்பார்த்து அந்த பயணம் நடந்ததோ, அதற்கு நேரெதிரான ஒன்று அங்கே காத்திருக்கும். அதை ஹீரோ எப்படி எதிர்கொள்கிறான் என்பது கிளைமாக்ஸ்.


குறைகள் இருந்தாலும், 10 எண்றதுக்குள்ள படத்தை நான் ரசித்தே பார்த்தேன். திரைக்கதை அமைப்பை மட்டும் பார்த்தால், கனகச்சிதமாக அது இருக்கும்; கொஞ்சம் நீளமென்றாலும். ஆங்கிலப்படமான ட்ரான்ஸ்போர்டரின் தழுவல் என்பதால், அந்த ஃபார்மேட்டை அப்படியே பயன்படுத்தியிருப்பார்கள். ஆக்ட்-1ல் வேகமாக ஆரம்பித்து, ரோடு மூவியின் முக்கிய பகுதியான ஆக்ட்-2ல் தூங்கி வழிந்து, ட்விஸ்ட் கொடுக்கும் ஆக்ட்-3ல் மறுபடியும் படம் வேகம் எடுத்திருக்கும். அது மோசமாகத் தோற்க வேண்டிய படம் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நம் மக்கள் கதறியபடி தான் வெளியே வந்தார்கள்.

ஆனால் பையா எனும் ரோடு மூவியை இதே மக்கள் தான் வெற்றி பெற வைத்தார்கள். எனவே எங்கே தவறு நிகழ்ந்தது என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆக்ட்-1 :

விர்ரென்று சீறிப்பாயும் ரேஸ் கார் போன்று தான் 10 எண்றதுக்குள்ள படத்தின் ஃபர்ஸ் ஆக்ட் இருக்கும். பையாவை விட, இதில் சுவாரஸ்யமும் வேகமும் அதிகம். பையாவில் ஹீரோ, ஹீரோயினைப் பார்க்கிறான். உடனே காதலில் விழுகிறான். வேலைவெட்டி இல்லாத இளைஞன் தான் ஹீரோ. ஆயிரத்திச் சொச்சம் தமிழ் சினிமாக்களில் வந்த விஷயம் இது. எனவே பெரிய சுவாரஸ்யம் எல்லாம் இதில் இல்லை. ஆனால் இது தான் லிங்குசாமி செய்த புத்திசாலித்தனமான வேலை.

ஹீரோவுக்கு ஒரு முன்கதை இருக்கிறது. படத்தை அங்கே ஆரம்பித்திருக்கலாம். அந்த மும்பை போர்சனை முதலிலேயே காட்டியிருந்தால், ஆக்ட்-2ல் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருப்பார்கள். 10 எண்றதுக்குள்ள படத்தில் அது தான் நடந்தது. வேகமாக ஆரம்பித்த படம், அரைமணிநேரத்தில் தூங்கி வழிந்தது. லிங்குசாமி மிகவும் ஸ்லோவாக, டெம்ப்ளேட் சீன்களுடன் ஆரம்பித்து, பிறகு பிக்கப் செய்தார்.

ஹீரோ விக்ரம் ஒரு சூப்பர் மேன், அதிரடி ஆக்சன் ஹீரோ என்று முதலிலேயே காட்டியபின் ‘ஹீரோயினை அவர் எப்படி காப்பாற்றுவார்?’எனும் பதைபதைப்பே நமக்கு எழாமல் போய்விட்டது. ஆனால் பையாவில் ஹீரோ ஒரு ரொமாண்டிக் மேன், அவன் சண்டை போடுவதற்கான அறிகுறி ஏதும் இல்லை. ரன் படத்தில் வந்த மாதவன் கேரக்டர் போல், காதலைத் தவிர ஏதுமறியாத குழந்தை போன்று கார்த்தி கேரக்டர் பையாவில் வருகிறது. இண்டர்வெல் ப்ளாக்கில் தான் ஹீரோ ஒரு அதிரடி ஆக்சன் ஆள் என்பதே ஹீரோயினுக்கும் நமக்கும் தெரிகிறது. ஒரு பயணத்தின் மத்தியில் இது நடக்கிறது. எங்கே கதை தொய்வடையுமோ, அந்த இடத்தில் ரணகளமான சண்டைக்காட்சியுடன் இதை லிங்குசாமி சொல்கிறார்.

அடுத்து, பையாவில் ஹீரோயினுடனேயே இருக்க என்ன வழியென்று ஹீரோ யோசிக்க, ‘என்னை மும்பையில் விட முடியுமா/’என்று ஹீரோயின் கேட்கும் ப்ளாட் பாயிண்டுடன் ஃபர்ஸ்ட் ஆக்ட் முடிகிறது. இங்கே ஹீரோயினை ஒரு கும்பல் விரட்டுகிறது. (ஹீரோ காப்பாற்ற வேண்டும்) மும்பைக்குப் போனால் தப்பிக்கலாம் என்று ஹீரோயின் நினைக்கிறார். ரோடு மூவி ஸ்ட்ரக்சர்படி, அங்கேயும் ஒரு ட்விஸ்ட் வரப்போகிறது. (அங்கேயும் ஹீரோ காப்பாற்ற வேண்டும்). இடையில் ஹீரோயின் மனதில் ஹீரோ இடம்பிடிக்க வேண்டும். இப்படி ஒன்றல்ல, மூன்று குறிக்கோளுடன் கார்த்தியின் பயணம் தொடங்குகிறது. ஹீரோ கேரக்டருடன் நாம் ஒன்றிப்போக இதுவொரு முக்கிய காரணம்.

10 எண்றதுக்குள்ள படத்தில், பயண ஆரம்பத்தில் இப்படி எந்தவொரு பெர்சனல் குறிக்கோளும் ஹீரோவுக்கு கிடையாது. பயணத்தின் முடிவில் தான் பையா ஹீரோவின் நிலைக்கு விக்ரம் வருகிறார். இரண்டு பயணத்துக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடு இது.


ஆக்ட்-2:

இரண்டு படத்திலுமே, காதல் எனும் பி-ஸ்டோரி ஆரம்பம் ஆகிறது. 10 எண்றதுக்குள்ள படத்தில் ஹீரோ & ஹீரோயின் இருவருக்குமே மற்றவர்மேல் காதல் ஏதுமில்லை. ஆனால் பையாவில் ஹீரோ முதல் சீனில் இருந்தே துடித்துக்கொண்டு இருக்கிறார். ‘படித்த, நுனிநாக்கு இங்கிலீஷுடன் கைநிறைய சம்பாதிக்கும் ஆள் தான் வேண்டும்’ என்று ஹீரோயின் தமன்னா சொல்கிறார். ஏறக்குறைய அதே போன்ற ஒரு ஆள், காரில் லிஃப்ட் கேட்டு ஏறுகிறார். படத்தின் சுவாரஸ்யமும் ஏறுகிறது. ஆனால் 10 எண்றதுக்குள்ள படத்தில் காதல் போர்சன், வெகு சுமார்.

10 எண்றதுக்குள்ள படத்தில் நடந்த இன்னொரு பெரிய தவறு, ரியலிஸ்டிக்காக எடுக்கிறேன் என்று நேடிவிட்டியை மிஸ் செய்தது. சென்னையைத் தாண்டி ஆந்திராவில் நுழைந்ததும், சார்மியின் ஆட்டமும், ஒரு தெலுங்கு வில்லன் கோஷ்டியின் சண்டையுமாக படம் தெலுங்குப்படமாகவே மாறிப்போகிறது. அடுத்து வடக்கு நோக்கி நகர நகர, படம் தமிழ்ப்படத்தின் அத்தனை சாயலையும் விட்டுவிட்டு ஹிந்திப்படமாக ஆகிறது. (பாலிவுட்காரங்க கோச்சுக்கக்கூடாது)

பையா படம் ஆரம்பிப்பதே கர்நாடகாவில் தான். பயணமும் அங்கிருந்து மும்பை நோக்கி. ஆனால் தமிழ்ப்பட சாயலிலேயே கதை நகர்கிறது. அந்தந்த மண்ணின் கல்ச்சரைக் காட்டுகிறேன் என்றெல்லாம் லிங்குசாமி இறங்கவே இல்லை. காதலைத் தவிர வேறு எதுவும் இண்டர்வெல்வரை இல்லை. அடுத்து, மும்பை ஃப்ளாஷ்பேக்கிலும் நம்மை அந்நியப்படுத்தும் அளவிற்கு ஹிந்தி சாயல் இல்லை.


10 எண்றதுக்குள்ள இண்டர்வெல் ப்ளாக்கில் ஒரு வில்லன் அல்ல, இரண்டு வில்லன்கள் சமந்தாவிற்காக காத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் ஹீரோ எதுவும் தெரியாமல் தேமேவென்று போகிறார்.

பையாவில்..ஹீரோவுக்கு மும்பையில் ஆபத்து காத்திருப்பது தெரியவருகிறது. திரும்பிப்போனால் ஹீரோயினுக்கும் ஆபத்து, காதலும் இன்னும் கைகூடவில்லை..மும்பையில் ஹீரோயினுக்கும் ஆபத்து காத்திருக்கலாம். இப்படி இத்தனை முடிச்சுக்களுடன் இண்டர்வெல் ப்ளாக் வருகிறது. இண்டர்வெல்லுக்குப் பிறகு கார்த்தியின் ஃப்ளாஷ்பேக்குடன் ஆக்ட்-2 முடிவுக்கு வருகிறது.

ஆக்ட்-3:

பையாவில் அதன்பிறகு ரொம்ப இழுக்காமல், சட்டென்று கதையை முடிக்கிறார்கள். ஆனால் 10 எண்றதுகுள்ள படத்தில், இரண்டாவது சமந்தாவின் கதையே அப்போது தான் ஓப்பன் ஆகிறது. ஏற்கனவே நீண்ட பயணத்தால் களைத்துப்போன நமக்கு, புதிதாக இன்னொரு கதை என்றதும் வீல்!!!

இத்தனைக்கும் அந்த சமந்தா கதை ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன் நன்றாகவே இருக்கும். ஆனாலும் அதற்குள் ஆடியன்ஸ் பொறுமையை ஆக்ட்-2ல் சோதித்தாகிவிட்டதே!

எனவே, தமிழில் ரோடு மூவி எழுதுவதில் நமக்கு இரு முக்கியமான சிக்கல்கள் உண்டு :

1. ஆபீஸிற்கு இரண்டு வாரம் லீவ் போட்டுவிட்டு, காரிலேயே பயணம் போகும் அமெரிக்கர்களை நான் பார்த்திருக்கிறேன். இங்கே அப்படி ஒரு காரியத்தை நாம் செய்தால், நம் குடும்பமும் ஆபீஸும் நம்மை எப்படிப் பார்க்கும் என்று சொல்லத் தேவையில்லை! எனவே, ரோடு மூவி என்பது நமக்கு நேடிவிட்டியான சப்ஜெக்ட் அல்ல. ட்ராவெல் எனும் வார்த்தை அமெரிக்கனுக்கு சந்தோசத்தையும் நமக்கு அலுப்பையும் கொடுப்பது. பயணத்தை படம் பார்ப்பவனும் ஃபீல் பண்ண வேண்டும் என்பது ஆங்கில ரோடு மூவிக்களின் அடிநாதம். இங்கே அதைச் செய்தால், ‘என்னய்யா இது..போறாய்ங்க, போறாய்ங்க..போய்க்கிட்டே இருக்காங்க’ என்று படம் பார்ப்பவன் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவான்.

2. ஆங்கில ரோடு மூவிக்களில் ஒரே மொழி, ஒரே கலாச்சார மக்கள் தான் வருவார்கள். எனவே படம் பார்ப்பவர்களுக்கு ஐடெண்டிஃபிகேசன் ஈஸியாக இருக்கும். இங்கே சென்னை டூ மும்பை ட்ராவல் என்றால், சென்னை தாண்டியதுமே படம் தெலுங்குப் படம் ஆகிவிடும். அடுத்து ஹிந்திப்படமோ எனும் டவுட்டும் நமக்கு வந்துவிடும். எனவே படத்தில் ஒன்ற முடியாமல், நம் ஆட்கள் நெளிய ஆரம்பிப்பார்கள். கொஞ்சம் படம் தடுமாறினாலும், தூக்கி எறிந்துவிடுவார்கள்.


இதை மனதில் வைக்காமல் ரோடு மூவி எழுதக்கூடாது. எழுதினால், பத்து எண்ணுவதற்குள் படத்தை பப்படம் ஆக்கிவிடுவார்கள்.

மேலும் வாசிக்க... "ரோடு மூவீஸ்: பையாவும் 10 எண்றதுக்குள்ளயும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, July 2, 2016

சினிமா மாணவர்களுக்கு : சில நல்ல வெப்சைட்கள்



சக சினிமா மாணவர்களுக்கு...

நமது தலைமுறையின் வரப்பிரசாதம், இண்டர்நெட். சமையலில் ஆரம்பித்து சினிமா வரை, நீங்கள் எதை கற்றுக்கொள்ள நினைத்தாலும் அதற்கு இண்டர்நெட் உங்களுக்கு உதவும். 

நான் அடிக்கடி சொல்வது, எனக்கு நானே சொல்லிக்கொள்வது ‘இண்டர்நெட் போன்ற விஷயங்களை நாம யூஸ் பண்ணனும்..இல்லேன்னா, அது நம்மளை யூஸ் பண்ணிடும்!’. நிறைய வெட்டி அரட்டைகள், பாலியல் தேடல்கள், போராளிச் சீற்றங்கள் என நமது நேரத்தை விழுங்கும் விஷயங்கள் பல இங்கே உண்டு. கொஞ்சம் கவனமாக இருந்தால், இண்டர்நெட் போன்ற வரப்பிரசாதம் வேறில்லை.


அந்தவகையில் சினிமா மாணவர்கள் படிக்க வேண்டிய சில வெப்சைட்கள் இங்கே. தினமும் இந்த வெப்சைட்களை படித்து வருகின்றேன். நண்பர்களுக்கும் இவற்றை பரிந்துரைக்கிறேன்.

1. No Film School :
சினிமா கற்றுக்கொள்ள ஃபிலிம் ஸ்கூல் தேவயில்லை எனும் கான்செப்ட்டில் உருவாக்கப்பட்ட தளம், http://nofilmschool.com/. திரைக்கதையில் ஆரம்பித்து சவுண்ட் மிக்ஸிங் வரை
ஆர்டிக்கிள்ஸ் கொட்டிக்கிடக்கும் வெப்சைட் இது. தேடல் பொறியை சரியாக உபயோகித்தால், பல அற்புதமான லின்க்ஸ் கிடைக்கும்.

2. Jamuura:
இதுவொரு இந்திய வெப்சைட் என்பதால், இந்தியாவில் இருக்கும் டெக்னிஷியன்களின் பேட்டி, இந்தியப் படங்கள் என்று லோக்கல் ஃபீல் கொடுக்கும் ஆங்கில தளம்,
http://www.jamuura.com/blog/
மணிரத்னம் படங்கள் முதல் அனுராக் காஷ்யப் வரை அவ்வப்போது அலசுவார்கள். சில நேரங்களில் முத்தான அறிவுரைகள் சிக்கும்.

3. Film Maker IQ:
வெவ்வேறு வெப்சைட்களில் வெளிவரும் நல்ல சினிமா கட்டுரைகளை, பாடங்களை வெளியிடும் தளம், http://filmmakeriq.com/
இங்கேயும் தேடினால், பல நல்ல விஷயங்கள் சிக்கும். ஃபிலிம் நுஆர் பற்றி எழுதியபோது, இந்த வெப்சைட்டின் லின்க்கை ஏற்கனவே நான் கொடுத்திருக்கிறேன்.

4. Rain Dance:
இன்னொரு முத்தான தளம். அவ்வப்போது செம இண்டரஸ்டிங்கான டாபிஸ் சிக்கும். பலரின் ஃபிலிம் மேக்கிங் அனுபவங்கள் நமக்கு உபயோகமாக இருக்கும். லின்க்:
http://www.raindance.org/articles/

5.Cinephilia Beyond: கொஞ்சம் கடினமான, கரடுமுரடான, ஆழமான கட்டுரைகளை விரும்புவோருக்கான தளம், http://www.cinephiliabeyond.org/
பல நல்ல பேட்டிகள், படங்களைப் பற்றிய தீவிர அனலைஸிஸ் என சீரியஸான தளம்.

6. Youtube:
ஆமாம் பாஸ், நம் ரேஷ்மா புகழ் யூடியூப் தான். ஆக்ட்டிங் கோர்ஸில் ஆரம்பித்து எடிட்டிங் வரை புட்டுப்புட்டு வைக்கிறார்கள். தமிழில் BOFTA மாஸ்டர்கிளாஸ் மட்டும் கிடைக்கிறது. ஆனால்
ஆங்கிலேயக் கனவான்கள் நம் ஆட்கள் போல் கஞ்சர்கள் அல்ல, தினமும் தங்கள் அனுபவத்தை, அறிவை பகிர்ந்து தள்ளுகிறார்கள். கூகுள் போன்றே இங்கும் சரியாகத் தேடினால், சரியானது சிக்கும்.

7. தமிழில் :
உலக சினிமா ரசிகன், கீதப்ரியன், கருந்தேள், முரளிக்கண்ணன், சுரேஷ்கண்ணன், செங்கோவி(!) போன்ற வலைப்பதிவர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வப்போது நாங்கள் வனவாசம் போனாலும், மன்னித்து தொடருங்கள்.

ஆனந்த விகடனில் இரண்டு அருமையான தொடர்கள் வருகின்றன. பஞ்சு அருணாச்சலம் மற்றும் வெற்றிமாறன் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். பஞ்சு ஐயாவின் ஆரம்ப காலம், கொடுமையானது. ஆரம்பித்த படங்கள் எல்லாம் பாதியில் நிற்க, ‘பாதிப்பட பஞ்சு’ என்று கேலிசெய்யப்பட்டதில் ஆரம்பித்து இளையராஜாவை கண்டுபிடித்துக் கொண்டுவந்தது வரை பல சுவாரஸ்யமான விஷயங்களை கொடுக்கிறார். தவற விடக்கூடாத தொடர் இது.

தமிழ் ஹிந்துவில் எஸ்.பி.முத்துராமன் ஐயாவின் அனுபவத்தொடர் வருகிறது. நான் எதிர்பார்த்த அளவிற்கு டெக்னிகலாக இல்லையென்றாலும் படிக்க வேண்டிய தொடர். கூடவே, என் பிரியத்திற்கு உரிய பிரபுதேவாவின் கதையும் வருகிறது. ஒரு திறமை எப்படி சுற்றியுள்ளோரால் கண்டுணரப்பட்டு, வளர்க்கப்பட்டது என்று எளிமையாக விவரிக்கிறார்.
இவற்றைத் தவிர நண்பர்கள் கமெண்ட்டில் சொன்ன சில நல்ல வெப்சைட்ஸ்:
1.        https://www.criterion.com/
5.        http://www.filmcomment.com/
6.        http://theplaylist.net/
மேலும் வாசிக்க... "சினிமா மாணவர்களுக்கு : சில நல்ல வெப்சைட்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.