Tuesday, December 29, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 67

67. திரும்பத் திரும்பப் பார்த்துப் பார்த்து....

ஒரு திரைக்கதை எழுதுவதற்குத் தேவையான அடிப்படைகளையும், திரைக்கதை வடிவம் பற்றியும் பார்த்து முடித்துவிட்டோம். திரைக்கதையின் முதல் பிரதி எனப்படும் ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட் & பவுண்ட் ஸ்க்ரிப்ட் எழுத, இது போதும். இதுவரை சொல்லப்பட்ட விஷயங்களை வைத்து, நீங்கள் உங்கள் திரைக்கதையின் ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட்டை முடித்திருக்க வேண்டும். அப்படி முடித்துவிட்டீர்கள் என்றால், அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது இரண்டு முக்கியமான வேலைகள்:

1. குறைந்தது ஒரு வாரத்திற்கு உங்கள் திரைக்கதையை மறந்துவிட்டு, வேறு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். எங்காவது டூர் போய் வரலாம் அல்லது ஃபேஸ்புக்கில் ஏதாவது புரட்சி செய்யலாம்.
நன்றாகவே ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள். ஏனென்றால், அடுத்து நீங்கள் செய்யவிருப்பது தான் திரைக்கதை எழுதுவதிலேயே உள்ள கடினமான, கடைசி ஸ்டெப்.

2. அது, ரீரைட் எனப்படும் திரைக்கதையைத் திருத்தி எழுதுவது.

‘என்னய்யா இது..பீட்ஷீட் போட்டு, சீன் போர்டு வச்சு சீன் போட்டு, ஒவ்வொரு சீனா அலசி, ஆராய்ஞ்சு ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கோம். இனிமே திருத்தி எழுத என்ன இருக்கு?’ எனும் நியாயமான கேள்வி
உங்களுக்குத் தோன்றும். ஆனால் இதைச் செய்யாமல் போனால், என்ன தான் பீட்ஷீட், சீன் போர்டு எல்லாம் சரியாக இருந்தாலும் திரைக்கதை சொதப்பிவிடும்.

ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்ப்பது, கண்டினியூட்டி செக் பண்ணுவது தான் திருத்தி எழுதுவது என்று சிலர் நினைக்கின்றார்கள். ஆனால் இது அதற்கும் மேலே! ஆங்கிலத்தில் வெளிவந்த Cast Away படம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம். அதன் திரைக்கதை எத்தனை முறை திருத்தி எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பத்து முறை?.......இல்லை, 250 முறை..ஆமாம் பாஸ், இருநூற்று ஐம்பது முறை திருத்தி எழுதப்பட்ட திரைக்கதை அது. ‘ஆணியே புடுங்க வேண்டாம்’ என்று தோன்றினால், நீங்களும் என் தோழனே!

நீங்கள் யாராவது எழுத்தாளர், ஷார்ட் ஃபிலிம் மேக்கர் அல்லது திரைக்கதையாசிரியருடன் நட்பை முறித்துக்கொள்ள வேண்டும் என்றால், அதற்கான எளிய வழி ஒன்று உண்டு. அவர்கள் படைப்பில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டினால் போதும். ஈகோவை சீண்டுகின்ற ஒரு விஷயமாக, குறையினை சுட்டிக்காட்டுதல் இருந்துவருகிறது. இப்போது திருத்தி எழுதும்போது, உங்கள் குறைகளை நீங்களே சுட்டிக்காட்டப் போகிறீர்கள். 
எனவே, மனரீதியில் இது மிக சவாலான விஷயம். ‘எவ்வளவு உலக சினிமா பார்த்து, ஐம்பது திரைக்கதை புக்ஸை படிச்சு ஒரு ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கிறேன். என் ஸ்க்ரிப்ட்டில் குற்றமா?’என்று தான் உங்கள் மனது உங்களிடம் சொல்லும். ‘எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது’ என்று உங்களிடம் கெஞ்சும். ஆனால் ஈவு, இரக்கமின்றி உண்மையிலேயே நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று சரிபார்க்கும் நேரம் இது. இதுவரை மனதால் திரைக்கதையை எழுதிவிட்டீர்கள். இது அறிவால், அதைத் திருத்தும் நேரம்!

உங்கள் திரைக்கதையை ப்ரிண்ட் போட்டுக்கொள்ளுங்கள். ஒரு சிவப்புக்கலர் பேனாவுடன் அமருங்கள். முதலில் ஒரு வாசிப்பு. முதல் பக்கம் முதல் கடைசிப்பக்கம்வரை, ஒருமுறை வாசித்துக்கொள்ளுங்கள். படிக்கும்போதே, ஏதேனும் தோன்றினால் குறித்துக்கொள்ளுங்கள். அடுத்து கீழே உள்ள ஒவ்வொரு விஷயத்திற்காகவும், ஒருமுறை வாசியுங்கள். அல்லது ஒவ்வொரு சீனையும் வைத்துக்கொண்டு, கீழே உள்ள விஷயங்களை செக் பண்ணுங்கள்:

1. இடம் / நேரம் : நாம் எப்போதுமே முதலில் எழுதும்போது, எளிதான தீர்வையே நாடியிருப்போம். அது க்ளிஷேவாக இருக்கும். ஒரு சம்பவம் நடக்கும் இடம், ஹோட்டல் என்று எழுதியிருக்கிறீர்கள்
என்று வைத்துக்கொள்வோம். அது வேறு எங்கெல்லாம் நடக்கலாம், வேறு என்னென்ன சாத்தியங்கள் உண்டு என்று யோசியுங்கள். 
குஷி படத்தின் மொட்டைமாடியை இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம் ,அல்லவா? ‘ஆடையை விலக்கும் காற்று, சண்டையின் நடுவே இரைச்சலுடன் பாயும் விமானம், சண்டைக்குத் தேவையான தனிமை’ என அந்த மொட்டைமாடி லொகேசனும் சீனை இன்னொரு லெவலுக்குக் கொண்டுபோயிருக்கும். இது ஏதேனும் வீட்டின் உள்ளே நடந்திருந்தால், இவ்வளவு வீரியமாக(!) அந்த சீன் வந்திருக்குமா என்று யோசித்துப்பாருங்கள்.
அதே போன்றே, தேவர்மகனில் அப்பாவும் மகனும் பேசிக்கொள்ளும் ‘அவன் மெதுவாத்தான் வருவான்’ காட்சி. வீட்டுக்கூடாரத்தில் தான் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அங்கே எஃபக்ட்டைக் கூட்டுவது, மழை. இடியும் மின்னலும் அந்த சீனுக்கு அதிக அர்த்தத்தைத் தருகின்றன. உங்கள் சீனின் மனநிலை(மூட்) என்ன என்று பாருங்கள் அதற்கு ஏற்ற இடமும், நேரமும் என்னவென்று யோசியுங்கள்.
நீங்கள் வாழ்க்கையில் பார்த்த இடங்கள் அல்லது ஏதேனும்  திரைப்படத்தில் பார்த்த இடங்கள் அல்லது இன்டர்நெட்டில் பார்த்த போட்டோ கூட உங்களுக்கு இன்ஸ்பிரீசனாக அமையலாம். நீங்களே உங்கள் திரைக்கதையின் இயக்குவர் என்றால், ஒவ்வொரு சீனுக்கு இப்படிப்பட்ட ரெபரன்ஸ் போட்டோக்கள் உங்களுடன் இருக்க வேண்டும். அப்படி ஒரு இடமும் நேரமும் அமையும்போது, சீன் இம்ப்ரூவ் ஆவதை உங்களால் பார்க்க முடியும்.
2.கதாபாத்திரங்கள்: நீங்கள் உருவாக்கியிருக்கும் கதாபாத்திரங்கள் இயல்பாக, உயிர்ப்புடன் இருக்கிறார்களா என்று சரிபாருங்கள். படத்தின் முக்கிய பாத்திரங்களின் வேலை, இயல்பு, வயது எல்லாவற்றையும் ஒருமுறை மனதுக்குள் மாற்றிப்பாருங்கள். என்ன செய்தால் சுவாரஸ்யத்தைக்கூட்ட முடியும் என்று பாருங்கள்.
மௌனகுரு படத்தில் வந்த, கர்ப்பிணி இன்ஸ்பெக்டர் பாத்திரம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். உமா காமேஷ் நடித்திருந்தார். திரைக்கதையின் ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட்டில் அது கிடையாது, வெறும் இன்ஸ்பெக்டர் என்று தான் முதலில் அது எழுதப்பட்டது. அதன் இயக்குநர் சாந்தகுமாருக்கு ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட் முடித்தபின்னும், இன்னும் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது தான் ஒரு ஹிந்திப்படம் (பெயர் நினைவில் இல்லை!!) பார்த்தார். அதில் வந்த கதாபாத்திரம் தான், இந்த கர்ப்பிணி பெண் இன்ஸ்பெக்டர். தன் கதையில் வரும் இன்ஸ்பெக்டரை அப்படியே மாற்றினார். படம், இன்னொரு லெவலுக்குப் போய்விட்டது. இங்கே இன்னொரு விஷயம். Fargo எனும் ஆங்கிலப்படத்திலும் இதே போன்ற கர்ப்பிணி இன்ஸ்பெக்டர் கேரக்டர் வரும். அந்த ஹிந்திப்பட இயக்குநர், Fargo-வில் இிருந்து எடுத்திருக்கலாம்.


இது தான் இன்ஸ்பிரேசன் என்பது. ஒரிஜினலுக்காக கதை எழுதாமல், தன் கதைக்குத் தேவையான கேரக்டரின் குணநலனை மட்டும் எடுத்துக்கொள்வது. ‘ஹிந்திப்படத்தில் இருந்து தான் எடுத்தேன்’ என்று சாந்தகுமார் சொல்லியும், யாரும் அவரை காப்பிகேட் என்று திட்டவில்லை. உலகில் வெளியாகியுள்ள அத்தனை படங்களில் இருந்தும் சில விஷயங்களை எடுத்துக்கொள்ளும் உரிமை நமக்கு இருக்கிறது. நம் படங்களில் இருந்தும் யாராவது நாளை இன்ஸ்பையர் ஆகலாம். ஆனால் அப்படி எடுத்துவிட்டு ‘நானா யோசிச்சேன்’ என்று பீலா விடக்கூடாது என்பதே இங்கே முக்கியம்.

எனவே, திரைக்கதை எழுதும்போதும் திருத்தி எழுதும்போதும் ஏதேனும் படத்தில் இருந்து ஏதாவது விஷயத்தை இன்ஸ்பையர் ஆகி, எடுக்க நினைத்தால் தாராளமாக எடுங்கள். ‘காப்பி..காப்பி’என்று இணையத்தில் அதிக கூச்சல் எழுவதால், இன்ஸ்பிரேசனுக்கே பயப்படும் சூழல் இப்போது வந்திருக்கிறது. சாந்தகுமார் போன்று நேர்மையாக இருந்தால், பிரச்சினையில்லை என்பதே யதார்த்தம்!

3. லீனியர் / நான் - லீனியர்: புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது, அதில் புதுமையாக புரட்சி செய்ய வேண்டும் என்று தோன்றுவது இயல்பு தான். டரண்டினோவும் நோலனும் தான் இன்றைய தலைமுறைக்கு ஆதர்ச நாயகர்கள் எனும்போது, நான் - லீனியர் திரைக்கதை மேல் ஆர்வம் பொங்குவதில் ஆச்சரியம் இல்லை. இதுவரை ஒரு திரைக்கதைகூட எழுதியிராதவர்கள்கூட, நான் -லீனியர் புரட்சி செய்யத் துடிப்பதைப் பார்க்கிறேன். பலரும் என்னிடம் ‘நான் லீனியர்’ பற்றி ஏன் தனிக் கட்டுரை இல்லை என்று கேட்டிருக்கிறார்கள். ‘சினிமாவைத் தலைகீழாப் புரட்டிப்போடும்’ ஆர்வத்தை அவர்களிடம் பார்க்கிறேன். ஆனாலும், சாரி பிரதர்ஸ்!

நாம் ஏற்கனவே சஸ்பென்ஸ்/சர்ப்ரைஸ் பற்றிய ஹிட்ச்காக்கின் பாம்-தியரியையும், ஓஷோவின் கருத்துக்களையும் பார்த்திருக்கிறோம். பாட்ஷா பற்றியும் ஜெண்டில்மேன் பற்றியும் பார்த்திருக்கிறோம். 

அவை தான் நான் லீனியருக்கு அடிப்படை. இங்கே ஒரு கதை தான் திரைக்கதையின் வடிவத்தை முடிவு செய்ய வேண்டும். ஆடியன்ஸை படத்துடன் ஒன்ற வைக்க, ஒரு தகவலை முன்பே சொல்வதா அல்லது பின்னர் சொல்வதா எனும் ஜட்ஜ்மெண்ட்டே திரைக்கதையில் முக்கியம் என்று பார்த்திருக்கிறோம். அதை வைத்துத்தான் லீனியரா அல்லது நான் லீனியரா எனும் முடிவுக்கு நீங்கள் வர வேண்டும். 

கண்டிப்பாக நான் லீனியரில் தான் கதை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கதையைக் கெடுக்காதீர்கள். நான் லீனியர் என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்றால், உங்கள் கதையிலோ அல்லது நீங்கள் சொல்ல விரும்பும் விஷயத்திலோ அதற்குரிய காரணம் இருக்க வேண்டும். பல்ப் ஃபிக்சனும், மெமண்ட்டோவும் புரட்சிக்காக எழுதப்பட்ட திரைக்கதைகள் அல்ல. ஒவ்வொரு கேரக்டரையும் நாம் எப்படி ஃபீல் செய்ய வேண்டும், அவர்கள் எப்படி நம்மிடம் இருந்து விடைபெற வேண்டும் எனும் தெளிவான திட்டமிடல், பல்ப் ஃபிக்சனில் இருந்தது. ஆடியன்ஸை அதிகமாக இன்வால்வ் ஆக வைக்கும் உத்தியாகவும் டரண்டினோ அதைக் கையாண்டிருந்தார். 
மெமண்டோவில் ஹீரோ போன்றே நாமும் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸை ஃபீல் பண்ண வேண்டும் என்று நோலன், அதை நான் லீனியராக அமைத்தார். Irreversible படமும் அப்படியே.

Citizen cane(1941), Rashomon(1950), அந்த நாள் (1954) என, நம் தாத்தாக்கள் காலத்திலேயே நான் லீனியர் படங்கள் வந்துவிட்டன. நான் லீனியர், லீனியர் போன்றே ஒரு சாதாரண விஷயம் தான். எனவே அதை உணர்ச்சிவசப்படாமல் அணுகுங்கள். ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட்டை நான் லீனியராக எழுதியிருந்தால், அது அவசியம் தேவைதானா என்று இப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஒரு திரைக்கதையை சுவாரஸ்யமாகச் சொல்வது தான் முக்கியம். அதற்கு எந்த வடிவம் சரி என்பதை, உங்கள் கதை முடிவு செய்யட்டும். உங்கள் ஆசைக்காக, திரைக்கதையை குழப்பிவிடாதீர்கள். 

4. அடிப்படைகள்: இந்த தொடரின் முதல் 24 பாகங்கள்வரை பல அடிப்படை விஷயங்கள் பற்றிப் பார்த்தோம். அவற்றை உங்கள் திரைக்கதையில் பயன்படுத்தியுள்ளீர்களா அல்லது அவற்றில் எதையாவது சேர்க்க முடியுமா என்று பாருங்கள்.

5. பீட் ஷீட்: பலமுறை திருத்தி, மாற்றி எழுதும்போது நாமே தொலைந்து போன ஃபீலிங் வந்துவிடும். எனவே ஒவ்வொரு ட்ராஃப்ட் முடியும்போதும், பீட் ஷீட்டையும் சீன் போர்டையும் அப்டேட் செய்யுங்கள். சரியான வடிவத்துக்குள்தான் இருக்கிறோமா அல்லது ஆர்வக்கோளாறில் சொதப்பியிருக்கிறோமா என்று தெரிந்துகொள்ள இது உதவும்.

6.எமோசன்ஸ்: சினிமாவில், அது எந்த ஊர் சினிமாவாக இருந்தாலும், ஆடியன்ஸை கதையுடன் ஒன்ற வைக்கும் விஷயங்களில் ஒன்று செண்டிமெண்ட். சீரியல்கள் வந்தபின், அந்த வார்த்தைக்கு நெகடிவ் அர்த்தம் வந்துவிட்டதால், எமோசன்ஸ் எனும் வார்த்தையை நாம் உபயோகிப்போம். சிரிக்கும்போது தான் படத்துடன் ஒன்றுகிறார்கள் என்று முன்பு பார்த்தோம். ஆனால் அழும்போது தான், படத்துடன் கரைந்து போகிறார்கள். ‘ச்சே..பின்னீட்டான்யா’ எனும் வார்த்தை, கண் கலங்கியபிறகு தான் நம்மவர்களிடம் இருந்து வருகின்றது. அது லவ் ஃபீலிங்காக இருக்கலாம் அல்லது அம்மா செண்டிமெண்ட்டாக இருக்கலாம். எமோசன்ஸ் இருந்தால் தான், கேரக்டர்கள் யதார்த்தமானவையாகத் தெரியும். இல்லையென்றால், நம் படம் வெறும் சினிமாவாகத் தான் நிற்கும். 

ராஜசேகர், எஸ்.பி.முத்துராமன், கே,எஸ்,ரவிக்குமார் போன்ற வெற்றிப்பட இயக்குநர்களைவிட, ஸ்ரீதர்-பாரதிராஜா-சேரன் போன்ற இயக்குநர்களை நாம் அதிகம் நினைவில் வைத்திருக்கக் காரணம், இந்த எமோசன்ஸ் தான். ரத்தமும் சதையுமாக ஒரு கேரக்டரை எமோசனுடன் நம் கண்முன் நிறுத்தும் வல்லமை இந்த ஜாம்பவான்களுக்கு உண்டு. நெஞ்சில் ஓர் ஆலயம் டாக்டரையும், முதல் மரியாதை குயிலி/பொன்னாத்தாளையும், தவமாய் தவமிருந்து அப்பாவையும் அவ்வளவு எளிதில் நாம் மறக்க முடியுமா என்ன? ‘இது வெறும் படம் அல்ல..அப்படியே வாழ்க்கையை திரையில் கொண்டுவந்துட்டான்’ என்று ஆடியன்ஸ் உணர்வதைவிடவும் வேறு என்ன விருது ஒரு படைப்பாளிக்கு வேண்டும்?

(tamilss.com என்ற இணைய தளத்திற்காக ’தமிழில் உலக சினிமா’ - என்று ஒரு கட்டுரைத் தொடர் எழுதினேன். அவை இணையத்தில் இப்போது கிடைப்பதில்லை. இந்த திரைக்கதை தொடர் புத்தகமாக
வரும்போது, அவையும் புத்தகமாக வரும். ’திரைக்கதையில் எமோசன்ஸ்’ பற்றி அறிய விரும்புபவர்கள் அவசியம் அதைப் படிக்கவும். அதில் வந்த முதல்மரியாதை பற்றிய கட்டுரையை இங்கே
படிக்கலாம். )

7. ஹீரோ/வில்லன்: இருவருக்குமான மோதல்கள் சரியான உச்சத்தைத் தொட்டிருக்கின்றனவா அல்லது இன்னும் என்ன செய்தால் மோதல் கடுமையாகும் என்று யோசியுங்கள். இதே போன்றே
ஹீரோ-ஹீரோயின் காதலுக்கும் செக் பண்ணுங்கள். இடம், நேரம், சம்பவம் எல்லாவற்றையும் மாற்றி, இன்னும் பரபரப்பானதாகவோ உணர்வுப்பூர்வமானதாகவோ ஆக்க முடியுமா என்று பாருங்கள்.

8. சீன்: ‘எல்லா நல்ல படங்களிலும், குறைந்தது ஒரு சிறந்த சீனாவது இருக்கும்’என்பார் சிட் ஃபீல்டு. மறக்க முடியாத சீன்களாக அவை நம் நினைவில் நிற்கும். மேலே குறிப்பிட்ட தேவர் மகன் மழை சீனாகட்டும், குஷி மொட்டை மாடி சீனாகட்டும் அல்லது துப்பாக்கியில் 12 பேரை ஒரே நேரத்தில் போட்டுத்தள்ளும் சீன் ஆகட்டும், இவையெல்லாமே சிறந்த சீன்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி, உங்கள் கதையில் என்ன சீன் இருக்கிறது என்று சரிபாருங்கள். தியேட்டரை விட்டுப் போனபின்பும், ஆடியன்ஸ் மனதில் நிற்கும்படி என்ன எழுதியிருக்கிறோம் என்று பாருங்கள்.

(சில நேரங்களில் ஒரு சிறந்த சீன், இந்த கதைக்குத் தேவையில்லை எனும் சூழ்நிலை வரும். சீனை விட, கதையே முக்கியம். எனவே, எவ்வளவு நல்ல சீனாக இருந்தாலும் தூக்கிக் கடாசுங்கள்.)

9. பெர்ஃபெக்சன்: மிகவும் நேர்த்தியாக, குறையே இல்லாமல் பெர்ஃபெக்ட்டாக நம் திரைக்கதை இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படலாம். ஆனால் உலகில் அப்படி ஒரு பெர்ஃபெக்ட் திரைக்கதை எதுவும் இல்லை. எனவே பெர்ஃபெக்சனில் தொலைந்து போய்விடாதீர்கள். சிலர் ரீரைட் எழுதவே அஞ்சுவார்கள். அவர்களுக்காகத் தான் மேலே ‘Cast Away - 250 ட்ராஃப்ட்’உதாரணத்தைக் கொடுத்தேன். ஆனால், அதையே சாக்காக வைத்துக்கொண்டு, உங்கள் திரைக்கதையை சித்ரவதை செய்துவிடாதீர்கள். மேலும்....

Procrastination என்று ஒரு விஷயம் உண்டு. ‘தள்ளிப் போடுதல்’என்று சொல்லலாம். உண்மையிலேயே செயலில் இறங்க உள்ளுக்குள் பயம் இருக்கும். எனவே செயலைத் தவிர்க்க, நம் மனம் காரணங்களைத் தேடும். திரைக்கதையை முடித்தால், ஷுட்டிங் போக வேண்டும். அதைத் தவிர்க்க வேண்டுமென்றால், ரீரைட் என்ற பெயரில் பெஞ்சைத் தேய்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த தள்ளிப்போடுதல் எனும் புதைகுழியில் இருந்து, நீங்கள் தான் உங்களை மீட்டெடுக்க முடியும். எனவே, உண்மையிலேயே திருத்தி எழுதுகிறீர்களா அல்லது தள்ளிப்போடுகிறீர்களா என்று நன்றாக யோசித்துக்கொள்ளுங்கள்.
இப்போது திருத்தி எழுத ஆரம்பியுங்கள். இது ஒருநாளில் அல்லது ஒரு வாரத்தில் முடியும் வேலை அல்ல. நல்ல மனநிலையில் இருக்கும்போதெல்லாம், ஒவ்வொரு விஷயமாக எடுத்துக்கொண்டு அலசுங்கள். திரைக்கதையை மெருகேற்றுங்கள்!
(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. I am a fan of your blog... waiting for next part..

    ReplyDelete
    Replies
    1. தை மாதம் முதல்...நன்றி!

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.