Sunday, May 24, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – III-பகுதி 42

இந்தத் தொடரின் முதல் பாகத்தில் திரைக்கதை பற்றிய அடிப்படை விஷயங்களைப் பார்த்தோம். அடுத்து இரண்டாம் பாகத்தில் Blake Snyder-ன் Beatsheet-ஐ அடிப்படையாகக் கொண்டு, திரைக்கதை வடிவத்தை எப்படி அமைப்பது என்று பார்த்தோம். ஒரு கதையை எப்படி திரைக்கதை வடிவத்திற்கு ஒன்லைன்களாகக் கொண்டுவருவது, எங்கே கேடலிஸ்ட் சீன் வரவேண்டும், எங்கே 'ஆல் இஸ் லாஸ்ட்' வரவேண்டும் என்பது போன்ற ஃபார்மேட் விஷயத்தில் இப்போது உங்களுக்கு ஓரளவு தெளிவு வந்திருக்கும்.

அடுத்து சீன்களை எழுத ஆரம்பித்துவிடலாமே என்று கைகள் பரபரக்கும் இச்சமயத்தில், ஜெனர்(கதை வகை) எனும் இன்னொரு சப்ஜெக்டை இந்த மூன்றாம் பாகத்தில் விரிவாகப் பார்ப்போம். ஜெனர் பற்றிய தெளிவில்லாமல் இறங்கினால், எவ்வளவு நல்ல கதையும் சொதப்பிவிடும் என்பதால், இதைப் பார்த்துவிட்டு அடுத்து சீன்கள் எழுதுவது பற்றிப் பார்க்கலாம்.

இப்போது........

ஜெனர் - அறிமுகம்
கதை சொல்வது என்பது ஒரு கலை. ஏன் அது கலையாக வகைப்படுத்தப்படுகிறதென்றால், அது நமது உணர்வுகளுடன் ஊடுறுவும் விஷயமாக இருப்பதனால் தான். ஒரு சினிமாவின் மூலமாக நாம் என்ன செய்கிறோம்? ஆடியன்ஸ் மனதில் பலவகை உணர்ச்சிகளைத் தூண்டுகிறோம், அவர்களை மெய் மறக்க வைத்து அழ வைக்கிறோம், சிரிக்க வைக்கிறோம், அறச்சீற்றம் கொள்ள வைக்கிறோம். இவற்றில் ஏதாவது ஒரு உணர்ச்சி தான் மேலோங்கி இருக்கும் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம்.

சில படங்கள் சந்தோசத்தை மையப்படுத்தி வருகின்றன, சில படங்கள் பயத்தை மையப்படுத்தி வருகின்றன. ஒரு படம், ஒட்டுமொத்தமாக என்னவகை உணர்வினை நமக்குக் கொடுக்கிறது, அதன் கதையோட்டம் எப்படிச் செல்கிறது, முடிவு என்ன ஆகிறது என்பதையெல்லாம் வைத்துத்தான், ஒரு படம் இத்தகையது என்று வகைப்படுத்துகிறோம். அதில் இருந்து தான் ஜெனர் எனும் கதைவகைகள் காலப்போக்கில் பிரிக்கப்பட்டன.

ஆக்சன் படம், காதல் கதை, காமெடி என சினிமா பலவகையகாப் பிரிக்கப்பட்டது.  வணிக சினிமாவின் பெரிய சவாலே, படைப்பாளியின் சிந்தனையும் ஆடியன்ஸின் எதிர்பார்ப்பும் ஒத்துப்போவது தான். ஆடியன்ஸை தியேட்டருக்குள் நுழையும் முன்பே தயார்படுத்த, இந்த வகைப்படுத்தல் பேருதவியாக அமைந்தது.


கூடவே, திரைக்கதை எழுதுபவர்க்கும் இதுவொரு வழிக்காட்டியாக ஆனது. கொடூரமான ரத்தம் தெறிக்கும் சீனை இந்தக் கதைக்கு வைப்பதா, வேண்டாமா என்பது போன்ற முடிவுகளை எளிதாக எடுக்க, ஜெனர் உதவி செய்தது. பெரும்பான்மையான படங்களின் ஜெனர் கீழ்க்கண்ட ஏதோவொன்றாகத்தான் இருக்கும்:

1. ஆக்சன் கதை
2. காதல் கதை
3. காமெடிக் கதை
4. குடும்பக்கதை
5. ஹாரர் படம்
6. Crime/Thrillar
7. சைன்ஸ்பிக்சன்/Mystry/Supernatural
8. பக்திப்படங்கள்
9. வரலாற்றுப் படங்கள்
10. மற்றவை

பொதுவாகப் படங்களை இரண்டே ஜெனரில் சொல்லிவிட முடியும். ஒன்று, மெலோடிராமா..மற்றது த்ரில்லர்.

மேற்கொண்டு ஜெனர் பற்றிப் பார்க்கும் முன், இரு முக்கிய விஷயங்களை நினைவில் வைக்கவும்:

1. ஒரு ஜெனரின் கூறுகள் கால ஓட்டத்தில் மாறிக்கொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர் காலத்து ஆக்சன் படங்களையும், ரஜினி காலத்து ஆக்சன் படங்களையும், இன்றைய ஆக்சன் படங்களையும் ஒப்பிட்டால் இது உங்களுக்கே புரியும். அடிப்படையாக அந்தப் படங்கள் கொடுத்த/கொடுக்கும் உணர்வுகள் ஒன்று தான். ஆனால் சொல்லும் முறையில் பல மாற்றங்கள் வந்துவிட்டன, இல்லையா? எனவே ஒரு ஜெனரில் இவையெல்லாம் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஃபிக்ஸ் செய்ய முடியாது. சமூக மாற்றங்கள், ஆடியன்ஸ் மனநிலை, டெக்னலாஜியின் வளர்ச்சி போன்ற பல காரணிகளே அவற்றை முடிவு செய்யும்.

உதாரணமாக....சூப்பர்ஹிட் படமான வண்ணக்கிளி படத்தில் வந்த 'அடிக்கிற கை தான் அணைக்கும்' பாடலைப் பார்த்து, கண்ணீர் விட்ட பெண்களை நானறிவேன். ஆனால் இன்று அந்தப் பாட்டை டிவியில் பார்த்தாலே, வீட்டில் ஆண்களுக்கு அடி விழும்!!

2. மேலே உள்ள லிஸ்ட்டில் ஆக்சன், காமெடி என கொடுக்கப்பட்டிருப்பது அடிப்படை வகைகள். இதை வைத்து ரொமான்டிக் காமெடி, ரொமாண்டிக் த்ரில்லர் என் ஜெனர்களை மிக்ஸ் செய்து, புதுவகை மசாலாக்களை உருவாக்குவது திரைக்கதை ஆசிரியரின் திறமை. எனவே பெரும்பாலான படங்களை, குறிப்பாக இந்தியப்படங்களை ஒரே ஒரு ஜெனரில் அடக்கிவிட முடியாது. ஜெனர் பற்றிய அடிப்படைகளைக் கற்றபின், மிக்ஸிங்கில் நீங்கள் கலக்கலாம்...சியர்ஸ்!


சரி, ஒரு படம் என்ன ஜெனர் என்பதை சில விஷயங்களை வைத்து முடிவு செய்யலாம். உதாரணமாக…:

ஒட்டுமொத்தப் படம் கொடுக்கும் உணர்வு
ஹீரோ மற்றும் முக்கியக் கேரக்டர்களின் இயல்பு
திரைக்கதை வடிவம் (லீனியர், நான் லீனியர், டாகுமென்டரி ஸ்டைல்..)
கதை சொல்லப்பட்ட விதம்
படத்தின் முடிவு.

ஒவ்வொரு ஜெனருக்கும் மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் வெறுபடும். ஒரு குறிப்பிட்ட ஜெனரில் எடுபடும் வன்முறை, வேறொரு ஜெனரில் அபத்தமாகத் தோன்றும். ஒரு ஜெனரில் பொருந்தும் காமெடி, இன்னொரு ஜெனரில் ஒட்டாமல் நிற்கும்.

படத்தின் கரு உருவானதுமே, படத்தின் ஜெனரை முடிவு செய்துவிடுவது நல்லது. ஆனால் பிராக்டிகலாகப் பார்க்கும்போது, படத்தின் ஒன்லைன்/பீட் ஷீட் எழுதும்போதே ஜெனர் பற்றி தெளிவு பிறக்கும். படத்தின் ஒட்டுமொத்த உணர்வினை முடிவு செய்வது ஜெனர் தான் என்பதால், சீக்கிரமே ஜனரை முடிவு செய்துவிடுவது நல்லது.

ஒவ்வொரு ஜெனரிலும் இருக்க வேண்டிய சில விஷயங்கள் இருந்தே ஆக வேண்டும். உதாரணமாக ஆக்சன் ஜெனர் என்றால் வலுவான வில்லன். அது இல்லையென்றால் ஆடியன்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சும். மக்கள் எதிர்பார்ப்பதை, க்ளிஷேவாக இல்லாமல் ட்விஸ்ட் செய்து கொடுப்பதே நம் முன் இருக்கும் பெரும் சவால்.

எனவே சீன்களை எழுதும் முன், ஜெனர் பற்றிய தெளிவு அவசியம்.நம் சினிமாக்களில் அதிகம் வரும் ஜெனர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் – III-பகுதி 42"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 19, 2015

தொட்டால் தொடரும் - ஒரு அலசல்

திரைவிமர்சகர், விநியோகஸ்தர், திரைப்பட வசனகர்த்தா என பன்முகம் கொண்ட பதிவர் கேபிள் சங்கரின் இயக்கத்தில் வெளியான படம், தொட்டால் தொடரும். அப்போது குவைத்தில் ரிலீஸ் ஆகாததால் பார்க்க முடியவில்லை. ’நம்ம கேபிள் கலக்கிட்டார்’ என்று ஒரு குரூப்பும் ‘சொதப்பிட்டார்’ என்று இன்னொரு குரூப்பும் அடித்துக்கொள்ள, படம் பார்க்கும் ஆர்வம் பன்மடங்காகியது! இப்போது தான் படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. நெட்டில் ரிலீஸ் செய்த புண்ணியவான்களுக்கு நன்றி!

உண்மையில் பிரமாதமான ஒன்லைன். தன் தம்பியின் உயிரைக் காப்பற்ற நினைக்கும் ஹீரோயின், இன்சூரன்ஸ் பணத்திற்காகத் தன் உயிரையே வில்லன் கும்பலிடம் பணயம் வைக்கிறாள். பின் ஹீரோவின் துணையுடன் அந்த ஆபத்தில் இருந்து எப்படி மீண்டாள் என்பதே கதை. ‘வலியத் தேடிக்கொண்ட ஆபத்து’ என்ற புதுமையான விஷயத்தை எடுத்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறார்.

அமைச்சரான பிரமிட் நடராஜன் ஒரு ஆக்சிடென்ட்டில் கொல்லப்படுவதுடன் படம் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து வரும் 'பாஸு..பாஸு' டைட்டில் பாடலும் மனதை ஈர்க்க, நிமிர்ந்து உட்கார்கிறோம்.

அன்பான, அழகான, மனிதநேயமுள்ள பெண்ணாக ஹீரோயின் அருந்ததி அறிமுகம் ஆகிறார். கூடவே, ஹீரோ தமனுடன் காமெடியன் 'வேடத்தில்' வரும் பாலாஜியுடன் அறிமுகம் ஆகிறார். பாலாஜி செய்யும் கூத்தால் ஹீரோ-ஹீரோயின் இடையே ஒரு ஃபோனிலேயே மோதல் வெடிக்க, பின்னர் அது நட்பாகிக் கா...த...லா...கி..ற..து. இடையிடையே அமைச்சர் மகன், ஒரு போலீஸ்கார் துணையுடன் அமைச்சர் கொலையை புலன்விசாரணை செய்கிறார்.

இதிலேயே ஏறக்குறைய முக்கால்மணி நேரம் ஓடிவிடுவது தான் சோதனை. 'என்ன ஆச்சு? அமைச்சர் கொலை..அதுக்கு விசாரணை..ஹீரோ-ஹீரோயின் மோதல்..அப்புறம் காதல்..அப்போ கதை?' என்று நாம் நெளிய ஆரம்பிக்கும்போது, இயக்குநரும் உஷாராகி கதைக்கு வருகிறார். ஹீரோயின் தம்பிக்கு ஆக்சிடெண்ட், அதற்குப் பணத்தேவை. ஹீரோயின் ஏற்கனவே ஒரு எல்.ஐ.சி.பாலிசி எடுத்திருக்கிறார்.

'ஆக்சிடென்ட் போலவே கொலை செய்யும் கும்பல்' பற்றி ஹீரோயினுக்குத் தெரியவருகிறது. அவர்கள் அடுத்துக் கொலை செய்யத் திட்டமிடும் பெண்ணின் போட்டோவிற்குப் பதில் தன் ஃபோட்டோ கிடைக்கும்படி செய்கிறார் ஹீரோயின். அங்கேயிருந்து தான் படம் வேகம் எடுக்கிறது. வில்லன் கும்பல் வெறிகொண்டு ஹீரோயினைத் துரத்த, விஷயம் தெரிந்து ஹீரோவும் களத்தில் குதிக்க, இன்னொரு பக்கம் அமைச்சரின் மகனும் வில்லன்களைத் துரத்த பரபரவெனக் காட்சிகள் நகர்கின்றன. கிளைமாக்ஸ்வரை ஒரு துப்பறியும்ன் நாவல் போல் செம விறுவிறுப்பு.

படத்திற்கு பலமும் அதுதான், பலவீனமும் அது தான். வேகமாகக் கதை நகரவேண்டும் எனும் ஆர்வத்தில் காட்சிகள் சட்-சடென்று முடியும்படி அமைத்திருக்கிறார்கள். இதனால் எதுவுமே மனதில் பெரிதாகப் பதியாமல் போவது தான் பலவீனம்.

ஹீரோ ஆக்சன் ஏரியாவில் டம்மியாகவே வருவது இன்னொரு பிரச்சினை. ஹீரோயினைக் காப்பார்றுவதைக்கூட போலீஸ் நண்பனும், அமைச்சர் மகன் குரூப்பும் தான் ஆக்டிவ்வாகச் செயல்படுகிறார்கள். ஹீரோ பெரும்பாலும் இன் -ஆக்டிவ்வாகவே வருகிறார். இது யதார்த்தக்கதையே இல்லை எனும்போது, ஹீரோ கேரக்டரை ஏன் இவ்வளவு யதார்த்தமாகப் படைத்தார்கள் என்று தெரியவில்லை. ஹீரோயினைத் தவிர வேறு எந்தக் கேரக்டருமே ஒட்டாமல் போனது தான் பெரும் சோகம். அதனாலேயே அவ்வளவு பரபரப்பான கிளைமாக்ஸைக்கூட, நாம் மனம் ஒன்றிப் பார்க்கமுடிவதில்லை.

1) அமைச்சர் கொலையும் அது பற்றிய விசாரணையும் ஒரு சீகுவென்ஸ் (அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு வலுவான, நன்கு தெரிந்த ஒரு நடிகரைப் போட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஜெண்டில்மேன் சரண்ராஜ் போன்ற கேரக்டர் அது. இங்கேயோ மொக்கையாக யாரோ ஒரு புதுமுகம் வருகிறார். கூடவே அமைச்சரின் மகனாக ஒரு சீரியல் நடிகர். விளைவு..இந்த சீகுவென்ஸ் நம் மனதில் ஒட்டவே இல்லை.)

2)ஹீரோயின் குடும்பக்கதை ஒரு சீகுவென்ஸ். ( சித்தியும் அப்பாவும் கொடுத்திருப்பது ஆஸ்கார் பெர்ஃபார்மன்ஸ். அவர்களைப் பார்த்த செகண்டிலேயே சீரியல் எஃபக்ட் வந்துவிடுகிறது. சித்தி சீன் நான்கு தான் இருக்கும். அது கொடுக்கும் இம்பாக்ட் இண்டர்வெல்வரை அதிர வைக்கிறது. மோசமான கேஸ்டிங்)

3)காமெடியன் (!) பாலாஜியின் காமெடியுடன் ஹீரோவின் காதல் கதை ஒரு சீகுவென்ஸ் (காதல் கோட்டைக் கால காதல் என்றாலும் ஹீரோ-ஹீரோயின் இடையே நட்பும் காதலும் மலர்வதை ரசிக்க முடிந்தது. ஆனால் காமெடி என்ற பெயரில் பாலாஜி வாயால் ட்வீட்டிக்கொண்டே இருப்பது தான் கொடுமை. இவரை காமெடியன் என்று சொல்வதே பெரிய ஜோக் தான். கொஞ்சம்கூட இவரது காமெடி எடுபடவில்லை. சந்தானம் இல்லாவிட்டாலும், சதீஷாவது இதைச் செய்திருக்க வேண்டும்.)

4) மெயின் வில்லன்+ ரிப்போர்ட்டர் கதை ஒரு சீகுவென்ஸ்.

மேலே பிராக்கெட்டில் சொல்லியிருக்கும் விஷயங்களால், குறிப்பாக தவறான நடிகர் தேர்வால் நம்மால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. என்ன தான் திரைக்கதையில் கோட்டை கட்டினாலும், சரியான கேஸ்ட்டிங் இல்லாவிட்டால், என்னாகும் என்பதற்கு இந்தப் படம் ஒரு நல்ல உதாரணம்.

ஏனோ தமன்மேல் எனக்கு ஆரம்பத்தில் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் படத்தில் பார்க்கும்போது, இவர் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. ஒரு ஹிட் படம் அமைந்தால், முண்ணனி நடிகராகிவிடுவார். அருந்ததி திட்டியதும் முகம் சுண்டிப்போவது, அவரைக் காப்பாற்றத் துடிப்பது, சின்ன சின்ன எக்ஸ்பிரசனைக்கூட அழகாக வெளிப்படுத்துவது என கிடைத்த டம்மி கேரக்டரிலும் அழகாக ஸ்கோர் செய்கிறார்.

அருந்ததியின் முகம், மிடில் கிளாஸ் பெண் கேரக்டருக்குப் பொருந்திப்போகிறது. க்ளோசப்பில் முதிர்ச்சி தெரிந்தாலும், தமிழில் ஒரு ரவுண்டு வர வாய்ப்புள்ள நடிகை. இது ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் என்று சொன்னார் இயக்குநர். அருந்ததியை வைத்து 'ரொமாண்டிக்' எஃபக்ட் கொண்டுவர முடியும் என்று எப்படி நம்பினாரோ தெரியவில்லை. ஹோட்டல் சீனில் ரொமாண்டிக்காக அருந்ததி ஹீரோவை அணுக, அவர் பதறிப்போய் 'நீயும்...உன் ரொமான்ஸும்.. சாத்தானே அப்பாலே போ' என்று விரட்டிவிடுவது தெளிவு!

‘பசங்க மனசு ரஜினி படம் மாதிரி..பொண்ணுங்க மனசு கமல் படம் மாதிரி’, 'புரட்சிக்கனல்ன்னு சொல்லிட்டு ஏ.சில இருக்கீங்க?, சாகணும்ன்னு எடுத்த ரிஸ்க்கை விட வாழணும்ன்னு எடுக்கிற ரிஸ்க் அதிகமா இருக்கு' என பல இடங்களில் வசனங்கள் அருமையாக இருந்தது. ஆனால் தாஸை விசாரிக்கும் சீனில் ‘நயந்தாரா-ஆர்யா’ என்று பேசுவது ரொம்ப ஓவர்!

இந்தப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம், குறைந்த பட்ஜெட் படம் என்றாலும் சேஸிங் காட்சிகளில் அசத்தியிருப்பது. ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் கவனிக்க வைக்கிறார். பாஸு..பாஸு & யாருடா மச்சான் பாடல்கள் தவிர மீதி படத்தில் தேறவில்லை.

ஹீரோ கிரவுட் ஃபண்டிங் முறையில் நெட்டிசன்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் திரட்டிக் கொண்டுவருவதாக காட்சி வருகிறது..அம்மே! கேபிளாரின் நல்லநேரம், சாருநிவேதிதா இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை!!

வில்லன்கள் ப்ளான் செய்வது, ஹீரோயின் தன் ஃபோட்டோவை வைப்பது, ஹீரோ பணம் கொண்டுவந்து பிரச்சினையை சால்வ் செய்வது இவை அனைத்துமே அடுத்தடுத்து 5 நிமிடங்களில் சொல்லப்படுகின்றன. இவற்றை ஜீரணிப்பதற்கான போதிய ஸ்பேஸ் கொடுக்கப்படவில்லை. காதலுக்கும் காமெடிக்கும் கொடுத்த நேரத்தை, இதற்குக் கொடுத்திருக்கலாம்.

ஹீரோயின் தன் ஃபோட்டோவை வைக்கும்போது, எத்தகைய ஆபத்தில் சிக்குகிறார் என்று நமக்குத் தெளிவாகச் சொல்லப்படவில்லை. 'மெயின் வில்லனே நினைத்தாலும், இந்தக்கொலையை நிறுத்த முடியாது' என்பது தான் இதில் இருக்கும் பேராபத்து. 'ஆக்ஸிடென்ட் போல் கொலை' என்பது உலகம் முழுக்க எப்படி நடத்தப்படுகிறது, அந்த குரூப் எப்படி இயங்குகிறது என்று அப்போதே நமக்குச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முக்கால்வாசிப்படம் முடிந்தபின், ஒரு கேரக்டர் திடீரென இவர்களைப் பற்றி விவரிக்கிறது..டூ லேட்.

மேலும், இத்தகைய துப்பறியும் கதைகளில் ரீ-கேப் எனும் ஃப்ளாஷ்பேக் உத்தி மூலம் ஆடியன்ஸுக்கு என்ன நடந்தது என்று சொல்வது தொன்று தொட்ட வழக்கம். அது இல்லாத த்ரில்லர் படங்களே இல்லை என்று சொல்லலாம். கேபிளார் இதில் புதுமையாக, அந்த ஃப்ளாஷ்பேக் உத்தியே இல்லாமல் திரைக்கதையை அமைத்திருக்கிறார். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், ஆடியன்ஸ் கவனமாக இல்லாவிட்டால் ‘ஏன் இது நடக்கிறது’ என்றும் புரியாது, யார் இவர்கள் என்றுகூட சில இடங்களில் குழப்பிவிடும். ஆனால் கேபிளாருக்கு ஆடியன்ஸ் மேல் அபார நம்பிக்கை போலும்.

எந்தவொரு இடத்திற்கும் ரீகேப்பே போடாமல் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். உதாரணமாக, மெயின் வில்லனிடம் ஹீரோ ‘ஹீரோயினைக் கொல்ல வரும் அடியாளைக் கூட்டிவா’ என்று சொல்கிறார். அவன் வேறு ஆளை அழைத்து வருகிறான். ஏன் என்பதற்குப் பதில் முன்பே வேறொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வில்லனுக்கே அடியாளைத் தெரியாது என்பதை மீண்டும் நமக்குச் சொல்லாமல் அந்த சீனை அமைத்திருக்கிறார்கள். விளைவு, அந்தப் படத்திலேயே வரும் டயலாக் போன்று ‘கமல் படம் மாதிரி’ ஆகிவிடுகிறது.

சமீபத்தில் வந்த பிசாசு படத்தில் பச்சை-சிவப்பு சஸ்பென்ஸ் உடையும்போது, மிஸ்கின்கூட ஃப்ளாஷ்பேக் ஷாட்கள் மூலம் என்ன நடந்தது என்று விவரித்துச் சொல்லியிருப்பார். ’அது தேவையில்லாத வேலை. அதைச் செய்யாமல் விட்டிருந்தால் படம் Krzysztof Kieślowski-ன் படத்தின் தரத்திற்கு உயர்ந்திருக்குமே’ என்று நினைத்திருக்கிறேன். மிஷ்கின் ஏற்கனவே நம்மை நம்பி ஏமாந்தவர் என்பதால், உஷாராகி அங்கே ரீகேப் போட்டிருப்பார். கேபிளார் அதைச் செய்யாமல் Kieślowski ஸ்டைலில் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். விளைவு, கிளைமாக்ஸ் பலருக்கும் புரியவில்லை. முதல் படத்திலேயே இந்த டெக்னிகல் ரிஸ்க் தேவையா என்று தோன்றினாலும், நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம் இது.

கதையை ஹீரோ சப்ஜெக்ட்டாக மாற்றினால், இதுவொரு அதிரிபுதிரி ஆக்சன் படமாக ஆகியிருக்கும். ஆனால் அப்படியெல்லாம் ஹீரோ பில்டப் படமாக எடுக்காமல், ஹீரோயின் ஓரியண்டேட் சப்ஜெக்ட்டாகவே எடுத்த தைரியத்திற்கு கிளாப்ஸ்.

மொத்தத்தில் திரைக்கதையின் விறுவிறுப்பான பகுதிகள் மோசமான கேஸ்ட்டிங்கால் எடுபடாமல் போயிருக்கின்றன. நல்ல கேஸ்ட்டிங் உள்ள பகுதிகளில் லாஜிக் இடித்து, திரைக்கதை சொதப்பியிருக்கிறது.  கேபிளார் அடுத்த படத்தில் இதைச் சரிசெய்தால், வெற்றி நிச்சயம்!

 
மேலும் வாசிக்க... "தொட்டால் தொடரும் - ஒரு அலசல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, May 15, 2015

36 வயதினிலே - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..
மொழி, சந்திரமுகி என மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்தபோது, சட்டென்று எல்லாவற்றையும் உதறிவிட்டு திருமணவாழ்வில் செட்டில் ஆனார் ஜோதிகா. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் வெள்ளித்திரையில் வந்திருக்கும் படம், 36 வயதினிலே. ஏற்கனவே மலையாளத்தில் ஹிட் அடித்த கதை என்பதால், தைரியமாக களத்தில் இறங்கியிருக்கிறார். படம் எப்படி என்று பார்ப்போம். (டிஸ்கி: நான் ஒரிஜினல் ‘How Old Are You?'-ஐ பார்க்கவில்லை.)

ஒரு ஊர்ல :
கணவன், குழந்தைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து, தனக்கென்று எந்த சொந்த அடையாளமும் இல்லாமல் வாழும் சாமானியப் பெண்களில் ஒருத்தி வசந்தி. அவரின் தியாகம், கணவனாலும் பெண்ணாலும் புரிந்துகொள்ளப்படாமல் போவதும், தனக்கென்று ஒரு அடையாளத்தை அடைவதற்காக வசந்தி மேற்கொள்ளும் லட்சியப்பயணமுமே கதை.

உரிச்சா:
தாய் என்பது தான் இன்றும் ஒரு பெண்ணிற்கு சமூகத்தில் மிகப்பெரும் கௌரவம் தரும் விஷயமாக இருக்கிறது. ஒரு நல்ல இல்லத்தரசியாக வாழ்ந்து, மடிவதையே பெருமையாக நினைக்கும் பெண்களும் பலர் உண்டு. ஆணின் வெற்றிக்குப் பின்னால் மட்டுமே இருக்க வேண்டிய விஷயமாகவே, பெரும்பாலும் அவர்களை வைத்திருக்கிறோம். இதில் ஜோவும் அப்படிப் பட்ட நல்ல அம்மாவாக, நல்ல மருமகளாக, உலகம் அறியாத இல்லத்தரசியாக வருகிறார்.

குடும்பம் அல்லது சமூகம் என்பதை விட தனி மனித சந்தோஷமும்/சுதந்திரமுமே முக்கியம் என்பது இன்னொரு மாற்றுத்தரப்பு. அமெரிக்கா இதில் உச்சம் தொட்ட நாடு. பெற்றோரைப் பேணுவது பிள்ளைகளின் கடமை என்றால், ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். அன்னையர் தினம் அன்று (மட்டும்) கண்டிப்பாக முதியோர் இல்லம் சென்று அம்மாவைத் தரிசிக்கும் புண்ணிய ஆத்மாக்கள் அவர்கள். தற்போது, நமது சமூகத்திலும் பரவலாகி வரும் விஷயம். எனவே இந்த இரு மாறுபட்ட பண்பாடுகளின் உரசல், பல இடங்களில் நடக்க ஆரம்பித்திருக்கும் நேரம் இது. அதைத் துல்லியமாகப் பதிவு செய்கிறது, இந்தப் படம்.

நமது பண்பாட்டின் பிரதிநிதியாக ஜோ இருக்க, ‘தியாகம் என்பதெல்லாம் முட்டாள்தனமான சுயசித்திரவதை..நம்ம லைஃபை நாம எஞ்சாய் பண்ணனும்’எனும் மாற்றுத் தரப்பாக அவரின் மகளும், கணவனும். 13 வருட தாம்பத்திய வாழ்க்கைக்கு என்ன அர்த்தம், தன் கனவுகளைத் தியாகம் செய்து வாழ்ந்ததற்கு என்ன அர்த்தம் என்று ஜோ யோசிக்க ஆரம்பிக்குபோது...இடைவேளை.

முதல்பாதி முழுக்க, கலகலப்பாகச் செல்கிறது. போலீஸ் ஜோ பற்றி ரகசிய விசாரணை செய்வது ஒரு பக்கம், விவரமற்ற மக்கு அம்மாவாக ஜோவின் வாழ்க்கை ஒரு பக்கம் என காமெடியும் பரபரப்ப்புமாக படம் துவங்குகிறது. அதிலும் பிரசிடெண்டை ஜோ சந்திக்கும் காட்சியும் அதன் பின்வரும் காட்சிகளும் செம ரகளை! ஹோட்டல் ஏசி ரூமில் ஜோவின் மாமியார் சொல்லும் ‘ஃப்ரிட்ஜ்ல பாலைத் தான் வைப்பாங்க..இவங்க என்னடான்னா நம்மளை வச்சுட்டாங்க’ டயலாக்கிற்கு தியேட்டரே அதிர்கிறது. கூடவே, ஆபீஸ் பாலிடிக்ஸை செம காமெடியாகச் சொல்கிறார்கள்.

இடைவேளைக்குப் பிறகு, வீட்டின் மொட்டை மாடியில் இயற்கை விவசாயம் என்று ஜோ இறங்கும்போதே, நமக்கு பிண்ணனியில் ‘அண்ணாமலை டூ படையப்பா’ மியூசிக் ஓட ஆரம்பித்துவிடுகிறது. பெண்களின் பிரச்சினையை மட்டும் பேசாமல், பூச்சி மருந்துகளால் நம் உணவெல்லாம் விஷமாகியிருக்கும் அவலத்தைச் சொன்னது பாராட்டக்கூடியது. ஆனாலும், அதுவே கிளைமாக்ஸ்வரை நீள்வதைக் கொஞ்சம் பொறுமையுடன் தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆனாலும் ஃபேஸ்புக் போராளிகளை ஓட்டுவது, அந்த வேலைக்கார பாட்டி கேரக்டர், அம்மா செண்டிமெண்ட்டுக்கு ஜோ கொஞ்சம் அசர்வது என இரண்டாம்பாதியிலும் ரசிக்க வைக்கும் சீன்கள் இருப்பதால், தப்பிக்கிறோம்.

ஜோதிகா:

படம் முழுக்க ஜோ மயம். ரீ-எண்ட்ரிக்கு சரியான கேரக்டர். பிய்த்து உதறுகிறார். முகத்தில் கொஞ்சம் பளபளப்பு குறைந்திருக்கிறது என்பதைத் தவிர்த்து, பெரிய வித்தியாசம் தெரியவில்லை. கணவனும் பிள்ளையும் கிளம்பும்போது, அவரது நடிப்பு கலங்க வைக்கிறது. முதல்பாதியில் காமெடியிலும், இரண்டாம்பாதியில் செண்டிமெண்டிலும் கலக்கியிருக்கிறார்..வெல்கம் பேக்.

சொந்த பந்தங்கள்:
ஹீரோ ’மாதிரி’ ரகுமான் வருகிறார். மிகவும் ஜாக்கிரதையாக ஜோதிகாவைத் தொடாமலேயே, கணவனாக நடித்திருக்கிறார். அவரைவிட, அவரின் மகளாக வரும் அந்தப் பெண் தான் நடிப்பில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். பிராக்டிகலான பெண்ணாக, செண்டிமெண்ட் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாதவராக நல்ல நடிப்பு. டெல்லி கணேஷ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் என சீனியர்கள் கெஸ்ட் ரோலில் வந்து பின்னியிருக்கிறார்கள். அபிராமியும் டபுள் சைஸில் ரீ-எண்ட்ரி ஆகியிருக்கிறார்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:

- முக்கால்வாசிப் படத்தில் இருந்து, கிளைமாக்ஸ் வரை..இண்டரெஸ்ட்டாக நடப்பதற்கு ஏதும் இல்லாமல், தட்டையாகப் படம் நகர்வது.
- சந்தோஷ் நாராயணனின் பாடலில் ஒன்றை மட்டுமே படத்தில் யூஸ் செய்திருக்கிறார்கள். ராசாத்தி டைட்டில் பாடலாகவும், ஹேப்பி பாடல் படத்தின் எண்ட் டைட்டிலிலும் வருகிறது. இரண்டையும் படத்தில் நல்ல விஷுவல்ஸூடன் கொடுத்திருக்கலாம்..ஏமாற்றமே!
- கணவனை நெகடிவ்வாக மட்டுமே காட்டியிருப்பது. (என்ன இருந்தாலும், விட்டுக்கொடுக்க மாட்டோம்ல!)
- இயற்கை விவசாயத்தில் ஜோதிகா இறங்கியதும், மத்திய-மாநில அரசுகள் உடனே திருந்தி அவருக்கு உதவுவதாகக் காட்டியிருப்பது. நம்மாழ்வார் எனும் கிழவன் இந்த அரசுகளிடம் கத்திக் கத்தி ஒன்றும் நடக்காமல், தனி மனிதராகக் கடைசிவரை போராடிச் செத்தது ஞாபகம் வந்தது.

- மலையாளத்தில் ஹீரோயினாக நடித்த மஞ்சுவாரியாருக்கு ஏறக்குறைய இந்தக் கதை போன்றே பெர்சனல் பிராப்ளம் இருந்தது. கணவர் திலீப்பிற்காக, நடிப்பை விட்டு 16 வருடம் நல்ல மனைவியாக் வாழ்ந்தார். ஆனால் திலீப்போ காவ்யா மாதவனுடன் கள்ளக்காதலில் இருப்பதாகத் தெரியவர, வாழ்க்கையே வெறுத்துப்போனார். இத்தனை வருடங்கள் கணவனுக்காகவும், பிள்ளைக்காகவும் வாழ்ந்தது என்ன அர்த்தம் என நொந்து, டைவர்ஸ் வாங்கினார். (மகளும் படத்தில் வருவது போன்றே அப்பாவுடன் சென்றார்). அதற்குப் பிறகு மஞ்சு நடித்த படம் தான் இந்தக் கதை. எனவே ஆடியன்ஸ் மத்தியில் சிம்பதியைக் கிளப்பி, படம் பாக்ஸ் ஆபீஸீல் கலெக்சனை அள்ளியது. இங்கே சூர்யா போன்ற நல்ல கணவர் கிடைத்த ஜோதிகா செய்திருப்பது, அந்த வகையில் நெகடிவ்.

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:


- முதல் பாதி
- ஜோதிகாவின் அருமையான நடிப்பு..மீண்டும் ஒரு மொழி.
- சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும், பிண்ணனி இசையும் அமர்க்களம்
- விஜியின் வசனங்கள்..தொடர்ந்து புன்சிரிப்பிலேயே நம்மை வைத்திருக்கின்றன.
- இன்றைக்கு அவசியம் விவாதிக்கப்பட வேண்டிய...படத்தின் கான்செப்ட்
-கூடவே, ஆர்கானிக் வெஜிடபிள்ஸ் அருமையைச் சொல்லியிருப்பது

பார்க்கலாமா?
 
நல்ல படம்...ஃபீல் குட் மூவி பார்க்க விரும்புபவர்கள் அவசியம் குடும்பத்துடன்.........பார்க்கலாம்!
மேலும் வாசிக்க... "36 வயதினிலே - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, May 4, 2015

ஹிட்ச்காக் : SUSPICION (1941) ஒரு அலசல்

அறிமுகம்:

Rebecca படத்திற்கு புக் பண்ணும்போதே ஹிட்ச்காக் ஒரு பொக்கிஷம் என்று அதன் தயாரிப்பாளர் Selznick தெரிந்து வைத்திருந்தார். எனவே அவரை ஏழு வருட கான்ட்ராக்ட்டில் ஒப்பந்தம் செய்திருந்தார். செல்ஸ்னிக்கின் ஸ்பெஷாலிட்டி, இப்படி ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆட்களை நல்ல ரேட்டுக்கு வாடகைக்கு விடுவது. ஆம், அவர் ஹிட்ச்காக்கை வைத்து படம் தயாரித்ததைவிட வாடகைக்கு விட்டதே அதிகம். செல்ஸ்னிக்கிடம் வேலை செய்வதைவிட, சுதந்திரமாக வெளியாளிடம் வேலை செய்வதையே ஹிட்ச்காக்கும் விரும்பினார். அந்தவகையில் Harry E. Edington என்பவரின் தயாரிப்பில் (ஹிட்ச்காக் இணைத்தயாரிப்பாளர்!) உருவான படம், Suspicion.

ரிபெக்கா ஹீரோயின் Joan Fontaine மறுபடியும் ஹிட்ச்காக்குடன் இணைந்த படம். (அவரும் அண்ணாச்சி செல்ஸ்னிக்கின் கான்ட் ராக்ட்டில்தான் இருந்தார்.!) கூடவே, ஹீரோவாக தி கிரேட் Carry Grant. ஹிட்ச்காக்கின் நான்கு படங்களில் ஹீரோவாக நடித்தார். நான்குமே 'ஹிட்ச்காக்' பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. அதில் முதலாவது இந்தப் படம்.
கதை:
Francis Iles என்பவர் எழுதிய பிரபலமான நாவல் Before the Fact(1932). ரொம்ப வருடங்களாகவே இந்த நாவல் மேல் ஹிட்காக்கிற்கு ஒரு கண் இருந்தது. காரணம், கதையில் இருந்த சைக்காலஜிகல் ஃபேக்டர்.
ஒரு பெண், ஒருவனைப் பார்த்த மாத்திரத்தில் காதலித்துக் கல்யாணமும் செய்துகொள்கிறாள். அதன்பிறகு அவனைப் பற்றிய விஷயங்கள் கொஞ்சம், கொஞ்சமாகத் தெரியவருகின்றன. ஆனாலும் அவன் மேல் உள்ள அன்பால் அவனை விட்டுப் பிரிய மறுக்கிறாள். இறுதியில் அவன் அவளைக் கொல்ல முயலும்போதுகூட, சந்தோசமாக உயிரையே கொடுக்கிறாள். (வழக்கம்போல், ஹிட்ச்காக் இந்தக்கதையை கொத்துப்புரோட்டா போட்டுவிட்டதால், படத்தில் இதே கதையை அப்படியே எதிர்பார்க்க வேண்டாம்.)

இதில் ஹிட்ச்காக்கிற்குப் பிடித்த இருவிஷயங்கள் இருந்தன. ஒன்று, ஹீரோயினின் கண்மூடித்தனமான காதல். (ஹிட்ச்காக்கின் மாஸ்டர்பீஸான வெர்டிகோ-வில் ஹீரோவுக்கு இது இருக்கும்.) இரண்டாவது, 'கொஞ்சம் கொஞ்சமாக விஷயங்கள் தெரியவரும்' கதையின் சர்ப்ரைஸான நடை. ஒரு நல்ல திரைக்கதைக்கு இது செம ஐடியா என்று ஹிட்ச்காக் நினைத்தார்.

அந்த நாவலைப் படமாக்க விரும்பியோர் எல்லோரும் கண்மூடித்தனமான காதலையே முக்கியமாக நினைக்க, ஹிட்ச்காக் இரண்டாவது வழியைப் பிடித்தார். 

ஒரு நல்ல குடும்பத்துப் பெண்..படித்தவள், ரூல்ஸ்&ரெகுலேசன்படி எல்லா விஷயத்திலும் நடப்பவள், இதுவரை யாரையும் காதலித்திராத பத்தரை மாற்றுத் தங்கம். ஹீரோவுக்கு குடும்பமே இல்லை, ரூல்ஸா அப்படீன்னா? என்று கேட்கும் நல்லவன், சூதாட்டத்திற்கு அடிமை, ஏகப்பட்ட பெண்கள் விரும்பும், பெண்களுடன் சுற்றிய சொக்கத் தங்கம். இந்த இரு எதெரெதிர் கேரக்டர்களும் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்....? அதன்பின் அவன்மேல் ஹீரோயினுக்குச் சந்தேகம் வர ஆரம்பித்தால்...? அது தான் சஸ்பிஷன்.

திரைக்கதை:
ஹீரோயின் ஹீரோவைப் பற்றி படிப்படியாக உண்மையை அறிகிறாள், மேலும் சில சந்தேகங்களையும் அடைகிறாள். இது தான் திரைக்கதையின் போக்கு. இதில் ஹிட்ச்காக் செய்த டெக்னிகல் மேட்டர் என்னவென்றால், திரைக்கதை முழுக்க முழுக்க ஹீரோயின் பாயின்ட் ஆஃப் வியூவிலேயே நகர்வது. ஹீரோயின் என்ன பார்க்கிறாரோ, அதை மட்டுமே நாம் பார்க்கிறோம். ஹீரோ ரேஸிற்குப் போகிரான், வேலைக்குச் செல்கிறான் போன்ற எல்லா விஷயங்களையும் ஹீரோயின் போலவே நாமும் கேள்வி தான் படுகிறோமேயொழிய, பார்ப்பதில்லை.

இதன்மூலம் ஹீரோயின் ஹீரோவைப் பற்றி என்ன சந்தேகங்களையெல்லாம் அடைகிறாரோ, அதையே நாமும் அடைகிறோம். ஒரு கட்டத்தில் ஹீரோ ஒருவேளை கொலைகாரனாக இருப்பானோ என்று ஹீரோயினுக்கு சந்தேகம் வரும்போது, நாமும் கதையில் பரபரப்பாக இன்வால்வ் ஆகிவிடுகிறோம். அது தான் சஸ்பென்ஸ் மன்னனின் ஸ்பெஷாலிட்டி.

பொதுவாக ஹாலிவுட் படங்களில் செட்டப் எனும் கேரக்டர்களின் சூழலை அறிமுகம் செய்யும் ஆரம்பப்பகுதியை 20 நிமிடங்களுக்காவது அமைப்பார்கள். இதில் ஹிட்ச்காக் பத்து நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுத்துக்கொள்கிறார். ஹீரோயின் ஹீரோ மேல் காதலில் விழுவது, கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிடுகிறது. 'கண்மூடித்தனமான காதல்' எனும் டாபிக்குள் போக வேண்டாம் என்பதாலேயே ஹிட்ச்காக் இதைச் செய்திருக்கலாம். ஆனாலும் அந்த காதல் போர்சனை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். யோசித்துப் பார்க்கையில் வெர்டிகோ தவிர்த்து, மற்ற படங்களில் ஹிட்ச்காக் காதலைப் பெரிதாகக் கண்டுகொண்டதேயில்லை. காதல் திருமணம் செய்தவர் என்பது கூட, இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஹீரோ, ஹீரோயின் சந்திப்பு-காதல்-கல்யாணம் எல்லாம் ஃபாஸ்ட் ஃபார்வர்டில் நடந்து முடியும்போது, படத்தின் மூன்றாவது இன்ட்ரஸ்டிங் கேரக்டர் பெக்கீ வருகிறது. அதில் இருந்து சுறுசுறுப்பாகும் படம், ஹீரோ ஒரு கொலைகாரனோ எனும் சந்தேகத்தில் ஹீரோயின் சிக்கும்போது செம விறுவிறுப்பானதாக ஆகிவிடுகிறது. கிளைமாக்ஸ்க்கு முன்புவரை, ஒரு ஹிட்ச்காக் படம் பார்க்கிறோம் எனும் சந்தோஷ உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது.

கேரக்டர்கள்:
ஹீரோ Carry Grant, நம்மூர் கார்த்திக்/கமல் போன்ற குறும்புக்கார நடிகர். அவரது கேஷுவல் நடிப்பில் பெஸ்ட் என்று Charade படத்தைச் சொல்லலாம். (Charade ஒரு ஹிட்ச்காக் ஸ்டைல் மூவி, இயக்கியது Stanley Donen.) அப்படிப்பட்டவர், இந்தப் படத்தின் ஹீரோ கேரக்டருக்கு மிகவும் பொருந்திப்போகிறார். வாழ்க்கையில் வேலைக்கே போயிராத, கடன் வாங்கியும் ரேஸிற்குப் போயும் காலத்தை ஓட்டும் ஜாலியான மனிதராக வருகிறார் கேரி. அதிலும் ஹீரோயினிடம் 'ஃப்ரென்ட்டுக்கு ஆயிரம் டாலர் வேணுமாம்' என கேஷுவலாகச் சொல்வதும், ஹீரோயின் 'ஏன் கேட்கிறான்?' என்று கேட்க, 'அதுவா? ஆயிரம் டாலர் அவன்கிட்ட வாங்கியிருந்தேன்..புவர் ஃபெலோ..திரும்பக் கேட்கிறான்' என்று சொல்வதில் ஆரம்பித்து அடுத்து வரும் சீன் அதகளம். 'யூ ஆர் எ பேபி' என்று நொந்து போய், கவலையுடனும் அக்கறையுடனும் ஹீரோயின் ஹீரோவைச் சொல்லும் இடம் க்ளாஸ்!

முதலிலேயெ பார்த்தபடி ஹீரோயினின் பாயின்ட் ஆஃப் வியூவிற்கு ஆடியன்ஸ் போக வேண்டும். ஆனால் கேரி போன்ற சார்மிங் ஹீரோ இருக்கும்போது, ஆடியன்ஸை எப்படி நகர்த்துவது? அதற்கு என்றே ஒரு சீன் வருகிறது. கேரியின் ஹீரோ இமேஜ் அடிபடாமலும், நம்மை ஹீரோவிடமிருந்து அந்நியப்படுத்தியும் ஹிட்ச்காக் ஒரே சீனில் இரு மாங்காய் அடிப்பார். சிரிப்பே வராத ஹீரோயினை ஹீரோவும், பெக்கீயும்(Nigel Bruce) சிரிக்கச் சொல்லும் சீன் தான் அது. இரண்டாம்பாதியில் வரும் பல விஷயங்களுக்கு, இந்த சீன் தான் லீடாக இருக்கும்.

ஹீரோயின் Joan-ன் நடிப்புக்காக ஆஸ்கர் அவார்டு கிடைத்தது. ரிபெக்கா படத்தில் தன்னம்பிக்கையற்று, பயந்து வாழும் கேரக்டர். இதில் தன்னம்பிக்கையுடன் பயந்து வாழும் கேரக்டர். இந்த நுண்ணிய வித்தியாசத்தை அவர் காட்டியிருக்கும் விதத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆக்டிங் பற்றி கற்றுக்கொள்வோர் அனைவரும் ரிபெக்காவையும் சஸ்பிஷனையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். (ஆனால் அந்த ஹீரோயின் கேரக்டரில் நிறைய லாஜிக் மிஸ்டேக் உண்டு, அவை படம் முடியும்வரை நமக்குத் தோணாததே ஹிட்ச்காக்கின் வெற்றி.)

படத்தில் வரும் இன்னொரு முக்கியக் கேரக்டர் பெக்கீயாக நடித்தது Nigel Bruce. நம்மூர் டி.எஸ்.பாலையா போன்ற முக அமைப்பும் ஆக்டிங் ஸ்டைலும் கொண்டவர். ரிபெக்காவில் ஹீரோவின் அக்கா கணவராக வருவார். அவரது அப்பாவித்தனமும், ஹீரோவிடம் அவருக்கு உள்ள நட்பும் நீண்டநாட்களுக்கு நம் நினைவில் இருக்கும்.

ஹிட்ச் ஸ்டைல்:
ஹிட்ச்காக்கின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்று  Rear Window. காலில் அடிபட்டுக்கிடக்கும் ஹீரோ, பக்கத்து வீடுகளை வேடிக்கை பார்ப்பதை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட சஸ்பென்ஸ் படம். அதில் மொத்தப்படமும் ஹீரோவின் பார்வையிலேயே நகரும். அதற்கு முன்னோடியாக சஸ்பிஷன் இருந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஹீரோவை நம்பும் ஹீரோயின்..கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவரும் உண்மைகள் - எனும் இந்தக் கதையில் ஹீரோவின் செயல்களை நாம் தனியே காண்பதில்லை. அதையும் சேர்த்தால், அது ஹிட்ச்காக்கின் பிந்தைய படமான Shadow of a Doubt (1943).
மூல நாவலில் இருந்த கண்மூடித்தனமான காதலின் எஃபக்ட்டை வெர்டிகோவில் பார்க்கலாம்.

ஒரு கேரக்டர் ஒரு முக்கியமான உணர்ச்சியை வெளிப்படுத்தும்போது அல்லது ஏதேனும் முக்கியமான நிகழ்வு நடக்கும்போது, கட் பண்ணாமல் ஒரே ஷாட்டாக கதை சொல்லும் ஹிட்ச்காக் ஸ்டைல் இதிலும் உண்டு. ஹீரோ ஹீரோயினுக்கு பால் எடுத்து வரும் சீன் ஒரு உதாரணம். இந்தப் படத்தில் அதிக சஸ்பென்ஸான சீன் அது தான். பொதுவாக வில்லன் கத்தி அல்லது துப்பாக்கி எடுத்துவரும் காட்சிகள் தான் டெரராக இருக்கும். இதில் பாய்சன் கலந்த(?!) பால் டம்ப்ளரை வைத்து கச்சிதமாக அதைச் செய்திருப்பார். (ஆடியன்ஸ் கவனம் பால் டம்ப்ளரில் இருக்க என்னசெய்யலாம் என்று யோசித்த ஹிட்ச்காக், ஒரு எரியும் பல்பை(ஒயர்லெஸ்!) அந்த டம்ப்ளருக்குள் போட்டுவிட்டதாகப் பின்னாளில் சொன்னார்!)

கிளைமாக்ஸ்:
(டிஸ்கி: படம் பார்த்தபிறகு, இதைப் படிக்கவும்.)

கேரி பால் டம்ப்ளரை எடுத்துக்கொண்டு மேலே வரும்வரை படம் சிறப்பாகச் செல்கிறது. அதன்பிறகு, அடுத்த ஐந்து நிமிடத்தில் அவசர அவசரமாக படம் முடிகிறது. அதிலும் கிளைமாக்ஸ் பெரும்பாலானோர்க்குத் திருப்தி தராது.

ஐரோப்பாவில் லாட்ஜர் படம் செய்தபோது ஹிட்ச்காக் சந்தித்த அதே பிரச்சினை இப்போதும் வந்து சேர்ந்தது. கேரி கிரான்ட் மாதிரி ஒரு ஹேண்ட்சம் ஹீரோவை கொலைகாரனாகக் காட்டுவதா எனும் குழப்பம் தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தது. 

 படம் முழுக்க கேரி ஒரு வில்லன் என்று குறியீடுகளை வைத்துவிட்டு, காட்சிகளையும் அப்படியே எடுத்து முடித்தபின் வழக்கம்போல் ஆரம்பித்துவிட்டார்களே என்று ஹிட்ச்காக் நொந்துபோனார். நாம் பல இஅடங்களில் பார்த்தபடி ஹிட்ச்காக் அட்ஜஸ்ட் செய்துகொன்டு போகும் ஆள் என்பதால், 'என்ன செய்யணுமோ சொல்லுங்க..பண்ணித் தொலைக்கிறேன்' என்று ஒத்துக்கொண்டார். (இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஹிட்ச்க்காக் தன்னை நிரூபித்தபின் வெர்டிகோ, சைக்கோ, மார்னி போன்ற படங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ண ஒத்துக்கொள்ள வில்லை. இப்போதே அடம்பிடித்தால், பெயர் கெட்டுவிடும் என்று நினைத்திருக்கலாம். ஏற்கனவே நடிகர்களை உணர்ச்சிகரமாக நடிக்க விடுவதில்லை எனும் புகார் அவர் மேல் உண்டு; கூடவே நடிகைகள் மேல் 'தனிப்பிரியம்' கொண்டவர் எனும் புகாரும்!)

அந்த விஷம் பற்றிய விவரத்தை ஹீரோ கொலை பண்ணுவதற்காக சேகரிக்கவில்லை, தற்கொலை செய்துகொள்ளவே சேகரித்தார் என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது படத்துடன் ஒட்டவில்லை. படம்பார்த்தோர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். படம் வணிகரீதியில் தப்பித்தாலும், அவரது முக்கியமான படங்களில் ஒன்றாக இதைச் சொல்ல முடியாமல் போனது.

ஹீரோ நல்லவர் என்பதற்கான லீட் சீன் எதுவும் கொடுக்காமல், தடுக்கென்று மாற்றியது படத்தின் தரத்தையே கீழிறக்கிவிட்டது. ஹீரோயினின் சந்தேகம் தான் படமே..அந்தச் சந்தேகம் ஒரு தப்பு என்றால், படமே தப்பு என்றாகிவிட்டது.

சரி..ஹிட்ச்காக் வைக்க நினைத்த கிளைமாக்ஸ் என்ன?

ஹீரோ கொடுத்த விஷம் கலந்த பாலைக் குடிக்க முடிவுசெய்கிறாள் ஹீரோயின். அதே நேரம் அவனைத் தண்டிக்கவும் நினைக்கிறாள். எனவே அவளது அம்மாவிற்கு இதைப் பற்றி விரிவாக ஒரு லெட்டர் எழுதிவைக்கிறாள். பால் கொண்டு வரும் ஹீரோவிடமே அந்த லெட்டரைக் கொடுக்கிறாள். அதில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாமல் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுமோ என ஹீரோ அதை போஸ்ட் செய்கிறான்..THE END.


மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக் : SUSPICION (1941) ஒரு அலசல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.