Friday, May 30, 2014

ஹிட்ச்காக்கின் The 39 Steps (1935) - திரை விமர்சனம்

எல்லா இயக்குநர்களுக்கும் ஒரு ஃபேவரிட் கதைக்கரு இருக்கும். அதைக் கையில் எடுத்தால், பின்னி விடுவார்கள். பாலச்சந்தருக்கு உறவுச்சிக்கல், ஷங்கருக்கு ’ஜெண்டில்’ மேன் என சில ஸ்பெஷாலிட்டி தீம்கள் உண்டு. அந்தவகையில் ஹிட்ச்காக்கின் ஃபேவரிட் தீம், ஒரு அப்பாவி செய்யாத குற்றத்திற்குப் பழிசுமத்தப்பட்டு தப்பி ஓடுதல்! 

ஹிட்ச்காக்கின் மெகா ஹிட் படமான North By Northwest மற்றும் Young and Innocent, Saboteur போன்ற படங்களில் இதே தீம் தான். இந்தப் படத்திற்கு முன் 17 படங்களை அவர் டைரக்ட் செய்திருந்தாலும், ஹிட்ச்காக் ஸ்டைல் என்று ஒன்று தெளிவாக உருவானது இந்தப் படத்தின் மூலம் தான்.
ஹீரோ ஹேன்னி (Robert Donat)   ஒரு பெண்ணுக்கு தன் ரூமில் ஓர் இரவு அடைக்கலம் கொடுக்கிறான். அவள் ஒரு ஸ்பை என்றும் முக்கியமான தகவல் இந்த நாட்டைவிட்டு கடத்தப்படப் போவதாகவும் அதைத் தடுக்க தான் முயல்வதாகவும் சொல்கிறாள். அதனால் அவளை சிலர் ஃபாலோ பண்ணி, கொல்ல முயல்வதாகச் சொல்கிறாள். ஹென்னி அந்தக் கதையை சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. அந்த இரவில் அவள் கொல்லப்படுகிறாள். சாகும்முன் ஒரு மேப்பைக் காட்டி, ஸ்காட்லாண்டில் இருக்கும் ஒரு மனிதரைச் சந்தித்து அவள் விட்ட பணியை முடிக்கச் சொல்கிறாள். அவளைக் கொன்ற பழி ஹேன்னி மேல் விழுந்து போலீஸ் தேட, தன்னைக் காப்பாற்றிக்கொண்டே ஹேன்னி எப்படி அந்த வில்லன் கூட்டத்தை ஒழித்தான் என்பதே கதை.

இந்தப் படமும்  John Buchan என்பவரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான். வழக்கம்போல் ஹிட்ச்காக்கின் கைவண்ணம், திரைக்கதையில் உண்டு. படத்தின் ஆரம்பத்தில் வரும் பெண் ஸ்பை கேரக்டரையும், பிறகு வரும் ஹீரோயின்( Madeleine Carroll) கேரக்ட்ரையும் அவர் சேர்த்தார். படத்தை சுவாரஸ்யமானதாக அது ஆக்கியது. உயிரைக் காப்பாற்ற ஓடும்போதும், கூலாக இருக்கும் ஹீரோ எனும் கான்செப்ட்டை இதில் தான் அவர் கொண்டு வந்தார். ஆரம்பம் முதல் இறுதிவரை ஹேன்னி, எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் ஜாலியான ஆளாகவே வருகிறார். ஆபத்தில் இருந்து தப்பிக்க ஓடும்போது, ஹீரோயினும் அந்த பயணத்தில் இணைவது எனும் ஹிட்ச்காக்கின் இன்னொரு ஸ்டைலும் இதில் உருவானது.
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஆரம்பம் முதலே மோதல் தான். இரண்டு முறை ஹீரோவை போலீஸில் மாட்டிவிடுகிறார் ஹீரோயின். பின்னர் அவரும் ஹீரோவுடன் கைவிலங்கில் சிக்கிக்கொள்வது வேடிக்கை. கை விலங்கினை மறைத்தபடியே ஒரு லாட்ஜில் தங்கி, ஒரு இரவைக் கழிக்கும் சீகுவென்ஸ், செம ஜாலியானது. Robert Donat கேஷுவலாக நடித்து, ஒரு ஊடல் எஃபக்ட்டை கொண்டுவந்திருப்பார். ஹீரோயின் பெயர் மேடலின்( Madeleine Carroll) . அவர் பெயரைத்தான் வெர்டிகோ ஹீரோயின் கேரக்டருக்கு வைத்தாரா என்பது ஹிட்ச்காக்கிற்கே வெளிச்சம்!

ஹீரோ தப்பி ஓடும்போது வழியில் ஒரு விவசாயி வீட்டில் தங்குவதாக ஒரு சீக்குவென்ஸ் வரும். அட்டகாசமாக இருக்கும். விவசாயி வயதானவர், பக்தி நிறைந்த கிறிஸ்டின். அவர் மனைவியோ இளம்பெண். ஹீரோவும் அந்த பெண்ணும் கேஷுவலாகப் பேசிக்கொள்வதெல்லாம் புருசனுக்கு தப்பாகவே தெரியும். அதிலும் டைனிங் ஹாலில் ஒரு பிரேயர் சீன் வரும். சஸ்பென்ஸ் காட்சிகளை ஜாலியாகச் சொல்ல முடியும் என்று காட்டியிருப்பார் ஹிட்ச்காக். 

அங்கேயும் போலீஸ் வந்துவிட, விவசாயியின் கோட்டை அந்த பெண் ஹீரோவுக்கு கொடுத்து, தப்பி ஓடும்படி சொல்வார். கிளம்பும் ஹீரோ, படக்கென்று அந்தப் பெண்ணிற்கு ஒரு கிஸ் அடித்துவிடுவார். அந்தப் பெண் அப்போது காட்டும் உணர்ச்சியும் ஹிட்ச்காக் வைத்த அந்த ஒரு ஷாட்டும், ஒரு மிகச்சிறந்த சிறுகதைக்குச் சமம்.
ஹீரோ துப்பாக்கியால் சுடப்படும்போது, அவர் அணிந்திருக்கும் முருகர் டாலரோ சிலுவையோ தோட்டாவை தடுப்பது போல் பல படங்களில் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அதை ஆரம்பித்து வைத்தது இந்தப் படம் தான். விவாசியி கோட்டில் ஒரு பைபிள் இருக்கும். ஹீரோ சுடப்படும்போது, பைபிள் அவரைக் காப்பாற்றும். இதில் இருந்த ஆன்மீக டச், பலரையும் கவர்ந்தது. பல மொழிப்படங்களுக்கும் அந்த ட்ரிக் இன்ஸ்பிரேசனாக அமைந்தது.

முதல் விவசாயி தம்பதிகளுக்கு நேரெதிராக காதல் நிறைந்த இன்னொரு தம்பதி ஜோடி, லாட்ஜ் ஓனர்களாக இரண்டாம்பாதியில் வருவார்கள். ஹீரோ-ஹீரோயின்னை வில்லனிடம் இருந்து காப்பாற்றுவார்கள். அவர்களிடம் இருந்து கைவிலங்கை மறைத்தபடியே ஹீரோ-ஹீரோயின் நெருக்கமான தம்பதிகளாக நடிப்பதும், அதை அந்த அம்மா ரசிப்பதும் அதகளம். 

இந்தப் படம் சீகுவென்ஸ், சீகுவென்ஸாக நகரும் தன்மை கொண்டது. ஒரு இடத்தில் கொலை, அங்கேயிருந்து தப்பி இன்னொரு இடம்,அங்கே கிடைக்கும் க்ளூவை வைத்து அடுத்த இடம், செல்லுமிடமெல்லாம் ஆபத்து, துணைக்குக் கிடைக்கும் ஹீரோயினுடன் ரொமான்ஸ், படத்தின் ஆரம்பக் காட்சியுடன் தொடர்புடைய கிளைமாக்ஸ் என அழகான சீட்டுக்கட்டு மாளிகை போல் ஹிட்ச்காக், இந்தப் படத்தினை அடுக்கியிருப்பார்.
இந்தப் படத்திலும் Maccuffin-ஆக, வில்லன்கள் கடத்தும் ரகசியம் வருகின்றது. எப்போதும் போல், அதற்கு மரியாதை இல்லை. இந்தப் படமும் நாவலும் உண்மையிலேயே வாழ்ந்த ஒரு மனிதரின் டேலண்ட்டை மையமாக வைத்து உருவானது. படத்தில் மிஸ்டர் மெமரி என்ற பெயரில் அவர் வருவார். அவரால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். 

கோவில்பட்டி பகுதியில் கனகசுப்புரத்தினம் என்று ஒருவர் இருந்தார். தசாவதானி என்று அவரைச் சொல்வார்கள். மாணவர்களிடம் பல விஷயங்களைச் சொல்லச் சொல்வார். 30-40 பேர் வெவ்வேறு விஷயங்களைச் சொல்வோம். எல்லாரும் சொல்லி முடித்தபின், யார் என்ன சொன்னார்கள் என்பதை அதே ஆர்டரிலும் மாற்றியும் அவரால் சரியாகச் சொல்ல முடியும். 25வது ஆள் கேட்டாலும், அவன் சொன்னதைச் சொல்வார். 9வது ஆள் கேட்டாலும் அவன் சொன்னதைச் சொல்வார். அந்த மாதிரியான ஒரு மனிதரின் மீதான இன்ஸ்பிரேசனில் உருவானது, இந்தப் படம்.

ஒரு சீரியஸான த்ரில்லர் கதையை காமெடியாகவும் ரொமாண்டிக்காகவும் சொல்வது எப்படி என்பதற்கு உதாரணம், இந்தப் படம்.

படத்தின் யூ-டியூப் லின்க் : http://www.youtube.com/watch?v=k4v7vUIm4Ws
டொரண்ட் : http://kickass.to/the-39-steps-1935-brrip-x264-zeberzee-t5651458.html

மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக்கின் The 39 Steps (1935) - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 25, 2014

திரைக்கதை சூத்திரங்கள் - (பகுதி-3)

3. கருவோடு ஒத்துவாழ்

நாம் எழுதும் கதையின் கரு, ஏற்கனவே எங்கேயோ சொல்லப்பட்ட விஷயமாகவே இருக்கும். திரைக்கதை என்பது கருவோ, கதையோ அல்ல. எப்படி அந்த விஷயத்தைச் சொல்கிறோம் என்பதே. 

அபூர்வ சகோதரர்கள் படத்தில் ’உன்னை நினைச்சேன்’ பாடலை நீங்கள் மறந்திருக்க முடியாது. ஹீரோயின் தன்னைத்தான் காதலிப்பதாக எண்ணும் ஒருவன், அவள் காதலிப்பது வேறு ஒருவனை என்று உணர்ந்து பாடும் பாடல். தவறான புரிதல்/ஏமாற்றம் என்பது தான் அந்த கமல்-ரூபினி கிளைக்கதையின் தீம். இதே தீமை எடுத்து ஒரு முழுப்படமாக கொடுக்க முடியும்.

இயக்குநர் அமீர் ‘மௌனம் பேசியதே’ படத்தில் இதே தீமை எடுத்துக்கொண்டு, வித்தியாசமான திரைக்கதையுடன் நம்மை அசத்தினார். அந்த படத்தின் முழு கிரெடிட்டும் அமீரைத்தான் சேரும். அபூர்வ சகோதரர்கள் பார்த்துத்தான் அமீர் மௌனம் பேசுயதே எடுத்தார் என்பது நம் வாதம் அல்ல. அது சில இளைஞர்கள் வாழ்வில் நடக்கின்ற சாதாரண விஷயம் தான். அது ஒரு நல்ல படைப்பாக வருவது என்பது, அது யார் கையில் சிக்குகிறது என்பதைப் பொறுத்தது. எனவே ஒரு தீம் தோன்றும்போதே, இது பழையது என்று ஒதுக்கத் தேவையில்லை.

தமிழில் வந்த சிறந்த பொழுதுபோக்குப் படங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டால், கண்டிப்பாக ஜெண்டில்மேனும் இடம்பெறும். படம் வெளிவந்தபோது, நான் தியேட்டரில் நான்குமுறை அந்தப் படத்தைப் பார்த்தேன். அதுவரை பார்த்திராத புதுவகையான மேக்கிங்கில், அந்தப் படம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது.
அந்த படத்தின் தீம் ’இடஒதுக்கீடு கூடாது’ என்பது தான். இது மிகவும் சவாலான தீம். தமிழகத்தில் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்ற விஷயம், அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றிய, முன்னேற்றும் விஷயம். அதற்கு எதிராக ஒரு கலைப்படம் எடுக்கலாம், ஆனால் கமர்சியல் படம் எடுக்க முடியுமா? எடுத்தாலும் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் யாருக்குமே வரும். 

அதையும் மீறி ஜெண்டில்மேன் ஜெயித்தது. இடஒதுக்கீட்டில் படித்து, அதன்மூலம் வேலை வாங்கி, அதன்மூலம் இந்த லேப்டாப்பையும் வாங்கியிருக்கும் நானே ஜெண்டில்மேனை சிறந்த பொழுதுபோக்குப் படம் என்று டைப் செய்யும் அளவிற்கு, அந்தப் படம் ஜெயித்தது. ஏன்?

இட ஒதுக்கீடு என்பது 97% மக்களுக்கு நன்மையையும் 3% மக்களுக்கு தீமையையும் உண்டாக்கிய விஷயம். ஒரு கமர்சியல் படம் 100% மக்களின் ஆதரவை நாடி நிற்பது. 97% மக்களுக்கு எதிரான ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு ஷங்கர் ஜெயித்தது எப்படி? அங்கே தான் கரு என்பது பற்றிய தெளிவு வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தந்தை பெரியார் போன்ற மகான்கள் போராடி வாங்கிய விஷயம், இடஒதுக்கீடு. அது உயர்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஏழைகளைப் பாதிக்கிறது என்பதும் உண்மை. 97% மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை அதுவே என்பதும் உண்மை. ஜனநாயகம் எண்ணிக்கையின் அடிப்படையில் இயங்குவது என்பதால், 97% மக்களின் பக்கமே அது நிற்கிறது.
அதை ஷங்கர் எப்படி எதிர்த்து கமர்சியலாக வெற்றிபெற கீழ்கண்ட விஷயங்கள் உதவின:

முதலாவது, ஒரு பக்கா ஆக்சன் மசாலா கதை. (நண்பன் மரணத்துக்குக் காரணமான விஷயத்தை ஹீரோ எதிர்க்கிறான்/பழிதீர்க்கிறான்)

இரண்டாவது, அதுவரை தமிழ் சினிமா கண்டிராத ’காட்சிகளில் பிரம்மாண்டம்’ எனும் புதிய கான்செப்ட்

மூன்றாவது, ஏ.ஆர்.ரஹ்மான் – பிரபுதேவா போன்ற ஜாம்பவான்களின் கூட்டணி.

இவை எல்லாவற்றையும்விட, தீம் பற்றிய தெளிவு. நாம் ஹரிதாஸ் உதாரணத்தில் பார்த்தது போல, எடுத்துக்கொண்ட கருவிற்கு எதிரான எந்தவொரு விஷயமும் படத்தில் இருக்கக்கூடாது.

இட ஒதுக்கீடு வேண்டாம் என்று ஒருவன் ப்ளாக்கிலோ ஃபேஸ்புக்கிலோ எழுதினால் அதற்கு எதிர்வினை எவ்வாறு வரும்?

  •        5000 ஆண்டுகள் அடிமைகளாய் இருந்தோம்.
  •    வம்சவம்சமாய் படித்த உங்களுடன் நாங்கள் போட்டி போட வேண்டும் என்பது நியாயமல்ல.
  •    -   நீங்கள் செய்த சாதிக்கொடுமைகளை மறக்க முடியுமா?
  •   இப்போதும் அந்த மனநிலை உங்களுக்கு இருக்கத்தானே செய்கிறது? எங்களை தாழ்வாகத்தானே எண்ணுகிறீர்கள்?
இன்னும் பல டீசண்டான கமெண்ட்கள் வரும் என்றாலும் பொதுவாக வரும் எதிர்வினை சாதி ஏற்றத்தாழ்வும், கல்வி மறுக்கப்பட்ட கொடுமையும் தான். இட ஒதுக்கீடு வேண்டாம் என்று படத்தில் சொல்லும்போது, இட ஒதுக்கீட்டு ஆதரவான எந்தவொரு விஷயமும் குறிப்பாக இந்த இரு விஷயங்களும் படத்தில் எங்கேயும் வந்துவிடக்கூடாது. அதை கவனமாகச் செய்துமுடித்திருப்பார் ஷங்கர்.

கப்ளிங்ஸ் விளையாட வேண்டும் என்று ‘கருப்பான’ செந்தில் கூப்பிட்டால் மாமிகள் சந்தோசமாக குழந்தை போல் ஓடிவருவார்கள். அந்த படத்தில் இப்படி ஒரு யதார்த்தமான சீன் இருந்தால்..:

செந்தில் : மாமி, தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணீ தாங்களேன்
மாமி: யாரடா அம்பி நீ? திடீரென்று இங்கே வந்து ஜலம் கேட்டுண்டு நிற்கிறாய்? என்ன குலம் நீ?

இப்படி ஒரு சீனை வைத்தால், மெய் மறந்து படம் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழனுக்குள் இருக்கும் திராவிடன் முழித்துக்கொள்வான். அப்புறம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக என்ன சொன்னாலும் எடுபடாது, படம் பப்படம் ஆகிவிடும்!

அதே போன்றே ‘நீங்க ஃபெயிலுண்ணே..நான் எட்டாவது பாஸுண்ணே’ காமெடியில் ‘நம்மளை எல்லாம் எங்கடா இவங்க படிக்க விட்டாங்க?’ என்று ஒரு திராவிட டயலாக் சேர்த்தாலும் கதை கந்தலாகிவிடும்.
ஜென்டில்மேனில் வரும் பிராமணர்கள் நல்லவர்கள். குழந்தை போல் விளையாடும் கள்ளம் கபடமற்ற மனிதர்கள். எந்தவொரு இடத்திலும் ஏற்றத்தாழ்வு காண்பிக்காத உத்தமர்கள். இட ஒதுக்கீட்டால் அப்பளம் விற்றுப் பிழைக்கும் சாமானியர்கள். 

இது தான் தெளிவு. என்ன கருவை எடுத்துக்கொண்டோமோ, அதன் முழுவீச்சையும் வரலாற்றையும் மனதில் கொண்டு, அதற்கு எதிரான எந்தவொரு சிறுவிஷயமும் பார்வையாளனின் கண்ணில் அகப்படாதபடி, கதை சொல்லும் திறமை.

ஹரிதாஸ்(2013) படத்தின் முடிவில் ஆட்டிசக்குறைபாடு உள்ள சிறுவன், மாராத்தான் போட்டியில் வெல்கிறான். அவனுக்காக கஷ்டப்பட்ட அப்பா, அதைக் காண முடியாமல் இன்னொரு இடத்தில் சாகிறார். அவனது ஆசிரியை தனது வாழ்க்கையையே அந்த சிறுவனுக்காக அர்ப்பணிக்கிறார். எவ்வளவு உணர்ச்சிகரமான முடிவு! ஆனால் நம்மால் முழுக்க அந்தப் படத்துடன் ஒன்ற முடிந்ததா?

அதே நேரத்தில் ஜெண்டில்மேன் படம், நமக்கு மாறுபட்ட கருத்தைச் சொன்னாலும் அதனுடன் ஒன்றிப்போக முடிந்தது. ஷங்கரை தமிழின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ள முடிந்தது.
அதற்குத் தான் சொல்கிறோம். என்ன கரு என்பதில் தெளிவாக இருங்கள். அதை எப்படிக் காப்பாற்றுவது என்பதை திரைக்கதையை டெவலப் செய்யும்போதும், ஒவ்வொரு சீனை எழுதும்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். சுவாரஸ்யத்திற்காக, காமெடிக்காக, மசாலாவுக்காக என்று கருவிற்கு எதிரான எதையும் சேர்க்காதீர்கள்.

ஒரே படத்தில் இரண்டு மூன்று தீம்கள் இருப்பதாகத் தோன்றினால், அதில் எதுவுமே பாதிக்கப்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். தீமே இல்லையென்றால், அது சரியா என்று யோசித்துக்கொள்ளுங்கள். பொதுவாக காதலாவது இருக்கும்!

பதிவில் சொல்லப்படும் விஷயத்தை, உங்களுக்குத் தெரிந்த சினிமாக்களில் அப்ளை செய்து பாருங்கள். இப்போது உங்கள் மனதில் இருக்கும் கதையை கையில் எடுங்கள். மேலே சொன்னதை வைத்து, அதன் மையக்கரு என்ன? ஒட்டுமொத்தக் கதையில் அது செட் ஆகிறதா? சுவாரஸ்யத்திற்காக அதை நாம் வீரியமிழக்கச் செய்கிறோமா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.…தொடர்வோம்.

டிஸ்கி-1: இடஒதுக்கீடு சரியா, தவறா என விவாதிக்க, இணையத்தில் நிறைய வலைத்தளங்கள் இருக்கின்றன. எனவே அத்தகைய விவாதத்தை இந்த சினிமாப் பதிவின் பின்னூட்டத்தில் ஆரம்பிக்காதீர்கள். தீமை விளக்கவே ஜெண்டில்மேன் எடுத்துக்கொள்ளப்பட்டதே தவிர, வேறு அரசியல் காரணம் எதுவும் இந்தப் பதிவிற்கு இல்லை…..நன்றி!

டிஸ்கி-2: சென்ற பதிவில் ‘காதலுக்கு மரியாதை படம் உங்க கருத்துக்குப் பொருந்தவில்லையே?’ என்று பதிவர் மொக்கைராசு கேட்டிருந்தார். யோசித்துப் பார்த்தால் அந்த படத்தின் கரு, காதல் மட்டும் அல்ல என்பது புரியும். அதன் கரு ‘பாசமா? காதலா?’ என்பதால் இருதரப்பையும் சொல்லியே ஆகவேண்டிய நிலை. அதை மிகச் சிறப்பாக பாசில் பேலன்ஸ் செய்து சொல்லியிருப்பார். அந்தப் படத்தை குடும்பம் குடும்பமாகப் போய் பார்த்து கொண்டாடியதற்கு அது ஒரு காரணம்.

மேலும் எல்லா விதிகளுக்கும் விதிவிலக்குகள் இருந்தே தீரும். பாசில் போன்ற ஜாம்பவான்களால் கருவுக்கு எதிரான விஷயத்தை உள்ளே கொண்டுவந்தாலும் ஜெயிக்க முடியும். ஆரம்பக் கட்டத்திலேயே விதிகளை மீற வேண்டாம் என்பதே இந்த தொடரில் வரப்போகும் எல்லா விதிகளுக்கும் நாம் சொல்வது. மேலும் ஜெண்டில்மேன் போன்ற கதைக்களத்தில் கருவோடு ஒத்துவாழ்வதே நல்லது. சென்ற வாரப் பதிவிற்கு டெக்னிகலாய் கமெண்ட் போட்ட அந்த உத்தமர்க்கு நன்றி.

(தொடரும்)

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - (பகுதி-3)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, May 23, 2014

கோச்சடையான் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் படமும் கோச்சடையான் அளவிற்கு கேலிக்கு ஆளானதில்லை. பலவருட தயாரிப்பு, சுல்தான் தான் கோச்சடையான் - ராணா தான் கோச்சடையான் என ஏகப்பட்ட வதந்திகள், பொம்மைப் படம் எனும் குறை படத்தை ரிலீஸ் செய்வதில் எழுந்த சிக்கல்கள் என சூப்பர் ஸ்டாரே வெறுத்துப்போய் லிங்கா ஆகிவிட்டார். அப்படி ரிலீஸ்க்கு முன்பே புகழ்பெற்ற படம், இன்று ரிலீஸ் ஆகிவிட்டது. எப்படி இருக்குன்னு......

ஒரு ஊர்ல..:
கோட்டையபட்டினம் நாட்டின் தலைமைத்தளபதி கோச்சடையான். தன் படைவீரர்களைக் காக்க அவர் செய்யும் ஒரு செயலால், தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறார். கோச்சடையானின் மகன் ராணா அவர் மீதான பழியை நீக்கி, பழிவாங்குவதே கதை. (அப்போ இந்தப் படம் ராணா தானேன்னு கேட்கக்கூடாது)

உரிச்சா....:
முதலிலேயே சொல்லிவிடுகிறேன்...நாம் பயந்த அளவிற்கு படம் மோசம் இல்லை.

படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திற்கு ‘இது ரஜினி தானா? சரத்குமார் தானா? தீபிகா தானா?’ என்று நம் மனம் ஆராய்ச்சியில் இறங்குவது வாஸ்தவம் தான். உயிரோடு இருக்கும் ஆட்களின் தோற்றத்தில் பொம்மைகள் நடமாடும்போது, நாம் கம்பேர் பண்ணுவது இயல்பு தான். ஆனால் முதல் அரைமணி நேரத்தில் ‘ஓகே’ என்று செட்டில் ஆகிவிடுகிறோம்.
சிறுவன் ராணா கோட்டயப்பட்டினம் நாட்டில் இருந்து, அவர்களின் எதிரி நாடான கலிங்கபுரிக்கு போவதில் ஆரம்பிக்கிறது படம். அங்கே வளரும் ராணா, தன் வீரத்தால் படைத்தளபதியாக ஆகிறார். மனதிற்குள் ஒரு திட்டத்தோடு காய் நகர்த்தி, அந்த நாட்டின் மன்னன் ஜாக்கிசெராப் - இளவரசர் ஆதியை ஏமாற்றி, தான் நினைத்தபடியே கோட்டயப்பட்டினத்திற்கு ஒரு வீரனாகத் திரும்பி வருகிறார். 

கலிங்கபுரியில் மாமா நாகேஷ் (ஆம், அவர் கேரக்டரையும் பொருத்தமாக உருவாக்கியிருக்கிறார்கள்) கோச்சடையானின் தங்கையை வளர்த்து வருகிறார். கோச்சடையானின் அண்ணன் சிறுவயதிலேயே காணாமல் போய் விட்டதாகச் சொல்கிறார் நாகேஷ். ராணாவின் தங்கையை இளவரசர் சரத் குமார் காதலிக்க, இளவரசி தீபிகா படுகோனே ராணாவை காதலிக்கிறார். இந்த பண்டமாற்று முறை அரசர் நாசரை கடுப்பேற்றிவிடுகிறது. கூடவே ராணாவின் பழி வாங்கும் கதையும் சேர்ந்துகொள்ள, படம் அதன்பின் ஜெட் வேகத்தில் செல்கிறது.

உண்மையில் இந்தப் படத்தைக் காப்பாற்றுவது கே.எஸ்.ரவிகுமாரின் கதை-திரைக்கதை-வசனம் தான். கதை வலுவாக இருப்பதால், கொஞ்ச நேரத்திலேயே அனிமேசன் படம் என்பதை மறந்து படத்தில் ஒன்றிவிடுகிறோம்.இது அனிமேசன் இல்லை, மோசன் கேப்சரிங் டெக்னாலஜி என்றெல்லாம் சொல்கிறார்கள். நம் சிற்றறிவுக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. சில இடங்களில் முகத்தில் உணர்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதைத் தான் சொல்கிறார்களோ, என்னவோ. நமக்கு எல்லாமே பொம்மை தான்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பிண்ணனி இசையும் பாடல்களும் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கின்றன என்றே சொல்லலாம். மெதுவாகத்தான், கண்ணே கனியே, சில்லென்ற என எல்லாமே அட்டகாசமான பாடல்கள். காட்சிப்படுத்திய விதமும் பிண்ணனிக் காட்சிகளும் நன்றாகவே வந்திருக்கின்றன. படத்தின் ட்ரைலரும் பாடல் டீசரும் மொக்கையாகத் தெரிந்தன. ஆனால் தியேட்டரில் நன்றாகவே இருக்கின்றன. 

அனிமேசன் கேரக்டர்களில் சூப்பர் ஸ்டார், நாசர், சோபனா, ஆதி உருவங்கள் அருமை. சரத் குமார், ஜாக்கி செராஃப் உருவங்கள் பரவாயில்லை. ஆனால் மிகவும் மோசம், தீபிகா படுகோனே மற்றும் தங்கையாக வரும் ருக்மிணி(பொம்மலாட்டம் ஹீரோயின்), சண்முகராஜா உருவங்கள் தான். அதிலும் தீபிகாவை க்ளோசப்பில் காட்டும்போது.......ஆத்தீ! 

அதென்னவோ தெரியவில்லை, எல்லா சரித்திரப்படங்களிலும் மன்னன் மகளையே ஹீரோக்கள் லவட்டுகிறார்கள். அந்தக் காலத்திம் நம் மன்னர்களுக்குப் பெரும் தலைவலியாக இந்தப் பிரச்சினை இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அவதார் படத்தின் பட்ஜெட்டும் அவர்களின் டெக்னிகல் வசதிகளும் கோச்சடையானை விட, பலமடங்கு அதிகம். எனவே அதனுடன் இந்த ’ஸ்லோ’ மோசனை கம்பேர் செய்வது நியாயம் அல்ல. ஆனாலும் இந்திய சினிமா வரலாற்றில் இது புதிய தொடக்கமாக அமையலாம். அந்தவகையில் சௌந்தர்யாவின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இதுவரை அனிமேசன் படங்களுக்கென்று, தமிழ் சினிமாவில் மார்க்கெட் கிடையாது. இனி அது உருவாகலாம்.  அதே போன்றே மற்ற ரஜினி படங்களை நினைத்துப் பார்த்தாலும் கஷ்டம் தான். இரண்டு மணிநேரத்தில் படம் முடிவது, இன்னொரு ஆறுதல்.

கிளைமாக்ஸில் ராணா தன் தாயின் சபதத்தை நிறைவேற்றிவிடுகிறார். ஆனால் அதனாலேயே தந்தை கோச்சடையானின் சபதத்தை மீறிவிடுகிறார். படத்தின் இறுதிக்காட்சியில் காணாமல் போன அண்ணன் சோணா (அதுவும் ரஜினி தான்) வந்து நிற்கிறார். தம்பியும் அண்ணனும் மோத வேண்டிய சூழலில்.........தொடரும் போட்டு விடுகிறார்கள். சோ, இன்னொரு பாகமும் வரலாம்!
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- படத்தைப் பற்றி நெகடின் இமேஜ் வரும் அளவிற்கு படத்தை உருவாக்க நேரம் எடுத்துக்கொண்டது
- படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல், கேப்டன் கூட்டணிப் பேச்சுவார்த்தை போல் விளையாட்டு காட்டியது
- மூலம் வந்தவங்க மாதிரி, காலை அகட்டி அகட்டி பல கேரக்டர்கள் நடப்பது
- என்ன இருந்தாலும், இது சூப்பர் ஸ்டார் படம் இல்லை 

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நச்சென்று எழுதப்பட்டிருக்கும் வசனங்கள்
- போரடிக்காமல் நகரும் திரைக்கதை
- கோச்சடையான் ஃப்ளாஷ்பேக்
- ஏ.ஆர்.ரஹ்மான்
- ரசிக்க வைத்த நாகேஷ்

பார்க்கலாமா? :
அதிகம் எதிர்பார்க்காமல் இது பொம்மைப் படம் என்ற புரிதலுடன் போனால், ஒருமுறை பார்க்கலாம். 


மேலும் வாசிக்க... "கோச்சடையான் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, May 21, 2014

ஹிட்ச்காக்கின் Vertigo (1958) - விமர்சனம்

ஹிட்ச்காக்கின் படங்களிலேயே அழகான படம் என்று போற்றப்படுவது Vertigo. வழக்கமான சஸ்பென்ஸ் படம் என்று ஒதுக்கிவிட முடியாத அளவிற்கு, உணர்ச்சிகளின் குவியலாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் ஹிட்ச்காக். உண்மைக்கும் மாயைக்கும் இடையே ஒரு மனிதனின் உணர்ச்சிகள் பந்தாடப்படுவதே படத்தின் அடிநாதம். 
படத்தின் முதல் காட்சியில் யாரோ ஒருவனை ஒரு போலீஸ்காரரும் இன்னொரு போலீஸான ஹீரோவும் விரட்டுகிறார்கள். சேஸிங்கின்போது ஒரு உயரமான கட்டடத்தில் தாவும்போது ஹீரோ வழுக்கி, அந்தரத்தில் தொங்குகிறார். அப்போது தான் ஹீரோவுக்கு உயரத்தைக் கண்டால் பயப்படும் அக்ரோஃபோபியா எனும் நோய் இருப்பது தெரிய வருகிறது. அவருக்கு உதவி செய்ய வரும் உடன்வந்த போலீஸ்காரர், அந்த பலமாடி உயரக் கட்டிடத்தில் இருந்து விழுந்து இறக்கிறார். ஹீரோ பிழைக்கிறார். ஒரு ’மாயமான’ ஆளை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் உடன் இருக்கும் உண்மையான ஒரு ஆளை இழக்கிறார் ஹீரோ. அது தான் படத்தின் கருவும்!

மேலே சொன்ன சம்பவத்திற்குப் பின் குற்ற உணர்ச்சியால் ஹீரோ ஸ்காட்டி(James Stewart ) தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்கிறார். அப்போது அவரது பழைய நண்பர் ஒரு டிடெக்டிவ் வேலையைக் கொடுக்கிறார். தன் மனைவி மேடலின் (Kim Novak- ஹீரோயின்) ஒரு ஆவியின் பிடியில் இருப்பதாகவும், அவளை ஃபாலோ செய்து எங்கெல்லாம் அவள் அல்லது அவள் உடம்பில் இருக்கும் பேய் போகிறது என்று கண்டுபிடிக்கும்படியும் நண்பர் சொல்கிறார். பேய்க்கதையை நம்ப மறுக்கும் ஹீரோ, நண்பருக்காக அந்த வேலையை எடுத்துக்கொள்கிறார். 

அதன்பின் நடக்கும் சம்பவங்கள் ஹீரோவுக்கு மட்டுமல்ல, நமக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுக்கின்றன. மேடலினை பின் தொடரும் ஸ்காட்டி, அவளை காதலிக்க ஆரம்பிக்கிறார். தொடர்ந்து நடக்கும் மர்மமான & ரொமாண்டிக் சம்பவங்களை அடுத்து, மேடலின் தற்கொலை செய்துகொள்கிறாள். அதனால் மனம் பேதலித்த நிலையில் இருக்கும் ஸ்காட்டி, மேடலின் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஜூடி எனும் அழகிய இளம்பெண்ணை சந்திக்கிறார். மீதியை லேப்டாப் திரையில் காண்க.
Boileau-Narcejac என்பவர் எழுதிய நாவலை ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, இந்தப் படம். ஹிட்ச்காக்கின் The Wrong man படத்திற்கு திரைக்கதை எழுதிய Maxwell Anderson-ஐ வைத்து வெர்டிகோவின் திரைக்கதையை உருவாக்க ஆரம்பித்தார் ஹிட்ச்காக். அது சரிவராமல் போக, அவரை விரட்டிவிட்டு Alec Coppel எனும் நாவலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான இன்னொரு லெஜண்டை கொண்டுவந்தார். அவரும் ஹிட்ச்காக்கும் இணைந்து ஒரு திரைக்கதையை உருவாக்க, அதிலும் சம்திங் ராங் என்று ஹிட்ச்காக்கும் தயாரிப்பு நிறுவனமும் அவரை விரட்டிவிட்டன. அடுத்து வந்தார் Samuel A. Taylor. கோப்பெல் உருவாக்கியிருந்த திரைக்கதையை பட்டி பார்த்து, நெளிசல் எடுத்து ஒரு அட்டகாசமான திரைக்கதையை உருவாக்கினார். அதுவே நாம் படத்தில் பார்ப்பது.

நாவலைத் தானே படம் எடுக்கிறார்கள், அதற்கு ஏன் இத்தனை பாடு என்று நீங்கள் நினைக்கலாம். நாவல் இரண்டாம் உலகப்போரை பிண்ணனியாகக் கொண்டது. அது இந்தக் கதைக்கு தேவையில்லை. இங்கே ஹீரோவுக்கும் ஹீரோயினுக்குமான உணர்ச்சிப்போராட்டமே முக்கியம் எனும் முடிவுக்கு ஹிட்ச்காக் வந்திருந்தார். நாவலில் ஹீரோ மனதிற்குள் யோசிப்பதை எழுதிவிடலாம். படத்தில் வாய்ஸ் ஓவரில் சொன்னால் நன்றாக இருக்காதே? எனவே ஹீரோ மனம்விட்டுப் பேசும் ஒரு தோழி (ஒருதலைக் காதலி) கேரக்டரை உருவாக்கினார்கள். இதை சர்ப்ரைஸ் பாணியில் சொல்வதா, சஸ்பென்ஸ் பாணியில் சொல்வதா என்பது வேறு பெரும் பஞ்சாயத்தாக இருந்தது. முடிவில் சஸ்பென்ஸ் கேட்டகிரிக்கே வந்தார்கள்.

படத்தின் முதல்பாதி, மேடலினின் கற்பனை அல்லது ஆவி உலகத்தில் நாமும் சஞ்சரிப்பது போன்ற தோற்றம் வரும்படி எடுத்திருப்பார்கள். ஷார்ப்பான  வளைவுகளைக் கொண்ட மலைரோடுகள் இருக்கும் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரை தேர்ந்தெடுத்தார் ஹிட்ச்காக். ஹீரோ ஹீரோயினை ஃபாலோ செய்யும்போது, அதன் எஃபக்ட் நன்றாகவே தெரியும். ஹீரோயினின் ஆவி உலகத்தையும் வெர்டிகோ எஃபக்ட்டையும் சரிவிகிதத்தில் கலப்பது போல் அமைந்திருக்கும், காட்சிகள் கொடுக்கும் எஃபக்ட். ஹீரோ தான் ஹீரோயினை ஃபாலோ செய்வதாக நாம் நினைத்திருக்க, அப்படியில்லை ஹீரோயின் தான் ஹீரோவை அவள் விரும்பும் இடத்திற்கெல்லாம் வரவழைக்கிறாள் என்று பின்னால் தெரியும்போது, நமக்கும் வருகிறது வெர்டிகோ எஃபக்ட்!
வழக்கமான ஹிட்ச்காக் படங்களைப் போல் அல்லாமல், இந்தப் படம் துப்பறியும் கதையாக இல்லாமல் காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. மேடலின் இறந்தபின், அந்த கேஸை அதற்கு மேல் துப்பறிவதை விட, ஜூடிக்கும் ஸ்காட்டிக்கும் உருவாகும் உறவு நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக க்ரைமிற்கான காரணம் தான் MacGuffin-ஆக வரும். ஆனால் இந்தப் படத்தில் அந்த க்ரைமே MacGuffin தான்.

ஸ்காட்டி தன் குற்றவுணர்ச்சியில் இருந்து மீண்டுவர, ஜூடியை மேடலின் போல் மாற்ற முயற்சிக்கிறான். ஸ்காட்டியை காதலிக்கும் ஜூடி ‘என்னை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாதா? ஏன் மேடலின் போல் என்னை மாற்றுகிறீர்கள்?’ என்று கெஞ்சுகிறாள். ஸ்காட்டியின் இதயம் அந்த மாயம் நிறைந்த பெண்ணான மேடலின் மீதே நிலைத்திருக்க, ஜூடியின் இதயம் ஸ்காட்டியின் அன்புக்காக ஏங்கும் காட்சிகளில் நமக்கு ஜூடியின் மேல் மட்டுமல்லாது ஸ்காட்டியின் மேலும் பரிதாபம் வருகிறது.

படத்தின் பல வசனங்கள் ஆழ்ந்த பொருள் உடையவை. முதல்முறை பார்க்கும்போது சாதாரணமாகவும், என்ன நடக்கிறது/நடந்தது என்று அறிந்தபின் பார்க்கும்போது பிரமிப்பூட்டுவதாகவும் இருக்கின்றன இந்தப் படத்தின் வசனங்கள். உதாரணமாக மேடலினின் கணவர் ‘Do you believe that someone out of the past, someone dead, can enter and take possession of a living being?’ என்று ஸ்காட்டியிடம் கேட்கிறார்.பின்னர் ஸ்காட்டியின் நிலையே அப்படி ஆகும்போது அந்த வசனத்தின் வீச்சு நமக்குப் புரிகிறது. அதே போன்றே மேடலின் ஸ்காட்டியிடம் கடைசியாகப் பேசும் வார்த்தைகள் ‘If you lose me, you’ll know I loved you and wanted to go on loving you.’ என்பது வெறும் உணர்ச்சிகரமான வார்த்தை மட்டுமல்ல, அவள் சொன்ன அர்த்தம் வேறு என்பதும் பின்னர் தான் புரிய வருகிறது. 
ஹீரோ James Stewart-ன் கரியரில் பெருமைக்குரிய படம் இது. ஹிட்ச்காக்கின் Rope,The Man Who Knew Too Much, Rear Window-ல் அவர் நடித்திருந்தாலும், வெர்டிகோ அளவிற்கு உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வழங்க அவற்றில் வாய்ப்பில்லை. வெர்டிகோ எஃபக்ட்டால் பாதிக்கப்படுபவராக, குற்ற உணர்ச்சியில் தவிப்பவராக, ரொமாண்டிக் ஹீரோவாக, இழந்த காதலியை ஜூடி வடிவில் மீட்கப் போராடுபவராக நவரச நடிப்பில் பின்னியிருப்பார். 

அதே போன்றே ஹீரோயினான நடித்த Kim Novak, மேடலின் கேரக்டரில் வரும்போது ஒரு மென்மையான பெண்ணாகவும், ஜூடியாக வரும்போது அதிரடியான பெண்ணாகவும் கலக்கியிருப்பார். Kim Novak-ன் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், அவருக்கு பிரா போடவே பிடிக்காதாம். ஹிட்ச்காக் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் ‘No..no..I'm very proud of it'-ன்னு சொல்லி பிரா அணியவே மறுத்துட்டராம். ஜூடி கேரக்டர்ல தான் அதோட எஃபக்ட் தெரியும்!
ஒரு சிக்கலான உறவாக ஆகிவிட்ட அந்த புதிய காதல் எப்படி முடியப்போகிறது என்று நாம் சஸ்பென்ஸுடன் காத்திருக்க, எதிர்பாராத கிளைமாக்ஸைத் தருகிறார் ஹிட்ச்காக். உண்மையில் அந்த கிளைமாக்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை ஜூடியை நானும் லவ் பண்ணியதால் இருக்கலாம்! அப்புறம்...படம் பார்க்கும்போது உங்களுக்கு சுவாரஸ்யம் போயிடக்கூடாதுங்கிறதால, ரெண்டு ட்விஸ்ட்டையும் கிளைமாக்ஸையும் தவிர்த்திருக்கிறேன். ஒரு ஸ்டைலிஷான, சைக்காலஜிகலாக நம்மை இம்ப்ரஸ் செய்யும் படம், Vertigo.

மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக்கின் Vertigo (1958) - விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 18, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-2)


2. கரு உருவாவது எப்படி? (ஹி..ஹி)

ஒரு படத்திற்கு மிகவும் அடிப்படையான விஷயம் தீம் தான். அதில் இருந்து தான் எல்லாமே டெவலப் ஆகிறது. எனவே தான் அதை கதைக்கரு என்று தமிழில் சொல்கிறோம். காதல், பழிக்குப்பழி, பாசம், தர்மம் வெல்லும் போன்றவையே கரு என்பதற்கு உதாரணங்கள். இது எப்படி உருவாகிறது?

கதைக்கரு தோன்றுவது என்பது முழுக்க சிந்தனை சார்ந்த விஷயம் என்றாலும் கரு என்பது நான்கு விதங்களில் உங்களுக்கு தோன்றலாம்.
  1. ஏதோவொரு விஷயம் உங்களை பாதிக்கிறது. அதாவது உங்களை உலுக்கிய, யோசிக்க வைத்த ஒரு விஷயம். அது கொடுக்கும் தீம். இது ஒருவகை. அது பசியாக இருக்கலாம். சுப்ரமணியபுரம் போன்று துரோகமாக இருக்கலாம். நட்பாக, காதலாக, காமமாகக்கூட இருக்கலாம். இப்படி ‘இந்த விஷயத்தை இன்னும் தெளிவாக, நம் பாணியில் சொல்வோம் ’என்று உங்களுக்குத் தோன்றும் கான்செப்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அது தான் கரு.
  2. அடுத்து கேரக்டரில் ஆரம்பித்து கருவில் முடிவது. உங்களுக்குத் தெரிந்த ஒரு வயதான நபர், பெண்களிடம் வழிவதை நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லது சீன் படம் ஓடும் தியேட்டரில் பார்க்கிறீர்கள். இந்த வயசுலயும் இது தேவையா என்று தலையில் அடித்துக்கொள்கிறீர்கள். அதோடு விடாமல், இது என்ன வகையான மனநிலை? இது எப்படி அந்த மனிதருக்கோ அல்லது சுற்றி உள்ளவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தால்…தீராக் காமம் எனும் கரு உங்களுக்கு கிடைக்கும். அதை டெவலப் செய்தால், சித்திரம் பேசுதடி போன்றோ, யுத்தம் செய் போன்றோ உருவெடுக்கும். நாயகன் படமும் வரதராஜ முதலியார் எனும் கேரக்டரில் ஆரம்பித்து டெவலப் ஆன படம் தான்.
  3. அடுத்த வகை, ஸ்ட்ரெய்ட்டாக ஒரு கதையே சிக்குவது. ’இங்கே, இப்படி ஒருத்தன் இருந்தான்; அவனுக்கு இப்படி நடந்தது’ என்று நேரடியாகவே ஒரு விஷயம் மனதில் தோன்றுவது. ஒரு கதை உருவாகும் விதம் என்பது உளவியல்ரீதியான விஷயம் என்பதால், எங்கே இருந்து வந்தது என்றே தெரியாதபடி ஒருவரி சிக்கும்.(டிவிடியில் இருந்தா என்று செக் பண்ணிக்கணும், பாஸ்.) அந்த ஒருவரியில் இருந்தும், நீங்கள் ரிவர்ஸில் போய், கதையின் தீம் என்ன என்று கண்டுபிடிக்கலாம்.
  4.  சிலநேரங்களில் இரண்டு மூன்று தீம்கள் ஒரே கதையில் பின்னிக்கிடக்கலாம். அல்லது தீமே இல்லாமலும் நாம் முழிக்க வேண்டிவரலாம். (இதை எப்படி சமாளிக்கலாம் என்று கரு கான்செப்ட்டைப் பற்றிப் பேசி முடிக்கும்போது பார்ப்போம்)
(இங்கே சிவப்பில் உள்ளதை தனிப்பதிவாக எழுதிவிட்டேன். இருந்தாலும் இங்கேயும் இருக்கட்டும்!) தற்போது உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது பல நன்மைகளைக் கொடுத்திருந்தாலும், படைப்பாளிகளுக்கு ஒரு பெரும் கெடுதலையும் கொடுத்திருக்கிறது. அது, நீங்கள் என்ன செய்தாலும் உலகத்தில் உள்ள அத்தனை மொழிகளில் வந்த படங்களோடும் கம்பேர் செய்து, அதே மாதிரி சிறு ஒற்றுமை இருந்தால்கூட ‘காப்பி..காப்பி’ என்று கத்தி படைப்பாளியை இழிவு செய்யும்போக்கு அதிகரித்திருக்கிறது.

ஒரு கேரக்டர் அல்லது ஒரு தீம் தற்செயலாக ஒத்துப்போவதென்பது சாத்தியமான ஒன்றே உலகில் யாருமே யோசிக்காத ஒரு விஷயத்தைத் தான் நாம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவீனம்.

ஹீரோவிடம் டாக்டர்கள் ‘இன்னும் மூன்று மாதத்தில் இறந்துவிடுவாய்; என்று சொல்கிறார்கள். அதை சிலர் யூஸ் செய்து ஹீரோவை சாகசம் செய்ய வைக்கிறார்கள்- என்று ஒரு ஒன்லைன் யோசித்து வைத்திருந்தேன். அதே கான்செப்ட்டில் இயக்குநர் பேரரசு திருத்தணி படம் எடுத்தார். இனி நான் அந்த கான்செப்ட்டைத் தொட்டால், பேரரசுவை நான் காப்பி அடித்ததாகச் சொல்வீர்கள். முன்பே நான் எழுதியிருந்தால், பேரரசு என்னைக் காப்பி அடித்ததாக சொல்லி இருப்பீர்கள். இது தான் காப்பிக்கூச்சலில் உள்ள அபத்தம்!

உண்மையிலேயே காப்பி நடக்கிறது என்றாலும், தற்செயலாக ஒத்துப்போவதும் சாத்தியமே. குறிப்பாக ஒரே கரு பலருக்கும் தோன்றுவது சகஜமே. எனவே அடிப்படையிலேயே இந்த காப்பி கூச்சல்களைக் கண்டுகொள்ளாமல், உங்கள் மனசாட்சிக்கு நேர்மையுடன் தொடருங்கள். காப்பிக் கூச்சல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், உங்களால் அம்மா என்றுகூட எழுத முடியாது. 

சரி........தீம்/கரு என்பது மேலே சொன்ன நான்கு வழிகளில் வரலாம். அது என்ன என்பதில் தெளிவாகுங்கள். ஏனென்றால் அதைப் பொறுத்துதான் அடுத்து நீங்கள் உருவாக்கும் கேரக்டர்களும் காட்சிகளும் சரிவருமா என்று செக் பண்ண முடியும். அந்த தெளிவு இல்லையென்றால், படம் சொதப்பிவிடும்.
அதற்கு உதாரணம், ஹரிதாஸ்(2013) திரைப்படம். ஹரிதாஸ்(2013), ஆட்டிசக்குறைபாடு உள்ளவர்களை சரியாக நடத்தும் முற்போக்கு கொள்கையை முன்வைத்த படம். இந்திய சாதியமைப்பில் கெட்டிப்பட்டுப்போன நம் சமூகம், கொஞ்சம் கொஞ்சமாக அந்த மனநிலையில் இருந்து மீண்டுவரும் நேரம் இது. கல்வியும் பலருடன் கலந்து பழகுவதும் பல மாற்று சிந்தனைகளை நமக்குள் விதைத்துக்கொண்டு வருகின்றன:
  • -    மாற்றுத்திறனாளிகளை நாகரீகமான வார்த்தைகளால் அழைப்பது/அவர்களையும் சராசரி மனிதர்களாக வித்தியாசமின்றி நடத்துவது
  • -    தன்னைவிட வசதி, அந்தஸ்து குறைந்தோரையும் மரியாதையாக நடத்துவது
  • -    பெண்கள் மீதான வன்முறை/ஒடுக்குமுறையை எதிர்ப்பது
  • -    மனித உரிமைக்கான குரல் கொடுப்பது
  • -    மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று போராடுவது
ஹரிதாஸ் படமும் இதில் முதல் பாயிண்டைப் பற்றிப் பேசுகிறது. ’மாற்று சிந்தனை’ என்பது தான் படத்தின் தீம். ஒரு ஆட்டிசக் குறைபாடு உள்ள சிறுவனை சாதனையாளனாக உருவாக்க, ஒரு தந்தையும் ஆசிரியையும் எடுக்கும் முயற்சிகளே படம்.

ஆனால் அதே படத்தின் இன்னொரு பகுதி, என்கவுண்டரை நியாயப்படுத்தியது. போலீஸ் அதிகாரி ஹரிதாஸ், தன் டிரைவர் சூரியை எப்படி இழிவாக நடத்துகிறார் என்பதையும் நகைச்சுவை என்ற பெயரில் காட்டியது. இந்த இரு விஷயங்களுமே படம் முன்வைக்கும் மாற்று சிந்தனைக்கு எதிரான விஷயங்கள்.
ஆட்டிசம் பிரச்சினையில் மாற்று சிந்தனையை முன் வைக்கும்போது, மற்ற சமூகப் பிரச்சினைகளையும் இந்த திரைக்கதையில் அப்படியே அணுக வேண்டும். என்கவுண்டர் என்பது சினிமாவிற்கு சுவாரஸ்யமான ஒரு விஷயம் தான். ஆனால் அதை அந்த படத்தில் வைத்தது தான் தவறு. சுருக்கமாகச் சொல்வதென்றால், ‘பெண்ணியம்’ என்பதைக் கருவாக வைத்துக்கொண்டு, குத்துப்பாட்டில் இறங்கிவிடக்கூடாது. அதற்குத் தான் கரு பற்றிய தெளிவு அவசியம்.

காதல் தான் உங்கள் கதையின் கரு என்றால் காதலித்து ஓடிப்போகும் பெண்ணின் பெற்றோர் படும் வேதனையை எங்கேயும் கொண்டுவந்துவிடக்கூடாது. (அதனாலேயே பெரும்பாலும் பெற்றோரை வில்லனாக்கிவிடுவார்கள். ) உணர்ச்சிகரமான காதல் காட்சிகளுடன், இறுதிக்காட்சியில் ஹீரோவும் ஹீரோயினும் சிலுவை/பூணூலை அறுத்துவிட்டு ‘காதல் வாழ்க’ என்று கூவுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

காதலினால் காதலர்களும் குடும்பங்களும் படும் கஷ்டத்தைச் சொல்வது தான் உங்கள் கரு என்றால், தவமாய்த் தவமிருந்து-காதல் படங்கள் போன்று உண்மையைச் சொல்லலாம். அங்கே ‘காதல்ங்கிறது.......’ என்று ஆரம்பிக்கும் ஃபீலிங் வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கூடாது. 
மொத்தத்தில் எடுத்துக்கொண்ட விஷயத்தை இடைஞ்சல் செய்யும் விஷயங்களைத் தவிர்த்தே ஆக வேண்டும். நாம் இங்கே கதை சொல்லத்தான் வந்திருக்கிறோம். அதை எப்படி வெற்றிகரமாக, ஆடியன்ஸின் கவனம் கலையாமல் சொல்கிறோம் என்பதில்தான் நம் திறமை இருக்கிறது.

எடுத்துக்கொண்ட கருவிற்கு ஏற்ப எப்படி திரைக்கதை அமைப்பது என்பதற்கு இன்னொரு நல்ல உதாரணத்தை அடுத்த வாரம் பார்ப்போம். அது, இயக்குநர் ஷங்கரின் ஜெண்டில்மேன். 

இப்போது கீழ்க்கண்ட படங்களின் தீம் என்ன என்றும், அது எப்படி மெயிண்டெய்ன் செய்யப்பட்டது என்று யோசிக்கவும்:

  • தங்கப்பதக்கம்
  • முள்ளும் மலரும்
  • நாட்டாமை
  • நான் சிகப்பு மனிதன்
  • அன்பே வா
டிஸ்கி: ஹரிதாஸ் பற்றி.............ஒரு விஷயம் எந்தப் படத்தில் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்று விளக்குவதே நம் நோக்கம். மற்றபடி அந்தப் படத்தில் பணியாற்றிய படைப்பாளிகளை குறைவாக மதிப்பிடுகிறோம் என்று அர்த்தம் அல்ல. இது இந்த தொடர் முழுக்க வரும் உதாரணங்களுக்குப் பொருந்தும்.

(தொடரும்)

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-2)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 11, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-1)


உப தலைப்பு :சினிமா எனும் காஸ்ட்லி கலை

கலை என்பதற்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. முதல் நோக்கம், பொழுதுபோக்கு. இரண்டாவது வாழ்வின் மேன்மையைப் பேசுவது; வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுவது.  நமது காவியங்களான ராமாயணம், மகாபாரதமே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. எழுத்து வடிவிலும், கவிதை வடிவிலும், கூத்து வடிவிலும், வில்லுப்பாட்டு வடிவிலும் மக்களிடையே சென்று சேர்ந்தன அந்தக் காவியங்கள்.

சிறந்த பொழுதுபோக்கு என்பதோடு, கருத்து சொல்வதையும் தன் கடமையாக அந்த கலைஞர்கள் நினைத்தார்கள். ஆனாலும் அந்த கலைகளிலும் பொழுதுபோக்கை மட்டுமே அதிகம் முன்வைக்கும் படைப்புகள் உண்டு. சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. 

சினிமா என்பது காஸ்ட்லியான கலை. ஒரு கதையோ கவிதையோ ஓவியமோ மக்களை சரியாகச் சென்றடையவில்லையென்றால், பெரிய பொருள் நஷ்டம் இல்லை. ஆனால் ஒரு சினிமா உண்டாக்கும் நஷ்டம், பல மனிதர்களை தெருவுக்குக் கொண்டுவந்துவிடும். மேலும் மற்ற கலைகளில் படைப்பாளியின் முதல் மட்டுமே முடங்கும். இங்கே பொதுவாக படைப்பாளி வேறு, தயாரிப்பாளர் வேறு. எனவே ஒரு படைப்பாளியின் கலைத்தாகம், தயாரிப்பாளர்/விநியோகஸ்தர்களை கஞ்சிக்கு வழியில்லாமல் ஆக்கிவிடும் அபாயம் இங்கே நிறைய உண்டு. எனவே தான் திரைத்துறையில் வணிக சினிமா முக்கிய இடம்பெறுகிறது. திரைக்கதை எழுதும்போது, இதை நினைவில் கொள்வது அவசியம்.

ரசிகனை திருப்திப்படுத்துவதை முதல் நோக்கமாகக் கொண்ட தரமான சினிமாவையே வணிக சினிமா என்கிறோம். இந்த தொடரில் வரும் வணிக சினிமா என்பது ஆறு பாட்டு+அஞ்சு ஃபைட்டு+அப்போதைய பிரபல காமெடியனின் அச்சுப்பிச்சுத்தனம்+குத்துப்பாட்டு கொண்டு மட்டுமே உருவாக்கப்படும் குப்பைகளைக் குறிக்கவில்லை என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். எந்திரன், அபூர்வ சகோதரர்கள், துப்பாக்கி, சூது கவ்வும் போன்ற படங்களையே நாம் தரமான வணிக சினிமா என்று குறிப்பிடுகிறோம்.

இத்தகைய தரமான வணிக சினிமாவைக் கொடுப்பவர்களுக்கு நல்ல கலைப்படங்களுடன் பரிச்சயம் இருக்கும். அத்தகைய படங்களைக் கொடுக்கும் ஆர்வமும் இருக்கும்.(உதாரணம் ஷங்கர்..பதினாறு வயதினிலே மாதிரி ஒரு கதையை இயக்கும் ஆர்வத்துடன் வந்தவர்..இப்படி ஆகிட்டார்!!) ஆனாலும் ரசிகனுக்காக கமர்சியல் ஐட்டங்களுடன் படைப்பை உருவாக்குவார்கள். ரசிகனும் குப்பை மசாலாக்களை ரசிக்கும் மனநிலையில் இருந்து மேலேறி, இந்த படங்களை ரசிப்பான். மொத்தத்தில் ஒரு படைப்பாளியும் ரசிகனும் சந்திக்கும் சமரசப்புள்ளியே வணிக சினிமா எனலாம்.

அதே போன்றே நல்ல கலைப்படங்களை/உலக சினிமாக்களைப் படைப்பவருக்கு, நல்ல வணிக சினிமா எடுக்கும் சூத்திரம் தெரிந்திருப்பது அவசியம். அது இருந்தால்மட்டுமே, சுவாரஸ்யமாக கதை சொல்ல முடியும். எந்த வகைப்படமானாலும், சுவாரஸ்யம் அவசியம். எனவே திரைக்கதை எழுத விரும்புவர்கள், வணிக சினிமாவுக்கு எழுதுவது நல்ல ஆரம்பமாக அமையும். உதாரணமாக உதிரிப்பூக்கள் கொடுத்த நம் மரியாதைக்குரிய இயக்குநர் மகேந்திரன், அதற்கு முன்னால் தங்கப்பதக்கம், ஆடு புலி ஆட்டம் போன்ற படங்களுக்கு கதை-வசனம் எழுதியவர்.  

வாழ்க்கையைப் பற்றி பேசும் அல்லது ஆராயும் நல்ல சினிமாக்கள், திரைத்துறையின் ஆன்மாவைப் போன்றவை. அந்த படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும். அதற்கு போதுமான பணப்புழக்கம் சினிமாத்துறையில் இருக்க வேண்டும். சினிமாத்துறை வளமாக இருந்தால்தான் புதிய தயாரிப்பாளர்கள் உள்ளே வருவார்கள். அதற்கு வணிக சினிமா அவசியமானது. எல்லாருமே உலக சினிமாவே எடுத்தால், இரண்டு வருடங்களுக்குள் தயாரிப்பாளர்கள்-விநோகஸ்தர்கள்-தியேட்டர் அதிபர்கள் ஒழிந்து போவார்கள் என்பதே யதார்த்தம். கலைப் படங்கள் உயிர் என்றால், வணிக சினிமா என்பது உயிர் மூச்சு. அந்த மூச்சு நின்றால், எல்லாம் போச்சு!

எனவே திரைக்கதை எழுத கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வணிக சினிமா மீது எவ்வித வருத்தமும் இருக்கக்கூடாது. ஏனென்றால் சினிமாவின் மையப்புள்ளியும் ஆரம்பமும் அது தான். எடுத்தவுடனே முள்ளும் மலரும் படம் போன்று எழுத நினைத்தால், அது துலாபாரமாகவே ஆகும். எந்தவொரு படமுமே வேஸ்ட் அல்ல, குறைந்தபட்சம் எப்படி எடுக்கக்கூடாது என்று தெரிந்துகொள்வதற்காவது அந்தப் படம் உதவும். சிலநேரங்களில் ஒரு மொக்கைப்படத்தில்கூட நல்ல விஷயம் இருக்கும். எனவே கொஞ்சம் பரந்த மனதுடன், சினிமாவை அணுகுவோம்.

வணிக சினிமாவின் திரைக்கதைகள் எளிமையானவை. குறிப்பிட்ட விதிகளின் கீழ் அடங்குபவை. ஆனால் கலைப்படங்கள், அப்படி அல்ல. அவை இருக்கும் விதிகளை கலைத்துப்போடும் தன்மை கொண்டவை. நேர்கோட்டுப் பாணி, ஒரே ஒரு கதை என்றெல்லாம் இல்லாமல் பலவித பரிசோதனைகளும் நடக்கும் இடம், கலைப் படங்கள். ஆரம்ப நிலையிலேயே அதற்குள் தலைவிடுவது, நம் மனநிலைக்கு நல்லதல்ல என்பதால் அதை ஓரமாக வைத்துவிட்டு அடிப்படையில் இருந்து ஆரம்பிப்போம்.

தமிழ் சினிமாவுலகின் முன் நிற்கும் பெரும் சவால், மக்களை தியேட்டருக்குக் கொண்டுவருவது தான். ஏகப்பட்ட டிவி சேனல்கள், அதில் எந்நேரமும் ஓடும் தமிழ்/ஹாலிவுட்/சீன படங்கள், சீரியல்கள், தியேட்டர்களில் வெளியாகும் பிரம்மாண்ட ஹாலிவுட் டப்பிங் படங்கள், தியேட்டர் கட்டணம், திருட்டு விசிடி என பல வில்லன்களைத் தாண்டித்தான் ஒரு சினிமா மக்களைச் சந்திக்கிறது.

ஏற்கனவே வெளியான படங்களின் கதை அல்லது டெம்ப்ளேட்டிலேயே நீங்கள் திரைக்கதை எழுதுகிறீர்கள் என்றால், டிவியிலேயே அதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள். ஹாலிவுட் படத்தைச் சுட்டாலும் அதே பிரச்சினை தான். (நம் இணையதள எழுத்தாளர்கள் எப்படியாவது கண்டுபிடித்து கிழிகிழியென்று உங்களைக் கிழித்துவிடுவார்கள்.)
 தயாரான 200 படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் லேபிள் முடங்கிக்கிடக்கின்றன என்பது தற்போதைய நிலவரம். மொத்தமாக 300 கோடி ரூபாய் முதல் முடங்கிக் கிடக்கிறது. அந்த 200 திரைக்கதைகளுமே ஏகப்பட்ட கனவுகளுடன் எழுதப்பட்டிருக்கும். அதில் சில ஆர்வக்கோளாறுகள் இருந்தாலும் சில நல்ல படைப்புகளும் இருந்தே தீரும். 

அவை ரிலீஸ் ஆகாமல் கிடப்பதற்கு ஃபேமஸான இயக்குநர்/நடிகர்/நடிகை பணியாற்றாததும் காரணமாக இருக்கலாம், கோடிக்கணக்கான பணம் முடங்குவதற்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம், ஆனால் ஒருபோதும்..ஒரு போதும் திரைக்கதை காரணமாக இருந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் நாம் திரைக்கதை எழுத வேண்டியது அவசியம்.

திரைக்கதை எழுத ஆரம்பிக்கும் முன் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான ஒரு விஷயம் உண்டு. ஒரு கதையோ, கவிதையோ எழுதும்போது அதன்மேல் ஒரு பொசசிவ்னெஸ் நமக்கு வரும். அதில் யாராவது கரெக்சன் சொன்னால், ‘சீலேவில் இப்படியா? இந்து ஞானமரபு இப்படியா உங்களுக்கு சொல்லிக்கொடுத்தது? தற்குறிகள்!’ என்று கோபம்கூட வரலாம்.

ஆனால் சினிமா என்பது டீம் ஒர்க். இயக்குநர், ஹீரோ, தயாரிப்பாளர் என பலரும் தங்கள் கருத்தை திரைக்கதை மேல் திணிக்கவே செய்வார்கள். அதில் இயக்குநரின் முடிவே இறுதியானது. சில நேரங்களில் அப்படி சொல்லப்படும் கரெக்சன்கள், அவர்களது பலவருட அனுபவத்தின் மூலம் வரலாம். எனவே அதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டிவரும். ‘இது என் படைப்பு. ஒரு எழுத்தைக்கூட மாற்றவிட மாட்டேன்’ எனும் இலக்கியத்தனம் அங்கே உதவாது.

சுருக்கமாகச் சொல்வதென்றால் கதை-கவிதை போன்றவை காதலி மாதிரி. திரைக்கதை என்பது குழந்தை மாதிரி. ஆசிரியர், அண்டைவீட்டார், சமூகம் என பலரும் குழந்தையை மெருகேற்றுவார்கள். ஒரு கட்டத்தில் பெற்றோரைவிடவும் பெரிய ஆளாக அந்தக் குழந்தை உருவெடுக்கும். பிறந்த அன்று குட்டியாக ரோஜாப்பூ போன்று இருந்த குழந்தையா இது எனும் ஆச்சரியம் ஒருநாள் நமக்கு வரும். அப்போது அடையும் பூரிப்பைத் தான், உங்கள் திரைக்கதை காட்சிவடிவம் எடுத்து முழு சினிமாவாக வரும்போது அடைவீர்கள். எனவே திறந்த மனதுடன் இதில் இறங்க வேண்டியது அவசியம்.

ஓகே, திரைகதை எழுத ரெடியா?..பொறுங்க சாமிகளா! கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் முன், சிக்னல்ஸ்-கீப் லெஃப்ட்டா ரைட்டா என்பது போன்ற அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும் இல்லையா? எடுத்தவுடனே டாப் கியரில் வண்டியைக் கிளப்ப முடியுமா? ஆரம்பத்திலேயே ‘இன்சைட்டிங் இன்சிடெண்ட்’ என்று போவதற்கு முன் சில அடிப்படைகளை தெரிந்துகொள்வோம். அப்புறம் மெதுவா, சேஃபா களத்தில் இறங்கலாம்.

அடுத்த வாரம் கரு உருவாக்குவது எப்படி, கரு உருவாகிவிட்டதா என்று தெரிந்துகொள்வது எப்படி, அப்படி உருவான கருவை பாதுகாப்பது எப்படி என்று விபரமாகப் பார்ப்போம்!
(தொடரும்)

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-1)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 6, 2014

தமிழ் சினிமாவும் காப்பி கூச்சலும்

தமிழ்நாட்டில் அறிவுஜீவி என்று பெயர் வாங்க ஏற்கனவே இரண்டு வழிகள் உண்டு. முதலாவது எல்லாராலும் மதிக்கப்படும் யாராவது ஒரு தலைவரின் பலவீனமான ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அவரை மோசமான மனிதர்-மக்களுக்கு எந்தவகையிலும் பயன்படாத தலைவர் என்று பேசுவது. இதன்மூலம் ‘அட முட்டாப்பசங்களா..உங்களுக்குத் தெரியாததை நான் கண்டுபிடிச்சிட்டேன் பார்த்தீங்களா?’ என்று நிறுவுவது. 

இதற்குக் கொஞ்சம் மூளையும் வாதத்திறமையும் தேவைப்படும் என்பதால் இருக்கும் இரண்டாவது வழி ‘சாமியெல்லாம் ஒன்னும் கிடையாது..எங்கே இருக்கு காமி’ என்று நாத்திகம் பேசிவிடுவது. இணையத்தின் புண்ணியத்தில் அறிவுஜீவி என்று பெயர் எடுக்க மூன்றாவது வழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எந்தப் படத்தைப் பார்த்தாலும் ‘காப்பி...காப்பி’ என்று கத்துவது!
சில படைப்பாளிகள்(?) ஏதாவது ஒரு வேற்றுமொழிப்படத்தை அப்படியே சீன் பை சீன் அல்லது 50%க்கும் அதிகமான காட்சிகளை அப்படியே ரீமேக் செய்துவிடுகிறார்கள். அந்த படங்களை காப்பி என்று சொல்வதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை தான். ஆனால் ரோஜா படத்தை Sun Flower(1970) படத்தின் காப்பி என்று தூற்றும்போதும், ஹே ராம் படத்தை Barabbas (1961)-ன் காப்பி என்று சொல்லும்போதும், நமக்கு சொல்பவர்களின் நோக்கத்தின்மீது சந்தேகம் வருகிறது. 

ரோஜா படம் சத்தியவான் சாவித்திரி கேரக்டரை காஷ்மீர் பிரச்சினையின் ப்ளாட்டில் வைத்துப் பின்னப்பட்ட கதை. ஹே ராம் படம், நாமறிந்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையையும் காந்தி கொலையையும் மிக்ஸ் செய்து சொல்லப்பட்ட ஒரு வரலாற்றுக் காவியம். சாவித்திரி-காஷ்மீர்-இந்தியா-பாகிஸ்தான் என எல்லாமே நம் மண் சார்ந்த விஷயமாக இருக்கும்போது, எங்கே இருந்து வருகின்றன Sun Flower-ம் Barabbaas-ம்?

அதை அறிவதற்கு முன் நாம் உலக சினிமா வரிசையில் போற்றப்படும் இரு படங்களைப் பற்றிப் பார்ப்போம். முதல் படம், ஃப்ரெஞ்ச் திரைப்பட மேதை Robert Bresson இயக்கத்தில் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான A Man Escaped (1956). இரண்டாம் உலகப்போரின்போது நாஜிக்களால் பிடிக்கப்பட்டு சிறைவைக்கப்படும் ஹீரோ, எப்படி அந்த ஜெயிலில் இருந்து தப்பிக்கிறான் என்பதே கதை. உள்ளே இருப்பவர்கள் மற்றும் வெளியே இருப்பவர்களின் உதவியுடன், சிறுசிறு பொருட்களை பலநாட்களாகச் சேகரிக்கிறான் ஹீரோ. அதன்மூலம் எப்படி தப்பிக்கிறான் என்று படம் விளக்குகிறது.
அடுத்து நாம் பார்க்க வேண்டிய படம் The Shawshank Redemption (1994). மனைவியையும் அவளது கள்ளக்காதலனையும் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு வரும் ஹீரோ, எப்படி அந்த ஜெயிலில் இருந்து தப்பிக்கிறான் என்பதே கதை. உள்ளே இருப்பவர்கள் மற்றும் வெளியே இருப்பவர்களின் உதவியுடன், சிறுசிறு பொருட்களை பலநாட்களாகச் சேகரிக்கிறான் ஹீரோ. அதன்மூலம் எப்படி தப்பிக்கிறான் என்று படம் விளக்குகிறது!! இரு படங்களின் அடிப்படைக்கதை ஒன்று தான். கதை சொல்வதில் மட்டும் ஒரு வித்தியாசம் உள்ளது. முதல் படம், சஸ்பென்ஸ் வகையைச் சேர்ந்தது. ஹீரோ தப்பிக்க திட்டமிடுவதும், அதற்கு ஏற்படும் தடைகளும் பார்வையாளனுக்கு தெளிவாக சொல்லப்படுகின்றன. 

இரண்டாவது படம், சர்ப்ரைஸ் வகையைச் சார்ந்தது. ஹீரோ தப்பிக்கத்தான் சிறுசிறு பொருட்களாக சேகரிக்கிறான் என்று நமக்கு கடைசிவரை தெரிவதேயில்லை. ஹீரோவின் நண்பரின் பார்வையிலேயே படம் நகர்கிறது. முதல் படம், ஹீரோவின் பார்வையிலேயே நகர்கிறது. ஒரு சஸ்பென்ஸ் படத்தையும், ஒரு சர்ப்ரைஸ் படத்தையும் சுவாரஸ்யமாக்குவது எப்படி என்று அறிய இந்தப் படங்களின் திரைக்கதை உதவும். அதிருக்கட்டும், இப்போ மேட்டருக்கு வருவோம்.

இப்போது ஒரு பேச்சுக்கு இரண்டாவது படத்தை நமது கமலஹாசன் ’தப்பிச்சோம்ல’ என்ற பெயரில் எடுத்திருந்தார் என்று வைத்துக்கொள்வோம். நமது சினிமா அறிவுஜீவிகள் எப்படி கழுவி ஊற்றியிருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள்:

- ஒரிஜினல் படத்தில் (A Man Escaped) இன்னொரு சிறைவாசியின் மனைவி அவனை ஏமாற்றி விட்டதாக வருகிறது. அதையே கமல் தப்பிச்சோம்ல படத்தில் ஹீரோவின் மனைவி ஏமாற்றியதாக வைத்திருக்கிறார்

- ஒரிஜினல் படத்தில் தன்னை விட வயதான பக்கத்து செல் ஆளிடம் ஹீரோ நட்பு கொள்வதாக வருகிறது. அதையே கமல் ’ரெட்’ கேரக்டருடன் நட்பு கொள்வதாக வைத்திருக்கிறார்

- ஒரிஜினல் படம் டீசண்டாக இருக்கிறது. இதில் ஹோமோசெக்ஸ், நடிகையின் போஸ்டர் என கமல் தனது அறிவுஜீவித்தனத்தை காட்டிவிட்டார்.(நல்லவேளை, ஹோமோசெக்ஸ் சீனில் லிப்-கிஸ் இல்லை!)

- கமல் படத்தில் ஜெயிலில் இருந்து வெளிவரும் வயதானவர் தற்கொலை செய்துகொள்ளும் சீன் வருகிறது. அது ஜப்பானியப் படமான ‘சளக் புளக்’கில் இருந்து உருவப்பட்டது!

- ஒரிஜினல் படத்தில் சுரங்கம் தோண்டி தப்பிப்பதாக வரும். அப்படியே காப்பி அடித்தால் கண்டுபிடித்துவிடுவோம் என்பதால், இதில் வான்வழியே தப்பிப்பதாக உல்டா செய்திருக்கிறார்.

உஸ்ஸ்..நான் அறிவுஜீவு இல்லை என்பதால் என்னால் இவ்வளவு தான் முடிகிறது, படம் பார்த்துவிட்டு நீங்கள் தொடரலாம். 
The Shawshank Redemption படத்தின் மூலமாக ஒரு நாவல் தான் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த நாவல் டால்ஸ்டாயின் ஒரு சிறுகதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாக அதை எழுதியதாக Stephen King சொன்னாரே ஒழிய, எங்கேயும் A Man Escaped படம் பற்றி யாரும் பேசவில்லை. அப்படியென்றால் காப்பி அடித்துவிட்டு ஏமாற்றினார்களா? இல்லை, இதைத் தான் நாம் ஒத்த சிந்தனை என்று சொல்கிறோம். சிறையில் இருந்து தப்பித்தல் என்பது ஒரு கான்செப்ட். Grand Illusion, Great Escape போன்ற பல படங்கள் வந்திருக்கின்றன. யாரும் ‘அய்யய்யோ..காப்பி’ என்று கூப்பாடு போட்டு, படைப்பாளியின் கழுத்தை நெறிப்பதில்லை.

ஒரே விஷயத்தை இந்த இயக்குநர்/திரைக்கதை ஆசிரியர் எப்படி கையாள்கிறார் என்று கவனிப்பது தான் உண்மையான புத்திசாலித்தனமே ஒழிய, காப்பி என்று கத்தி அறிவுஜீவி தோற்றத்தை ஏற்படுத்துவது புத்திசாலித்தனம் அல்ல. நமது இயக்குநர்களைப் போலவே அவர்களும் ‘இந்த படத்தை எப்படி எடுத்தோம்னா..’ என்று பேசத்தான் செய்கிறார்கள். காரணம், திரைப்படம் என்பதில் கதை முக்கியம் அல்ல, திரைக்கதையும் இயக்கமுமே முக்கியம். ஆனால் நாம் செய்வது என்ன? ஏதாவது ஒரு சீன், ஏதோ ஒரு கொரிய,ஜப்பானிய,ஆங்கிலேயே அல்லது சோமாலியா படத்தில் இருந்தால்கூடப் போதும், அந்தப் படம் முழுக்கவே காப்பி என்று ஒதுக்கிவிடுகிறோம்.

உலகத்தில் எந்த மொழியிலும் வராத கதையைத் தான் எடுக்க வேண்டும். இதுவரை உலகில் வெளியான எந்தவொரு படத்திலும் வராத சீனைத் தான் ஒருத்தன் எழுத வேண்டும் என்றால், அது நடக்கிற காரியமா? இது படைப்பாளியின் மேல் ஏவப்படும் உச்சபட்ச வன்முறை அல்லவா? ஒரு கவிதையை இதே பாணியில் விமர்சிப்பீர்களா? அப்படி ஆரம்பித்தால், ஒரு கவிஞராவது ஒரு வார்த்தையையாவது எழுதிவிட முடியுமா? 
நாயகனையும் God Father என்போம். தேவர் மகனையும் God Father என்போம். நமது ஒரே நோக்கம், குறை சொல்வது தான். இதற்கு இன்னொரு முக்கியக் காரணம், ‘தமிழர்களால் சிந்திக்க முடியாது. வெள்ளைக்காரனே அறிவாளி’ எனும் அடிமை மனோபாவம். மகாநதி படம், Taken படத்திற்குப் பின் வந்திருந்தால் கமலஹாசனை என்ன பாடு படுத்தியிருப்போம்? ஆனால் மகாநதி முந்திக்கொண்டதால், Taken படம் மகாநதியின் காப்பி என்று சொல்ல வாய் வந்ததா? வராது, காரணம் தாழ்வு மனப்பான்மை. அதில் இருந்து என்று மீளப்போகிறோம்?

மேலும் வாசிக்க... "தமிழ் சினிமாவும் காப்பி கூச்சலும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 4, 2014

திரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

நல்ல சினிமாவுக்கு அடிப்படையாக இருப்பது திரைக்கதை. அந்த திரைக்கதைக்கு அடிப்படையாக இருக்கும் சில விஷயங்கள் பற்றியும், திரைக்கதை வடிவம் பற்றியும் இந்தத் தொடரில் பேசலாம் என்று இருக்கிறேன். ஒரு சினிமா ரசிகன் என்ற நிலையிலேயே இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கிறேன். இதுவரை நான் பார்த்த படங்கள் மற்றும் படித்த புத்தகங்களின் மூலம் நான் புரிந்துகொண்டிருப்பதையே இங்கே சொல்லப் போகிறேன்.
தமிழில் ஏற்கனவே நம் ‘வாத்தியார்’ சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி என்று எழுதியிருக்கிறார். பதிவுலக நண்பர் கருந்தேள் ராஜேஸும் ‘திரைக்கதை எழுதுவது இப்படி’ என்று எழுதிக்கொண்டு வருகிறார். எனவே புதிதாக இன்னொரு தொடருக்கான அவசியம் என்ன என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆங்கிலத்தில் திரைக்கதை பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன; இன்னும் எழுதப்பட்டு வருகின்றன.

அதனோடு ஒப்பிடும்போது தமிழில் திரைக்கதை பற்றி வந்த புத்தகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே நான் மட்டுமல்ல, சினிமா மேல் ஆர்வம் உள்ள அனைவருமே இந்த டாபிக் பற்றி எழுதினாலும் தப்பில்லை என்றே நினைக்கின்றேன். மேலும் அதிகளவு இத்தகைய புத்தகங்கள் வருவது, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மேம்பெடுத்தும். அது திரைக்கதையின் முக்கியத்துவத்தை சினிமாத்துறையினருக்கு தொடர்ந்து நினைவூட்ட உதவும் என்று நம்புகிறேன்.

'புக் படிச்சா, ஸ்க்ரீன்ப்ளே எழுதிடலாமா?’ என்று ஏளனப்பேச்சுக்கள் வரும் என்றாலும், பெரும்பாலான ரசிகர்களுக்கு திரைக்கதை பற்றிய விழிப்புணர்வு சென்று சேரும்வரை, எம்மைப் போன்ற அரைகுறைகள் இந்த டாபிக்கைப் பற்றி விரிவாகப் பேசித்தான் ஆக வேண்டியுள்ளது.

நான் அமெரிக்காவில் இருந்தபோது, தியேட்டருக்குச் செல்லாமலேயே இருந்தேன். (கஞ்சத்தனம் தான்!) அப்போது என் ஆபீஸ் நண்பர் மைக், என்னை ஹல்க் படத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை. சூப்பர் மேன் தவிர்த்து பிற சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்கள் எனக்கு பிடிப்பதில்லை.

‘ஒரே மாதிரி இருக்கு’ என்று நான் ஹல்க் பற்றி கம்ப்ளைண்ட் செய்தபோது தான், மைக் ‘இவையெல்லாம் ஒரே ஸ்க்ரீப்ளே டெப்ம்ளேட்டில் வருபவை..ஆக்ட்டு. இன்சைட்டிங் இன்சிடிடெண்ட்.........’ என்று என்னென்னவோ சொன்னார். ‘எனக்கு இதெல்லாம் தெரியாது சாமீ..எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஹாலிவுட் பாலா தான்’ என்று நான் கெஞ்சியபோது ‘அப்போ ப்ளேக் ஸ்னிடர்ல இருந்து ஆரம்பி..அது ஈஸியா இருக்கும்.புரியும்’ என்றார். Blake Snyder-ல் ஆரம்பித்தது, இன்னும் போய்க்கொண்டே இருக்கிறது. அது இப்படி பதிவுலகில் உபயோகப்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை, நன்றி மைக்.
இயக்குநர் ஸ்ரீதர்
நான் பல புத்தகங்களை இதுவரை படித்து, குறித்து வைத்திருக்கும் நோட்ஸில் இருந்தே, இந்த தொடரை எழுதப் போகிறேன். கலைஞர், பாலச்சந்தர், ஸ்ரீதர் மற்றும் பாக்கியராஜ் என பல ஜாம்பவான்கள் திரைக்கதையில் தனி முத்திரை பதித்திருக்கிறார்கள். அவர்களின் படங்களில் இருந்து பொருத்தமான உதாரணங்களைத் தர முயல்கிறேன். எனவே இந்த தொடரை ஒரு சினிமா ரசிகனின் பெர்னல் நோட்ஸ் என்றே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தொடரில் அவ்வப்போதும், தொடரின் இறுதியிலும் அந்த புத்தகங்களின் பெயர் தரப்படும்.

இந்தத் தொடர் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்படுகின்றது.
  1.  திரைக்கதையின் அடிப்படைக்கூறுகள், ஒரு கதையை திரைக்கதையாக டெவலப் செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி முதல் பாகத்தில் பேசுவோம். கதையின் கரு, குறிக்கோள், முரண்பாடுகள் போன்ற  விஷயங்களை உதாரணங்களுடன் பார்ப்போம்.
  2.   இரண்டாம் பாகத்தில் பொதுவான திரைக்கதையின் வடிவங்கள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். பின்னர் Save the Cat புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறை பற்றி விரிவாகப் பார்ப்போம். குறிப்பாக அவரது Beat sheet கான்செப்ட்டை விளக்கும் பக்கங்கள், நேரடியாக இந்த தொடரில் உபயோகப்படுத்தப்படும். அவர்களிடம் இதற்கு அனுமதி வாங்கியிருக்கிறேன் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
  3.  மூன்று அங்க வடிவம்(3 Act Structure) என்பது ஹாலிவுட் சினிமா தாண்டி, ஐரோப்பிய-ஆசிய சினிமாக்களில் பெரிதாக செல்லுபடியாகவில்லை. அது ஏன், அதை எப்படி தமிழ் சினிமாவிற்கு மேட்ச் பண்ணுவது, தமிழ் சினிமா எந்த வகையான வடிவத்தில் வெற்றியடைகிறது என்று அலசுவோம்.
இயக்குநர் மகேந்திரன்
 குறிப்பாக, தமிழ் சினிமா உதாரணங்களை மட்டுமே வைத்து, இந்தத் தொடரை எழுதுவதாக எண்ணம். ஒவ்வொரு ஞாயிறு இரவும் இந்தத் தொடர் வெளியிடப்படும். இதுவரை எனது எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவளித்தது போன்றே, இதற்கும் ஆதரவை வாரி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

இந்தத் தொடரில் தரமான வணிக சினிமாவுக்கு திரைக்கதை எழுதுவது எப்படி என்று இணைந்தே கற்றுக்கொள்வோம், வாருங்கள்.


முருகனருள் முன்னிற்கட்டும்!

(தொடரும்)



மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, May 1, 2014

காசுக்கு ஓட்டு....கட்சிக்கு வேட்டு!

ஜனநாயகம் என்பது சர்வாதிகாரத்தின் மென்மையான மறுபக்கம் தான். ஒரே சர்வாதிகாரி என்பதற்குப் பதிலாக இரண்டு, மூன்று சாய்ஸ்களை ஜனநாயகம் நமக்கு வழங்குகிறது. நமது சர்வாதிகாரிகளும் ‘ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும்..பூசாத மாதிரியும் இருக்கணும்’ என நாசூக்காக சர்வாதிகாரத்தை கட்சிகளில் நிறுவியிருக்கிறார்கள். கலைஞர். எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி என ஓட்டுக்கள் குறிப்பிட்ட நபர்களுக்காக விழுவதே இங்கே வழக்கம். காலம் காலமாக மன்னர்/ஜமீன்களிடம் விசுவாசம் காட்டிய நம் மக்கள், அதை அரசியல்வாதிகளிடம் தொடர்கிறார்களோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. 
ஏற்கனவே சில பதிவுகளில் சொன்னதுபோல் கட்சிப்பொறுப்பில் இல்லாவிட்டாலும், எங்கள் குடும்பம் தீவிர திமுக குடும்பம்.  மற்ற கட்சியினர் எங்கள் வீட்டிற்கும், என் பெரியப்பா வீட்டிற்கும் ஓட்டு கேட்டே வரமாட்டார்கள். கலைஞர் பற்றிப் பேச ஆரம்பித்தால், என் அப்பா உருகிவிடுவார். தொடர்ந்து ஈழத்தமிழர் பிரச்சினையில் கலைஞரின் சொம்பும் அரசும் மத்திய அரசால் நசுக்கப்பட்ட காலம். எனவே கலைஞர் மீது அவ்வளவு பிடிப்பு. இத்தனைக்கும் எங்கள் சொந்தக்காரர்கள் அனைவரும் அதிமுகவினர் தான். ஒரே ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்து ஓட்டு கேட்கும் தைரியம் அவர்களுக்கு வந்தது.

அது, ராஜீவ் கொலையை அடுத்து வந்த சட்டமன்றத்தேர்தல். ‘ராஜீவைக் கொலைசெய்த படுபாவிகள் புலிகளுக்குத் துணைபோன திமுகவிற்கா உங்கள் ஓட்டு?’ என்று வீட்டிற்கு வந்து கேட்டார்கள். ‘கலைஞர் துணைபோயிருந்தால், அது பெருமை தான்..ஓடிப்போயிடுங்க’ என்று விரட்டிவிட்டார். தன் வாழ்க்கையில் உதய சூரியனைத் தவிர வேறு எதற்கும் அவர் ஓட்டு போட்டதில்லை. (இதில் வேடிக்கை, எங்கள் தொகுதியில் திமுக ஜெயிப்பதேயில்லை. ஆனாலும்...!) தலைவருக்கும் தொண்டனுக்குமான பிணைப்பு, சிறுவயது முதலே என்னை ஆச்சரியப்படுத்தும் விஷயம். மறுபுறம் இரட்டை இலை தவிர வேறு எதற்குமே ஓட்டுப்போடாத மாமன்மார்களின் எம்.ஜி.ஆர் பக்தி என்னை அசர வைக்கும். தலைவனின் வெற்றியை தனது வெற்றியாக கொண்டாடும் எளிய மனிதர்கள், அந்த தொண்டர்கள்.

எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்து சிரித்தார் என்று புளங்காகிதம் அடையும் ரத்தத்தின் ரத்தம், கலைஞர் என்னை பெயர் சொல்லி அழைத்தார் என்று பெருமிதம் கொள்ளும் உடன்பிறப்பு (கலைஞருக்கு அபார ஞாபக சக்தி உண்டு..பலவருடம் கழித்துப் பார்த்தாலும் பெயரைச் சொல்வார்!) என பல்வேறு அதிசய அனுபவங்களை உள்ளடக்கியது தலைவனுக்கும் தொண்டனுக்குமான உறவு. அவ்வாறு நமது ஜனநாயகம் ஒரு அட்ஜெஸ்ட்மெண்ட்டில் ஓடிக்கொண்டிருந்தபோதுதான், திருமங்கலம் ஃபார்முலா கண்டுபிடிக்கப்பட்டது.
காசு கொடுத்தால் போதும், ஓட்டு வாங்கிவிடலாம் எனும் திருமங்கலம் ஃபார்முலா கண்டுபிடிக்கப்பட்டபோது, சில கட்சிகள் அகமகிழ்ந்திருக்கும். இவ்வளவு எளிய வழியை விட்டுவிட்டா, இத்தனை நாள் பொழைப்பு நடத்தினோம் என்று நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இந்த ஃபார்முலா, அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஜெயித்தது. ஆனால் அதுவே இப்பொழுது கட்சிகளுக்கு ஆப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. அதை கட்சிகள் உணர்ந்திருக்கின்றனவா என்று தெரியவில்லை.

இருமுறை திமுக பணத்தால் ஓட்டுக்களை ‘வாங்கியதை’ப் பார்த்த அதிமுகவும் சென்ற சட்டமன்றத்தேர்தலில் போட்டிக்கு இறங்கியது. திமுகவும் தாரளமாக பணத்தை வாரி இறைத்தது. எங்கள் பகுதியில் ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய்வரை திமுக கொடுத்தது. எனக்குத் தெரிந்து பணத்தை வாங்கிய பலரும் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை. பல தொகுதிகளில் அது தான் நிலைமை. ஓட்டுக்கு காசு கொடுத்தும் திமுக தோற்றது, ஓட்டுக்கு காசு கொடுத்த அதிமுக ஜெயித்தது. காசு மட்டுமே ஓட்டை கொண்டு வந்துவிடாது என்பதே உண்மை. ஆனாலும் புலிவால் பிடித்த கதையாக, நாம் கொடுக்கவில்லையென்றால் எதிர்க்கட்சி கொடுத்துவிடுமோ என்ற பயத்தில், இந்த நாடாளுமன்றத்தேர்தலிலும் பணம் வாரி வழங்கப்பட்டுள்ளது.

சென்ற சட்டமன்றத்தேர்தலிலேயே காசு வாங்கினாலும் ஓட்டு போட மாட்டார்கள் என்று கண்டுகொண்டதால், இந்தமுறை கட்சியினர் மிக விழிப்புணர்வுடன் செயல்பட்டுள்ளார்கள். அது, நமது கட்சிக்கு உறுதியாக ஓட்டுப்போடுபவர்கள் மற்றும் ஓட்டுப்போடுவார்கள் எனும் நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு மட்டும் பலபகுதிகளில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான வேடிக்கை.’காசு கொடுத்தால் ஓட்டு வாங்கிவிடலாம்’ எனும் ஃபார்முலா இப்போது ‘ஓட்டுப் போடறவனுக்கு காசு கொடு’ என்று திரும்பியிருக்கிறது. ஓட்டுப் போடுவான் என்று உறுதியாகத் தெரிந்தபின்னும் அவனுக்கு ஏன் காசு கொடுக்கிறார்கள்?
முதல் காரணம், ஏற்கனவே சொன்னதுபோல் புலிவால் பிடித்த பயம். இரண்டாவது காரணம், திடீர் பணக்காரனை எல்லாம் வேட்பாளராக ஆக்கியது. இந்த திடீர் பார்ட்டிகளுக்கு, கட்சிக்கும் தொண்டனுக்குமான உறவு புரிவதேயில்லை. ‘என்கிட்ட காசு இருக்கு. என்னால இத்தனை கோடி செலவளிக்க முடியும்’ என்று சொல்லி, காலம் காலமாக கட்சியில் இருப்பவனை முந்தி, சீட் வாங்கிய புள்ளிகளுக்கு, கட்சி மேல் என்ன அக்கறை இருக்கும்? இதனால் நடப்பது என்ன தெரியுமா?

எனக்கு ‘நன்கு தெரிந்த’ அந்த அப்பாவி மனிதர், தன் வாழ்நாளில் இரட்டை இலை தவிர வேறு எதற்கும் ஓட்டு போட்டதேயில்லை. புரட்சித்தலைவரின் சின்னம் தோற்கக்கூடாது எனும் எண்ணத்தைத் தவிர வேறு நாட்டுநலன் சார்ந்த கொள்கைகள் ஏதும் அவரிடம் கிடையாது. இந்தத் தேர்தலில் இரட்டை இலைக்கு ஓட்டு போடும்படி ‘தலைக்கு 200 ரூபாய்’ கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ‘நான் காலம் காலமாக அதிமுகவிற்குத்தானே ஓட்டுப் போடுகிறேன். எங்களிடம் வேறு கட்சிக்காரன் ஓட்டுக் கேட்டே வருவதில்லையே..எனக்கு ஏன் காசு?’ என்று அவர் கதறியும், வாங்கியே ஆக வேண்டும் என்று கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

நீங்கள் செய்வது என்னவென்று தெரிகிறதா முட்டாள்களே!..........அம்மா கையால் சாப்பிட்டுவிட்டு ‘இந்தா காசு..ஹோட்டல்ல காசு வாங்கிக்கிறாங்கல்ல..நீ ஏன் வாங்க மாட்டேங்கிறே?’ என்று கொடுப்பீர்களா? மனைவியிடம் படுத்துவிட்டு ‘இந்தா காசு’ என்று கொடுப்பீர்களா?ஒரு தொண்டனுக்கும் தலைவனுக்குமான பிணைப்பு எப்படிப்பட்டது எனும் அறிவு கொஞ்சமாவது இருந்தால், இதைச் செய்வீர்களா?  ’கட்சி என்றால் என்ன? தலைவன் என்றால் என்ன?’ என்ற அடிப்படை புரிதலாவது உங்களிடம் இருக்கிறதா? நமது ஈய ஜனநாயகம், கட்சிகளின்மேல் கட்டப்பட்டிருக்கும் மாயக்கோட்டை. கட்சிகள், தொண்டனின் பாசத்தால் கட்டுண்டு கிடக்கும் யானைகள்.

ஓட்டுக்கு காசு என்று நீங்கள் ஆரம்பித்திருக்கும் விளையாட்டு, கட்சிக்கும் தொண்டனுக்குமான மானசீக உறவை அறுத்துவிடும் என்பதே உண்மை. வலுக்கட்டாயமாக காசை கொடுத்துவிட்டு ‘காசு வாங்கிட்டுத்தானே ஓட்டுப் போட்டார்கள்’ எனும் அலட்சிய மனோபாவத்தை வேட்பாளனின் மனதில் இது உண்டாக்குகிறது. ‘உன் பாசம் தேவையில்லை..காசை எடுத்துட்டு ஓட்டைப் போடு’ என்று கட்சி சொல்கிறது எனும் உள்மனத் தாக்கத்தை தொண்டனிடம் இது உண்டாக்குகிறது. தலைவன்/தலைவி மேல் ஆயிரம் ஊழல் குற்றச்சாட்டு சொன்னாலும், அதைப் புறம்தள்ளி கட்சிக்கு விசுவாசத்துடன் இருப்பவனுக்கு நீங்கள் காட்டும் மரியாதை, இது தானா?
கலைஞர் எனும் பெயருக்காகவே ஓட்டுப்போடும் பெரும்கூட்டம் இங்கே இருக்கிறது. இறந்து பல ஆண்டுகள் ஆனாலும் எம்.ஜி.ஆருக்காகவே ஓட்டுப்போடும் கூட்டம் ஒன்று இங்கே இருக்கிறது. இந்த காசுக்கு ஓட்டு எனும் கேவலம் தொடர்ந்தால், நாளை இந்தக் கூட்டம் மனம் வெதும்பிக் கலையும் என்பதே உண்மை. 

ஸ்டாலினும் ஜெயலலிதாவும் அவர்களுக்கென்று ஒரு செல்வாக்கையும் தொண்டனுடன் ஒரு பிணைப்பையும் உருவாக்க வேண்டுமேயொழிய, இந்த ஃபார்முலா கை கொடுக்கும் என்று நினைத்தால், அது காலப்போக்கில் கட்சிக்கு பேரழிவைத் தரும். கட்சிகளின் அழிவு, ஜனநாயகத்தின் அழிவு!


மேலும் வாசிக்க... "காசுக்கு ஓட்டு....கட்சிக்கு வேட்டு!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

13 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.