Wednesday, July 30, 2014

இருக்கு ஆனா இல்லை- திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
குவைத் வாழ் தமிழர்களின் தயாரிப்பில் உருவாகி சென்ற வாரம் வெளியான படம், இருக்கு ஆனா இல்லை. ரம்ஜான் லீவ் முடிந்து தியேட்டர் இன்று தான் ஓப்பனிங் என்பதால், இன்று இங்கே ரிலீஸ். VIP, சதுரங்க வேட்டை எனும் இரு ஹிட் படங்களுடன் வெளியானதால், அதிகம் கவனிக்கப்படாமல் போய்விட்ட படம் இது.
ஒரு ஊர்ல..:
ஹீரோ ஒரு ஆக்சிடெண்ட்டில் சிக்கிப் பிழைக்கிறான். அதே ஆக்சிடெண்ட்டில் முன்பின் தெரியாத ஒரு பெண்(ஹீரோயின்) இறக்கிறார். ஹீரோவைத் தொடர்ந்து வந்து, பேயாக ஹீரோ வீட்டிலேயே தங்குகிறார். தான் யார் என்று கண்டுபிடித்துத் தரும்படி ஹீரோவைக் கேட்கிறார். அந்த பேயின் பேக்ரவுண்டை ஹீரோ கண்டுபிடிப்பதும் ஆபத்தில் இருக்கும் ஹீரோயினின் சகோதரியைக் காப்பாற்றுவதுமே கதை.

உரிச்சா....:
ஆதவன் தன் நண்பர்களுடன் சரக்கடித்தபடியே ஹீரோவின் கதையைச் சொல்வதாக திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். அது சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
சொங்கியாக, எதைத் தொட்டாலும் விளங்காத ஆளாக ஹீரோ விவந்த் அறிமுகம் ஆகிறார். அடுத்து நடக்கும் ஆக்ஸிடெண்ட்டும், தொடர்ந்து வரும் பேய் எபிசோடும் ரசிக்க வைக்கின்றன. பிறகு பேய் ஹீரோயினும்(அறிமுகம் ஈடன்) ஹீரோவும் நண்பர்கள் ஆகிறார்கள். தான் யார் என்று மறந்து போய்விட்டதாகவும், அதைக் கண்டுபிடித்துச் சொன்னால், தான் திரும்பிப் போய்விடுவதாகவும் ஹீரோயின் சொல்கிறார்.

ஹீரோ தேடுவதும், கூடவே இருவருக்குமான உறவு நெருக்கமாவதுமாக படம் இடைவேளைவரை நன்றாகவே செல்கிறது. ஹீரோயின் யார் என்று கண்டுபிடிப்பதுடன் இடைவேளை விடுகிறார்கள்.
பிரச்சினையே அதில் தான் ஆரம்பிக்கிறது. கண்டுபிடித்தவுடனே படம் முடிந்துவிட்ட ஃபீலிங் நமக்கு வந்துவிடுகிறது. ஹீரோயின் ட்வின்ஸ் என்றும் இன்னொரு ஹீரோயின் ஹாஸ்பிடலில் ஆபரேசனுக்காக அட்மிட் ஆகியிருப்பதாகவும், அவரைக் கொன்றுவிட்டு அவர் உடல் உறுப்புகளைத் திருட ஹாஸ்பிடல் முயல்வதாகவும் கதையைக் கொண்டுபோய் இருக்கிறார்கள்.

அடுத்து, தன் அக்காவைக் காப்பாற்றும்படி ஹீரோயின் கேட்க, ஹீரோ அந்த வேலையையும் ஒத்துக்கொள்கிறார். அதையாவது அதிரடி ஆக்சன்களுடனோ, சஸ்பென்ஸுடனோ சொன்னார்களா என்றால், இல்லை. சப்பையான வில்லன் டாக்டர், அவரை எதிர்கொள்ள முடியாமல் கிளைமாக்ஸ்வரை சுற்றிசுற்றி ஓடிவரும் ஹீரோ என படம், டெம்போவை இழக்கிறது.

இடையில் செகண்ட் ஹீரோயினுடன் ஒரு சவசவ காதல் எபிசோடு வேறு. அந்த கேரக்டர், இந்தக் கதைக்கு எதற்கு என்பது டைரக்டருக்கே வெளிச்சம். ஆதவனும் இடைவேளைக்குச் சற்றுமுன் காணாமல் போகிறார். கிளைமாக்ஸுக்குக் கொஞ்சம் முன் வந்து, மீண்டும் கிச்சுகிச்சு மூட்டுகிறார். அவர் வந்தபின்பே, ஓரளவு ரிலாக்ஸாக இருக்கிறது.

ஹீரோயின் யார் என்று கண்டுபிடிப்பது தான் ஹீரோவின் குறிக்கோள். இவ்வாறு குறிக்கோள் அமைக்கும்போது, ஹீரோயின் யார் எனும் உண்மை அதிர்ச்சியூட்டுவதாகவும், ஹீரோவுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டியது அவசியம். ’அவரா?..அவர் ஒரு பொண்ணு’ என்பது போல் உண்மை சப்பென்று இருக்கிறது. அதன்பின் இரண்டாவது குறிக்கோளாக ‘ஹீரோயினின் அக்காவைக் காப்பாற்றுவது’ வருகிறது. அதில் ஹீரோவின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

இண்டர்வெல்வரை இருந்த விறுவிறுப்பை, இரண்டாம்பாதியில் மெயிண்டெய்ன் செய்யத் தவறிவிட்டு, மீண்டும் கிளைமாக்ஸில் விறுவிறுப்பாகி படம் முடிகிறது. இயக்குநர் சரவணனுக்கு இது நல்ல ஆரம்பம். இன்னும் இறங்கி அடிக்க வேண்டும், பாஸ்!

விவந்த்:
அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு இயல்பாக இருக்கிறார். வாரிசு நடிகர்களைவிட நன்றாக நடிக்கிறார். முன்பு ஜெயா டிவியின் வீஜே-யாக இருந்தாராம்.(அதெல்லாம் பெருமையான்னு கேட்டால்…!!) நம்பிக்கை தரும் அறிமுகம். நல்ல எதிர்காலம் இருக்கிறது.
 ஈடன்:
பேய் என்றாலும் கும்மென்று அழகாக இருக்கிறார். சும்மா நாலு பாட்டுக்கு வந்துவிட்டுப் போகும் கேரக்டர் இல்லை. படத்தின் கதையே இவரை மையப்படுத்தித் தான். புதுமுகம் என்றாலும், அந்த கேரக்டரை அசால்ட்டாக செய்திருக்கிறார். நல்ல நடிப்பு. ஹீரோவை ஆரம்பத்தில் மிரட்டுவது, பின் நட்பாவது, பிரியும்போது காதலை உணர்வது என ரசிக்க வைக்கிறார். தமிழன் விரும்பும் அம்சங்களுடன் இருப்பதால், ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
மனீஷா:
இரண்டாவது ஹீரோயின் என்று சொன்னார்கள். சவசவ என்று இருக்கிறார். ஏற்கனவே இடைவேளைக்குப் பின் படம் டல் ஆகிறது, இவர் வேறு ஒரு டூயட் பாடி இம்சிக்கிறார். நல்ல பாடல் அது, ஆனாலும் பார்க்க முடியவில்லை.
ஆதவன்:
படத்தில் இருக்கும் பெரும் ஆறுதல்..பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் ஓவர் சவுண்டில் பேசிக்கொண்டே இருக்கிறார். தனக்கென ஒரு உடல்மொழியை டெவலப் பண்ண வேண்டியது அவசியம். பீட்சா டெலிவரி பாய் போன்ற உடல்மொழி, நகைச்சுவைக்கு உதவாது. இன்னும் கொஞ்சம் நடிங்க பாஸ்!
சொந்தபந்தங்கள்:
ஒய்.ஜி.மகேந்திரன் ’சைண்டிஸ்ட் இலக்கியவாதி’ கெட்டப்பில் நல்ல டாக்டராக வருகிறார். ஒரு தயாரிப்பாளர் ஐ.டி.கம்பெனி பி.எல்லாக வந்து, ஆதவனால் கலாய்க்கப்படுகிறார். இன்னொரு தயாரிப்பாளர் ஒரு சீனில் வில்லனாக வருகிறார். படத்தில் வரும் இன்னொரு முக்கிய கேரக்டர், ஹீரோயினின் அம்மா. யாரோ புதுமுகம் நடித்திருக்கிறார். இரண்டாம்பாதியில் கொஞ்ச நேரம் அம்மா செண்டிமெண்ட் ஓடுகிறது. அவர் புதுமுகம் என்பதால், பெரிய அட்டாச்மெண்ட் வரவில்லை. கதையில் அது ஒரு முக்கியமான கேரக்டர் என்பதால் செலவைப் பார்க்காமல், நல்ல அம்மா நடிகையைப் போட்டிருக்கலாம். 

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
  • ஆதவனை பாதியில் காணாமல் போகச் செய்தது. அவர் இல்லாத இரண்டாம்பாதிக் காட்சிகளில் நகைச்சுவை என்பதே இல்லை.
  • இரண்டாவது ஹீரோயினும், அந்த கேரக்டரும் 
  • முதல்பாதியை வேகமாக, சுவாரஸ்யமாக நகர்த்திவிட்டு, இரண்டாம்பாதியில் வேகத்தை இழந்தது 
  • முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைத்ததால், பெரும்பாலான மக்கள் இந்தப் படத்தை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. முந்தைய பேய்பட ஹிட்டான யாமிருக்க பயமே-வில் ஹீரோ-ஹீரோயின் ஓரளவு தெரிந்தவர்கள், ஓவியா பெரிய அளவில் தெரிந்தவர். எனவே படம் பிக்கப் ஆக, அது உதவியது. இங்கே அது ஒரு குறை தான். 
  • ஹீரோயின் பேச்சைக் கேட்டு ஆபீஸில் வேலை செய்பவர்களை சப்பென்று அடித்ததால், வேலை போய்விட்டதாக ஹீரோ முதல்பாதியில் சொல்கிறார். இரண்டாம்பாதியில் அதே ஆபீஸில் இருந்து அமெரிக்கா அனுப்புவதாக வருகிறது. இடையில் ஒரு சீன், எடிட்டிங்கில் போய்விட்டதா என்று தெரியவில்லை.
  • இரண்டாவது ஹீரோயினுக்கு வரும் டூயட் பாடல்..முடியலை பாஸ்!

பாசிடிவ் பாயிண்ட்கள்:
  •       வித்தியாசமான தீம்
  •    முதல்பாதி முழுக்க வரும் நகைச்சுவையும் சுவாரஸ்யமான காட்சிகளும் 
  •   ஷமீரின் பிண்ணனி இசையும், ‘இது என்ன?’ ‘இருக்கு ஆனா’ பாடல்களும்
  •     பேய் எஃபக்ட்டைக் கூட்டிய ஒளிப்பதிவு
  •     புதுமுகங்கள் என்றாலும், நடிப்பில் பெரிய குறையில்லாமல் இயக்கி இருப்பது
  •       அந்த கிளைமாக்ஸ் சீன்..வில்லன் இறப்பது அட்டகாசம்
  •    ஹி..ஹி..ஹீரோயின்!

  பார்க்கலாமா? :
முதல்பாதிக்காகவும் கிளைமாக்ஸுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.
மேலும் வாசிக்க... "இருக்கு ஆனா இல்லை- திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 29, 2014

LA Confidential (1997)- திரை விமர்சனம்

திரைப்பட ஜெனர்களில் எனக்குப் பிடித்தது ஃபிலிம் நுஆர்(Film Noir)-ம் அதன் நவீன வடிவமான நியோ-நுஆர்(Neo-Noir)-ம் தான். சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பற்றிப் பேசும்படங்கள் என்பதாலும், மற்றபடங்களைவிட இவற்றில் ஒளிப்பதிவு நன்றாக இருக்கும் என்பதாலும் இந்த ஜெனரில் வரும் நல்ல படங்களைத் தவறவிடுவதில்லை. ஆனாலும் எப்படியோ இந்தப் படத்தை கவனிக்காமல் விட்டிருக்கிறேன். சமீபத்தில் நண்பர் ‘மதிமுக ஸ்ரீதரன்’, இந்தப் படத்தைப் பார்க்கும்படி சொன்னார். அவருக்கு ஆயிரம் நன்றிகள்.
வித்தியாசமான மூவி போஸ்டர்
ஹாலிவுட் வீற்றிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கென்று ஒரு கலர்ஃபுல் இமேஜ் நம் மனதில் இருக்கிறது. இந்தப் படம், அங்கே நடக்கும் திரைமறைவு விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. போலீஸ், கோர்ட், மீடியா, ஹாலிவு என எல்லாவற்றிலும் இருக்கும் ஊழலையும் குற்றங்களையும் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைக்கிறது. ஒரு இரண்டாந்தர நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான், இந்தப் படம். ஆனால் திரைக்கதையிலும் மேக்கிங்கிலும் அசத்திவிட்டார்கள்.

கதை கொஞ்சம் சிக்கலானது தான். மூன்று போலீஸ் ஆபீசர்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இரண்டாம்பாதியில் மூன்றுபேருமே ஒரே புள்ளியில் சந்திக்கிறார்கள். அதைக் குழப்பாமல் சொல்லியதில் தெரிகிறது, திரைக்கதை ஆசிரியரின் திறமை.

1. எட்மண்ட் எக்ஸ்லி (Guy Pearce) : புதிதாக வேலைக்குச் சேரும் நேர்மையான ஆபீசர். சட்டப்படியே எல்லாம் நடக்கவேண்டும் எனும் கொள்கை உடையவர். அவர் தந்தையும் போலீஸ்காரராக இருந்து, அடையாளம் தெரியாத யாரோ ஒரு திருடனால் கொல்லப்பட்டவர். அந்த திருடன் பிடிபடவேயில்லை. அவனுக்கு எக்ஸ்லி வைத்திருக்கும் பெயர் ‘Rollo Tomasi’. 

ஒரு கிறிஸ்துமஸ் இரவில், போலீஸ்காரர்கள் சில கைதிகளை அடித்தே கொல்கிறார்கள். அதை எதிர்த்து சாட்சி சொல்லி, புரமோசன் வாங்குகிறான் எக்ஸ்லி. அதனால் மற்ற போலீஸ்காரர்களை பகைத்துக்கொள்கிறான். எக்ஸ்லியைப் பொறுத்தவரை சட்டத்தை தன் கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. இவனது சாட்சியத்தால், Stensland எனும் ஒரு ஆபீசர் வேலையை இழக்கிறான். கொஞ்சநாள் கழித்து, ஒரு ரெஸ்டாரண்டில்(Nite Owl) நடக்கும் கூட்டுக்கொலையில் Stensland கொல்லப்படுகிறான். அந்த கேசை விசாரிக்கும் பொறுப்பும் எக்ஸ்லிக்கே வருகிறது.
2. பட் ஒயிட் (Russell Crowe): நேர்மையான, அதே நேரத்தில் ப்ராக்டிகலான போலீஸ் ஆபீசர். கோர்ட், கேஸ் என்று இழுத்தடிக்காமல் குற்றவாளிகளை ‘டுமீல்’ ஆக்குவது நல்லது என்று நினைப்பவன். பெண்கள் மீதான வன்முறை என்றால், காண்டாகிவிடுபவன். வேலையை இழந்த Stensland-ல் நண்பன். எனவே எக்ஸ்லியை வெறுப்பவன். தொடர்ந்து நண்பன் கொலை செய்யப்பட, அந்த கேஸை அவனே துப்பறிய ஆரம்பிக்கிறான். (இந்தப் படத்தில் நடிக்கும்போது ரஸ்ஸல் சாதாரண நடிகர். படம் வெளியானதும் பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். அசத்தலான நடிப்பு.)

3. ஜாக் வின்சென்ஸ் (Kevin Spacey): லஞ்சம் வாங்காமல் பொழைக்க முடியாது என்று லட்சியவாதத்தை எல்லாம் தூக்கி கடாசிவிட்டு வாழும் சராசரி போலீஸ்காரன். ஒரு கேஸை சால்வ் செய்தால், டிடெக்டிவாக புரமோட் ஆகலாம் என்று உழைத்துக்கொண்டிருப்பவன். ஆனாலும் மெயின் வேலை, போலீஸ்காரர்கள் பற்றி எடுக்கப்படும் ஒரு டிவி சீரியலுக்கு டெக்னிகல் அட்வைஸாராக இருப்பதும், Hush-Hush எனும் பத்திரிக்கைக்கு பரபரப்பான கவர் ஸ்டோரியை ‘உருவாக்கி’ கொடுப்பதும் தான். எக்ஸ்லி Stensland கேஸ்க்கு உதவ, ஜாக்கையும் கூப்பிடுகிறான்.

இப்படி மூன்று பேரையுமே இணைக்கும் விஷயமாக Stensland கொல்லப்பட்ட நைட் ஔல் கேஸ் இருக்கிறது. அந்த கேஸை விசாரிக்க இறங்கும்போது, மூன்றுபேரின் வாழ்க்கையுமே புரட்டிப்போடப்படுகிறது. சட்டப்படியே எல்லாவற்றையும் சரி செய்துவிட முடியாது என்று எக்ஸ்லி உணர்கிறான். ஜாக், தன்னைத் திருத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக நைட் ஔல் கேஸை எடுத்துக்கொண்டு, அந்த நேர்மைக்காக உயிரையும் விடத் துணிகிறான்.

படம் பார்க்கும் நமக்கு, யார் ஹீரோ என்பதில் தான் ஆரம்பத்தில் தடுமாற்றம் வருகிறது. ஜாக் நிச்சயம் ஹீரோ அல்ல, யதார்த்தத்திற்கு பலியாகிவிட்ட சாமானியன். எக்ஸ்லியின் நேர்மை அவனை ஹீரோவாக காட்டினாலும், பெர்சனலாக அவனுடன் நாம் அதிகம் ஒன்ற முடிவதில்லை. பிரக்டிகலான ஆளாக வரும் பட் ஒயிட் தான் நம்மை அதிகம் கவர்கிறான். சிறுவயதில் அவனுக்கு நிகழ்ந்த சம்பவங்கள், பிராஸ்டிடியூட்(ஹீரோயின்) உடன் அவனுக்கு ஏற்படும் காதல், நண்பனின் கொலைக்கு பழி வாங்க அலையும் ஆவேசம் ஆகியவை அவனையே ஹீரோவாக முன்னிறுத்துகின்றன. எக்ஸ்லி, பட் ஒயிட்டின் எதிர் பிம்பமாக வருகிறான். இரு எதிர் துருவங்களும் கதை நகரும்போது, எப்படி இணைகிறார்கள் என்று காட்டப்படுவதால், நம்மால் பட் ஒயிட்டை ஹீரோவாக எடுத்துக்கொள்ள முடிகிறது.

மீடியாவில் வரும் செய்திகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதை படம் முழுக்க போட்டு உடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். வில்லனைக் கூட மக்கள் மத்தியில் தியாகிகளாக மீடியாக்கள் ஆக்க வேண்டிய அவசியம், குற்றங்களை மீடியாவும் போலீஸுமே சேர்ந்து உருவாக்கிவிட்டு அதைச் செய்தியாக்குவது என பல அண்டர்வேர்ல்டு விஷயங்களை வெட்டவெளிச்சமாக்குகிறது படம்.

ஃபிலிம் நுஆரில் வரும் தவிர்க்க முடியாத விஷயங்களில் ஒன்று, femme fatale. அதாவது ஒரு பெண்(ஹீரோயின்) ஹீரோவுடம் பழகுவதும், பின்னர் ஹீரோவை ஏமாற்றுவது அல்லது பெரும் ஆபத்தில் மாட்டிவிடுவது. தமிழில் femme fatale கேரக்டரின் உச்சம், சுப்ரமணியபுரம் சுவாதி. பழைய படங்களில் ‘எல்லாமே நடிப்பா?’ என்று கேட்கப்பட்ட ‘புதிய பறவை’ சரோஜா தேவி ஞாபகம் வருகிறது. இந்தப் படத்திலும் femme fatale கேரக்டர் வருகிறது.
ஹாலிவுட் ஸ்டார் போன்றே ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட ப்ராஸ்டிடியூட்களில் ஒருவராக, லின் ப்ராக்கென் (Kim Basinger) கேரக்டர் வருகிறது. நண்பனுடன் கொல்லப்பட்டவள், ஹீரோயினின் தோழி என்பதால் பட் ஒயிட் இவளிடம் வந்து சேர்கிறான். பார்த்தவுடனே, காதலில் விழுகிறான். ஆனாலும் இந்த femme fatale கேரக்டர், ஹீரோவை ஏமாற்றுவதில்லை. ஏமாற்றப் போகிறாள் என்று நாம் நம்பும்போது, சர்ப்ரைஸாக லின் நல்லவளாக ஆகிறாள்.

மேலும், ஃபிலிம் நுஆரில் சந்தோசமான முடிவு என்பதும் அபூர்வம். இந்தப் படம், சுபமாக முடிகிறது. வில்லனை எக்ஸ்லி கொல்ல மாட்டான் என்று நம்மை நினைக்கவைத்து, கடைசி நிமிடத்தில் மனம் மாறி வில்லன் கொல்லப்படும்போது நமக்கு கை தட்டத் தோன்றுகிறது.

முதலில் எக்ஸ்லி கேரக்டரை நாம் புரிந்துகொள்ளப் பயன்படும் ‘Rollo Tomasi’வார்த்தை, இறுதியில் வில்லன் பிடிபடக் காரணம் ஆவது சுவாரஸ்யம்.  ‘நீ எதற்காக போலீஸில் சேர்ந்தாய்?’ என்ற கேள்விக்கு லஞ்சப் போலீஸ் ஆகிவிட்ட ஜாக், ஒருநிமிடம் கண் கலங்கி ‘ஞாபகம் இல்லை’ என்று சொல்லும் சீன், ஒரு விஷுவல் இலக்கியம். பல லட்சியங்களுடன் வேலையில் சேர்ந்த ஒருவன், மனசாட்சியை அடகு வைத்து எப்படி சராசரி போலீஸாக ஆகிவிட்டான் என்பதை பல காட்சிகள் மூலம் சொல்லாமல், அந்த ஒரு சின்ன ஷாட்டிலேயே முடித்திருப்பார்கள்.

நேர்மையான, புனிதமான விஷயங்கள் என்று நாம் நம்புவதையெல்லாம் கலைத்துப் போடுவதும், ஏமாற்றமும் விரக்தியுமே சகமனிதர்களால் நமக்கு அதிகம் கிடைக்கின்றன என்று உணர்த்துவதுமே ஃபிலிம் நுஆரின் அடிப்படைக் குறிக்கோள். ஊழல், கொலை, செக்ஸ், femme fatale, ஏமாற்றுதல், வாய்ஸ் ஓவர் போன்ற எல்லா ஃபிலிம் நுஆரின் கூறுகளையும் ஒரே படத்தில் கொண்டுவந்திருப்பது தான் -ன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். அதுவே நம்மை ‘என்னா படம்டா’ என்று அசர வைக்கிறது.

மேலும் வாசிக்க... "LA Confidential (1997)- திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, July 23, 2014

Casablanca-ம் நெஞ்சில் ஓர் ஆலயமும்

இன்ஸ்பிரேசனும் காப்பியும் :

ஆங்கிலத்தில் வந்த சிறந்த படங்கள் என்று ஒரு லிஸ்ட் போடும்போது, இந்த மூன்று படங்கள் தவறாமல் இடம்பிடிக்கும் : தலைவர்  ஹிட்ச்காக்கின் Vertogo(1958), Citizen Cane(1941), Casablanca(1942).

Casablanca ஒரு சிறந்த காதல் கதை என கொண்டாடப்படுகிறது. பல திரைக்கதை புத்தகங்களிலும் சினிமா இணைய தளங்களிலும் இந்தப் பெயர் வந்துகொண்டே இருக்கும். முதல் இரு படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டாலும், Casablanca பார்க்க இன்று தான் நேரம் கிடைத்தது. உண்மையில் அசத்தலான கதை தான்.
இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மானியப் பிடியில் இருந்த ஐரோப்பிய நகரம், Casablanca. பெரும்பாலும் பணக்கார அகதிகளால் நிரம்பிய ஊர். எனவே விசா மற்றும் திருட்டு விசா விற்பனை கனஜோராக நடக்கும் இடம். அங்கே நைட் கிளப் நடத்திவரும் ஹீரோ கையில் இரண்டு விசாவுக்கான பேப்பர் கிடைக்கிறது. யார் பெயரை வேண்டுமானாலும் அதில் எழுதி, இருவர் பயணிக்கலாம். ஜெர்மனிக்கு எதிரான போராளிக்குழுவினருக்குச் சொந்தமானது அந்த விசா. அந்த குழுவின் தலைவன் அல்லது முக்கியப்புள்ளி தப்பிப்பதற்கு உதவும் டாகுமெண்ட், அந்த விசா. ஹீரோ யாருக்கும் இரக்கம் காட்டாத, ரஃபான ஆள். அந்த விசாவைத் தேடி, அந்த தலைவன் தன் மனவியுடன் அந்த க்ளப்பிற்கு வருகிறான். அந்த மனைவி தான் ஹீரோயின், ஹீரோவின் முன்னாள் காதலி.

 ‘வருவாள் என நான் தனிமையில் இருந்தேன்..வந்தது வந்தாள், துணையுடன் வந்தாள்’ என ஹீரோ கலங்கிப் போகிறார். இறுதியில் கணவனின் உயிரைக் காப்பாற்ற ஹீரோ உதவினாரா? விசாவுடன் இறுதியில் பயணிப்பது கணவன் - மனைவியா? அல்லது காதலன் - காதலியா? எனும் சஸ்பென்ஸை மையப்படுத்தியே படம் நகர்கிறது.

தமிழில் சிறந்த படங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டால், ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம்(1962) படம் கண்டிப்பாக இடம்பெறும். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியடைந்த படம். ஹீரோ ஒரு டாக்டர். அங்கே ஒரு பேசண்ட் தன் மனைவியுடன் வருகிறார். மனைவி தான் ஹீரோயின், டாக்டரின் முன்னாள் காதலி. காதலா? தொழில் தர்மமா? எனும் கேள்வியை மையப்படுத்தி படம் நகர்ந்தது. 

Casablanca மற்றும் நெஞ்சில் ஓர் ஆலயம் படங்களின் கதைக்கரு ஒன்று தான், அதாவது, கணவனின் உயிர் காதலனின் கையில். Casablanca படத்தில் இன்ஸ்பையர் ஆகித்தான் ஸ்ரீதர், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை எடுத்தாரா என்று தகவல் இல்லை. இருப்பினும்...
டிவிடியைப் பார்த்து அப்படியே சுட்டு மானத்தை வாங்கும் மகான்கள், இன்ஸ்பிரேசன் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள இந்த இரு படங்களையும் பார்க்கலாம். கேரக்டர், சூழ்நிலை, காட்சிகள் என எல்லாமே தமிழில் புதியவையாக இருக்கின்றன. ஒரே ஒற்றுமை, உணர்ச்சி. மிகப்பெரிய வேற்றுமை, Casablanca-ல் ஹீரோயின் ஹீரோவுடன் இருக்கவே விரும்புகிறாள். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நம் கலாச்சாரப்படி, ஹீரோயின் கணவனுக்கு உண்மையாக இருக்கிறாள்.

காப்பி - இன்ஸ்பிரேசனுக்கு நான் ஒரு வேடிக்கையான டெஃபனிசன் கொடுப்பதுண்டு : நமக்குப் பிடிச்சவன் சுட்டா, இன்ஸ்பிரேசன்; பிடிக்காதவன் சுட்டா காப்பி. இந்த இரு படங்களைப் பார்த்ததும், எனக்குத் தோன்றியது : இரண்டாவதாக வந்த படத்தைப் பார்த்ததும் கடுப்பானால், அது காப்பி. என்ன ஒரு புத்திசாலித்தனம் என்று இம்ப்ரஸ் ஆனால், அது இன்ஸ்பிரேசன்!
மேலும் வாசிக்க... "Casablanca-ம் நெஞ்சில் ஓர் ஆலயமும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 22, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-17)

17.கதையை ஓவர் டோஸ் ஆக்காதீர்கள்
கதை எழுத மேட்டர் கிடைக்காமல் திண்டாடுபவர்கள் ஒரு பக்கம் என்றால், புதிதாக எழுதத் தொடங்கும் பலருக்கு ஐடியாக்கள் ஓவராகப் பொங்கும் அதிசயமும் நடப்பதுண்டு. நீங்களும் அந்த மாதிரி ஒரு ஐடியாமணியா என்று சரிபார்த்துக்கொள்ள, இந்த ஓவர் டோஸ் பிரச்சினையை உதாரணங்களுடன் பார்ப்போம். 
இயக்குநர் சசிக்குமார் நடிப்பில் வந்த படம், பிரம்மன். சாக்ரடீஸ் எனும் அறிமுக இயக்குநரின் திரைக்கதையில் உருவான படம். அதன் கதை இப்படி வரும்:

சினிமாத் தியேட்டர் மேல் மிகுந்த பிரியம் வைத்திருக்கும் ஹீரோ, அதை லீசுக்கு எடுத்து நஷ்டத்துடன் ஓட்டிக்கொண்டிருக்கிறான். சொந்தங்கள் எல்லாரும் வேண்டாம் என்று சொல்லியும், தியேட்டரைக் காக்க போராடிக்கொண்டிருக்கிறான் ஹீரோ.

ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் (பின்னே, பாட்டி மேலயா?) காதல் வருகிறது. தியேட்டர் வருமானம் குடும்பம் நடத்த போதாது என்பதால், தியேட்டரை விட்டுவிடும்படி ஹீரோயின் வீட்டார் சொல்கிறார்கள். காதலா? தியேட்டரா? (இதுவே போதுமானது. ஆனால்…)

தனது பால்ய சிநேகிதன் சினிமாத்துறையில் இருப்பதை அறிந்து, தியேட்டரை மீட்க அவன் நட்பை நாடிச் செல்கிறான். அங்கே ஹீரோவுக்கே இயக்குநர் ஆகும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன்மூலம் தியேட்டரை மீட்கலாம் என்று நினைக்கும்போது, நண்பனுக்காக அந்த இயக்குநர் வாய்ப்பை விட்டுவிடும் சூழ்நிலை வருகிறது. நட்பா? தியேட்டரா?

அந்த நண்பனுக்கு பெண் பார்க்கிறார்கள். அட, அது நம்ம ஹீரோயின். ஹீரோவுக்கு இது தெரிய வர….நட்பா? காதலா?

தியேட்டருக்காக காதலியை விடவா? அல்லது நட்புக்காக தியேட்டரை விடவா? அல்லது காதலிக்காக நட்பை விடவா? அல்லது நட்புக்காக தியேட்டரை விடவா? அல்லது தியேட்டர், காதல் இரண்டையும் விட்டுடலாமா? அல்லது தியேட்டர், காதல், நட்பு மூன்றையும் விட்டுவிடலாமா? சினிமா வாய்ப்பையும் விட்டுட்டமே!..........ரிசல்ட் என்னன்னா, ஆளை விடுடா சாமீ தான்!

சினிமாவிலும் ஜெயித்துவிட்டார், அரசியலில்கூட இறங்கிவிட்டார், சிஎம் போஸ்ட் வேற வெயிட்டிங்..பதவியா, நட்பா, காதலா என்றெல்லாம் கதை போய்விடுமோ என்று தியேட்டரில் பதறித்துடித்தோம். நல்லவேளையாக இரண்டரை மணி நேரத்தில் ஆபரேட்டர், புரஜக்டரை ஆஃப் செய்துவிட்டார்.
ஒரு தியேட்டருக்கும் ஹீரோவுக்குமான நெருக்கம், இந்தப் படத்தில் அற்புதமாக சொல்லப்பட்டிருக்கும். இதன் இயக்குநர் சாக்ரடீஸ் திறமையானவர் என்பதற்கு அந்தப் பகுதி நல்ல உதாரணம். ஆனால் ஐடியாக்கள் இருக்கிறது என்பதற்காக, எல்லாவற்றையும் ஒரே படத்தில் கொட்டியது தான் தவறு.

காதலா, தியேட்டரா எனும் தளத்திலேயே படத்தின் கதையை முடித்திருக்கலாம். அதைச் செய்யாதது பெரும் தவறாகப் போனது.அதே போன்ற இன்னொரு உதாரணம், மாற்றான் திரைப்படம். 
குழந்தைகளுக்கான பால் பவுடரில் ஆபத்தான விஷயங்களை கலந்து விற்பனை செய்கிறார் ஹீரோவின் தந்தை. ஹீரோ எப்படி அதை தடுக்கிறான் என்பதே படத்தின் ஒன்லைன். ஹீரோ-குறிக்கோள்-வில்லன் என மூன்றும் இணைந்த சிம்பிளான ஒன்லைன் தான் இது. ஆனால் அதை கதையாக டெவலப் செய்த விதம் தான் நம்மை திக்குமுக்காடச் செய்தது.
ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தான் ஹீரோ. அவர்களில் ஒருவனுக்குக் காதல் அது இருவருக்கும் இடையே தரும் பிரிவு எனும் பாசமா, காதலா கதையுடன் படம் ஆரம்பிக்கிறது.

ஒரு ஃபாரின் லேடி சூர்யாவிடம் பழகி துப்பறிகிறாள். அதன்மூலம், சூர்யாவின் அப்பா, விளையாட்டு வீரர்களுக்கு சோதனையில் கண்டுபிடிக்க முடியாத ஊக்கமருந்து கண்டுபிடித்து, பெரிய ஆள் ஆனதை கண்டுபிடிக்கிறார்.

இரட்டையரில் ஒருவன் இறந்துபோக, அதற்குக் காரணானவர்களை பழி வாங்க புறப்படுகிறார் இன்னொரு சூர்யா. அதுசம்பந்தமாக ஃபாரின் எல்லாம் சென்று(!) ஆராயும்போது, பால்பவுடரில் அப்பா சில ரசாயனங்களைக் கலப்பது தெரியவருகிறது.

அங்கேயிருந்து அடுத்து குஜராத்தில் லேண்ட் ஆகிறார் ஹீரோ. அதை வைத்து கொஞ்ச நேரம்.

அடுத்து, ஹீரோ பத்துப்பேரின் விந்தணுவை மிக்ஸ் செய்து பிறந்தவன் எனும் மரபணு ஆராய்ச்சிக்கதை.

தான் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டேன் எனும் ஹீரோவின் அப்பா கதை.

எழுத்தாளர்கள் சுபா மிகத்திறமையானவர்கள் தான். அதற்காக அந்த திறமையை எல்லாம் ஒரே படத்தில் கொட்டினால், இத்தனை விஷயங்களை இரண்டரை மணி நேரத்துக்குள் யார் ஜீரணிப்பது?

எனவே ஒரே கதையில் பல ஐடியாக்களைக் கொட்டி, ஓவர்டோஸ் ஆக்குகிறோமா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள். சில நேரங்களில் நாம் எடுத்துக்கொண்ட கதையே, பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அதற்கு உதாரணங்கள், பருத்தி வீரனும் மங்காத்தாவும்.

பருத்திவீரன் கதை இரண்டு தலைமுறையாக நடப்பது. பருத்திவீரனின் அப்பா வேறு ஜாதியில் கல்யாணம் முடித்ததால், ஹீரோ-ஹீரோயின் குடும்பங்கள் பகையானது ஒரு முன் கதை.

ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே அறியாத வயசில் புரியாத மனசில் வந்த காதல் இன்னொரு முன்கதை.

நிகழ்காலத்தில் பருத்திவீரனுக்கும் முத்தழகுக்குமான காதலும் முடிவும் தான் முக்கியக்கதை. ஆனால் அதில் உள்ள பிரச்சினையை விளக்க முதல் முன்கதையும், காதலை விளக்க இரண்டாவது முன்கதையும் தேவைப்பட்டது. அதை ஒன்றாகச் சொல்லாமல் பிரித்து, இரு ஃப்ளாஷ்பேக்கில் சொல்லி இருப்பார் அமீர். இரு தலைமுறைக்கதை என்றாலும், அது பருத்திவீரன் – முத்தழகுக்கு இடையேயான காதலை மையம் கொண்டே இருக்கும். மேலே பார்த்த உதாரணங்களில் அப்படியான மையப்புள்ளி, மிஸ்ஸிங். 

அதே போன்றே வெங்கட் பிரபு எழுதிய மங்காத்தா கதையில் அஜித் டிஸ்மிஸ் ஆவது, ஜெயப்ரகாஷுடன் நட்பாவது, த்ரிஷாவுடன் காதலாவது, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் ஒரு கும்பலின் கதைகள் என கொஞ்சநேரத்துக்கு எங்கெங்கோ படம் அலைபாய்வது போல் இருக்கும். அது எல்லாமே சூதாட்டப் பணம் எனும் ஒரு விஷயத்தை சுற்றி நடப்பது விளக்கப்பட்டவுடன், கதை நமக்கு தெளிவாகிவிடுகிறது.

எனவே ஓவர்டோஸ் ஆகக்கூடாது என்பதன் அர்த்தம், பல விஷயங்கள் கொண்ட ஒரு கதையை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதல்ல. அதை ஒரு மையப்புள்ளியில் குழப்பமில்லாமல் இணைக்க முடியுமா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு மேலே சொன்ன உதாரணப் படங்கள் உதவும்.


(தொடரும்)

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-17)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, July 21, 2014

ரத்தக்கண்ணீர் (1954) : சினிமா அலசல்


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.-

என்று பாட்டன் வள்ளுவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டான். இன்னும் பல கதைகளும் காவியங்களும் அடக்கம் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் மனிதனுக்கு அது உறைப்பதில்லை. கொஞ்சம் காசு, பணம் சேர்ந்ததும் ‘தான் செய்வதெல்லாம் சரியே..என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்’ என்று ஆடித் தீர்த்து அழிந்து போகிறான். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் கதையே ரத்தக்கண்ணீர்
அந்தக் காலத்திலேயே வெளிநாட்டில் சென்று படிக்கும் வசதியுள்ள லட்சாதிபதி மோகன். வெளிநாட்டு நாகரீகமே உயர்ந்தது, வாழ்க்கையை எஞ்சாய் பண்ணும் அவர்களின் வாழ்க்கை முறையே சரியானது எனும் மனநிலைக்கு வருகிறான் மோகன். இந்தியா திரும்பியபின்னும் அதே எண்ணத்துடன் வாழ்கிறான். கலைக்கூடம் என்ற பெயரில் பெண்களுடன் கூத்தடிக்க காமக்கூடத்தைக் கட்டி, காந்தா எனும் நாட்டியக்காரியுடன் வாழ்க்கையைக் கொண்டாடுகிறான். அம்மாவின் வற்புறுத்தலால் திருமணமும் ஆகிறது. கட்டறுந்து காமத்தைக் கொண்டாடியவனுக்கு கட்டுப்பெட்டியான மனைவியைப் பிடிப்பதில்லை. 

மோகனின் நண்பன் பாலுவின் அறிவுரைகளையும் அவன் மதிப்பதில்லை. மோகனின் போக்கால் மனம் உடைந்த அவன் தாயும் இறந்துவிட, காந்தாவின் வீட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறான் மோகன். அதன்பின் சொத்துக்கள் ஒவ்வொன்றாகப் பறிபோக, குஷ்டரோக நோய் கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டே போகிறது. காந்தா அவனை வீட்டை விட்டு விரட்டி விடுகிறாள். ஆளே உருமாறி தெருவில் பிச்சைக்காரனாய் அலையும் மோகன், இறுதியில் நண்பன் பாலுவை தன் மனைவியுடன் சேர்த்து வைத்துவிட்டு இறக்கிறான்.

ஒரு ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட்டை எப்படி சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும் என்பதற்கு உதாரணம், இந்தப் படம். ஏற்கனவே நாடகமாக வெற்றிபெற்ற கதை தான் இது. அதையே படமாக எடுத்து, மாபெரும் வெற்றி பெற்றார்கள். அதற்கு எம்.ஆர்.ராதா அவர்களின் நகைச்சுவை உணர்வே முக்கியக் காரணம். தொழிலாளர் கூட்டம் என்றாலும், அம்மா இறக்கும் சீன் என்றாலும், பிச்சையெடுக்கும் சீன் என்றாலும் அவரின் வசனங்களில் ஓடும் எள்ளல்தான், படத்தை ரசிக்க வைக்கிறது. ஒரு சோகமான அழுகாச்சி படமாக ஆகியிருக்க வேண்டிய கதை. எம்.ஆர்.ராதாவின் நடிப்பால், இன்றளவும் போற்றப்படும் படமாக ஆகிவிட்டது. ஃபாரின் ரிட்டர்னாக ஆரம்பத்தில் தோன்றுவதற்கும், இறுதிக்காட்சியில் அவர் தோன்றுவதற்கும் இடையே பாடி லாங்குவேஜில் எவ்வளவு மாற்றம். நோய் கூடிக்கொண்டே போவதை, ஒவ்வொரு சீனிலும் தன் உடல்மொழியால் அற்புதமாகக் காட்டியிருப்பார். எஸ்.எஸ்.ஆர் உடன் வாக்குவாதம் செய்தபடியே சொறிவது ஒரு உதாரணம்.
காந்தாவாக வரும் எம்.என்.ராஜம், ஒரு தாசியை அப்படியே கண் முன் கொண்டுவருகிறார். ஆரம்பத்தில் மோகன் மேல் பிரியமாக இருப்பதும், அவருக்கு நோய் வந்தாலும் விட்டுவிடாமல் போராடுவதும், பின்னர் மனித இயல்புப்படி கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி எம்.ஆர்.ராதாவை விரட்டி விடுவதும் நுணுக்கமான சித்தரிப்பு. பொதுவாக இம்மாதிரிக் கதைகளில் அந்த கேரக்டரை கெட்டவள் என்று மட்டுமே காட்டுவார்கள். ஆனால் இங்கே மனதின் மாற்றம் படிப்படியாக விவரிக்கப்படுகிறது. இது அந்தக் காலத்துப் படங்களில் (இக்காலத்திலும்!) ஒரு அரிய விஷயம். ஏறக்குறைய சிலப்பதிகார மாதவி கேரக்டராக ஆரம்பித்து, சராசரி பெண்ணாக அவர் வாழ்க்கை முடிகிறது.

நடிகர் திலகத்திற்கு அடுத்தபடியாக, தமிழை இனிமையாகப் பேசுவதில் வல்லவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இதிலும் ஒரு நியாயமான மனிதனாக,  எம்.ஆர். ராதாவை திருத்த முயலும் நண்பனாக அருமையாக நடித்திருப்பார். எம்.ஆர்.ராதாவின் மனைவியாக வரும் ஸ்ரீரஞ்சனிக்கு இயல்பிலேயே அப்பாவியான முகம் என்பதால், அந்த கேரக்டர்க்கு சரியாக செட் ஆகிறார்.

படத்திற்கு கதை-வசனம் எழுதிய திருவாரூர் தங்கராசு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். லட்சாதிபதியான ஒருவன், தன் தவறான நடத்தையால் எப்படி தெருவுக்கு வருகிறான் என்று காட்ட, தெளிவாக காட்சிகளை நகர்த்தியிருப்பார். எம்.ஆர்.ராதா பேசும் ஒவ்வொரு வசனங்களும் சிரிக்க வைப்பவை. ’கல்யாணம் எதுக்கு பண்றதுன்னே இந்தியால இன்னும் சரியாத் தெரியாது-தொழிலாளர் கட்சி, முதலாளி கட்சி, சாமியார் கட்சி இதே வேலை. இந்தியால க்ரோர்ஸ் கணக்கா வச்சுட்டு இருக்கான் கட்சிய! எல்லா கட்சியும் பிசினெஸ்ல பூந்துட்டான்… பெக்கர்ஸ்…. வேற ஒண்ணுக்கும் லாயக்கில்ல…  - திங்கிறதுக்குக்கூட கட்சியாடா,எப்பா!-சந்திரனையும் குருவையும் நாளைக்கு வரச்சொல்லு’ என்று படம் முழுக்க பட்டாசாக வெடிக்கின்றன ஒவ்வொரு வசனங்களும். படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும், அந்த வசனங்கள் இன்னும் ஃப்ரெஷாக இருக்கின்றன, இன்றைய சூழலுக்கும் பொருந்திப்போகின்றன.

சிலப்பதிகாரம் சொல்லும் செய்தியும் இந்தப் படத்தின் செய்தியும் ஒன்று தான்.வித்தியாசம், கேரக்டர்களின் குணாதிசயம். கண்ணகி அடக்கமானவள் என்றாலும் போராளி. இங்கே மனைவி கேரக்டர் ஒரு அப்பாவி மட்டுமே. கோவலன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மதிமயக்கத்தில் வீழ்ந்தவன். இங்கே மோகன் இயல்பிலேயே கெட்டவன், விரும்பி சகதியில் இறங்குபவன். மாதவி தாசிகுலத்தில் பிறந்தாலும், வேறு ஒருவனை ஏறெடுத்துப்பார்க்காதவள். இங்கே காந்தா சினிமா வாய்ப்பு வந்தவுடன், மனம் மாறிவிடுகிறாள். நேரெதிரான கேரக்டர்கள் சிலப்பதிகாரச் சூழ்நிலையில் உலா வருகின்றன.

பொதுவாக அந்தக் காலத்துப் பாடல்களை நாம் ரசிப்பது கஷ்டம். ஆனால் இந்தப் படத்தில் சிதம்பரம் ஜெயராமனின் இசையில் பெரும்பாலான பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ‘ஆளை ஆளைப் பார்க்கிறான், காசு இல்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி’ போன்ற பாடல்கள் அருமை. குறிப்பாக ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் என்றுமே நிம்மதி கொள்வதேது?’ எனும் பாடல்வரிகள் ஒரு பழமொழி போன்றே தமிழர் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டன. அந்தப் பாடலில் சிதம்பரம் ஜெயராமனின் குரலும் எம்.ஆர்.ராதாவின் வசனங்களும் இணைந்து, ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

நல்ல குடும்ப வாழ்க்கை வாழும் சிலர்கூட,  சபலத்தால் இன்னொரு பெண்ணிடம் சிக்கும்போது ஒட்டுமொத்த வாழ்க்கையே நாசமாவதை நாம் இப்போதும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு. அதையறியாமல் முறையில்லாக் காமத்தில் இறங்கும் மனிதர்கள் கொடுக்கும் விலை, பணம் மட்டுமல்ல குடும்ப சந்தோசமும் தான். காந்தா மாதிரிப் பெண்களின் தொடர்பு உடும்புப் பிடி போன்றது. அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, அவர்கள் மட்டுமே தனக்கு நல்லது செய்வதாகவும் மனைவி-மக்கள் எல்லாம் தனக்கு எதிராளிகள் என்றும்கூட சிலருக்கு தோன்றிவிடுவதைப் பார்க்கிறோம். அதனால் தான் பெரும் ஞானிகள்கூட காமம் என்றால் பதறி ஓடுகிறார்கள்.

சிலப்பதிகாரக் கண்ணகி முதல் தற்கால அபலைகள்வரை இதே அவலத்தை சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். காவியமாகவும், கதையாகவும் படமாகவும் புலனடக்கம் பற்றிப் பேசப்பட்டு வந்தாலும், மோகன் போன்ற ஆட்கள் காமத்தின் பின்னே சென்று தானும் அழிந்து, குடும்பத்தின் நிம்மதியையும் சீரழிக்கிறார்கள். அதை இந்தப் படம் நகைச்சுவை முலாம் பூசிச் சொல்கிறது.

படம் சொல்லும் செய்தி, படத்தின் வசனங்கள், எம்.ஆர்.ராதாவின் நடிப்பு என எல்லாமே காலத்தைக் கடந்து நிற்கும் விஷயங்கள் என்பதால், தமிழில் வந்த முக்கியமான படங்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது ரத்தக்கண்ணீர்.

மேலும் வாசிக்க... "ரத்தக்கண்ணீர் (1954) : சினிமா அலசல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, July 20, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-16)


16. ஃப்ளாஷ்பேக் எனும் ஆயுதம்
கதை என்றால் என்ன என்று ஆய்வு நோக்கில் அணுகினால், அது சில தகவல்களின் தொகுப்பு தான் என்பது புலப்படும். உதாரணமாக, ஒரு கதையை உடைத்தால் இப்படி வரும்:
ஒரு ஊரில் ஒருவன் அமைதியாக வாழ்ந்து வந்தான்.
அவனுக்கு திடீரென இப்படி நடந்தது. அதனால் அவன் கோபம் கொண்டான்.
அதற்குக் காரணமானவர்களை பழி வாங்க ஆரம்பித்தான்.
பழிவாங்கிவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினான் அல்லது ஜெயிலுக்குப் போனான்.

நீங்கள் உருவாக்கியிருக்கும் கதையும் இப்படிப்பட்ட தகவல்களின் தொகுப்பாகவே இருக்கும். திரைக்கதை என்பது அந்த தகவல்களை எந்த ஆர்டரில், எப்படி சுவார்ஸ்யமாகச் சொல்கிறோம் என்பது தான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் ஒரு விளையாட்டு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மேலே சொன்ன மூலக்கதையைக் கொண்டிருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் அவை. அந்த படங்களின் சாயலில் எத்தனையோ படங்கள் அதன்பின் தமிழில் வந்தன. வெற்றிகரமான திரைக்கதை ஃபார்மேட்டாக 1980களில் அது விளங்கியது.

பின்னர் 1990களில் எஸ்.ஏ.சந்திரசேகரின் சிஷ்யர் ஷங்கர், அதே மூலக்கதையுடன் திரும்பி வந்தார். கதையில் ஒரு சின்ன மாற்றத்தைச் செய்தார். ஷங்கரின் ஹீரோக்கள், ‘காரணமானவர்களை’ மட்டும் பழிவாங்குவதில்லை. அந்த காரணத்தையே அழிக்க முயல்பவர்கள். காலேஜில் சீட் கொடுக்காத வில்லனை ஜெண்டில்மேன் அழிப்பதில்லை. இடஒதுக்கீட்டை அழிக்க முற்படுகிறான். லஞ்சம் வாங்கிய அதிகாரியை மட்டும் இந்தியன் அழிப்பதில்லை, லஞ்சத்தையே அழிக்க போராடுகிறான். வெறுமனே ‘பழிக்குப் பழி’ கதையாக இருந்ததை, இந்த மாற்றங்களின்மூலம் ‘சமூக மாற்றம்’ கோரும் கதையாக ஆக்கினார் ஷங்கர்.

அடுத்து திரைக்கதையில் அவர் செய்த துணிச்சலான ஒரு மாற்றம். ஆக்ட்-1/செட்டப் என்று சொல்லப்படும் முன்கதையை, எல்லோரையும் போல் படத்தின் முதலில் வைக்காமல் இடைவேளைக்குப் பின், ஃப்ளாஷ்பேக்காக ஆக்ட்-2 முடியும்போது வைத்தார். படம் ஆரம்பிக்கும்போதே, ஹீரோ பழி வாங்கலில் இறங்கியிருப்பார். போலீஸ் தேட ஆரம்பித்திருக்கும்.
முந்தைய பதிவுகளில் நாம் பார்த்த ஓஷோ, ஹிட்ச்காக் தியரிகளை நினைவில் கொண்டுவாருங்கள். ஷங்கர் செய்த மாற்றம், எவ்வளவு சுவாரஸ்யத்தைக் கூட்டியது என்று புரிகிறதா? ஹீரோவை போலீஸ் பிடிக்குமா எனும் சஸ்பென்ஸ் ஒரு பக்கமும், ஹீரோ ஏன் அப்படிச் செய்கிறான் எனும் சர்ப்ரைஸ் மறுபக்கமும் இணைய, நமக்கு அதுவரை இல்லாத ஒரு புதிய அனுபவத்தை, அந்த திரைக்கதை ஃபார்மேட் நமக்குக் கொடுத்தது. இந்தியன், அந்நியன், ரமணா, சாமுராய், ஆரம்பம் என பல படங்களில் பயன்படுத்தப்பட்ட, இன்றளவும் வெற்றிகரமான திரைக்கதை ஃபார்மேட்டாக ஷங்கர் உருவாக்கிய ’ஜெண்டில்மேன்,திரைக்கதை வடிவம்’ இருக்கிறது. அதனால்தான் அவர் தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக போற்றப்படுகிறார்.

ஜெண்டில்மேன் போன்றே தமிழில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இன்னொரு வெற்றிகரமான திரைக்கதை ஃபார்மேட், பாட்ஷா. ஒரு சாமானியனாக வாழும் ஒரு ஹீரோ(செட்டப்-1)-அவனை துரத்தும் வில்லன்கள்(ஆக்ட்-2)-ஒரு முன்கதை(செட்டப்-2)-முடிவு(ஆக்ட்-3) என்று அமைந்திருக்கும் பாட்ஷா ஃபார்மேட். இரண்டு செட்டப் என்பதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அது ஜெண்டில்மேன் ஃபார்மேட்டுடன் ஒத்திருக்கும். அதாவது ஜெண்டில்மேன் ஃபார்மேட் என்பது, எஸ்.ஏ.சி ஃபார்மேட்டுடன் பாட்ஷா ஃபார்மேட் இணைந்த ஒரு வடிவம் என்று சொல்லலாம்.

ஒரே கதை, எப்படி வெவ்வேறு வடிவம் எடுக்கிறது என்று புரிகிறதல்லவா? (கூடவே இந்த காப்பிக்கூச்சல் ஆட்களை ஏன் கண்டுகொள்ளக்கூடாது என்றும்..!)

சமீபகாலப் படங்களில் ஃப்ளாஷ்பேக் உத்தி இல்லாமலேயே முன்கதையைச் சொன்னபடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இதே கதைக்கருவுடன் முன்பு சிவாஜி நடித்த நீதி படமும் வந்திருக்கிறது. அது நேர்க்கோட்டில் எழுதப்பட்ட திரைக்கதை. அதையே முன்கதை நீக்கிச் சொல்லும்போது, சுவார்ஸ்யமான த்ரில்லர் கிடைத்தது. அந்த முன்கதையை காட்சிகளாகச் சொல்லியிருந்தால், அது ஜெண்டில்மேன் ஃபார்மேட் ஆகியிருக்கும். மிஷ்கின் புதுமையாக, ஒரு கதை சொல்லும் காட்சி மூலம் முன்கதையைச் சொல்லியிருப்பார்.
ஒரு கதையை தகவல்களாகப் பிரித்து, வெவ்வேறு ஆர்டரில் அந்தக் கதையை அடுக்கும்போது, எப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான திரைக்கதையாக உருவெடுக்கிறது என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நேர்க்கோட்டில் கதை சொல்லாமல், ஆர்டரை உடைத்து ஃப்ளாஷ்பேக் உத்தியை பயன்படுத்தும்போது, புதுவகையான அனுபவத்தை நாம் உருவாக்க முடியும். அப்படி ஆர்டர் கலைத்து விளையாட, ஓஷோ மற்றும் ஹிட்ச்காக் தியரி உதவும்.


இத்தகைய புரிதல்கள் இல்லாமல் நேரடியாக ஆக்ட்-1 என்று நுழைந்தால், 1980களில் வந்த திரைக்கதை அளவிற்குக்கூட உங்களால் எழுத முடியாது என்பதாலேயே, நாம் சில அடிப்படை விஷயங்களை இந்ததொடரின் முதல் பாகத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் பார்ப்போம்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-16)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, July 18, 2014

வேலையில்லா பட்டதாரி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
நடிகர் தனுஷின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் அனிருத்தின் அட்டகாசமான பாடல்களுடன் இன்று வெளியாகியிருக்கும் படம், வேலை இல்லாப் பட்டதாரி. படம் எப்பூடின்னு….
ஒரு ஊர்ல..:
எஞ்சினியருக்குப் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் தனுஷிற்கு, ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின் ஒரு வேலை கிடைக்கிறது. அதையும் கெடுக்க ஒரு வில்லன் குறுக்கே வர, தனுஷ் எப்படி வெல்கிறார் என்பதே கதைன்னு வச்சுக்கலாம்!

உரிச்சா....:
வீட்டில் தண்டச்சோறு என திட்டும் அப்பா, எப்போதும் ஆதரவளிக்கும் அம்மா, வேலைக்குப் போய் கார் வாங்கி வெறுப்பேற்றும் தம்பி, அடுத்த வீட்டு ஃபிகர் அமலா பால் என ரகளையான சூழலில் வாழ்கிறார் வி.ஐ.பி. தனுஷ். உண்மையில் இண்டர்வெல்வரை செம ரகளை.

இமேஜ், பஞ்ச் டயலாக் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சாதாரண இளைஞனாக, வீட்டில் இருக்கும் நாய்க்குச் சமமாக நடத்தப்பட்டாலும் அசராத டேக் இட் ஈஸி பார்ட்டியாக பட்டையைக் கிளப்புகிறார் தனுஷ். பட்டாசாக வெடிக்கும் வசனங்களும் சேர்ந்துகொள்ள, இடைவேளைவரை காமெடியில் பின்னிவிட்டார்கள்.
முதல் பத்து நிமிடத்தில் என்ன கதை நடந்ததோ, அதே தான் இடைவேளை வரை. கதை அங்கேயே டெக்ட் அடித்து உட்கார்ந்து கொண்டாலும், அப்பாவிடம் திட்டு வாங்குவது, ஓட்டை மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டே அமலா பாலை ரூட் விடுவது, இருவருக்கும் நடக்கும் ரகளையான முதல் சந்திப்பு என ரசிக்க வைக்கும் காட்சிகள்.

1980களில் வந்த படங்களில் வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றிய புலம்பல்கள் அதிகம் இருக்கும். மாணவர் சக்தி, புரட்சி போன்ற உட்டாலக்கடி விஷயங்களும் படம் முழுக்க தூவப்பட்டிருக்கும். தற்பொழுது டாஸ்மாக் ரேஞ்சிற்கு இஞ்சினியரிங் காலேஜையும் திறந்து, பி.ஈ டிகிரிக்கு உள்ள மதிப்பையே காலி செய்துவிட்டார்கள்.

இடைவேளைக்குப் பின் படம் அந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது. தனுஷின் அம்மா இறந்துவிட, அதன் காரணமாக தனுஷ்க்கு வேலை கிடைக்கிறது. ஒரு கவர்மெண்ட் புராஜக்ட்டுக்கு தலைமை இஞ்சினியராக தனுஷ் போக, அதை வில்லன் குரூப் கெடுக்கப் பார்க்கிறார்கள். அதை தனுஷ் மாணவர் சக்தி(VIPs) மற்றும் மக்கள் சக்தி துணையுடன் எப்படி வெல்கிறார் என்று யூகிக்க முடியும் திருப்பங்களுடன் இரண்டாம்பாதியில் காட்டுகிறார்கள்.

முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பும் குறும்பும் மிஸ்ஸிங் என்பதால், சீக்கிரம் கட்டடத்தை கட்டி முடிங்கப்பா எனும் மனநிலைக்கு நாம் வந்துவிடுவது தான் சிக்கல்!
தனுஷ்:
ரொம்ப நாளைக்கு அப்புறம் பழைய, ரகளையான தனுஷைப் பார்க்க முடிகிறது. திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் செய்த அதே ஜாலியான ‘டோண்ட் கேர்’ கேரக்டர். இரண்டு மூன்று இடங்களில் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு ஸ்லோமோசனில் நடந்தாலும், தனுஷை ரசிக்க முடிகிறது. முதல்பாதியில் எவ்வளவு கேவலத்தையும் தாங்கும் காட்சிகளிலும், இரண்டாம்பாதியில் வில்லனுடன் பேசும் காட்சிகளிலும் கைதட்டல்களை அள்ளுகிறார்.

திருமதி.அமலா பால்:
கடைசிப்படம்(?) என்பதாலோ என்னவோ, டீசண்டாகவே காட்டியிருக்கிறார்கள். தனுஷ் கேரக்டரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக லவ் ஆவது அழகு. தனுஷ்க்குப் பொருத்தமான(!) ஜோடியாகத் தெரிகிறார். டூ லேட் தனுஷ்!

சொந்த பந்தங்கள்:
அப்பாவாக வரும் சமுத்திரக்கனி முதிர்ச்சியான நடிப்பு. ஒரு பாசமிக்க கண்டிப்பான தந்தையை கண்முன் கொண்டுவருகிறார். அம்மாவாக சரண்யா. அவங்க நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இடைவேளைக்குப் பின் விவேக் வந்தாலும், பெரிதாக காமெடி ஏதும் இல்லை. அவரும் இல்லையென்றால், பின்பாதியில் படம் ரொம்ப டல் ஆகியிருக்கும் என்பதும் உண்மை. வில்லனாக அறிமுகமாகியிருக்கும் அமிதாஷ், நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுகிறார். ’இவன் வேற மாதிரி’ஹீரோயின் சுரபி, இதில் சும்மா வந்துபோகிறார். 
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- பெரிய திருப்பங்கள் இல்லாத இரண்டாம்பாதி
- தனுஷ்க்கும் அமலா பால்க்கும் இடையே லவ் வந்தபின், என்ன செய்வது என தெரியாமல் திரைக்கதை டீம் முழித்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பின் சும்மா வந்துபோகிறார்.
- கட்டடம் கட்டுவது தான் குறிக்கோள் என்பது டிராமடிக்காக இல்லை
- அதில் ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வுகளும் குழந்தைகூட யூகித்துவிடும் பாஸ்.
- தனுஷின் கேரக்டரைசேசன் பிரமாதம். ஆனால் அதுமட்டுமே போதும் என்று நம்பியது தான் பலவீனம்!

 பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
 தனுஷ்
செம காமெடியான முதல்பாதியும், வசனங்களும்
- இயக்குநர் வேல்ராஜின் ஒளிப்பதிவு
- அனிருத்தின் இசையில் துள்ளாட்டம் போட வைக்கும் பாடல்கள்

பார்க்கலாமா? :

முதல்பாதிக்காக...பார்க்கலாம்.

மேலும் வாசிக்க... "வேலையில்லா பட்டதாரி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

13 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 15, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-15)

15. பாம் தியரி
டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் விஷயம் ஏற்கனவே இந்த பதிவில் (http://sengovi.blogspot.com/2014/02/blog-post.html) பார்த்தது தான். இருப்பினும் அதை இந்த தொடரில் மீண்டும் சொல்வது அவசியம் என்பதால்..

ஓஷோவின் அறிவுரையை குறித்துக்கொண்டீர்கள் அல்லவா? இப்போது சஸ்பென்ஸ் திரைக்கதை மன்னன் ஹிட்ச்காக் சொன்ன முக்கியமான விஷயத்தைப் பார்ப்போம்.
சஸ்பென்ஸ் எனும் வார்த்தையை நாம் பொதுவாக தவறான அர்த்தத்திலேயே பயன்படுத்தி வருகிறோம். ஒரு விஷயம் நமக்கு சொல்லப்படாமல் மறைக்கப்பட்டால், ‘ரொம்ப   சஸ்பென்சா கொண்டுபோயிருக்கான்யா’ என்று சொல்கிறோம். ஆனல் அது சஸ்பென்ஸ் அல்ல, சர்ப்ரைஸ். நாம் பொதுவாக இரண்டையும் ஒரே பொருளிலோ அல்லது மாற்றி மாற்றியோ தான் உபயோகிக்கிறோம்.

தமிழில் Suspense என்பதை ஆவலுடன் கூடிய தவிப்பு என்று மொழிபெயர்க்கலாம். Surprise என்பது ஆச்சரியம் அல்லது அதிர்ச்சியைக் குறிக்கும். ஹிட்ச்காக் கொடுத்த பேட்டியில் இதை அழகாக விளக்கி இருப்பார். அவர் சொன்ன விளக்கம் ’பாம் தியரி’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இரு நபர்கள் டேபிளின் அருகே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் டேபிளுக்குக் கீழே ஒரு பாம் வைக்கப்பட்டிருப்பதாகக் கொள்வோம். அது அவர்களுக்கும் ஆடியன்சுக்கும் தெரியாது. திடீரென பாம் வெடிக்கின்றது. ஆடியன்ஸ் சர்ப்ரைஸ் ஆகிவிடுவார்கள். ஆனால் பாம் வெடிக்கும்வரை, இது ஒரு வழக்கமான சாதாரண சீன் தான். ஆடியன்ஸ் மனதில் எந்த எதிர்பார்ப்பையும் விளைவுகளையும் உண்டாக்காத சாதாரண சீன் அது

இப்போது இப்படி வைத்துக்கொள்வோம். ஆடியன்ஸுக்கு பாம் வைக்கப்பட்டிருப்பது ஏற்கனவே தெரியும். வில்லன் வந்து பாம் வைக்கும் சீனை இதற்கு முன் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் பேசிக்கொண்டிருக்கும் இருவருக்கும் அது தெரியாது. இன்னும் கால்மணி நேரத்தில் பாம் வெடிக்கும் என்பதையும் ஆடியன்ஸ் அறிவார்கள். ஆனால் அதை அறியாமல் அந்த இருவரும் கேசுவலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது ஆடியன்ஸ் மனநிலையை யோசித்துப்பாருங்கள். ’அட வெண்ணை வெட்டிகளா, கீழே பாம் இருக்குடா. எந்திரிங்கடா என்று பதறுவார்கள். அதே சீன் தான். அதே வழக்கமான உரையாடல்தான். ஆனால் ஆடியன்ஸும் இந்த சீனில் பங்குபெறுகிறார்கள். இது தான் சஸ்பென்ஸ். என்ன ஆகப்போகிறதோ எனும் ஆவலுடன் கூடிய தவிப்பில் ஆடியன்ஸ் சிக்கிக்கொள்கிறார்கள்.

முதல் உதாரணத்தில் ஆடியன்ஸுக்கு நாம் பாம் வெடிக்கும் 15 செகண்ட்ஸ் சர்ப்ரைஸ் மட்டுமே கிடைக்கிறது. இரண்டாவது உதாரணத்தில் 15 நிமிட சஸ்பென்ஸ் ஆடியன்ஸுக்கு கிடைக்கிறது.
இது தான் பாம் தியரி. இதை நாம் இன்னும் டெவலப் பண்ணுவோம். முதல் உதாரணத்தில் பாம் இருப்பது அவர்களுக்கும் தெரியாது, படம் பார்க்கும் நமக்கும் தெரியாது. இரண்டாவது உதாரணத்தில் நமக்கு மட்டும் பாம் இருப்பது தெரியும். இப்போது மூன்றாவது கேஸை எடுத்துக்கொள்வோம்.

ஹீரோ வீட்டில் பாம் வைக்க, நண்பனாக நடிக்கும் வில்லனின் அடியாள் வருகிறான். டேபிளின் கீழே பாம் வைக்கிறான். அப்போது ஹீரோ வந்துவிட, கேஷுவலாக பேச ஆரம்பிக்கிறார்கள். ஹீரோ நண்பனையும் உட்காரச் சொல்லி பேசிக்கொண்டே போகிறான். இப்போது பாருங்கள், நம்முடன் சேர்ந்து அந்த நண்பன்(?) கேரக்டரும் பதறிக்கொண்டிருக்கும். இண்ட்ரஸ்ட்டிங்?

நான்காவது கேஸ். வில்லனின் இடத்தில் ஹீரோவும் நண்பனும் வைக்கிறார்கள். வில்லன் வரும் நேரம். 15 நிமிடத்தில் வெடிக்குமாறு செட் செய்யப்பட்ட பாம் அது. அவர்கள் வெளியேற நினைக்கும்போது, வில்லன் ஒரு போலீஸ் ஜீப்பில் வந்திறங்குகிறான். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கைகுலுக்கு நன்றி சொன்னபடியே ‘வாங்க சார்..டீ சாப்பிட்டுட்டுப் போகலாம்’ என்று வில்லன் அழைக்கிறான்.

இங்கே பாம் டிக்..டிக்..டிக். இன்ஸ்பெக்டர் மறுக்க, வில்லன் வற்புறுத்த, உள்ளே இருக்கும் இருவருக்கும் பீதியாகிறது. வெளியே ஓடினால் போலீஸ், உள்ளே இருந்தால் பாம்! இந்த கேஸில் உள்ளே இருக்கும் இருவருக்குமே பாம் இருப்பது தெரிகிறது. நமக்கும் தெரிகிறது. இது சீரியஸ் படத்தில் மட்டுமின்றி, காமெடி படத்திலும் வரலாம்.

இங்கே பாம் என்பது தான் முக்கியமான தகவல். அந்த தகவலை யாருக்கும் சொல்லாமல் கதாசிரியர் மட்டுமே வைத்திருந்தால், ஒருவிதமான அனுபவம் பார்ப்போருக்கு கிடைக்கிறது. அந்த தகவலை கேரக்டர்களுக்கும் தெரியப்படுத்தும்போது, வேறுவிதமான அனுபவம் கிடைக்கிறது. ஒரு கதையை எழுதும்போது, உங்கள் கையில் இருப்பது தகவல்கள். அதில் எதையெல்லாம் ஆடியன்ஸ்க்கு முதலிலேயே சொல்லப்போகிறோம், எந்த ஆர்டரில் சொல்லப்போகிறோம் என்பது தான் முக்கியம்.

சர்ப்ரைஸ்க்கு உதாரணமாக முதல்வனில் வரும் பாம் வெடிக்கும் சீனை எடுத்துக்கொள்ளலாம். அம்மா-அப்பாவுடன் ஹீரோ இருக்கும்போது ஹீரோக்கு ஃபோன் வருகிறது. சிக்னல் கிடைக்கவில்லை என்று வெளியே வருகிறார். நாமும் வழக்கமான சீன் தான் என்று அசுவராஸ்யமாக உட்கார்திருக்கையில்பூம்’!. அது தான் ஹீரோவையும்அரசியல்வாதியாக ஆக்கும் நிகழ்வு. ஹீரோ அந்த அதிர்ச்சியை உணரும் அதே நேரத்தில் ஆடியன்ஸும் உணர வேண்டும் என்று ஷங்கர் முடிவு செய்துள்ளார். எனவே அது சர்ப்ரைஸாக வருகிறது

சமீபத்தில் வந்தஇவன் வேற மாதிரியில் ஜவுளிக்கடை பொம்மை மாதிரி இருக்கும் ஹீரோயினை வில்லன், திருஷ்டி பொம்மை ஆக்கி 20 மாடி பில்டிங்கில் உயரத்தில் கட்டிவிடுகிறான். அங்கே வந்து ஹீரோ தேடும்போது, நமக்கு ஹீரோயின் இருக்கும் இடம் தெரிகிறது. ‘டேய்..அங்க தாண்டா இருக்கா..நல்லா பாருடாஎன்று மனதுக்குள் நாம் கதறுகிறோம் அல்லவா? அது தான் சஸ்பென்ஸ் காட்சியின் ஸ்பெஷாலிட்டி.

நீங்க தூங்கிடக்கூடாதுன்னு...இந்த குண்டு
தனுஷ் நடித்த நய்யாண்டி படத்தில் ஒரு சீன் வரும். ஹீரோவின் அண்ணன் சுமனுக்கு முதலில் ஒரு பெண் பார்த்து வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள். பின்னர் சில வருடங்கள் கழித்து, சுமன் அந்தப் பெண்ணையே மணப்பது என்று முடிவு செய்து, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு ஃபோன் செய்வார். அந்தப் பெண்ணே கைக்குழந்தையுடன் வந்து எடுப்பார்அவருக்கு கல்யாணம் ஆகி, குழந்தையும் பிறந்துவிட்டது என்று நாம் புரிந்துகொள்கிறோம்.

ஆனால் சுமன் அதை அறியாமல் பேசிக்கொண்டே செல்கிறார். இது ஒரு நல்ல நகைச்சுவையாக வந்திருக்க வேண்டிய சீன். கைக்குழந்தையை முதலில் காட்டாமல் சுமன் வழிந்து முடியும்போது குழந்தையைக் காட்டலாம். அல்லது சுமன் பேசும் டயலாக்கிற்கு ஈடுகொடுத்து அப்பாவியாக அந்தப் பெண் பேசிக்கொண்டே செல்வது போல் காட்டலாம். ஆனால் சவசவ என்று எடுத்திருப்பார்கள். அந்த சீனை மீண்டும் பாருங்கள். எப்படி மாற்றலாம் என்று யோசியுங்கள்.

ஒரு கொலை நடக்கிறது. ஹீரோ அதை துப்பறிகிறார் என்பது உங்கள் கதையாக இருக்கலாம். கொலையாளி யார் என்பதை ஆடியன்ஸுக்குச் சொல்வதா வேண்டாமா? சொன்னால் சுவாரஸ்யம் கூடுமா? கதையில் வரும் வேறு யாருக்கெல்லாம் இது தெரியலாம்? அப்படி மற்ற கேரக்டர்களுக்குத் தெரிவது சுவாரஸ்யத்தைக் கூட்டுமா, குறைக்குமா? (உதாரணம், காமெடியனுக்குத் தெரியும், ஆனால் பயத்தால் சொல்ல முடியாமல் தவிக்கிறான்.)

ஹீரோ ஹீரோயினைக் காதலிக்கிறான். ஆனால் அவள் ஹீரோ குடும்பம் வெறுக்கும் வில்லன் குடும்பத்தைச் சேர்ந்தவள். இந்த தகவலை ஆடியன்ஸ்க்கு ஹீரோயின் அறிமுகம் ஆகும்போதே சொல்லலாமா? ஹீரோவின் காதலை ஏற்றுக்கொண்டவுடன் சொல்லலாமா? முன்னது சஸ்பென்ஸ், பின்னது சர்ப்ரைஸ்.

ஓஷோவின் அறிவுரையும் ஹிட்ச்காக்கின் பாம் தியரியும் கதை-ஒரு சீன் – திரைக்கதை ஆகிய மூன்றுக்குமே அப்ளை ஆகக்கூடியவை. நம் கையில் இருக்கும் தகவல்களையும் கேரக்டர்களையும் வைத்துக்கொண்டு , நாம் ஆடும் சதுரங்க விளையாட்டே திரைக்கதை எழுதுதல்!

(தொடரும்)

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-15)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.