Sunday, June 29, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-11)


11. குறிக்கோள்..EXTENDED!

குறிக்கோள் என்பது ஒரு அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் சிக்கலான ஒன்றாக அமைத்துவிடக்கூடாது. அது எல்லாருக்கும் புரியும்படி எளிதானதாக இருக்க வேண்டும். கதை சொல்லும் முறையில் வேண்டுமானால், நீங்கள் அறிவுஜீவி என்று நிரூக்கலாம்.

ஆனால் குறிக்கோளையே மிகவும் அறிவுஜீவித்தனமாக அமைத்தால், எதற்காக இதெல்லாம் நடக்கிறது என்று பார்வையாளர்கள் குழம்பி விடுவார்கள். குறிக்கோளில் கோட்டை விட்ட படத்திற்கு உதாரணம், ஆளவந்தான்.
மனநிலை தவறிய நந்து, தன் தம்பியை மணக்கப் போகும் ஹீரோயினை தன் சித்தியின் மறுபிறவி(? அல்லது ஆவி அல்லது ஏதோவொன்று!) என்று கருதிக்கொள்கிறான். அதனால் ஹீரோயினைக் கொன்று, தம்பியைக் காப்பாற்றுவது என்று முடிவு செய்கிறான். குறிக்கோளே ஒரு கற்பனையின் அடிப்படையில் அமைவது முதல் பிரச்சினை. ‘நல்ல டாக்டர காட்டுங்கப்பா’ என்று தான் நமக்குத் தோன்றியதே ஒழிய, நந்து ஜெயிக்க வேண்டும் என்று தோன்றவில்லை, தோன்றினால் நமக்கும் ஒரு டாக்டரைத் தேட வேண்டியிருக்கும்!

இப்போது நாம் முன்பு படித்த ஒரு பாயிண்ட் ஞாபகம் வருகிறதா? இந்த கதையின் நாயகன் யார்? ஹீரோ தன் மனைவியை ஒரு சைக்கோவிடம் இருந்து காப்பாற்றப் போராடுகிறான் என்பதே தம்பி கமலின் பார்வையில் வரும் ஒன்லைன். அதனுடன் நாம் ஐக்கியமாக முடியும்.

ஆனால் ஒரு கற்பனைக் காரணத்துக்காக, நியாயமற்ற குறிக்கோளுடன் அலையும் ஒருவனுடன் நாம் எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். அதிலேயே நாம் கதையில் ஒன்ற முடியாமல் விலகிவிட்டோம். அதையும் சகித்துக்கொண்டு பார்த்தால், கிளைமாக்ஸ் இப்படி வருகிறது:

அவ்வப்போது வரும் அம்மா(கற்பனை உருவம்), திடீரென வந்து ‘டாய், அவ உன் சித்தி இல்லைடா’ என்று சொல்கிறது. நம்மைப் போலவே கமலும் பேஸ்த் அடித்து ‘ஏம்மா, முதல்லயே சொல்லலை? சொல்லியிருந்தா இந்தப் படத்தையே எடுத்திருக்க மாட்டேனே? குறிக்கோள்லயே கை வைச்சுட்டயே?’ என்று கேட்கிறார். அதற்கு மம்மியின் பதில் அற்புதமானது : ‘நீ கேட்கலியே’. (சூப்பரப்பு!)

எந்த குறிக்கோளை மையப்படுத்தி இரண்டரை மணிநேரம் படம் ஓடியதோ, அதையே காலி செய்துவிட்டது அந்த பதில். படம் பார்த்தவர்கள், காதில் ரத்தம் வடிய வெளியே ஓடிவந்தார்கள்.

எல்லா சூப்பர்ஹிட் படங்களுக்கும் அடிப்படையாக இருப்பது, சிம்பிளான குறிக்கோள் தான். தமிழில் வந்த சிறந்த ஆக்சன் படங்கள் என்ற பட்டியலில் இயக்குநர் தரணியின் தில், தூள், கில்லி ஆகிய மூன்றுமே இடம்பெறும். அந்த மூன்று படங்களிலும் குறிக்கோள் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
தில் படத்தின் ஹீரோவின் லட்சியம், போலீஸ் ஆவது. அவன் வாழ்வதே அதற்காகத் தான். காதலா, லட்சியமா என்று வரும்போது, லட்சியமே பெரிது என்று முடிவெடுக்கிறான். அந்த லட்சியத்துக்கு வில்லனால் இடையூறு வரும்போது, படம் பார்ப்பவர்களுக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. அது ஒரு எளிமையான குறிக்கோள் தான் இல்லையா?

தூள் படத்தில் ஊரை நாசமாக்கும் கெமிக்கல் ஃபேக்டரியை மூடி, ஊரைக் காப்பாற்றுவது தான் ஹீரோவின் வேலை. படிக்காத கிராமத்து ஆளாக ஹீரோ கேரக்டரைப் படைத்தது சுவாரஸ்யத்தைக் கூட்டும் முதல் முரண்பாடு. அவன் அரசு இயந்திரத்தை எதிர்த்து, தனது குறிக்கோளை எப்படி அடைகிறான் என்று சுவாரஸ்யமாகச் சொன்னது படம். மிகவும் சிம்பிளான, எல்லோருக்கும் புரியும் குறிக்கோள்.

கில்லி படத்தில் ஹீரோயினை காப்பாற்றும் வழக்கமான குறிக்கோள் தான். இதிலும் வேலைவெட்டியற்ற ஒரு இளைஞன், எப்படி அதிகாரவர்க்கத்தை வெல்கிறான் என்று சொல்லி இருப்பார்கள். ஆந்திரா மசாலா என்றாலும், படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எந்திரன் படத்தில் சைண்டிஸ்ட் ரஜினி, ரோபோ ரஜினியை உருவாக்குகிறார். அது வில்லன் ரோபோவாக ஆகிவிடுகிறது. அதை சைண்டிஸ்ட் அழிக்க வேண்டும் என்பதே குறிக்கோள். ஆனால் அங்கே ரஜினியின் அத்தியாவசியத் தேவை, ஐஸ்வர்யா ராயை ரோபோவிடம் இருந்து மீட்டெடுப்பது தான். அந்த தேவை தான், படத்துடம் நம்மை ஒன்ற வைத்தது. இல்லையென்றால், சைண்டிஸ்ட்டுக்கும் நமக்கும் என்ன பாஸ் சம்பந்தம்?

எந்திரனில் அந்த அடிப்படைத் தேவை இல்லையென்றால் ‘இந்த ஆளை யாரு ரோபோல்லாம் பண்ணச் சொன்னா? வேண்டாத வேலையைப் பண்ணிட்டு குத்துதே, குடையுதேன்னு அழுதா எப்படிய்யா?’ என்று தான் கேட்டிருப்போம். ஆனால் காதலியைக் காப்பாற்றுதல் எனும் தேவை வந்தபிறகு, ‘தலைவா..ரொம்ப வருசமாப் போராடி ஐஸ் கிடைச்சிருக்கு..விட்றாதே’ என்று சயிண்டிஸ்ட்டுக்கு ஃபுல் சப்போர்ட் கொடுத்தோம்.
தமிழில் வந்த, வருகின்ற படங்களைக் கவனியுங்கள். குறிக்கோள் என்ற அம்சம் எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள். குறிக்கோள் புரியும்படியும் லாஜிக்கலாகவும் அதே நேரத்தில் சிம்பிளாகவும் இருக்கிறதா என்று பாருங்கள்.

இப்போது உங்கள் ஒன் லைனை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் குறிக்கோள், மனிதனின் அடிப்படைத் தேவையா என்று பாருங்கள். இல்லையென்றால், அப்படி ஒரு தேவையை கூடுதலாக உருவாக்குங்கள்.


(தொடரும்)

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-11)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, June 26, 2014

ஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938) - விமர்சனம்

டிஸ்கி: இந்த வாரம் ரம்ஜான் ஆரம்பிப்பதால், இன்னும் ஒரு மாதத்திற்கு இங்கே புதுப்படம் ரிலீஸ் ஆகாது; தியேட்டர்களுக்கு லீவ். எனவே புதுப்பட விமர்சனம் படித்துவிட்டு, திருட்டு சிடியில் பார்க்கும் அன்பர்கள் பொறுத்தருளவும்!


ஹாலிவுட்டில் படம் செய்ய ஹிட்ச்காக்குடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருந்த நேரம் அது. ஹாலிவுட் போகும்முன் நச்சென்று ஒரு படத்தை பிரிட்டிஷ் சினிமாவுக்குக் கொடுப்போம் என்று முடிவு செய்தார் ஹிட்ச்காக்.  கதை மேல் இருந்த நம்பிக்கையால் அறிமுக ஹீரோ, பிரபலமில்லாத ஹீரோயினுடன் களமிறங்கி எடுத்த படம் The Lady Vanishes. அதுவரை பிரிட்டிஷ் சினிமாவின் வசூல் ரிகார்டை முறியடித்தது இந்தப் படம். 
தலைப்பே படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறது. காணாமல் போன ஒரு லேடியைத் தேடுவது தான் படத்தின் ஒன்லைன். பனிச்சரிவால் ஒரு ரயில் கிளம்புவது தடைபடுகிறது. அந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டிய ஹீரோயின் (Margaret Lockwood) மற்றும் பலரும் ஒரு ஹோட்டலில் தங்குகிறார்கள். ஒரு வயதான லேடி மிஸ்.ஃப்ராய்(Dame May Whitty) மற்றும் ஹீரோ (Michael Redgrave)வை ஹீரோயின் அங்கே சந்திக்கிறார். வழக்கம்போல் ஹீரோவுடன் மோதல். அந்த ட்ரெய்னில் பயணம் செய்யும் இரு காமெடியன்களும் அங்கே தங்குகிறார்கள். அந்த இரவில் ஒரு கிடாரிஸ்ட் அங்கே கொலைசெய்யப்படுகிறார். அது யார் கவனத்திற்கும் வருவதில்லை. 

அடுத்த நாள் ட்ரெய்ன் கிளம்பும்போது, மிஸ்.ஃப்ராய் தலையைக் குறிவைத்து மேலிருந்து போடப்பட்ட பூந்தொட்டி ஹீரோயின் தலைமேல் விழுகிறது. மிஸ்.ஃப்ராய் உதவியுடன், அந்த வலியோடு ட்ரெய்னில் ஏறும் ஹீரோயின் மயக்கமாகிறாள். விழித்துப் பார்த்தால் லேடியைக் காணவில்லை. அந்த கம்பார்ட்மெண்ட்டில் இருக்கும் எல்லோரும் ‘நீ மட்டும் தான் வந்தாய்..லேடி யாரும் வரவில்லை’என்று சாதிக்கிறார்கள். தலையில் அடிபட்டதால் வந்த குழப்பமோ என்று ஹீரோயினே நம்பும் அளவிற்கு எல்லாரும் நாடகமாடுகிறார்கள். அதே ட்ரெய்னில் பயணிக்கும் ஹீரோ முதலில் ஹீரோயினை நம்ப மறுத்தாலும், பின்னர் நம்புகிறார். லேடிக்கு என்ன ஆனது என்பதை ஹீரோவும் ஹீரோயினும் இணைந்து கண்டுபிடிப்பதே மீதிப் படம்.
Ethel Lina White என்பவர் எழுதிய The Wheel Spins எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு Sidney Gilliat மற்றும் Frank Launder ஆகியோரால் எழுதப்பட்டது இந்தப் படத்தின் திரைக்கதை. ஹிட்ச்காக் இந்தப் படத்தில் வேலை செய்ய ஒப்பந்தம் ஆகும்போதே திரைக்கதை தயாராக இருந்தது. ஆனாலும் ஆரம்ப ஹோட்டல் சீகுவென்ஸையும், இறுதி கிளைமாக்ஸ் சீனையும் மாற்றி எழுதினார் ஹிட்ச்காக். நாவலில் அந்த லேடி ஒரு அப்பாவி என்று மட்டுமே வரும்; படத்தில் லேடி ஒரு நல்ல கேடியாக வருவார். அதே போன்றே ஹீரோயினுக்கு தலையில் அடிபடுவதும் நாவலில் கிடையாது; படத்தின் கதைக்கு சுவாரஸ்யம் சேர்த்தது அந்த சீன்.

இரண்டாம் உலகப்போருக்கான முஸ்தீபுகள் தொடங்கிய நேரம் அது. பிரிட்டிஷ் சென்சார், ஜெர்மனி பற்றி சினிமாக்களில் எதுவும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்தார்கள். எனவே Secret Agent படம் போன்று வெளிப்படையாக ஜெர்மனியை வில்லன் நாடாக சித்தரிக்காமல் ‘ஒரு நாடு’ என்று பொத்தாம்பொதுவாக படம்பிடித்தார்கள். 

படத்தின் முதல் அரைமணி நேரம், அந்த ட்ரெய்னில் பயணிக்கப்போகும் பயணிகளை நமக்கு அறிமுகம் செய்கிறார் ஹிட்ச்காக். கிரிக்கெட் பைத்தியங்களான இரு காமெடியன்களும் (Naunton Wayne & Basil Radford-பின்னாளில் பிரபலமான காமெடி ஜோடியாக ஆனார்கள்) தன் ரகசியக் காதலியுடன் பயணிக்கும் ஒரு பாரிஸ்டரும் எதிலும் இன்வால்வ் ஆக விரும்புவதில்லை. எனவே லேடி ஹீரோயினுடன் வந்தார் என்று தெரிந்தும் அவர்கள் பின்னர் வாய் திறப்பதில்லை. எதிலும் இன்வால்வ் ஆகும் ஜாலி கேரக்டராக அறிமுகம் ஆகும் ஹீரோ தான், ரயிலில் ஹீரோயினுக்கு உதவ முன்வருகிறார். முதல் அரைமணி நேரம் சீரியஸ்னெஸ் இல்லாமல், ஜாலியான பொழுதுபோக்குப் படமாகவே நகர்கிறது. எந்த கேரக்டர் என்ன மாதிரி ஆட்கள் என்று ஜாலியாகவே நமக்கு உணர்த்திவிட்டு, ரயிலில் அவர்களுடன் நம்மையும் ஏற்றுகிறார் ஹிட்ச்காக்.
அங்கே ஆரம்பிக்கிறது சஸ்பென்ஸ் விளையாட்டு. ஹீரோயினுடன் லேடி வந்ததை நாம் அறிவோம். எனவே ஹீரோயின் போன்றே நாமும் ‘எங்கே அந்த லேடியை’ என்று தேட வைத்துவிடுகிறார் ஹிட்ச்காக். ட்ரெய்னில் ஒரு மேஜிக் குரூப்பும் பயணம் செய்வது, லேடி மறைந்ததை மேலும் சுவாரஸ்யமானதாக ஆக்குகிறது. வில்லனிடமே ஹீரோவும் ஹீரோயினும் உதவி கேட்டு சிக்கலில் மாட்டுவதும் சஸ்பென்ஸைக் கூட்டுகிறது. படம் முழுக்க வரும் நக்கலான, ஜாலியான வசனங்கள் தான் படத்தின் பெரும் வெற்றிக்குக் காரணமாக இருக்க வேண்டும். ‘நான் தான் மினிஸ்டருக்கு ப்ரைன் சர்ஜரி செய்த டாக்டர்’ என்று டாக்டர் சொல்ல, அதற்கு ஹீரோ ‘ஓ..Did you find anything?'என்று கேட்பது நக்கலோ நக்கல்.

சஸ்பென்ஸை எப்படி படிப்படியாக கூட்டிக்கொண்டு செல்வது என்பதற்குச் சிறந்த உதாரணம், இந்தப் படம். லேடி அறிமுகம் ஆகிறார் - மறைகிறார்-ஹீரோயினை யாரும் நம்பவில்லை-ஹீரோயின் தான் சொன்னது உண்மை என்று நிரூபிக்கிறார்-லேடி திரும்புகிறார்-ஆனால் அதே லேடி இல்லை-இப்போதும் ஹீரோயினை யாரும் நம்புவதில்லை-ஹீரோ நம்புகிறார்-தேடுகிறார்கள்-வில்லனிடமே உதவி கேட்கிறார்கள் என ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் கதையில் ஒரு திருப்பம் வந்துகொண்டே இருக்கிறது. எனவே தான் ரயிலைவிட படம் வேகமாகச் செல்கிறது.

எடிட்டிங் டெக்னாலஜியான Dissolve-ஐ கதைக்குப் பொருத்தமாக இதில் பயன்படுத்தியிருப்பார்கள். ஹீரோயின் தலையில் அடிபட்ட மயக்கத்தையும் குழப்பத்தையும் விளக்க, Dissolve பொருத்தமாக இருக்கும். மதுக்கோப்பையில் வில்லன் எதையோ கலந்து தர, அதைக் குடிக்காமல் ஹீரோவும் ஹீரோயினும் பேசிக்கொள்ளும் காட்சியை முடிந்தவரை விஷுவலாகவே கொண்டு சென்றிருப்பார் ஹிட்ச்காக். அந்த கோப்பைகளும் கேரக்டர்கள் போல் நடித்திருக்கும்.

பின்னாளில் ஹிட்ச்காக்கிற்கு பெரும் புகழ் வாங்கித்தந்த இரு படங்களின் விதை, அவருக்கே தெரியாமல் இங்கே போடப்பட்டிருக்கும். மந்திரவாதியை அடித்து, பாக்ஸில் போட்டு மூடிவிட்டு ஹீரோவும் ஹீரோயினும் அதன்மேல் அமர்ந்து பேசும் காட்சி வரும். அது பின்னர் Rope படத்தின் மெயின் தீம் ஆக ஆனது. அதே சீனில் பறவைகள் ஹீரோயினை அட்டாக் செய்வதாக வரும். அது ஹிட்ச்காக்கின் இன்னொரு மாஸ்டர்பீஸான The Birds படத்தின் தீம். 
படத்தின் ஹீரோ மைக்கேல் ஒரு நாடக நடிகராக இருந்தவர். சினிமாவில் ஹீரோவாக நடிக்க மிகவும் தயங்கியவர். ஆனாலும் ஹிட்ச்க்காக் கைபட்டபின், பிரபலமான ஹீரோவாக ஆனார். அதே போன்றே அதுவரை சுமாரான படங்களிலேயே நடித்துவந்த ஹீரோயின் மார்கரெட்டை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது இந்தப் படம்.

வழக்கம்போல் படத்தின் அடிநாதமான சீக்ரெட்டை Maccuffin பாணியில் ஒன்றுமில்லாததாக ஆக்கியிருப்பார் ஹிட்ச்காக். நாவலை விஷூவலாக்க என்ன செய்ய வேண்டும், திரைக்கதையை விறுவிறுப்பு குறையாமல் எப்படிக் கொண்டு செல்ல வேண்டும், ஒவ்வொரு சீனிலும் எப்படி சுவாரஸ்யத்தைக் கூட்டுவது என்பதை இதுவரை எடுத்த படங்களின் மூலம் கற்றுத் தேர்ந்திருந்தார் ஹிட்ச்காக். 

எனவே பிரபல இயக்குநர் எனும் மரியாதையுடன் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். ஆனாலும் விதி அவரை மீண்டும் பிரிட்டிஷ் சினிமாவிற்கே கூட்டி வந்தது. அதுபற்றி அடுத்த படம் பற்றிய பதிவில் பார்ப்போம்.

Torrent Link: http://kickass.to/the-lady-vanishes-1938-bluray-720p-h264-t6593519.html
Youtube Link: http://www.youtube.com/watch?v=w1J0pUURCj8
மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938) - விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 24, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-10)

10.குறிக்கோளும் அடிப்படைத் தேவையும்

ஒரு படம் எதைப்பற்றியது என்று தீர்மானிப்பது இந்த குறிக்கோள் தான். ஹீரோவை பார்வையாளர்களுடன் ஒருங்கிணைப்பதும் குறிக்கோள் தான். ஏதோ ஒரு நோக்கம், அதை நிறைவேற்றுவதற்காக ஹீரோ செய்யும் செயல்கள், அதற்கு எழும் தடைகள் என்று திரைக்கதையை நீங்கள் பின்னுவதற்கு முன், சில அடிப்படை விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

ஹீரோவின் குறிக்கோள் என்பது ஒரு எளிய சாமானியனும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். ’செவ்வாய் கிரகத்திற்கும் சனி கிரகத்திற்கும் இடையே காமா கதிர்களும் பீட்டா கதிர்களும் பாய்கின்றன. விண்வெளி வீரனான ஹீரோ, காமாக்கதிர்களை ஒழித்து..........’ என்ற ரேஞ்சில் ஒரு குறிக்கோளை உருவாக்கினால், சாமானிய ரசிகன் மண்டை காய்ந்துபோவான். நானே கூட’ காமா காமான்னு சொன்னாங்கய்யா..ஆனா ஒரு சீன்கூட இல்லை. என்ன படம் எடுக்காங்க’ என்று விமர்சனம் எழுதலாம். எனவே எளிமையான குறிக்கோளை உருவாக்குங்கள்.
அதற்காக ஹீரோ காலேஜில் படிக்கிறான். அரியர் இல்லாமல் டிகிரி முடிப்பதே அவன் குறிக்கோள் என்று வைத்தால், சப்பையாக இருக்கும். குறிக்கோள் என்பது புரிந்துகொள்ள எளிமையானதாக, அடைவதற்கு கஷ்டமானதாக இருக்க வேண்டும். ’ஹீரோ ஹீரோயினை லவ் பண்ணுகிறான். (சரி, அதுக்கென்ன?) ஆனால் ஹீரோயினுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. (அய்யோ..அப்புறம்)’ எனும் அஜித்தின் காதல் மன்னன் படத்தின் ஒன் லைனை இதற்கு உதாரணாமக் கூறலாம். ஹீரோன்னா ஹீரோயினை லவ் பண்ணத்தான் செய்வான் என்று எளிதாக புரிந்துகொள்ளவும் முடிகிறது. அதே நேரத்தில் அங்கே ஒரு பிரச்சினையும் பூதாகரமாக நிற்கிறது.

அரதப் பழசான குறிக்கோளாகக்கூட இருக்கலாம். ஆனால் அதைச் சுற்றி நீங்கள் எழுப்பும் தடைகளும், முரண்பாடுகளும் புதியதாக இருக்க வேண்டும்.

குறிக்கோளை நிறைவேற்றப் போராடும் ஹீரோவுக்கு அந்த குறிக்கோள் அத்தியாவசியமான தேவையாக இருக்க வேண்டும். இதை விரிவாகப் பார்ப்போம். மனிதனின் அடிப்படைத் தேவையாக உணவு, உடை, உறைவிடம் சொல்லப்படுகிறது. திரைக்கதை உலகிலும் சில அடிப்படைத் தேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவை :
  • காதல்
  • செக்ஸ்
  • பாசம்
  • உயிர்பயம்/ தப்பிப்பிழைத்தல்
  • பணம்
  • அன்பிற்கு உரியவர்களை/நாட்டை காப்பாற்றுதல்
  • பழிக்குப் பழி
  • கௌரவம்

 இந்த தேவைகள் அனைத்துமே பார்வையாளனின் உனர்ச்சிகளுடன் எளிதில் ஒன்று கலக்கக்கூடியவை. எப்படி ஹீரோவுடன் பார்வையாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது அவசியமோ, அதே போன்றே குறிக்கோளுடனும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது அவசியம். அதற்கு இந்த அடிப்படைத் தேவைகள் உதவும். சில உதாரணங்களைப் பார்ப்போம். 

பில்லாவின் கூட்டத்தை மொத்தமாகப் பிடிப்பதே பாலாஜி(பிரபு)வின் குறிக்கோள். அதற்கு ரஜினி(அஜித்) உதவுகிறார். இதோடு மட்டும் விட்டால், பெரிதாக ஈர்ப்பு ரசிகர்களுக்கு வராது. எனவே பாலாஜி(பிரபு) கேரக்டர் சாகடிக்கப்படுகிறது. இப்போது பில்லாவாக நடிக்கப்போனவர், தான் பில்லா அல்ல என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அதை நம்பாத போலீஸ் துரத்துகிறது. நம்பிய பில்லாவின் ஆட்களும் துரத்துகிறார்கள். ரன் லோலா ரன்!...உயிர்பயம், தப்பிப்பிழைக்க வேண்டிய தேவை அங்கே உருவாக்கப்படுகிறது. வெறுமனே குறிக்கோளுடன் ஹீரோ போவதற்கும், அடிப்படைத் தேவையுடன் குறிக்கோளை நோக்கிப் போவதற்கும் உள்ள வித்தியாசம் புரிகிறதா?

இப்போது இரண்டாம் உலகம். அங்கே ஹீரோ ஆர்யாவுக்கு அடிப்படைத் தேவை என்று ஏதும் இல்லை. ஹீரோயின் அனுஷ்கா செத்தாயிற்று. இனி உயிர்பயமோ, காதலோ. யாரையும் காப்பாற்றும் அவசியமோ எதுவும் இல்லை. உயிருள்ள பிணம் தான் அந்த ஹீரோ கேரக்டர். காதல் பூ பூக்க வைக்க, ஆர்யா முயற்சிக்க காரணமே அங்கே இல்லை. அது கடவுளின் பிரச்சினை. ஆர்யாவின் பிரச்சினை இல்லை. எனவே அது நம் பிரச்சினையும் இல்லை. யார் வீட்டு இழவோ தான்.

காதல் பூ பூக்க வைத்தால், இறந்து போன அனுஷ்காவை மீட்டுத் தருவேன் என்று கடவுள் சொல்லியிருந்தால், ஆர்யாவிற்கு ஒரு குறிக்கோள் கிடைத்திருக்கும். இரண்டாம்பாதி படத்திற்கும் உயிர் வந்திருக்கும்!

ஆகவே ஒரு குறிக்கோளை உருவாக்கும்போது, அதில் ஹீரோ வெற்றியடையாவிட்டால் ஹீரோவின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று ரிஸ்க்கிற்கு ஆளாகும்படி திரைக்கதை அமைக்க வேண்டியது அவசியம். ’வந்தால் மலை..’ ரேஞ்சில் ஒரு குறிக்கோளை ஹீரோவுக்கு கொடுத்தீர்கள் என்றால், பெரிதாக சுவாரஸ்யம் இருக்காது. செய் அல்லது செத்துமடி போன்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டியது கட்டாயம். அது தான் ஹீரோவுக்குத் தேவையான மோட்டிவேசனைக் கொடுக்கும்.
அடுத்த வீட்டில் அண்டா திருடுவது கூட குறிக்கோள் தான். ஆனால் அடுத்த வீட்டுக்கும் இவருக்கும் என்ன பிரச்சினை? அடுத்த வீட்டு அண்டா தான் வேணுமா? கிடைக்கலேன்னா என்ன ஆகும்? என்ன அடிப்படைத் தேவையை அங்கே உண்டாக்கலாம் என்று யோசித்தால், ஒருவேளை ஒரு பயங்கரமான கதை உங்களுக்குக் கிடைத்துவிடலாம்!

அடுத்த வாரம் சில வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியர்கள் எப்படி குறிக்கோளை அடிப்படைத் தேவையுடன் அமைத்து ஜெயித்தார்கள் என்று மேலும் சில உதாரணங்களைப் பார்ப்போம். அதன்பின் ஒன்லைனின் மூன்றாவது அங்கமான வில்லனை நோக்கி நகர்வோம்.


(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-10)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, June 22, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-9)


9.கதாநாயகனை ஆக்டிவேட் செய்யுங்கள்

ஹீரோவைப் பற்றிய முந்தைய பதிவுகளில் சொன்னது போல், உங்கள் கதையின் நாயகன் யார் என்று தெளிவாகிவிட்டீர்களா? அடுத்து ஹீரோவின் குணத்திலும் சூழ்நிலையிலும் முரண்பாடுகளை உருவாக்க முடிந்ததா? நல்லது. முதல்பகுதியைக் காப்பாற்ற அவை போதும். இப்போது ஹீரோ கேரக்டர் இறுதிவரை எப்படி செயல்பட வேண்டும் என்று பார்ப்போம்.

நாம் ஏற்கனவே பார்த்தபடி, பார்வையாளர்கள் ஹீரோவுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்கள். இறுதிவரை அந்த பிணைப்பை முறிக்காமல் கொண்டு செல்வது, நம் முன் இருக்கும் அடுத்த சவால். அதற்கு ஹீரோ எப்போதும் ஆக்டிவ் வாய்ஸிலேயே இருக்க வேண்டும். அதென்ன ஆக்டிவ் வாய்ஸ் என்கிறீர்களா? சரி, தமிழ் இலக்கணப் பாடத்தை ஒருமுறை மீண்டும் பார்த்துவிடுவோமா?
ஒரு செயலானது இருவகைகளில் செய்யப்படலாம். ஒன்று செய்வினை, மற்றொன்று செயப்பாட்டு வினை. திருவள்ளுவரை விட்டால் இதை விளக்க நல்ல ஆள் கிடையாது. எனவே…..

திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார் -- இது செய்வினை (ஆக்டிவ் வாய்ஸ்). இங்கே திருவள்ளுவரே ஹீரோ (Noun-ஐ ஹீரோன்னு தமிழ்ல சொன்னா தப்பா?). அவரே செயலையும் செய்கிறார்.

திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டது - இது செயப்பாட்டு வினை (பேசிவ் வாய்ஸ்) - இங்கே திருக்குறள் தான் ஹீரோ. ஆனால் செயலைச் செய்தது திருவள்ளுவர் திருக்குறள்(ஹீரோ) மீது வள்ளுவர் ஆதிக்கம் செலுத்துகிறார். திருக்குறள் டம்மியாக ஆகிவிடுகிறது.

ஒரு படத்தில் ஹீரோ தான் எல்லாச் செயல்களையும் செய்பவராக, முக்கிய முடிவுகளை எடுப்பவராக இருக்க வேண்டும். கதைப்படி அது முடியாதென்றால், அந்த முக்கிய முடிவை முழுக்க ஏற்றுக்கொண்டு செயல்படுத்துபவராக இருக்க வேண்டும். இதற்கு இரு உதாரணங்களைப் பார்ப்போம்.
 
பில்லாவில் பாலாஜி(பிரபு) தான் முக்கியமான முடிவை எடுக்கிறார். அதற்கு ஆரம்பத்தில் தயங்கினாலும், துணிந்து இறங்கி செயல்படுத்துவது ரஜினி(அஜித்) தான். அதனால் தான் அந்த படம் இன்றளவும் வெற்றிகரமான சப்ஜெக்ட்டாக இருக்கிறது. அதே போன்று இரண்டாம் உலகத்தைப் பார்ப்போம்.

இரண்டாம் உலகம் படத்தின் கதை என்ன? இரண்டாவது உலகத்தில் காதல் இல்லை. பெண்கள் எல்லாரும் வன்முறைக்கு ஆளாகிறார்கள். இதைத் தடுக்க அங்கே காதல் மலர வேண்டும் என்று முடிவு செய்கிறார் இரண்டாவது உலக கடவுள். அதற்கு பூமியில் இருந்து காதல் எக்ஸ்பெர்ட்(?) ஆர்யாவைக் கொண்டு வருகிறார். காதல் மலர்கிறது.

அதன்பிறகு ஆர்யா ஆக்டிவாக ஒன்றுமே செய்வதில்லை. கடவுளின் விருப்பப்படியே கடத்தல் நடக்கிறது. கடவுள் எதிர்பார்த்தபடியே ஆர்யா-2 காப்பாற்ற வருகிறார். அந்த ஆர்யா-2வைத் தேடி அனுஷ்கா-2ம் வருகிறார். துணைக்கு பூமியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆர்யா-1. அனுஷ்காவிற்கு சாப்பாடு கொண்டுவருவது, பனியில் பயணப்படும் அனுஷ்காவிற்கு பேச்சுத்துணைக்கு வருவது ஆகிய இரண்டு வேலைகளை மட்டுமே ஆர்யா செய்கிறார். 

பில்லா பாலாஜி கேரக்டரும், இரண்டாம் உலகம் கடவுள் கேரக்டரும் ஒன்று தான். இருவருமே ஹீரோவின் உதவியை நாடுகிறார்கள். பில்லாவில் என்ன நடக்கிறது, அடுத்து என்ன செய்வது என்று எல்லாமே பில்லாவால் முடிவெடுக்கப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலகம் ஆர்யாவிற்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.

படம் பார்த்த எல்லாரும் அதையே சொன்னார்கள் ‘என்னென்னவோ நடக்குய்யா..ஆனா என்ன நடக்குன்னு தான் தெரியலை’. நாம் ஏற்கனவே பார்த்தபடி, ஹீரோவுடனே பார்வையாளர்கள் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்கள். முதல்பாதியின் ஆர்யாவுடன் ஐக்கியமான பார்வையாளர்கள், இரண்டாம்பாதியில் தேமேயென்று ஆர்யா அலைவதால் பெரும் அதிருப்திக்கு ஆளானார்கள்.

அதனால் தான் திரைக்கதையின் விதிகளில் ஒன்று சொல்கிறது, ஹீரோ செய்வினை(ஆக்டிவ் வாய்ஸ்) யிலேயே இருக்க வேண்டும் என்று. இல்லையென்றால், படத்திற்கு செய்வினை வைத்தது போல் ஆகிவிடும். ஒரு காரியத்திற்கான காரணகர்த்தா யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த காரணத்தைப் புரிந்து, செயல்படுத்துபவனாக ஹீரோ இருக்க வேண்டியது அவசியம்.

இப்போது உங்கள் ஒன் லைனை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஹீரோ ஆக்டிவ்வாக இருப்பாரா? இல்லையென்றால் பில்லா ஸ்டைலில் ஹீரோவை ஆக்டிவ் ஆக்குங்கள். 60 கோடி ஸ்வாஹா ஆகாமல் தப்பிக்க, இந்த ஒரு திரைக்கதை விதி உதவும்!

சரி, இப்போது திரைக்கதை எழுத ஆரம்பிக்கும்போது தோன்றும் ஒரு குழப்பத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கதையை எந்த ஹீரோவை மனதில் வைத்து எழுதுவது? அப்படி குறிப்பிட்ட ஹீரோவை மனதில் வைத்து எழுதுவது சரியா? என்பது போன்ற குழப்பங்கள் ஆரம்பத்தில் தோன்றும்.

நடிகரைத் தேர்ந்தெடுப்பது இயக்குநரின் வேலை தான். தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியர் என்று தனியாக ஆள் இல்லாமல் இயக்குநரே எல்லாவற்றையும் செய்வதால், இந்தக் குழப்பம் நமக்கு வருகிறது. எனவே குறிப்பிட்ட நடிகரை மட்டுமே மனதில் வைத்து எழுதாமல் இருப்பது நல்லது. ஆனாலும் முதல் முயற்சி செய்பவர்களுக்கு, கேரக்டரை மட்டுமே வைத்து எழுதுவது கஷ்டமாக இருக்கலாம், குறிப்பாக இலக்கிய பரிச்சயம் இல்லாதவர்களுக்கு.

எனவே அவர்கள் டாப் ஹீரோக்களை மனதில் வைத்து எழுதலாம். ஆக்சன் மூவி என்றால் எமது சாய்ஸ், ரஜினி தான். அவரது இமேஜ் அதிக உத்வேகத்தைக் கொடுக்கும். நடிப்புத் திறமையைக் கொட்ட வேண்டிய கேரக்டர் என்றால் கமல் தான். இன்றைய ஹீரோக்கள் எல்லாருமே இவர்களை காப்பி அடிப்பவர்கள். எனவே அந்த ஐகான்களை மனதில் வைத்தால், பின்னாடி கிடைக்கிற நடிகருக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம்.

ஒருவேளை உங்களுக்கு ரஜினியைவிட அஜித்/விஜய்யோ, கமலை விட சூர்யா/விக்ரமோ சரியாகத் தோன்றினால், எமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனாலும் முதலிலேயே சொன்னபடி, நடிகர்களை நினைக்காமல், கேரக்டர்களை மட்டுமே வைத்து எழுதப் பாருங்கள்.


திரைக்கதை எழுதும்போது வரும் இன்னொரு பிரச்சினை, ஹீரோவையும் உங்களைப் போன்றே(அவ்வ்!) படைப்பது. நீங்கள் திருமணம் ஆனவரென்றால், ஹீரோவையும் அப்படி படைக்கவே ஆர்வம் எழும். நீங்கள் ஒரு மூடி டைப் என்றால், ஹீரோவையும் அப்படியே படைக்க எண்ணுவீர்கள். செல்வராகவன் போன்ற சில இயக்குநர்கள், அப்படிச் செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு தியேட்டருக்கு வருவது இளைஞர் கூட்டம் தான். அவர்கள் வெளியே போய் நன்றாக இருக்கிறது என்று சொன்னபிறகே, மற்ற கூட்டம் வரும்.

எனவே ஹீரோ-ஹீரோயின் அவர்களுக்கு ஏற்றவர்களாக இருப்பது, கமர்சியல் சினிமாவிற்கு அவசியம். அதனால்தான் 40 வயதுக்கு மேல் ஆனாலும், நம் ஹீரோக்கள் 25 வயது வாலிபனாகவே வருகிறார்கள். இன்றைக்கு அஜித் அதை உடைக்க முயற்சிக்கிறார். முதல் படத்திலேயே உங்களுக்கு அஜித் கால்ஷீட் கிடைக்கும் என்றால், அப்படிப்பட்ட கதையை நீங்கள் முயற்சி செய்யலாம், வாழ்த்துகள்!

ஓகே, ஹீரோவுக்கான அடிப்படைப் பண்புகளைப் பற்றி ஓரளவு பார்த்துவிட்டோம். ஒன் லைன் எழுதத் தேவையான மூன்று விஷயங்களில் ஒன்றான ஹீரோவை இதுவரை பார்த்துவிட்டோம். அடுத்து இரண்டாவது முக்கிய விஷயமான குறிக்கோள் பற்றிப் பார்ப்போம். ஒன் லைனில் தெளிவாகிய பிறகே, கதை நோக்கி நகர்வோம். அதன்பிறகே, திரைக்கதை எனும் ரியல் ஷோ!


(தொடரும்)

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-9)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, June 21, 2014

தொட்டால் தொடரும்..பாஸு பாஸு..ஒரு ரவுசுப் பாடல்

சுயமுன்னேற்ற நூல்களைப் படித்தால் ஜிவ்வென்று இருக்கும். உலகை வென்று சாதனையாளர் ஆகும் சூத்திரம் கிடைத்துவிட்டதுபோல் ஒரு கிறுகிறுப்பு கிடைக்கும். இரண்டு நாட்களுக்கு மனது விரைப்பாகவே இருக்கும். எல்லாம் இரண்டு நாட்களுக்குத் தான். பிறகு மனது சொய்ங்கென்று பழைய நிலைமைக்கே போய் விடும். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு வித மனநிலையை நமக்கு உண்டாக்கக்கூடியவை. அந்தவகையில் எழுத்தாளர் சுஜாதாவின் புத்தகத்தைப் படிக்கும்போதெல்லாம் ஒரு கொண்டாட்ட மனநிலை வந்துவிடும். எதையும் கேஷுவலாக அணுகும் Tongue-in-cheek மனநிலை சுஜாதாவைப் படித்த சிலநாட்களுக்கு இருக்கும்.
இயக்குநர் கேபிள் சங்கரைப் பார்க்கும்போதெல்லாம் தினமும் இந்த மனிதர் காலையில் ஒரு சுஜாதா நாவலைப் படித்துவிட்டுத்தான் வெளியில் வருகிறாரோ என்று தோன்றுகிறது. எப்போதும் கலகலப்புடன், அடுத்தவருக்கும் தொற்றிக்கொள்ளும் உற்சாகத்துடன் வலம் வரும் மனிதர் அவர். நம்மை மாதிரி சொங்கிகளுக்கு அது பெரிய ஆச்சரியம் தான். அவரைப் பார்த்த இரண்டு முறையும் மனிதர் ஃபுல் எனர்ஜியுடன் இருந்தார். நண்பர்களைக் கேட்டால், ’அவர் எப்போதுமே அப்படித்தான்..இத்தனைக்கும் அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது’ என்று வியப்பைக் கூட்டுகிறார்கள்.

அவர் படம் எடுக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, நான் ஆசைப்பட்டது அந்த கொண்டாட்ட மனநிலையை படத்திலும் மனிதர் கொண்டுவர வேண்டுமே என்று தான். இப்போது தொட்டால் தொடரும் படத்தில் இடம்பெறும் ‘பாஸு..பாஸு’ பாடலைக் கேட்டபோது, என் ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. பாடல் இங்கே:



நாட்டு நடப்பையும் மனசாட்சியை ஆஃப் செய்துவிட்டு அலையும் பிஸி மனிதர்களான நம்மையும் திட்டுவது தான் பாடலின் கரு. அதை வேறு யாராவது செய்திருந்தால், இணையப் புரட்சியாளர்கள் பதிவைப் படித்த நிலைமைக்கு நம்மை ஆளாக்கியிருப்பார்கள். ஆனால் கேபிளார் இந்தப் பாடலை மெல்லிய நக்கலுடன் கொடுத்திருப்பதால், நான் மேலே சொன்ன கொண்டாட்ட மனநிலையே நமக்குக் கிடைக்கிறது. ஆண்டனி தாசனின் குரல், பாடலுக்கு ஒரு புது கலரைக் கொடுக்கிறது.

‘யாருக்கும் ஈவு இல்லை..இரக்கம் இல்லை பாஸு..பாஸு’ என்று ஆரம்பிக்கும் பாடல் மெல்லிய கிறக்கத்தைக் கொடுக்கிறது. ‘நியூசெல்லாம் ஸ்கேம் தானே..போச்சு நம்ம காசு, காசு’ என பாடல் முழுக்கவே சமூகக் கிண்டல் கொட்டிக்கிடக்கிறது. வழக்கமான இசையமைப்புப் பாணியைப் பின்பற்றாமல், ஜூஸ் ஸ்டைலில்..அது ஜூஸா, ஜாஸா..ம்ஹூம், இதற்கு மேல் நாம் இசை நுணுக்கத்தை ஆராய்ந்தால், பி.சி.சிவன் ஃபீல் பண்ணுவார். அது ஜூஸோ ஜாஸோ, நம்மை மாதிரி சாராசரி ஆட்களுக்கும் பிடிக்கும் வகையில் ’பாட்டு நல்லாயிருக்கு’ என்பது தான் இங்கே பாயிண்ட்!

நமது யூத் கேபிளாருடன் உண்மையான யூத்களான கார்க்கி பாவாவும் பி.சி.சிவனும் இணைந்து, ரகளையான பாடலைக் கொடுத்திருக்கிறார்கள். ’யானை வரும் பின்னே..மணியோசை வரும் முன்னே’ என்பதற்கிணங்க, படம் எப்படி இருக்கும் என்பதற்கு கட்டியம் கூறும் விதமாக இந்தப் பாடல் இருக்கிறது. இந்தப் பாடலில் தொனிக்கும் ‘கேபிளார் எனர்ஜி’ படத்திலும் இருந்தால், படம் சூப்பர் ஹிட் தான். வாழ்த்துகள்.
மேலும் வாசிக்க... "தொட்டால் தொடரும்..பாஸு பாஸு..ஒரு ரவுசுப் பாடல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, June 20, 2014

வடகறி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
சன்னி லியோன் நடித்திருக்கிறார் எனும் ஒரே ஒரு செய்தியினால் எதிர்பார்க்கப்பட்ட படம். சோலாவாக ஜெய் ஹிட் அடித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதால், அவரும் இந்தப் படத்தை எதிர்பார்த்திருந்தார். என்ன ஆச்சுன்னு பார்ப்போம்.
ஒரு ஊர்ல..:
ஒரு நல்ல போன் வாங்க முடியாமல் கஷ்டப்படும் ஜெய், ஒரு ஐபோனை கண்டெடுக்கிறார். அந்த ஐபோனிற்கு வரும் ஒரு கால் அவரை பெரும் சிக்கலில் மாட்ட வைக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார், கூடவே ஸ்வாதியுடன் காதலில் எப்படி வீழ்கிறார் என்பதே கதை.

உரிச்சா....:
படம் செம ரகளையாக ஆரம்பிக்கிறது. டைட்டில் போடும் முன்பே காமெடிப்பட்டாசு வெடிக்கிறார்கள். ஓல்டு மாடல் நோக்கியா போனை வைத்துக்கொண்டு ஜெய் கஷ்டப்படுவதும், அதிலிருந்து மீள ஒரு கொரியன் செட் வாங்கிவிட்டு ஊரையே ரணகளப்படுத்துவமாக முதல்பாதி முழுக்க காமெடியில் கலக்குகிறார்கள்.

ஸ்வாதி செட் ஆகாது என ஸ்வாதியின் ஃப்ரெண்டை ரூட் விடுவதும், அடுத்து ஸ்வாதியே ஜெய்க்கு கிடைப்பதும் ஜாலியான எபிசோட். இன்றைய மிடில் க்ளாஸ் இளைஞனின் லைஃபை இயக்குநர் அனுபவித்துச் சொல்லியிருக்கிறார். ஜெய்யின் அப்பாவித்தனமும் அதற்குச் சரியாக சூட் ஆகிறது. கீழே கிடந்த ஐபோனை திருப்பிக்கொடுப்போம் என்று ஜெய் போகும்போது, பிரச்சினை ஆரம்பிக்கிறது. பெரிய சிக்கலில் மாட்டிவிட்டார் எனும் சூழலில் இடைவேளை.

பெரிய ஆக்சன் த்ரில்லராக அடுத்து படம் மாறப்போகிறது என்று ஆவலுடன் உட்கார்ந்தால், சிக்ஸர் அடிக்க வேண்டிய இடத்தில் டக் வைத்து விளையாடுகிறார்கள். பெரிய வில்லனாக அறிமுகம் ஆகும் தயாளனையும் கொஞ்ச நேரத்தில் சப்பை ஆக்கிவிடுகிறார்கள். ரவி ஷங்கர் என்று படம் முழுக்க பில்டப் செய்யப்படும் மெயின் வில்லன், கிளைமாக்ஸில் வரும்போது இதற்கா இந்த பில்டப் என்று சலிப்பே வந்துவிடுகிறது. வில்லன்களிடம் சிக்கிய ஹீரோ பெரிதாக ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால், பதட்டமாக சென்னையைச் சுற்றிச் சுற்றி வருகிறாரே ஒழிய பெரிதாக ஒன்றும் செய்வதில்லை. படத்தின் மைனஸ் பாயிண்ட், அது தான்.

இயக்குநர் சரவண ராஜனுக்கு நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமரும், புதுமையாக காட்சிகளை அமைக்கும் திறமையும் இருக்கிறது. முதல்பாதிவரை ஒரு சூப்பர் ஹிட் படத்தைப் பார்க்கிறோம் என்றே தோன்றியது. இரண்டாம்பாதியில் நம்மை சுற்றலில் விட்டதால், படம் ஓகே கேட்டகிரி என்று மட்டுமே சொல்ல முடிகிறது. நல்ல வலுவான வில்லனை இறக்கி, அடித்து விளையாடி இருக்கலாம். ஜாலியாக இருந்தால் போதும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்!

ஜெய்:
அப்பாவி வேடத்திற்கு ஜெய்யை விட்டால் பொருத்தமான ஆளில்லை. அவரது குரலும் அந்த கேரக்டர்க்கு பொருத்தமாக இருக்கிறது. கொடுத்த கேரக்டரை தன்னால் முடிந்தவரை சிறப்பாகவே செய்திருக்கிறார். அதிலும் கொரியன் செட்டை வைத்து அவர் ஊரையே கலக்குவதும், ஸ்வாதியின் அண்ணனுடன் டென்சனுடன் பேசும் காட்சியும் அருமை.

ஸ்வாதி:
நீண்டநாட்களுக்குப் பின் ஜெய்யுடன் சேர்ந்திருக்கிறார். க்ளோசப்பில் முகம் முத்திப்போனது தெரிந்தாலும், நல்ல மெச்சூரிட்டியான நடிப்பு. இடைவேளைக்குப் பின் வழக்கமான லூசுப் பெண் ஹீரோயினாக ஆக்கியிருக்கிறார்கள். ஆனாலும் ரொம்ப நாளைக்கு அப்புறம் அவருக்கு இது நல்ல படம் தான்.
 RJ பாலாஜி:
மனிதர் சரவெடி வசனங்களால் படம் முழுக்க பட்டாசு கொழுத்துகிறார். ‘கலாக்கா காலை மிதிச்ச மாதிரி’ போன்று வந்துவிழும் ஒன்லைன்களுக்கு தியேட்டரே அதிர்கிறது. வில்லன்கள் பிடியில் சிக்கியபின், அவர்களுக்கே ஃப்ரெண்ட் ஆவது ரகளை. (ஆனால் அது தான் படத்தின் சீரியஸ்னெஸ்ஸைக் குறைக்கிறது.) இனி அதிகப்படங்களில் நண்பன் கேரக்டரில் இவரைப் பார்க்கலாம்.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- விறுவிறுப்பாக ஆரம்பித்து சப்பையாக முடியும் இரண்டாம்பாதி
- இப்படிச் செய்யலாமே என நாமே யூகிக்கிற விஷயங்களை ஜெய் செய்யாமல் விட்டுவிட்டு, கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு மீண்டும் வந்து செய்வது. இன்னும் கொஞ்சம் புத்திசாலியாக ஹீரோ கேரக்டரைப் படைத்திருக்கலாம்
- ஸ்வாதியின் ஃப்ரெண்டில் சூசைடு அட்டெம்ப்ட் காமெடி அல்ல. அதற்கு ஜெய் & ஸ்வாதியும் பொறுப்பு. ஆனால் அதைக் காமெடியாக அப்ரோச் செய்ததை ரசிக்க முடியவில்லை
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- படம் முழுக்க வரும் காமெடி வசனங்கள் + பாலாஜி
- ஜெய் + ஸ்வாதி காதல் காட்சிகள்
- யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தில் இருந்து ஏனோ விலகிவிட, அறிமுக இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வினின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ஓகே தான்
- ஐ போனை வைத்து உருவாக்கப்பட்ட பாடல் காட்சி
- அண்ணனாக வரும் அருள்தாஸின் நடிப்பும் எம்.ஜி.ஆர் பற்றிய வசனங்களும்

பார்க்கலாமா? :
முதல்பாதிக்காவும் காமெடிக்காகவும் பார்க்கலாம்.

(அதுசரி, சன்னிலியோன் என்ன ஆச்சுன்னு கேட்கிறீங்களா? அடப்போங்கய்யா..வழக்கம்போல் குவைத் சென்சார்ல அந்தப் பாட்டை கட் பண்ணிட்டாங்க!)

மேலும் வாசிக்க... "வடகறி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

24 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 17, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-8)


8.கதாநாயகனும் குணாதிசயமும்

உங்கள் கதையின் உண்மையான நாயகர் யார் என்று நீங்கள் புரிந்துகொள்வதின் அவசியத்தை சென்ற இருபகுதிகளில் பார்த்தோம். உங்களிடம் நல்ல கதை இருந்தாலும், கதையின் நாயகர் யார் என்பதில் கோட்டை விட்டீர்கள் என்றால் எல்லா உழைப்பும் வீணாகிவிடும். ஏனென்றால் அந்த கேரக்டர் தான், ஆடியன்ஸ் உங்கள் கதைக்குள் நுழையும் நுழைவாயில். மேலும் எந்த கேரக்டரை நாயகராக அமைத்தால், சுவாரஸ்யமான திருப்பங்களையும் சீன்களையும் உண்டாக்க முடியும் என்பதையும் கருத்தில் கொண்டே கதை நாயகரை முடிவு செய்ய வேண்டும்.


திரைக்கதை என்பது ஒரு ஹீரோ பல தடைகளைத் தாண்டி, தன் குறிக்கோளை அடையும் பயணமே ஆகும். அந்த பயணத்தில் முரண்பாடுகளை அதிக அளவு உருவாக்க வேண்டும். அப்போது தான் படம் பார்ப்போருக்கு சுவார்ஸ்யம் குறையாமல் இருக்கும். ஹீரோவின் குணாதிசயங்களிலேயே முரண்பாடுகளை உருவாக்கலாம். ஹீரோவின் சூழ்நிலையில் முரண்பாட்டைக் கூட்டலாம். இதை மீறி ஹீரோ எப்படி ஜெயிப்பார் என்ற யோசனையில் ஆடியன்சை ஆழ்த்துவது அவசியம்.

முதல்மரியாதையில் சிவாஜி ராதாவுடன் இணைய வேண்டும். ஆனால் சிவாஜி யார்? ஊரில் மரியாதைக்குரிய மனிதர். ராதா பின்னால் போனால், மரியாதை அடி வாங்கும். செய்வாரா? அவர் மனைவியோ ராட்சசி. அவள் சும்மா விடுவாளா? படத்தின் முதல்பாதியில் இந்த முரண்பாடுகள் எழுப்பும் கேள்விகளே நம்மை படத்துடன் ஒன்றவைக்கின்றன. 

அவ்வாறு இல்லாமல், ஒரு பொறுக்கி-அவனுக்கு அன்பான மனைவி-அவனுக்கு ராதா மேல் காதல் என்றால் நமக்கு பெரிய ஆர்வம் ஏதும் வந்துவிடாது. சிவாஜி நல்லவராக இருப்பது தான் அந்த காதலுக்கு முதல் பிரச்சினை. அவர் முதலில் தன் மனசாட்சியை மீறி, காதலை ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது மனப்போராட்டம் தெளிவாக நமக்கு காட்டப்படுகிறது. மனைவியை மீறுவதைவிடவும் பெரிய கஷ்டம், அவர் தன் மனசாட்சியை சமாதானப்படுத்துவது தான்.

எனவே ஹீரோவின் குறிக்கோள் என்னவோ, அதற்கு தடையை ஹீரோவின் குணத்தில் ஆரம்பித்து சுற்றுச்சூழல், வில்லன் என எல்லாப் பக்கமும் கொண்டுவர வேண்டும்.
 
 இதற்கு மற்றொரு உதாரணம், பாண்டிய நாடு திரைப்படம். அண்ணனைக் கொன்றவர்களைப் பழி வாங்குவதே ஒன் லைன். நாம் பல படங்களில் பார்த்த ஒன் லைன் தான் இது. அந்த ஹீரோ கேரக்டரின் குணாதிசயத்தைப் பாருங்கள். பயந்த சுபாவம் உள்ள, அடிதடிக்குப் பழக்கமில்லாத, யாரும் அடித்தாலும் வாங்கிவிட்டு வருகின்ற ஒரு சாமானிய கதாபாத்திரம். பழி வாங்குதல் எனும் குறிக்கோளிற்கு முரண்பாடான கேரக்டர் இல்லையா? அது தான் படத்தினை நாம் ரசித்துப் பார்க்க காரணமாக ஆனது.

சினிமாவின் அடிப்படை பலம், படம் பார்ப்பவன் ஹிரோவுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது தான். தியேட்டரின் இருட்டில், அவன் தன்னை ஹீரோவாகவே நினைத்துக்கொள்கிறான். அப்படி அவன் நினைப்பதற்கு ஏற்றவகையில், ஹீரோ கேரக்டரை உருவாக்குவது அவசியம்.

வேற்றுகிரகத்தில் இருந்து வரும் பயங்கர சக்தியுள்ள ஏலியன் தான் ஹீரோ என்றால், நம் ஆட்கள் யார் வீட்டு எழவோ என்று தான் படம் பார்ப்பார்கள். பாண்டிய நாடு ஹீரோவை எடுத்துக்கொண்டால், அவன் நம்மைப் போன்ற சராசரி மனிதனைப் பிரதிபலிக்கும் கேரக்டர். ஆரம்பக் காட்சிகளிலேயே, ஹீரோவுடன் நாம் ஒன்றிவிடுகிறோம்.

குறிக்கோளுக்கு முரண்பாடு ஏற்படுத்தும் குணாதிசயம், பார்வையாளனை அடையாளப்படுத்திக் கொள்ளவும் உதவினால் நமக்கு வேலை எளிது. திரைக்கதையின் ஆரம்பத்திலேயே ‘இவன் நம்ம ஆளு’ என்ற எண்ணத்தை படம் பார்ப்போர் மனதில் ஹீரோ கேரக்டர் உருவாக்கிவிட வேண்டும். அதை உருவாக்க, யதார்த்தமான கேரக்டராக மட்டுமே அது இருக்க வேண்டும் என்பதில்லை.
நல்லவன் என்ற பிம்பத்தை எல்லாருமே ரசிக்கிறார்கள். அந்த பிம்பத்துடன் அடையாளப்படுத்திக்கொள்ளவே மக்கள் விரும்புவார்கள். இதை ப்ளேக் ஸ்னிடர் ‘Save the Cat’ என்கிறார். ஒரு ஹீரோ கேரக்டர் ஒரு சாதாரண பூனையைக் காப்பாற்றினாலே போதும், இவன் நம்ம ஆளு என்ற எண்ணம் சராசரி ரசிகனுக்குத் தோன்று விடும். அந்த ஹீரோ கேரக்டருடன் ரசிகன், ஐக்கியம் ஆகிவிடுவான் என்று சொல்கிறார் ப்ளேக் ஸ்னிடர்.

இது நமக்குப் புதிய விஷயம் அல்ல. இந்தக் காட்சியை நினைவுகூறுங்கள். ஒரு வயதான பெரியவர், ஒரு மாட்டுவண்டியில் லோடு ஏற்றிக்கொண்டு, தானே அதை இழுத்துக்கொண்டு தள்ளாடி வருகிறார். அப்போது மிஸ்டர்.எக்ஸ், ஓடி வந்து அந்த வண்டியை வாங்கி பெரியவருக்கு உதவுகிறார். இது ஒரு பாடல் காட்சியில் வரலாம், தனிக்காட்சியாகவும் வரலாம். அந்த மிஸ்டர்.எக்ஸ் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்குமே?

ஆம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான் அவர். Save the Cat பாலிஸியை ப்ளேக் ஸ்னிடருக்கு முன்பே ஃபாலோ செய்து, படத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் வெற்றிகரமானதாக ஆக்கியவர் அவர்.

ப்ளேக் ஸ்னிடர் பாலிசிப்படி, நீங்கள் ஹீரோவை பார்வையாளனுடன் இத்தகைய சிறிய விஷயங்கள் மூலம் இணைக்காவிட்டால், அதன்பிறகு அந்த ஹீரோ என்ன செய்தாலும் வேஸ்ட் தான்.

சேது படத்தின் ஆரம்பக்காட்சிகளில் காலேஜில் ரவுடித்தனம் செய்பவராக வருவார் விக்ரம். ஆனால் ஊமைப்பெண்ணின் பாவாடையை ஒருத்தன் அவிழ்க்கவும் ஓடிப்போய் ;ஒன்னுமில்லை..ஒன்னுமில்லை என்றபடியே கட்டிவிடுவார். அந்த காட்சியில் விக்ரமின் நண்பர்கள் தான் அவிழ்த்தவனை அடிப்பார்கள். ஆனால் விக்ரம் நம் மனதில் ஆழமாக ஊடுருவி விடுவார். அதன்பின் அவர் அபிதாவைக் கடத்திக்கொண்டு போய் மிரட்டினாலும், நாம் அதைத் தவறு என்று நினைப்பதில்லை. Save the cat பாலிசியின் பவர் அப்படி! அதனால் தான் ப்ளேக் ஸ்னிடர், திரைக்கதை பற்றிய தன் புத்தகத்திற்கு Save the cat என்று பெயர் வைத்தார்.
ஹீரோ எவ்வளவு கெட்ட பழக்கங்களைக் கொண்டவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஏதாவது ஒருவிதத்தில் ரசிகன் ஹீரோவுடன் சிங்க் ஆக, வாய்ப்பு இருக்க வேண்டும். அதைச் செய்யாமல், எத்தனை கோடிகளைக் கொட்டி படம் எடுத்தாலும் வேஸ்ட் தான்.

எனவே ஹீரோவின் கேரக்டர், ரசிகனை இம்ப்ரஸ் செய்யும் அதே நேரத்தில் குறிக்கோளுக்கு முரண்பாட்டைக் கூட்டுவதாக அமைகிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள்.


(தொடரும்)


மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-8)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, June 15, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-7)


7. இன்னும் கொஞ்சம்…கதை நாயகர் பற்றி..

மறுமணம் பற்றி நினைக்காத ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசிய படங்கள், முதல் மரியாதையும் முந்தானை முடிச்சும். முதலாவது குரு பாரதிராஜாவின் மாஸ்டர்பீஸ். இரண்டாவது சிஷ்யர் பாக்கியராஜின் மாஸ்டர்பீஸ். இதுவரை பார்த்த ஒன்லைன் மற்றும் கதையின் நாயகர் கான்செப்ட்டைக் கொண்டு இந்தப் படங்களை இன்று அலசுவோம்.

முதல் மரியாதையின் கதை என்ன?
கிராமத்துப் பெரிய வீட்டுப் பெண்ணான பொன்னாத்தா, காதல் என்ற பெயரில் ஒருவனிடம் ஏமாந்து வயிற்றில் பிள்ளையுடன் நிற்கிறாள். குடும்ப கௌரவம் காக்க,மாமாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஏழை மலைச்சாமி பொன்னாத்தாவை மணக்கிறார். அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தையை தன் குழந்தையாகவே எண்ணி வளர்த்து, திருமணம் செய்து கொடுக்கிறார். ஆனாலும் பொன்னாத்தா மலைச்சாமியை மதிப்பதே இல்லை. அதே நேரத்தில் ஊருக்குப் புதிதாக வரும் குயிலியுடன் மலைச்சாமிக்கு நட்பு ஏற்படுகிறது. அதுவே அவளின் அன்பினால், காதலாக ஆகிறது.

பொன்னாத்தாவுக்கு விஷயம் தெரிய வந்து, அவர்களைப் பிரிக்க முற்படுகிறாள். அதே நேரத்தில் பொன்னாத்தாவின் காதலன் அவளைத் தேடி அந்த ஊருக்கு வர, மலைச்சாமியின் குடும்ப கௌரவத்தைக் காக்க குயிலி அவனைக் கொன்றுவிட்டு, ஜெயிலுக்குப் போகிறாள். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் மலைச்சாமி, பெயிலில் வரும் குயிலியைப் பார்த்துவிட்டு மனநிறைவுடன் இறக்கிறார். குயிலியும் அவர் பிரிவு தாளாது மரணமடைய,  வாழ்க்கையை அடுத்த உலகிலாவது மகிழ்ச்சியுடன் வாழ, அந்த உன்னத காதல் ஜோடி நம்மிடமிருந்து விடை பெறுகிறது! (நன்றி: www.tamilss.com – தமிழில் ஒரு உலக சினிமா தொடர்!)

முதல் மரியாதை கதை இரண்டு தலைமுறைகளாக நடக்கும் பெரிய கதை. பொன்னாத்தாவின் காதல் முதல் பொன்னாத்தா மகளின் கல்யாணம்/குழந்தை வரை அந்தக் கதை பேசுகிறது. இந்தக் கதையின் நாயகராக மூன்றுபேரைத் தேர்ந்தெடுக்க முடியும்.
  • வடிவுக்கரசி
  • ராதா
  • சிவாஜி
 
பொன்னாத்தாவை கதையின் ஹீரோ(யின்) ஆகக் கொண்டால், ஒன்லைன் இப்படி வரும் :
குடும்ப கௌரவத்தைக் காரணம் காட்டி பொன்னாத்தாவின் காதல், அவள் பெற்றோரால் மறுக்கப்படுகிறது. வேறொருவருக்கு மணம் முடித்து வைக்கிறார்கள். ஆனாலும் அவள் கணவனை தன் வாழ்க்கைத்துணையாக ஏற்கவில்லை. காதலனை நினைத்தே வாழ்கிறாள். காதலனுடன் சேர்வாளா?

(இந்த ஒன்லைன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால், காதலன் நல்லவன் ஆக வேண்டும். அந்த காதல் விவரிக்கப்பட வேண்டும். கணவன் டம்மியாகவோ வில்லனாகவோ ஆக வேண்டும். அப்புறம் அது முதல்மரியாதையாக இருக்காது, அந்த ஏழு நாட்கள் ஆகிவிடும்!)

குயிலினை மையப்படுத்தினால்..
ஏழைப் பெண்ணான குயில், தன் தந்தையுடன் வாழ இடம்தேடி ஒரு கிராமத்திற்குச் செல்கிறாள். அவளுக்கு உதவும் அந்த ஊர்ப்பெரியவர் மேல் அவளுக்கு காதல் வருகிறது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதையும்தாண்டி அந்தக் காதல் ஜெயித்ததா?
(முதல்மரியாதை கதையைவே பெரிய மாற்றமின்றி இந்த ஆங்கிளில் சொல்லிவிடலாம். ராதாவின் பின்புலம் பற்றிய காட்சிகளை அதிகப்படுத்த வேண்டிவரும். ராதா ஏன் வயதானவரைக் காதலிக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது பின்புலக் காரணம் சொல்ல வேண்டிவரும்.)

மலைச்சாமியை மையப்படுத்தினால்..
ஊர்ப்பெரியவரான மலைச்சாமிக்கு மனைவியுடன் சுமூக உறவில்லை. அந்த ஊருக்குப் பிழைக்க வரும் குயில் மேல் அவருக்குக் காதல் வருகிறது. அந்தக் காதல் ஜெயித்ததா?
(இதைத்தான் பாரதிராஜா எடுத்துக்கொண்டார்.)

எனவே இந்தக் கதையைச் சொல்ல இரு வாய்ப்புகள் உண்டு. பாரதிராஜா சிவாஜியின் கோணத்திலேயே சொல்லும் ஆப்சனை எடுத்துக்கொண்டார். அதனாலேயே படம் சிவாஜியிடம் ஆரம்பிக்கிறது.
ஹீரோ : சிவாஜி
குறிக்கோள் : காதல்/அன்பு
வில்லன்: திருமணம்/கௌரவம்

பெர்ஃபெக்ட்..இல்லையா? (படம் டிராஜடி வகை என்பதால், முடிவு ஹீரோவின் தோல்வி!)

மறுமணத்தில் விருப்பமில்லாத ஹீரோவைக் கொண்ட முந்தானை முடிச்சு படத்தை எடுத்துக்கொள்வோம்.
மனைவியைப் பறிகொடுத்துவிட்டு கைக்குழந்தையுடன் இருப்பவர் பாக்கியராஜ். ஒரு கிராமத்திற்கு வாத்தியாராகச் செல்கிறார். அந்த ஊர் நாட்டாமையின் மகள் ஊர்வசி. ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் வைப்பாட்டி வைத்திருப்பதைப் பார்த்து வெறுத்துப்போயிருக்கும் அவருக்கு, மனைவி இறந்தும் வேறுபெண்ணை ஏறெடுத்துப் பார்க்காத ஹீரோ மேல் காதல் வருகிறது.

‘இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ எனும் சத்தியத்தின் காரணமாகவும், ‘சித்தி வந்தால் பையனை கொடுமைப்படுத்துவாள்’ எனும் பயத்தின் காரணமாகவும் பாக்கியராஜ் மறுக்கிறார். ஆனாலும் அவர் தன்னிடம் தவறாக நடந்ததாகப் பழிசுமத்தி, அவரை மணம் முடிக்கிறார் ஊர்வசி. அதனால் பாக்கியராஜ் அவருடன் ‘சந்தோசமாக’ வாழ மறுக்கிறார். இறுதியில் ஊர்வசியின் அன்பினாலும் தியாகத்தாலும் மனம் மாறி, பாக்கியராஜ் அவரை ஏற்றுக்கொள்கிறார்.

இந்தக் கதையில் இரண்டே முக்கியக் கேரக்டர்கள் தான். அவர்களின் பார்வையில் ஒன்லைன் அமைத்தால்…

பாக்கியராஜ்: இன்னொரு திருமணம் செய்வதில்லை எனும் வைராக்கியத்துடன் இருக்கும் ஹீரோவின் மேல் ஹீரோயின் காதல் கொள்கிறாள். ஹீரோ ஏற்றுக்கொண்டாரா? (அதாவது..ஹீரோ தோற்றாரா?)

ஊர்வசி : தன் தந்தை உட்பட பெரும்பாலான ஆண்கள் மனைவி இருக்கும்போதே வைப்பாட்டி வைத்துக்கொண்டிருப்பதைக் கண்டு நொந்துபோகும் ஹீரோயின், சுத்தமான ஆம்பிளையைத் தான் கல்யாணம் செய்வேன் என்ற ‘உயர்ந்த’ குறிக்கோளுடன் இருக்கிறாள். அப்படி ஒரு ஆணை சந்திக்கிறாள். ஆனால் அவரோ மறுமணம் செய்வதில்லை எனும் வைராக்கியத்துடன்(கவனிக்க..அது குறிக்கோள் அல்ல!) இருக்கிறார். அவர் மனதை ஹீரோயின் வென்றாரா?

இந்த இரண்டு ஆப்சனில் எது நன்றாக இருக்கிறது? முதலாவதில் ஹீரோவிடம் குறிக்கோளே இல்லை, அது ஒரு தற்காப்பு வைராக்கியம் தான். இரண்டாவதில் ஹீரோயினிடம் இருப்பது தான் குறிக்கோள். கதையின் வில்லன், ஹீரோவின் வைராக்கியம். இந்தக் கதையின் நாயகி ஊர்வசி தான். அதனாலேயே படம், ஊர்வசியின் பார்வையிலெயே நகர்கிறது.

படம் ஆரம்பிக்கவுமே, ஊர்வசி கேரக்டர் நமக்கு விளக்கப்படுகிறது. அவர் ஒரு தைரியமான, விளையாட்டுத்தனமான புத்திசாலிப்பெண். அவருடைய ஒரே குறிக்கோள் ‘ஒரு வைப்பாட்டி..கிப்பாட்டி வைக்காமப் பார்த்துக்கணும்’ என்று காமெடியாக காட்சிகளிலும் பாடலிலும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு தான் ஹீரோவே படத்தில் எண்ட்ரி ஆகிறார், படம் ஆரம்பித்து 18 நிமிடங்கள் கழித்து!

படம் முழுக்க அட்டாக் செய்வது ஊர்வசி தான். காதல்-பொய்ப்பழி-காமம்-அன்பு-தியாகம் என ஐந்து விதங்களில் அதே வரிசையில் ஊர்வசி அட்டாக் செய்கிறார். பாக்கியராஜின் வேலை அதைத் தடுப்பதும், இறுதியில் தோற்பதும் தான்.

கதாசிரியர்-திரைக்கதையாசிரியர்-இயக்குநர்-ஹீரோவாக இருந்தும், பாக்கியராஜ் ஏன், தான் பின்வாங்கி ஹீரோயினை முக்கியப்படுத்தினார் என்று புரிகிறதா? அது புரிந்ததென்றால், அவரை ஏன் திரைக்கதை மன்னன் என்று கொண்டாடுகிறோம் என்பதும் புரிந்துவிடும்.

(செவ்வாய்..தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-7)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.