Friday, January 31, 2014

ரம்மி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து வழங்கி நம் நம்பிக்கை நாயகனாக விளங்கிவரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் புதுமுக இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் ரம்மி. ஆட்டம் எப்படின்னு எப்படின்னு பார்ப்போம், வாருங்கள்.
ஒரு ஊர்ல..:
வெளியூர்க்காரன் யாராவது வந்து காதல் செய்தால், ஆளையே வெட்டும் கிராமத்தில் இருக்கும் காலேஜிற்கு படிக்க போகிறார்கள் இனிகோ பிரபாகரும் விஜய் சேதுபதியும். அந்த ஊரில் இருக்கும் இரு பெண்களை அவர்கள் காதலிக்க ஆரம்பிக்க, அதன்பின் என்ன ஆகிறது என்பதே கதை

உரிச்சா....:

எப்படியும் இந்த படத்தை நீங்க தியேட்டர்ல பார்க்கப் போறதில்லை. அதனால கதையை/படத்தை டீடெய்லாவே அலசுவோம்.

மார்க் கம்மியாக எடுத்ததால் வேறு வழியேயின்றி, ஒரு கிராமத்தில் இருக்கும் காலேஜிற்கு இனிகோ பிரபாகர் படிக்கப்போவதுடன் துவங்குகிறது படம். எந்த படத்திலும் இல்லாத அதிசயமாக ஹீரோயினும் அதே காலேஜிற்கே, அட அதே கிளாஸிற்கே படிக்க வருகிறார். அதே கிளாஸில் சேரும் சூரியும் இன்னொருத்தரும் இனிகோவிற்கு நண்பர் ஆகிறார்கள். அங்கு சேர்ந்த கொஞ்சநாளிலேயே, உள்ளூர் பெண்ணை காதலித்தால் வெட்டுவதை கண்ணால் பார்க்கிறார்கள். வெட்டு, குத்து மனிதர்கள் நிறைந்த திகில் கிராமமாக செம பில்டப்புடன் படம் ஆரம்பிக்கிறது. காலேஜில் இவர்கள் சேர்ந்து இனிகோவிற்கு ஹீரோயின்மேல் காதல் வர, அந்த இன்னொரு ஃப்ரெண்ட்டும் இன்னொரு பெண்ணை லவ் பண்ண ஆரம்பிக்க, சூரி பதறிப்போய்த் திரிய என ஆரம்ப அரைமணி நேரம் அமர்க்களம் தான். 
எந்த நிமிடம் காதல் ஜோடிகள் பிடிபடுவார்களோ என்று நாம் பதற ஆரம்பிக்கிறோம். ஹீரோயின் ஊர்த்தலைவரின் தம்பி மகள் வேறு என்பதால் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. காதல் ஜோடிகள் மாட்டுவது போல் சீன் வருகிறது. ஆனால் மாட்டவில்லை, தப்பிக்கிறார்கள். அப்பாடா! அப்புறம் காதல் ஜோடிகள் மாட்டுவது போல் சீன் வருகிறது. ஆனால் மாட்டவில்லை, தப்பிக்கிறார்கள். என்ன இது?  அப்புறம் காதல் ஜோடிகள் மாட்டுவது போல் சீன் வருகிறது. ஆனால் மாட்டவில்லை, தப்பிக்கிறார்கள். என்னங்கடா இது? இப்படியே ஏதோ நடக்கப்போகிறது என்று நாம் எதிர்பார்த்து உட்கார, திரும்பத் திரும்ப இந்த பூச்சாண்டியிலேயே அடுத்து ஒரு மணி நேரம் ஓடுகிறது. 

நான் பக்கத்து சீட்டுக்காரரை திரும்பிப்பார்க்க, யாரோ அந்த மனுசனும் ஜெர்க்காகி சிக்கிட்டமோன்னு என்னைப் பார்க்க, ச்சே,,ச்சே..அப்படில்லாம் இருக்காதுன்னு தலையை உலுப்பிட்டு, ஸ்க்ரீனைப் பார்க்க ஆரம்பிச்சோம். இப்போ ஹீரோ ஊருக்கு போய்ட்டு வர்றாரு. வந்தா ஃப்ரெண்டைக் காணோம். ஒரு லெட்டர். மச்சான், வேற வழியில்லை. பொண்ணைக்கூட்டிட்டு ஓடிப்போறோம். நீயும் தப்பிச்சிடுன்னு லெட்டர். அந்த லெட்டரை எங்க வச்சிருக்காரு? ஹீரோயின் ஊருக்கு மத்தில வாடகைக்கு எடுத்து தப்பிச்ச ரூமுக்குள்ள. அட ஓடிப்போற மூதேவி, வழில ஹீரோ ஊருக்கு போயோ, இல்லே ஏதாவது வழியிலோ ஹீரோ இனிகோக்கு சொல்லக்கூடாதா? சரி, அது போகட்டும். அப்போ வைக்கிறாங்க பாருங்க ஒரு ட்விஸ்ட்டு. அந்த இன்னொரு ப்ரெண்டு லவ் பண்ணது, இழுத்துட்டுப் போனது ஊர் தலைவரின் பெண்ணை-ன்னு! 

என்னாங்கடா இது..ஊருக்குள்ள தங்கி இருக்கானுக..தலிவரு பெரிய அப்பாடக்கர்ன்னு தெரியுது..அவரு பொண்ணு தெரியாதா? அது பரவாயில்லை, லவ் பண்றவன்கிட்ட தன்  அப்பன் யார்னு கூட சொல்லாதா? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறதுன்னு சொல்வாங்களே அதெல்லாம் கிடையாதா? சரி, எப்படியோ தப்பிச்ச ஹீரோ இனிகோ, ஃப்ரெண்ட்டைத் தேடுதாரு. அதுக்குள்ள தலைவர் கோஷ்டி ஃப்ரெண்ட்டை போட்டுத்தள்ளிட்டு, பொண்ணை ஊருக்கு கொண்டுவந்திடுது.

ஒரு ஃப்ரெண்ட்டு ஜோடி கதை முடிஞ்சதா? இப்போ ஹீரோ-ஹீரோயின் ஜோடிக்கு என்னாகுமோன்னு பதறாம ‘ம்..அப்புறம்’ன்னு கேட்கிறோம். அந்த தலைவரு, குடும்ப மானத்தை பஸ்ல ஏத்துன பொண்ணை கொல்ல போறாரு. அந்த பொண்ணு தலைவரை கொன்னுட்டு, ஹீரோ-ஹீரோயினை சேர்த்துவச்சுட்டு, கையில அருவாளோட நடக்க ஆரம்பிக்குது. ’ஏலேய்..அது நம்மளைப் பார்த்துத்தான் வருதுலே’ன்னு நாம அலறும்போது, படம் முடிஞ்சிடுது.

ம்....எப்படி அசந்துட்டீங்களா?.தண்ணியைக் குடிங்க..தண்ணியைக் குடிங்க. இப்போ என்ன பிரச்சினைன்னு பார்ப்போம். படத்தோட மிகப்பெரிய பலமே கிளைமாக்ஸ் தான். ”காதலனை கொன்ன அப்பனையே வெட்டிட்டு, ஊரில் காதல் பூ பூக்க வைக்கிற (நன்றி: இரண்டாம் உலகம்) பத்ரகாளி நாயகி “ அப்படிங்கிற ஒன் லைனை வச்சுத்தான் டைரக்டர், இந்த சான்ஸையே வாங்கியிருப்பாருன்னு நம்புறேன். உண்மையில் நல்ல நாட் தான் அது. ஆனா அவங்க அப்பன் - மகள் அப்படிங்கிறதையே சஸ்பென்ஸா வைக்கிறதா முடிவுபண்ணது தான், ஆப்பு ஆகிடுச்சு. முதல்ல தெளிவாகவே அந்த அப்பனுக்கும் பொண்ணுக்கும் இடையில என்ன மாதிரி உறவு, ரொம்ப பாசமான அப்பனா இருந்தும் ஜாதி/அந்தஸ்து வெறியினால இப்படி ஆகிட்டானா? பாசமான அப்பாவாவே இருந்தாலும், தன் புனிதமான காதலை ஏத்துக்காம, கண்ணு முன்னாலேயே காதலனை கொன்னதால பத்ரகாளியா ஆகிட்டாளா?-ங்கிறதை டீடெய்லா சொல்லி இருந்தா, ஒரு டச்சிங் வந்திருக்கும். அப்பாவும் பொண்ணும் பேசிக்கிற சீனே இல்லைங்கிறது தான் பெரிய மைனஸ். அதனால கிளைமாக்ஸ் ஐடியா சூப்பரா இருந்தும் வேஸ்ட் ஆகிடுச்சு.

படத்தை த்ரில்லர் மாதிரி கொண்டு போனது ஏன்னும் புரியலை. கிணத்துல வாளி விழுந்தாக்கூட டெரர் மியூசிக். வில்லேஜ் த்ரில்லரா கொடுக்கணும்ன்னு நினைச்சிருக்காங்க. முதல்பாதியில் திகிலாவே ஃபீல் பண்றோம். கேமிரா ஆங்கிள்ல ஆரம்பிச்சு, ஒவ்வொரு சீன்லயும் வில்லேஜ் பீட்சாங்கிற அளவுக்கு டெரரா காட்டுறாங்க. ஆனா லாஜிக்கே இல்லாமல் கதை அந்தரத்தில் ஆடும்போது, டெரர் எஃபக்ட் எடுபடாம போயிடுது.  
அதெல்லாம் சரி..விஜய் சேதுபதியை எங்கய்யான்னு கேட்கிறீங்களா? மேலே ‘இன்னொரு ஃப்ரெண்ட்டு’ன்னு ஒரு துணை நடிகரைப் பத்தி படிச்சீங்க இல்லியா? அவர் தான் விஜய் சேதுபதி...ஆ.......-வா? ம்..அதே ஃபீலிங் தான் இங்கயும். ஓரமா வர்றாரு, ஓரமா லவ் பண்றாரு, பொசுக்குன்னு செத்துப்போறாரு. ஆமா பாஸ், இது இனிகோ பிரபாகர் படம் பாஸ்!

இனிகோ பிரபாகர்:

சுந்தர பாண்டியன் மாதிரி இல்லாம, இதுல முழு ஹீரோ. நல்ல சான்ஸ். நல்லாவே யூஸ் பண்ணி இருக்காரு. ஆனா விஜய் சேதுபதியை எதிர்பார்த்து போனதால, ரொம்ப இவரை ரசிக்க முடியலை. காதல், காமெடி, ஆக்சன்னு எல்லா ஏரியாலயும் புகுந்து அடிக்கிறாரு. செகண்ட் ஹீரோவா ஒரு ரவுண்டு வர சான்ஸ் இருக்கு!

விஜய் சேதுபதி:

எதுக்கு இதுல நடிக்க ஒத்துக்கிட்டாருன்னு கேட்கத் தோணுது. நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை. ஹீரோக்கு அல்லக்கை, ஹீரோயின் வாய்யா ஓடிப்போவோம்ன்னா, ஓகேன்னு ஓடற மொன்னை கேரக்டர். நட்புக்காக இதைப் பண்ணினாருன்னா, பெரிய விஷயம் தான். ஆனாலும் ஆடியன்ஸை ஏமாத்தக்கூடாதுல்ல அப்பு?

அவரோட ஊர்ல ஏதோ மர்மக்கதை இருக்கிற மாதிரியே பில்டப்பு, அம்மா செத்துப்போச்சுன்னு ஊருக்கு போய்ட்டு வர்றாரு. ஆனாலும் அப்படி இல்லேங்கிற மாதிரியே பேக்ரவுண்ட் மியூசிக்ல டெரரை கூட்டுறாங்க. இனிகோ தான் அப்புறம் படிக்க வைக்கிறாரு. சரி, அவருக்கு ஏதோ பண்ணப்போறாருன்னு பார்த்தா அதுவும் இல்லை. ஓடிப்போய் சாகறதுக்கு விஜய் சேதுபதி எதுக்குய்யா?

ஹீரோயின்ஸ்:
முடியலை..காயத்ரி பொண்ணை பார்க்கவே பாவமா இருக்கு. அதை டூயட்லாம் ஆட வச்சு,  குளோஷ் அப் வச்சு நம்மளை மிரட்டின்னு ஏக அட்டகாசம். 

விஜய் சேதுபதிக்கு ஜோடியா ஐஸ்வர்யா நடிச்சிருக்கு. படத்தையே தாங்கி நிற்கிற கேரக்டர்ன்னா எப்படி இருக்கணும்? ஏற்கனவே திரைக்கதையில அதுக்கு முக்கியத்துவமே இல்லாம கோட்டை விட்டாச்சு. ஆளாவது கெத்தா இருக்க வேண்டாமா? கடைசி சீன்ல அப்பனையே வெட்டிட்டு, கையில அருவாளோட பத்ரகாளியா நிக்கணும்ன்னா எப்படி இருக்கணும்? இங்க கண்ணு மட்டும் தான் அந்த கேரக்டருக்கு பொருந்துது. மத்தபடி அப்பங்காரன் இது மேல விழுந்திருந்தாலே செத்திருக்கும்.

சொந்த பந்தங்கள்:

சூரிக்கு ஓரளவு நல்ல கேரக்டர். ரொம்ப மொக்கை போடாம, காலேஜ் சீன்கள்ல (பத்து நிமிசம்) நல்லாவே காமெடி பண்றார். அப்புறம் ஒரு நல்ல குணசித்ர நடிகராவும் ஆகிடறார். ஊர்ப் பெரியவரா கும்கில ஊர்த்தலைவரா வந்த அதே பெரியவர். அவரைவிட அவரோட அடியாளா வர்றவர் நல்லா நடிச்சிருக்கார். வில்லத்தனமா கண்கள். ஆளு ஸ்க்ரீன்ல வந்தாலே, என்னாகப்போகுதோன்னு (ஆரம்பத்துல) பயப்படறோம். 

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- காதல் + புரட்சி படத்தை த்ரில்லரா கொடுக்க நினைச்சது
- முக்கிய கேரக்டர்களோட கேரக்டர் ஸ்கெட்ச்சை ஆடியன்ஸுக்கு சொல்லாம மறைச்சு, சஸ்பென்ஸ் வைக்கிறதா நினைச்சு ஆப்பு வச்சிக்கிட்டது
- விஜய் சேதுபதியை வீணடிச்சதோட நில்லாம, இது விஜய் சேதுபதி படம்ன்னு எங்களை ஏமாத்துனது (அவருக்கு டூயட் இருந்தாலும் கேரக்டர் எடுபடலை)
- கிராமத்துல ஊர்ப்பெரியவரைத் தவிர வேற யாருமே காதலுக்கு எதிரியா இல்லைங்கிற மாதிரி காட்டுனது. அதுல அந்த கேரக்டரும் காலி
- முத்தழகு மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டிய ஐஸ்வர்யா கேரக்டரை சஸ்பென்ஸுக்காக சப்பை ஆக்கியது.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- இமானின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் அட்டகாசம். ஒரு த்ரில்லர் படத்துக்கு தர வேண்டிய இசையை பெர்ஃபெக்ட்டா அண்ணன் கொடுத்திருக்காரு. ஆனா படம் தான் த்ரில்லரா இல்லாமப் பூடுச்சு!

- ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் சஸ்பென்ஸை கூட்டுறதுல கேமிரா கோணங்களும் எடிட்டிங்கும் நல்லா கை கொடுத்திருக்கு

- ஆரம்ப காட்சிகள்

- கிளைமாக்ஸில் மட்டுமே தெரியும் உக்கிரம். 

பார்க்கலாமா? :

என்னத்தைச் சொல்ல!

மேலும் வாசிக்க... "ரம்மி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

40 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, January 25, 2014

God Is Dead - அற்புதமான குறும்படம்

இணையத்தில் கடந்த சில நாட்களாகவே ’God Is Dead’ படம் பற்றி பலர் எழுதிக்கொண்டு இருந்தார்கள். ஈழத்தமிழரின் வலியைப் பற்றிப் பேசுகிற படம் என்று சிலாகிக்கப்பட்டது. ஈழத்தமிழர் மேல் தனிப்பட்ட அன்புள்ளவன் என்றாலும், இதுவரை சேனல்4-ன் ஆரம்பகட்ட வீடியோக்கள் முதல் இசைப்ரியா வீடியோ வரை எதையுமே நான் பார்த்ததில்லை. காரணம், அதைப் பார்க்கும் அளவிற்கு எனக்கு மனவலிமை இல்லை என்பது தான். எனவே God Is Dead படத்தைப் பார்க்கவும், பயந்துகொண்டு ஒரு வாரமாகத் தவிர்த்து வந்தேன்.
அந்த குறும்படம் மொத்தமே ஒரு நிமிடம் தான் ஓடக்கூடியது என்ற செய்தியை பின்னர் தான் அறிந்தேன். அது கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது. எனவே பாஸ் பட்டனில் கர்சரை வைத்தபடி, பார்க்க ஆரம்பித்தேன். பரிதாபத்தை வலிய வரவழைக்கும் கோர காட்சிகளோ, அழுகை காட்சிகளோ ஏதும் இல்லை. ஆனாலும் சொல்ல வந்ததை ஆணித்தரமாக ஒரு நிமிடத்தில் சொல்லியது படம். உண்மையில் அதைப் பார்த்துவிட்டு அடுத்த 5 நிமிடங்களுக்கு ஒன்றும் யோசிக்காமல் உட்கார்ந்திருந்தேன். எந்தவித வார்த்தைகளாலும், படம் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்லிவிட முடியாது என்பது புரிந்தது. God Is Dead என்ற நீட்சேவின் வார்த்தைகளைத் தவிர வேறு ஒன்றையும் சொல்ல முடியவில்லை. 

தனிப்பட்ட வாழ்க்கையில் இறைவன் என்று ஒருவன் இருக்கின்றானா என்று வேதனைப்படும் கையறுநிலையை நாம் எல்லாருமே கடந்திருப்போம். பொதுவாழ்க்கையில் இயற்கை இடர்களின்போதும், ஈழப்போரின் முடிவிலும் அதை அனுபவித்திருக்கிறோம். இந்த படம், போருக்குப் பின் ராணுவத்தின் பிடியில் இருப்போரின் நிலையைப் பேசுகிறது. ஒரு நிமிடத்தில் மாபெரும் வரலாற்று சோகத்தை பார்ப்போரின் மனதில் பதிய வைப்பது தான் இந்த படத்தின் வெற்றியே.

இந்தப் படம் பிரான்சில் நடைபெறும் குறும்படப் போட்டிக்காக இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மொபைல் மூலம் எடுக்கப்பட்டதாக, ஒரு நிமிடம் மட்டுமே ஓடக்கூடியதாக இருக்கவேண்டும் என்பது போட்டியின் கண்டிசன். எனவே வசனமே இல்லாமல் எடுப்பது என்று முடிவெடுத்ததிலேயே இயக்குநர் சதா பிரணவன், பாதி ஜெயித்து விடுகிறார். இந்த படத்தை மட்டுமல்லாது, போட்டியில் இருக்கும் மற்ற சில படங்களையும் பார்த்தேன். (நமக்கு புரியாவிட்டாலும்) வசனங்கள் மூலம் ஒரு நிமிடத்தில் கதை சொல்ல அவர்கள் முயன்றிருக்கிறார்கள். ஆனால் அதை விட, ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படமே, அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மொபைலில் எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால்தான் தெரிகின்ற அளவிற்கு, தரத்தில் மிரட்டி இருக்கிறார்கள். மிகத்துல்லியமான ஒளிப்பதிவு, நேர்த்தியான இயக்கம், நடிகர்களின் டைமிங் மூவ்மெண்ட்ஸ், நடைபிணங்களாய் வாழும் சோகத்தைக் காட்டும் முகபாவம் என பாராட்ட பல விஷயங்களைத் தாங்கி நிற்கிறது இந்தப்படம். சிறந்த 50 படங்களில் ஒன்றாக God Is Dead தற்பொழுது தேர்வாகியுள்ளது. அந்த ஐம்பது படங்களில் சிறந்த படத்தினை தேர்ந்தெடுக்க http://fr.mobilefilmfestival.com/video/god-is-dead740 என்ற இந்த தளத்தில் ஓட்டெடுப்பு நடக்கிறது. முதல் படமாக தேர்வாகும் தகுதி, இந்த படத்திற்கு இருக்கிறதென்றே நம்புகிறேன். 

இந்த பதிவைப் படிக்கும் உங்களிடம் மேலும் இரண்டு நிமிடங்களைக் கோருகின்றேன். முதல் நிமிடத்தில் படத்தினை இங்கே பாருங்கள். பிடித்திருந்தால், இது தரமான படம் தான் என்று நீங்கள் நம்பினால், அடுத்த ஒரு நிமிடத்தில் அதற்கு ஓட்டு போடும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒருவர் 10 ஓட்டுக்கள்வரை தினமும் போடலாம். ஓட்டுப் போடும்முறை கீழே தரப்பட்டுள்ளது. ஒரு தரமான படைப்பிற்கு நீங்கள் தரப்போகும் ஆதரவிற்கு, எமது நன்றிகள்!
Facebook Account மூலம் வாக்களிக்க!

மேலும் வாசிக்க... "God Is Dead - அற்புதமான குறும்படம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, January 22, 2014

மன்மதன் லீலைகள் - மின்னூல் வெளியீடு

அன்பு நண்பர்களே,
 
மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியில் இருந்து) தொடர் வெளியான காலம், என் வலைப்பூவின் வசந்த காலம் என்று சொல்லலாம். அனைத்து நண்பர்களும் அந்த நேரத்தில் கொடுத்த ஆதரவு இன்னும் பசுமையாய் ஞாபகம் உள்ளது. தொடரின் அடுத்தபகுதி வெளியாக ஒருநாள் லேட் ஆனாலே, மின்னஞ்சலில் மிரட்டும் அளவிற்கு பலரின் மனதைக் கவர்ந்ததாய் இருந்தது அந்த தொடர்.
 
'மன்மதன் லீலைகள்' என்ற பெயரைப் பார்த்து படிக்காமல்விட்ட சில சகோதரிகள், தாமதமாக தொடர் பற்றி அறிந்து படித்த கூத்தும் அப்போது நடந்தது. பெண்களுக்கும், பெண்ணைப் பெற்றோருக்கும், பெண்ணை வாழ்க்கைத்துணையாய் ஏற்கப் போவோர்க்கும் சுவாரஸ்யமாய் ஒரு நல்ல செய்தியைச் சொன்னோம் என்ற மனநிறைவை இந்த தொடர் கொடுத்தது.
 
சிலநாட்களுக்கு முன் பதிவர் வினையூக்கி தொடர்பு கொண்டு, இதை மின்னூலாக வெளியிடுவோம் என்று கேட்டார். நான் எப்போதும்போல் 'என்னாத்த வெளியிட்டு..என்னாத்த படிச்சு..ஏற்கனவே புக் ஃபேர் அலப்பறைகளால் புக்குன்னால அலர்ஜி ஆகற அளவுக்கு நிலைமை இருக்கு. நாம வேற மக்களை இம்சை பண்ணனுமா?' என்றேன். 'நீ ஒத்து..எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்' என்று களமிறங்கி, கடந்த நான்கு நாட்களாக ப்ரூஃப் சரிபார்த்து, அட்டைப்படம் வடிவமைத்து, அன்பர் டான் அஷோக்கிடம் முன்னுரை வாங்கி மின்னூலை ரெட் செய்துவிட்டார். அவரது உழைப்புக்கு என் மரியாதை கலந்த நன்றிகள்.
 
முன்பின் அறிமுகம் இல்லாவிட்டாலும், வினையூக்கியின் சொல்லை நம்பி டான் அசோக் இந்த புத்தகத்தை படிக்கவும், பிடித்திருந்தால்(!) முன்னுரை எழுதித்தரவும் ஒத்துக்கொண்டார். மின்னூல் நம் மானத்தைக் காப்பாற்றிவிட்டதால், அருமையான முன்னுரையும் எழுதிக்கொடுத்துள்ளார். இரண்டு நாட்களாக, மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டுப் படித்து, முன்னுரை வழங்கிய டான் அசோக்கிற்கு எம் மனமார்ந்த நன்றிகள்.
 
வாழ்த்துரை எழுதிக்கொடுக்க முன்வந்த முகநூல் பிரபலம் கிளிமூக்கு அரக்கனுக்கும் நன்றிகள். இந்த மின்னூலை வெளியிட்ட http://freetamilebooks.com/ நிர்வாகத்தாருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே மூச்சில் மின்னூலாக மன்மதன்லீலைகளைப் படித்தபோது, பழைய வசந்தகாலம் மனதில் வந்துபோனது. தொடருக்கு கொடுத்த அதே ஆதரவை மின்னூலுக்கும் தரும்படி, அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். மின்னூலை படிக்கும் நண்பர்கள், தங்கள் விமர்சனத்தையும் சொன்னால் என்னை செம்மைப்படுத்திக்கொள்ள உதவும்.
 
 
அன்புடன்
செங்கோவி
மேலும் வாசிக்க... "மன்மதன் லீலைகள் - மின்னூல் வெளியீடு"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

44 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, January 19, 2014

விடியும் முன் - ஒரிஜினலும் காப்பியும்

சென்ற வருடம் வந்த படங்களில் குறிப்பிடத்தக்க படமாய் அமைந்தது விடியும் முன். படத்தின் மேக்கிங்கிற்காக மட்டுமல்லாது, திறமையாய் சுட்ட படம் என்பதாலும் குறிப்பிடத்தக்க படம் தான் அது. London to Brighton படத்தின் அப்பட்டமான காப்பி என்பதாலும், இங்கே படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதாலும் விடியும் முன் படத்தை ரிலீஸின் போது நான் பார்க்கவில்லை. ஆனால் சமீபத்தில் பார்த்தபோது, அசந்துவிட்டேன். பொதுவாக ஒரிஜினல் படத்தைப் பார்த்தபின் காப்பியை பார்க்க கண்றாவியாக இருக்கும். ஆனால் நந்தலாலாவிற்கு அப்புறம், ஒரிஜினலை விட பெட்டராக வந்த ‘காப்பி படம்’ என்று இதனைச் சொல்லலாம்.
கதை : 
ஒரு பணக்காரன் விபச்சாரத் தரகனிடம் ஒரு சிறுமி வேண்டும் என்று கேட்கிறான். வீட்டை விட்டு ஓடிவந்த ஒரு சிறுமியை, ஒரு விபச்சாரி/பாலியல் தொழிலாளியின் துணையுடன் ஏமாற்றி அந்த பணக்காரனிடம் அனுப்பி வைக்கிறான் தரகர். சிறுது நேரம் கழித்து, அந்த சிறுமியும் பாலியல் தொழிலாளியும் ட்ரெயினில் ஊரைவிட்டே ஓடுகிறார்கள். அந்த பணக்காரனின் மகன்(மெயின் வில்லன்?), ஓடுகின்ற இருவரையும் பிடித்துக்கொண்டுவரச் சொல்கிறான். தரகன் அவர்களைத் தேட ஆரம்பிக்கிறான். இருவரும் தப்பினார்களா? அந்த பணக்காரனுக்கு என்ன நடந்தது என்பதே கதை.

ஒரிஜினலுக்கும் காப்பிக்கும் எந்த வித்தியாசமும் கதையில் கிடையாது. இரண்டு படத்திலுமே அதே கதை தான்.
திரைக்கதை : 
ஒரிஜினலில் இரு பெண்களும் தப்பி ஓடுவதில் படம் ஆரம்பிக்கிறது. பணக்காரனின் மகன், தரகனைத் தேடி வரும்போதே நமக்கும் நடந்த கதை கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வைக்கப்படுகிறது. பாலியல் தொழிலாளி தன் தோழியின் வீட்டு(Brighton)க்குப் போகிறாள். அங்கே அவள் இருப்பதை அறியும், தரகன் மெயின் வில்லனுக்கு தகவல் சொல்கிறான். அவர்களை ஒரு இடத்திற்கு கொண்டு வரச்ச்சொல்கிறான் வில்லன். அங்கே கிளைமாக்ஸ்.

தமிழ்ப்படத்திலும் இதே டெம்ப்ளேட் தான். பெரிய மாற்றங்கள் இல்லாமல், அதே ஏற்ற இறக்கத்துடன் அதே டெம்ப்ளேட்டில் படம் பயணிக்கிறது. அங்கே London to Brighton என்றால், இங்கே சென்னை டூ ஸ்ரீரங்கம்.

கேரக்டர்கள்:
தமிழ்ப்படம், ஒரிஜினலை விட பெட்டராக ஆவது கேரக்டரைசேசனால் தான். படத்தின் முக்கிய கேரக்டர்களான பணக்காரன் - பாலியல் தொழிலாளி அப்படியே ஒரிஜினலின் காப்பி தான். ஆனால் அவர்களைத் தவிர்த்து பிற கேரக்டர்கள் எல்லாம், ஒர்ஜினலைவிட யதார்த்தமாக இருக்கிறார்கள். பூஜாவுக்கு லைஃப் டைம் கேரக்டர். மெச்சூரிட்டியான நடிப்பு. அந்த சிறுமி கேரக்டரும் ஒரிஜினலில் சிகரெட் பிடித்தபடி, F பாம் போட்டபடி வரும். தமிழில் நம் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி, அவள்மேல் பரிதாபம் வரும்படி பெர்ஃபக்ட்டாக அமைத்திருக்கிறார்கள். சிறுமியாக நடித்த மாளவிகா நல்ல நடிப்பு.
அவர்களை தேடிப்போகும் தரகனாக தமிழில் நடித்திருக்கும் அமரேந்திரன் நல்ல அறிமுகம். அவர் உருவமும், கொஞ்சம் அப்பாவித்தனமான முகமும் அப்படியே பிரச்சினையில் சிக்கிய கேரக்டருக்கு பொருந்திப்போகிறது. ஒரிஜினலில் அந்த கேரக்டர்,நம்மை பெரிதாக பாதிப்பதில்லை. ஆனால் இங்கே அந்த கேரக்டரை ரசிக்கவே ஆரம்பித்துவிடுகிறோம்.

ஒரிஜினலில் இல்லாத, புதிய கேரக்டர்களும் படத்தில் நிறைய வருகின்றன. ஆங்கிலப்படத்தில் ஒரு ரயில்வே ஸ்டேசனில் இருக்கும் சிறுமியை ஜஸ்ட் லைக் தட் பேசி, கூட்டி வந்துவிடுவார்கள். பெரிய அளவில் லாஜிக் இருக்காது. இங்கே துரைசிங்கம் எனும் குழந்தைகளை கடத்தி விற்கும் தாதாவிடம் இருந்து பூஜா, அந்த சிறுமியை கூட்டிவருவதாக வருகிறது. அந்த துரைசிங்கம் கேரக்டர், அட்டகாசம். துரை சிங்கத்திற்கும் பூஜாவுக்குமான உறவும் வசனத்துலேயே பூடகமாக சொல்லி இருப்பது அருமையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

Brighton-ல் இருக்கும் தோழி கேரக்டரும் ஏனோதானோவென்று இருக்கும். ஆனால் இங்கே அந்த கேரக்டர்(லட்சுமி ராமகிருஷ்ணன்) செண்ட்டிமெண்ட்டாக நம்மை டச் செய்கிறது. தரகனுக்கு உதவ வரும் தனியார் டிடெக்டிவ் கேரக்டரும் படத்தின் சுவாரஸ்யத்தைக் ஊட்டுகிறது. ஒரிஜினலில் Brighton-ல் அவர்கள் இருப்பதை ஈஸீயாக கண்டுபிடித்து விடுவார்கள். இங்கே அதை கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடிப்பது த்ரில்லைக் கூட்டுகிறது. 

மெயின் வில்லன் கேரக்டர் பற்றி பெரிதாக டீடெய்லிங் ஒரிஜினலில் இருக்காது. தமிழ்ப்படத்தில் அப்படி விட்டால் புரியாது என்பதால், தெளிவாக விளக்குகிறார்கள். அது கிளைமாக்ஸ் நீளத்தை கூட்டுவது தான் ஒரே குறை.

ஒரிஜினலில் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு குளியல் சீன் வந்து, நம்மை பதற வைக்கும்.(ஒரிஜினல் பார்க்கிறவங்க எச்சரிக்கையா இருங்கப்பா!) தமிழில் அப்படி வைக்க முடியாது என்பதால் நீட்டாக முடித்துவிட்டார்கள்.(நான் சந்தோசப்படுறனா, வருத்தப்படறனா???)
மற்றவை:
தமிழில் நம்மைக் கவர்ந்த விஷயம், வசனங்கள் தான். படம் முழுக்க யதார்த்தமான வசனங்கள். அமரேந்திரன் சொல்லும் ராஜா-நாய் கதை சூப்பர். அந்த கதையுடன் காட்சிகளைப் பொருத்திய எடிட்டிங் அற்புதம். பாராட்டப்பட வேண்டிய எடிட்டிங் (சத்யராஜ்-எடிட்டர்). அதே போன்றே பூஜா, ஸ்ரீரங்கம் போவதைக் கண்டுபிடிக்கும் காட்சியிலும் எடிட்டிங் சூப்பர். அந்த 5 நிமிடங்களில் செம பரபரப்பு. படத்தில் இன்னொரு நல்ல விஷயம், ஒளிப்பதிவு. பெரும்பாலும் இரவில் நடக்கும் காட்சிகள் தான். ஆனாலும் பார்க்க ஒவ்வொரு காட்சியும் அழகாக இருக்கிறது. நிறைய காட்சிகளில் நல்ல காம்போசிசன் மற்றும் லைட்டிங்.
Apne Desh ஹிந்தி படத்தில் வந்த ‘துனியா மே’ பாடலை சரியான இடத்தில் யூஸ் பண்ணி இருக்கிறார்கள். திடீரென வரும் அந்த பாடலும், அதன் இசையும், காட்சிகளும் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கின்றன. அந்த நிழல் டான்ஸ் ஐடியாவும் சூப்பர். படத்தின் பிண்ணனி இசையும் பட்டாசு.

மொத்தத்தில் ஒரிஜினலைப் பார்த்தவர்களால்கூட இதை ரசிக்க முடியும். நல்ல திறமையான டீம். இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு ஏன் காப்பியில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. இயக்குநர் பாலாஜி.கே.குமாரின் அடுத்த ‘ஒரிஜினல்’ படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மேலும் வாசிக்க... "விடியும் முன் - ஒரிஜினலும் காப்பியும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, January 12, 2014

வீரம் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
 ஆரம்பம் வெற்றிக்குப்பின் அஜித்தும் சிறுத்தை வெற்றிக்குப்பின் இயக்குநர் சிவாவும் இணைந்து தந்திருக்கும் படம் வீரம். விஜய்யின் ஜில்லாவும் ஒரே நாளில் வெளியாகிவிட, வீரமா ஜில்லாவா எனும் எதிர்பார்ப்பு வேறு எகிறிவிட்டது. அஜித் - விஜய் படங்கள் தனித்தனியே வருவதைவிட, இப்படி ஒன்றாக வருவதில் த்ரில் இருக்கவே செய்கிறது. இப்போ வீரம் எப்படின்னு பார்ப்போம், வாருங்கள்.
ஒரு ஊர்ல..:
ஒட்டன்சத்திரத்தில் வாழும் விநாயகம் & பிரதர்ஸ் எதற்கெடுத்தாகும் அடிதடியில் இறங்கும் வகையறா. அஹிம்சையை ஃபாலோ பண்ணும் நாசர் குடும்பத்துப் பெண்ணான தமன்னா மீது விநாயகத்திற்கு லவ் வருகிறது. அதில் எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை.
உரிச்சா....:
ஒரு துண்டுச்சீட்டில் எழுதிவிடக்கூடிய, அரதப்பழசான கதை தான். காதலில் ஜெயிக்க, காதலியின் வீட்டார் மனதில் இடம்பிடிப்பது எனும் கான்செப்ட்டில் பல படங்களும் வந்தாகிவிட்டன. ஆனாலும் அஜித்+கிராமப் பிண்ணனி+காமெடி என திரைக்கதையில் சிவா செய்திருக்கும் மேஜிக் தான் புதுக்கதை போல் தோற்றத்தைக் கொடுக்க்கிறது.
முதல்பாதி முழுக்கவே காமெடி தான். கல்யாணமே வேண்டாம் என அஜித் இருப்பதும், தமன்னாவிடம் கோர்த்துவிட சந்தானமும் பிரதர்ஸும் செய்யும் காமெடி முயற்சிகளும் முதல் பாதியை செம ஜாலியாக கொண்டு செல்கின்றன. காமெடி சீனில் நடிப்பது என்றாலே அஜித் முகத்தில் ஒரு அவஸ்தை எப்போதும் தெரியும். இங்கே கதைப்படி அது சரியாக செட்டாவதால்,  மனிதர் அசால்ட்டாக காமெடியை கடந்து செல்கிறார்.
 
இரன்டாம்பாதியில் தான் ஆந்திர மசாலா மழை ஆரம்பம் ஆகிறது. ஆனாலும் நாசரின் கலகலப்பான குடும்பச்சூழலும், கலர்ஃபுல் திருவிழாவும் பார்த்துக்கொண்டிருப்பது தெலுங்குப்படம் அல்ல என்று உறுதி செய்கின்றன. வில்லன்கள் வரும் எல்லாக்காட்சிகளும்,சண்டைக்காட்சிகளும் அக்மார்க் தெலுங்கு மசாலா. இயக்குநர் சிவா இன்னும் மனதளவில் ஆந்திராவிலேயே குடிகொண்டு இருக்கிறார் போலும். நல்லா இருக்கறயா என்பதைக்கூட 'நல்ல்ல்ல்லாஆஆஆஆஆஆ இர்ர்ர்ருக்க்க்க்க்க்க்கியாஆஆஆஆஆஆஆஆஆஆஆடாஆஆஆஆஆ?" என்ற ரேஞ்சில் தான் கேட்பார்கள் போல.  படத்தில் பெரிய குறை என்றால் அது மட்டும் தான்.
இரண்டாம்பாதியில் வில்லன்கள் தங்கள் 'நோக்கத்தை' நிறைவேற்ற வருவதும், அஜித் அடிப்பதும் மறுபடி வில்லன்கள் தங்கள் 'நோக்கத்தை' நிறைவேற்ற வருவதும், அஜித் அடிப்பதும் என ஒரே டெம்ப்ளெட்டில் படம் நகர்வது கொஞ்சம் சலிப்பூட்டுகிறது. ஆனாலும் இடையிடையே காமெடியை இரண்டாம்பாதியிலும் நுழைத்திருப்பதால், தப்பிக்கிறோம்.
பெரிய ஹீரோக்கள் யாரும் சமீபத்தில் கிராமப்படம் செய்யாத நிலையில், அஜித்தே வில்லேஜ் ஆளாக நடித்திருக்காத காரணத்தால் படம் பளிச்சென்று தெரிகிறது. ஆபாச வசனங்களோ, காட்சிகளோ இல்லாமல் எடுத்திருப்பது, ஃபேமிலி ஆடியன்ஸை கவர் பண்ணும்.
சமீபத்தில் அஜித் படங்களில் வராத ஃபேமிலி ஸ்டோரி+வில்லேஜ்+விரசமற்ற காமெடி என பக்கா ஃபேமிலி என்டெர்டெயினராக உருவாக்கி இருப்பதால், படமே ஃப்ரெஷாகத் தெரிகிறது.
அஜித்:
அஜித் நடிக்கும் வீரம் என்றுகூட டைட்டில் போடுவதில்லை. வீரம்..அஜித்குமார்..தமன்னா என்று தான் போடுகிறார்கள். அஜித்தின் அடக்கத்திற்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. வேட்டி சட்டையில் கம்பீரமாக வருகிறார் அஜித். கிராமத்து ஆளாக செட்டாக மாட்டார் என்பதை மாற்றிக்காட்டி இருக்கிறார். தம்பிக்கு ஏதாவது என்றால் துடிப்பதும், தமன்னாவிட கொஞ்சம் கொஞ்சமாக மனதைப் பறிகொடுப்பதுமாக ரொம்ப நாளைக்கு அப்புறம் சாஃப்ட்டான ஏரியாக்களில் நடித்திருக்கிறார். வில்லத்தனமான ரோலிலேயே பார்த்துவிட்டு நல்லவர்+கிராமத்து ஆள் என்று பார்க்கும்போது, ரொம்ப வித்தியாசமாக, அதாவது நன்றாக இருக்கிறது.

ஆக்சன் காட்சிகளில் பட்டையைக் கிளப்புகிறார். ஆந்திரா மசாலாவை வேறு கண்ணில் தூவி விட்டதால், சன்டைக்காட்சிகளில் பொறி பறக்கிறது. அதகளம் புரிந்திடும் என பேக்ரவுண்ட் பிஜிஎம்மில் ஒலிக்க, வதம் செய்கிறார். ஓரளவு காதல் மன்னன் காலத்து அஜித்தை இந்த படத்தில் பார்க்க முடிகிறது.
இருப்பினும், இந்த டூயட்லாம் இனிமே நமக்கு தேவையான்னு கொஞ்சம் யோசிங்க பாஸ்..பாட்டு சீன் வந்தா, ரசிகர்களே பதறிப்போய் கப்-சிப்னு உட்கார்ந்திருக்காங்க. எவ்வளவோ செஞ்சுட்டீங்க, இந்த டூயட்டையும் ஒழிச்சுட்டா புண்ணியமாப் போகும்..முடியலை.

தமன்னா:
 மூணு டூயட், நாலு சீனில் முடிகிற கேரக்டர் இல்லை. கதைப்படியே முக்கிய கேரக்டர் என்பதால், நடிக்க நல்ல ஸ்கோப். அஜித்தை காதலிக்கவில்லை என்று சொல்ல முயன்று தோற்பது, காதலை சொல்லும் காட்சி, அஜித்தின் ஆக்சன் அவதாரத்தைப் பார்த்து மிரளும் ட்ரெய்ன் சீன் என பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக அஜித் தேடி ஊருக்கு வரும் காட்சியில், அவரை மேலே இருந்து பார்த்ததும் காட்டும் ரியாக்சனிலேயே காதல் தெரிகிறது. டூயட் காட்சிகளில் பெரியப்பாவுடன் ஆடுவது போல் தெரிந்தாலும், மற்ற காட்சிகளில் கலக்கிவிடுகிறார்.
சந்தானம்:
  என்றென்றும் புன்னகைக்கு அப்புறம் சந்தானத்தின் இன்னொரு ஹிட். ஆல் இன் ஆல் படம் பார்த்தபோது, இனி சந்தானம் அவ்வளவு தானா என்று தோன்றியது. இதில் மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார். அதே நக்கலான ஒன்லைனர்கள் தான் என்றாலும், எதிர்பாராத நேரத்தில் விழும் பஞ்ச்களால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. முதல்பகுதியே சந்தானத்தைச் சுற்றித்தான் நகர்கிறது. இரன்டாம்பகுதியில் தம்பிராமையா அந்த பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்.
சொந்த பந்தங்கள்:
தம்பிகளாக நான்கு பேர் வந்தாலும் பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. வருகின்ற வில்லன்களை எல்லாம் அஜித்தே ஒற்றை ஆளாய் அடித்து நொறுக்குகிறார். அதுல் குல்கர்னி என்ற அற்புதமான நடிகர், இதில் உச்சஸ்தாயியில் கத்தும் வில்லனாக வீணடிக்கப்பட்டிருக்கிறார். நாசர் வழக்கம்போல் பாந்தமான நடிப்பு. ஆனாலும் கம்பீரத்தில் நாசரை அஜித் முந்துகிறார் என்றே சொல்ல வேண்டும். அந்த குழந்தையும் சோ க்யூட். அஜித்தும் குழந்தையும் 'ஆடும்' கண்ணாமூச்சி அதகளம்.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- காதைக் கிழிக்கும் கூக்குரலுடன் தூவப்பட்ட ஆந்திரா மசாலா

- டூயட் 'நாட்டியம்'

- (வேறு வழியே இல்லாமல்) திரும்பத் திரும்ப வந்து அடிவாங்கும் வில்லன்கூட்டம்
 



பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- 'எஜமான்' அஜித்

- படம் முழுக்க மெயின்டெய்ன் செய்த காமெடி

- ஃபேமிலி சப்ஜெட் கதை



- கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒளிப்பதிவு


- சூப்பர்ஹிட் பாடல்கள்

பார்க்கலாமா? :

தாராளமாகப் பார்க்கலாம்.

மேலும் வாசிக்க... "வீரம் - திரை விமர்சனம் "
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

37 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, January 10, 2014

ஜில்லா - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
விஜய்-மோகன்லால் என பெரிய ஸ்டார் காம்பினேசனுடன், நீண்டநாளைக்குப் பிறகு ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் இன்று வெளியாகும் படம். அஜித்-விஜய் படங்கள் நேரடியாக மோதுவதால் களை கட்டுகிறது இந்த பொங்கல். இப்போ ஜில்லா எப்படின்னு பார்ப்போம், வாருங்கள்.
ஒரு ஊர்ல..:
தாதா மோகன்லாலில் அடியாள் மகன் விஜய். தனக்காக உயிரைக் கொடுத்த அடியாளின் பிள்ளையை தன் பிள்ளையாகவே வளர்க்கிறார். மோகன்லாலை யார் எதிர்த்தாலும் காலி பண்ணும் பாசக்காரப்பிள்ளையாக உருவெடுக்கிறார் விஜய். தனது தாதாயிசம் பிரச்சினையின்றித் தொடர, போலீஸில் நம் ஆள் இருவன் இருந்தால் நல்லதே என்று மோகன்லால் விஜய்யை போலீஸ் ஆக்குகிறார். போலீஸ் ஆன பிறகே, அப்பாவின் செயல்பாடுகளால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவது விஜய்க்கு புரிகிறது. எனவே நல்ல போலீஸாக மனம் திருந்தி, மோகன்லாலையும் திருத்திக்காட்டுவேன் என்று சவால் விடுகிறார். ஜெயித்தாரா என்பதே படம்.

உரிச்சா....:
படத்தின் முதல்பாதி ஆக்சன்+ஜாலி என சரிசமமாக விறுவிறுப்பாகவே போகிறது. தன் அப்பாவைக் கொன்னது போலீஸ் என்பதால், விஜய்க்கு போலீஸ்/காக்கி என்றாலே பிடிப்பதில்லை. அதைவைத்து அவர் அடிக்கும் லூட்டிகள் அட்டகாசம். காஜலைப் பார்த்தவுடனேயே காதலில் விழுகிறார். பெண் கேட்டு அடியாள் பட்டாளத்துடன் போகும்போது தான் தெரிகிறது அவரும் போலீஸ் என. அந்த காட்சியும், அதைத் தொடரும் காஜல்+சூரி காட்சிகளும் செம ஜாலி. இன்னொரு பக்கம், பாசக்காரப்பிள்ளையாக விஜய், மோகன்லாலில் கட்டளைகளை அடிதடி-அதிரடியாக நிறைவேற்ற, ஆக்சனுக்கும் பஞ்சமில்லை. 

படத்தில் ஒரே பிரச்சினை, படத்தின் நீளம் தான். விஜய் போலீஸ் ஆகி (ஸ்ட்ரெய்ட்டா அசிஸ்டெண்ட் கமிசனர் தான்!) பின்னர் மனம் திருந்தி மோகன்லாலிடம் சவால் விடும்போது இண்டர்வெல். அதற்கே ஒன்றரை மணிநேரம் ஆகிவிடுகிறது. அதன்பிறகு மோகன்லாலுக்கும் விஜய்க்கும் நடக்கும் பாசப்போராட்டம்+நீதிப்போராட்டத்திலேயே அடுத்து ஒரு மணிநேரம் போகிறது. மோகன்லால் திருந்த தடையாக இருப்பது அவரது ஈகோ தான். அதை அவரது வளர்ப்புப்பிள்ளை எப்படி மாற்றுகிறார் என்று படத்தை முடித்திருந்தாலே, நல்ல படமாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால் இரண்டரை மணிநேரம் படம் ஓடியபின், கூடவே இருந்த சம்பத் வில்லன் என்று தெரிகிறது. பிறகு சம்பத்திடம் இருந்து மோகன்லால்+குடும்பத்தைக் காப்பாற்ற விஜய் போராடுவது, அதில் தம்பியை இழப்பது, அந்த பழி விஜய் மீதே விழுவது என்று வழக்கமான விஜய் மசாலாவிற்குள் கடைசி அரைமணி நேர படம் சிக்கிவிடுகிறது. இழுவையான காட்சிகள் சுவாரஸ்யத்தைக் குறைக்கின்றன. அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மாஸ் ஹீரோவுக்கே உரிய ஆக்சன் காட்சிகள்+காமெடி+காதல் என ஜாலியான படம் என்றே சொல்லலாம்.

விஜய்:
விஜய் அறிமுகம் ஆகும் ஓப்பனிங் சீன், செம மாஸ். தியேட்டரே அதிர்கிறது. படத்திற்குப் படம் மனிதருக்கு வயது குறைந்துகொண்டே போகிறது. ஜாலியான ஆளாகவும், ஆக்ரோசமான ஆளாகவும் ஒரே நேரத்தில் ஸ்கோர் பண்ணுகிறார். ஆனால் சீரியஸான காட்சிகளில்கூட அவர் கொடுக்கும் சில எக்ஸ்பிரசன்கள், வசனம் பேசும் ஸ்டைல் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. ஆனால் சண்டைக்காட்சிகளிலும், பாடல்காட்சிகளிலும், காமெடியிலும் மனிதர் கலக்குகிறார். மோகன்லாலுக்கு மரியாதை கொடுத்து, அவர் பெயரை முதலில் போட்டதற்கே விஜய்யைப் பாராட்டலாம்.

மோகன்லால்:
படத்தின் தரத்தை உயர்த்துவதே மோகன்லாலில் பிரசன்ஸ் தான். அட்டகாசமான நடிப்பு. ஆரம்பத்தில் காட்டும் கம்பீரமாகட்டும், பிள்ளையே எதிர்ப்பதை நினைத்து கலங்குவதாகட்டும் லாலேட்டன் பின்னிப்பிடல் எடுக்கிறார். பாதிப்படத்திலேயே சோலியை முடித்துவிடுவார்களோ என்று நினைத்தால், இறுதிவரை வருகின்ற முக்கியமான கேரக்டர். இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். முதல் ஷோவிற்கு நிறைய மலையாளிகளும் வந்திருந்தார்கள். லாலேட்டன் பேசும் பஞ்ச் டயலாக்களுக்கு(ஆமா..அவரையும் கெடுத்துட்டாங்கய்யா) செம கைதட்டல். 

காஜல் அல்வா:

காக்கி ட்ரெஸ்ஸிலேயே வருவதாலோ என்னவோ, கொஞ்சம் டல்லாகத் தெரிகிறார் காஜல். ஆனால் பாடல் காட்சிகளில் ஃப்ரெஷ்ஷாக வருகிறார். பெரிதாக கதையில் முக்கியத்துவம் இல்லையென்றாலும், காமெடிக்காட்சியிலும் கலக்குகிறார். சூரியை சுடும் காட்சி நல்ல காமெடி. இவர் உசரமா இருக்காருங்கறது வாஸ்தவம் தான்..அதுக்காக தொப்புள்ல இருந்து 2 சாண் கீழே சேலை கட்டுறது தான் ஓவரா இருக்கு..எப்போ என்ன ஆகுமோன்னு நமக்கு பக்கு பக்குங்குது.
சூரி:
இப்போது தான் இவர் சரியான ஃபார்முக்கு வந்திருக்கிறார். இரண்டாம்கட்ட ஹீரோக்களுடனே நடித்தவருக்கு இதில் புரமோசன். கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாமே சிரிப்பு மழை தான். அறிமுகம் ஆகும் காட்சியிலேயே போலீஸ் ட்ரெஸ்ஸுடன் வந்து, விஜய்யிடம் சிக்கி சின்னாப்பின்னமாவதும், விஜய் என்.சி.சி.கேர்ள்க்கு சூரியை வைத்து கராத்தே கிளாஸ் எடுப்பதும் செம காமெடி.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- இழுவையான கடைசி அரைமணி நேரம்
- படத்தின் நீளம். மூணு மணி நேரமாய்யா படத்தை ஓட்டறது? கர்ணன் படமா எடுக்கிறீங்க, கமர்சியல் படம் தானே?

- லாஜிக் பத்தியெல்லாம் ரொம்ப அலட்டிக்காதது..கிளைமாக்ஸ்ல மினிஸ்டர் சம்பத்தையே கொன்னுட்டு ஸ்லோமோசன்ல கேசுவலா நடந்துபோறது, விஜய் அசிஸ்டென்ட் கமிசனர் ஆகுறது, சம்பத் மோகன்லாலை கொல்ல எத்தனையோ வழி இருந்தும் தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டதுன்னு நிறைய இடத்துல லாஜிக்கே இல்லை. அட கமிசனர் கையை வெட்டுனா, ஒரு கேஸ்கூட போட மாட்டாங்களா? எஃப்.ஐ.ஆர் போட்டா, போலீஸ் ஆக முடியுமா? இப்படி நிறையக் கேட்கலாம்..ஆனால் இதெல்லாம் இருந்தாத்தானே, அது விஜய் படம்னு டைரக்டர் நினைச்சிட்டாரு போல.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- மோகன்லாலில் நடிப்பு
- விஜய்யின் அதிரடி சண்டைக்காட்சிகள் மற்றும் காமெடி
- சூரியின் காமெடி
- அப்பாவுக்கும் பிள்ளைக்குமான போராட்டமாக கதையை அமைத்தது
- இமானின் சூப்பர்ஹிட் பாடல்கள் + பாடல் காட்சிகள்

பார்க்கலாமா? :

முதல் இரண்டு மணி நேரத்திற்காக ஒருமுறை பார்க்கலாம்.

மேலும் வாசிக்க... "ஜில்லா - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, January 8, 2014

எழுத்துப்பிழை - குறும்பட விமர்சனம்

சமீபத்தில் எழுத்துப்பிழை என்ற ஒரு குறும்படத்தை நல்ல படம் என மாத்தியோசி மணி பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். எல்லா குறும்படங்களையுமே நல்ல படம் என சிலாகிக்கும் பெரிய மனது கொண்டவர் அவர். எனவே சந்தேகத்துடன் கமெண்ட்ஸை பார்த்தபோது, உண்மையிலேயே நல்ல படம் தானோ என்று தோன்றியது. எனவே துணிந்து படத்தைப் பார்த்தால், அட்டகாசமான படம்.
 
நல்ல வாழ்க்கைத்துணை அமையாத, ஒரு பாவிக்கு வாக்கப்பட்ட பெண்.அவளை விபச்சாரத்தொழிலில் ஈடுபடுத்திப் பிழைக்கிறான் அந்த இழிபிறவி. அவன் எப்படி தன் தவறை  உணர்ந்து, திருந்துகிறான் என்பதே கதை. குறும்படத்தின் கதையிலேயே ஒரு கச்சிதமான சிறுகதையின் அழகு இருக்கிறது. 


படத்தின் ஓப்பனிங் ஷாட்டிலேயே, இது கத்துக்குட்டித்தனமான குறும்படம் அல்ல என்று நிரூபித்துவிடுகிறார்கள். இருட்டில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கும் ஒரு பால் மணம் மாறாச் சிறுமி. அவுட் ஆஃப்போகஸில், பேக்ரவுண்ட்டில் சிறுமியின் ஒருபுறம் ஒரு பெண்ணும் மறுபுறம் ஒரு ஆணும் உடைகளைச் சரிசெய்கிறார்கள். அந்த பெண்மணி, சிறுமியை நெருங்கி வாவென்று தட்டியபடி நடக்க ஆரம்பிக்கிறாள்.
 
அது அந்தச் சிறுமியின் அம்மா என்பதும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறாள் என்பதும் நமக்கு விளக்கப்பட்டு விடுகிறது. வீட்டிற்கு வரும் அந்த பெண்ணிடம் இருந்து, சம்பாதித்த காசு அவள் கணவனால் பிடுங்கபடுகிறது. இந்த இரு காட்சிகளிலேயே கதையின் சூழ்நிலையும் கதை மாந்தர்களும் அழகான திரை மொழியுடன் சொல்லப்பட்டுவிடுகிறது.
 
குறும்படத்தின் இன்னொரு சிறப்பு, மிகக்குறைந்த வசனங்களே உபயோகப்படுத்தப்பட்டிருப்பது.  'காட்சிகளால்சொல்ல முடியாது என்ற சூழ்நிலையிலேயே வசனத்தை உபயோகிப்பேன்' என்று பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். அதை மிகச்சரியாக பின்பற்றியிருக்கும் குறும்படம் இது. மேலும் என்னைப்போன்ற ஈழத்தமிழ் பரிச்சயம் இல்லாதோரும், படத்தைப் புரிந்துகொள்ள அது உதவுகிறது.

படத்தில் பாராட்டப்பட வேண்டியது மனைவியாக நடித்திருக்கும் அந்த நடிகை தான். குறும்படத்திற்கு நடிகை கிடைப்பதே பெரும்பாடு, அதிலும் இத்தகைய கேரக்டர் என்றால் ரொம்பவே கஷ்டம். இதற்கு ஒத்துக்கொன்டதற்கே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இயல்பாகவே சோகம் நிறைந்த கண்கள், இந்த கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்திப்போகின்றன. 'என்னத்த வாழ்ந்து..' எனும் விரக்தியான தொனியைக் காட்டும் குரலும், முகமும் அருமை.
 
குடிகாரராக வரும் அவரும் உண்மையிலேயே அப்படித்தானோ என எண்ண வைக்கும் தோற்றம். நீண்ட தலைமுடியும், சட்டை போடாத தோற்றமும் அந்த கேரக்டருக்கு கனகச்சிதம். படத்தின் மையப் பாத்திரமாக வரும் குழந்தை அழகோ அழகு. அன்று மலர்ந்த மலர்போல இருக்கும் அந்த குழந்தை, அம்மாவின் சூழ்நிலை அறிந்து 'எங்காவது போவோமா?' என்று கேட்கும்போதும், இறுதிக்காட்சியிலும்  கலங்க வைத்துவிடுகிறாள்.

படத்தின் குறையென்று பார்த்தால், வசனத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதை சாரயக்கடை சீனில் கட்டாயமாக கடைபிடித்திருப்பது. ஒரு வார்த்தை டயலாக்கூட அந்த இடத்தில் போதுமானது. ஆனால் வசனத்தைத் தவிர்க்கிறேன் பேர்வழி என சாடையிலேயே பேசவிட்டிருப்பது நாடகத்தனமாக இருக்கிறது. பாட்டில் வாங்கிக்கொடுக்கும் நபரிடம் தெரிவது ஓவர் ஆக்ட்டிங்.
 
அதே போன்றே ஓப்பனிங் ஷாட்டில் சிறுமியின் பின்னாலிருந்து எடுத்திருக்கும் ஷாட் தேவையற்றது. 180 டிகிரியைத் தாண்டி படமெடுக்க, வலுவான காரணம் வேண்டும். சிறுமிக்கு முன்னால் இருந்து எடுக்கப்பட்டிருக்கும் ஷாட்களே, அவள் விளையாடுவதையும் பின்னால் நடப்பதையும் விளக்கப்போதுமானது.

எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் தான் இந்த குறும்படத்தின் பெரும்பலம். ஒரு மனிதனின் மனதை சரியான ஆட்களால் சரியான நேரத்தில் சொல்லப்படும் ஒரே ஒரு வசனமோ, வார்த்தையோகூட மாற்றிவிடும். இங்கே கிளைமாஸில் நடப்பது அது தான்.
 
படத்தின் ஓப்பனிங் ஷாட், மகளின் கண்முன்னே ரூமுக்குள் போகும் அந்த நீண்ட ஷாட், படத்தின் கலர் டோன் என சிவராஜின் ஒளிப்பதிவு அபாரம். சுகன்ஜனின் இசை, சுதர்சன் கனகராஜாவின் எடிட்டிங் & இயக்கம் என எல்லாவிதத்திலும் சிறப்பான படைப்பு. எந்த இடத்திலும் கத்துக்குட்டித்தனமோ, அமெச்சூர்த்தனமோ வெளிப்படாத பெர்பெக்சன்.

ஆரம்பக் காட்சியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், விபச்சாரம் வீட்டிலேயே  நடக்கிறது. ஆனாலும் காட்சியல் அழகுக்காகவும், சிறுமி கேரக்டரின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் ஆரம்பக்காட்சியை ஒதுக்குப்புறமாய் வைத்த திரைக்கதையாசிரியர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாராட்டப்படவேண்டியவர்கள்.

குழந்தைகள் நாம்சொல்வதைக் கேட்டுக் கற்றுக்கொள்வதில்லை, ஆனால் செய்வதைக் கவனித்தே கற்றுக்கொள்கிறார்கள். இதை முகத்தில் அறைந்து சொன்னது தான் இந்த குறும்படத்தின் வெற்றிக்குக் காரணம். படக்குழுவிற்கு வாழ்த்துகள்.
மேலும் வாசிக்க... "எழுத்துப்பிழை - குறும்பட விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, January 6, 2014

மதயானைக்கூட்டமும் தேவர் மகனும்

டிஸ்கி: இன்றைக்கு மொத்தமாக மூன்று பதிவுகள். இந்த பதிவு தேவர் மகன் பற்றிய முதல் இரண்டு பதிவுகளின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம்..முந்தைய பதிவுகளுக்கு:
 
 

மீபகால படங்களில் வித்தியாசமான முயற்சி என்று விளம்பரப்படுத்தப்பட்ட மதயானைக்கூட்டத்தை தற்போது தான் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. படம் பார்த்து முடித்ததும் சட்டென்று மனதில் ஒரு வெறுமை படர்ந்துவிட்டது. ‘ஓடும்..ஓடாது..ஆவரேஜ் படம்’ என்று ஒற்றை வார்த்தையில் வரையறுத்துவிட முடியாத படைப்பு. பாலு மகேந்திராவின் சிஷ்யப்பிள்ளை, குருவின் பெயரை டெக்னிக்கலாக காப்பாற்றி இருக்கிறார். ஆடுகளத்திற்கு மாதிரியே திரைக்கதை தான் இந்த படத்தின் பெரும் பலம்.
இழவு வீட்டில் ஆரம்பிக்கும் படத்தில், ஆட்டக்காரர்கள் மூலமாக படத்தின் முற்கதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தப்படுகிறது. ஜெயக்கொடித் தேவரில் ஆரம்பித்து அவரின் மனைவிமார்களைச் சொல்லி, பிள்ளைகளோடு சொந்த பந்தங்களையும் அறிமுகம் செய்யும் பாங்கில் அசந்து தான் போகிறோம். விக்ரம் சுகுமாரன் தமிழ் சினிமாற்கு ஒரு நல்வரவு என்றே சொல்ல வேண்டும்.

தமிழ் சினிமாவில் இரண்டாவது தாரத்தின் நிலை பற்றி இவ்வளவு தெளிவாக எந்தப்படமும் பேசியதில்லை என்றே நினைக்கிறேன். ஆம்பிடையான் இருக்கும்வரை மரியாதையாக நடத்தப்படுவதும், அவர் காலத்திற்குப்பின் பலரின் நிஜமுகங்களை காணும் அவலமும் இரண்டாவது குடும்பத்தின் சாபக்கேடு. அதைத் துல்லியமாகப் பதிவு செய்கிறது படம். கூடவே தேவர் சாதியின் சடங்குகள், சம்பிரதாயங்கள், செய்முறையில் நடக்கும் சண்டைகள் என ஒரு தரமான ஆவணப்பட ரேஞ்சில் பதிவு செய்கிறார் இயக்குநர். அருமையான ஒளிப்பதிவு, கிராம மணம் கமழும் இசை, இயல்பான வசனங்கள் என டெக்னிக்கலாக இந்தப் படம், உயர்ந்த தளத்தில் இயங்குகிறது.

அந்த டெக்னிக்கல் ஸ்டேண்டர்டு தான் இந்தப் படத்தினை நல்ல படம் என்று பலரையும் கொண்டாட வைக்கிறது. ஆனால் கருத்தியல்ரீதியாக, மிக ஆபத்தான படம் இந்த மதயானைக்கூட்டம். நல்ல சினிமாவாக வந்திருக்க வேண்டிய படத்தினை கிளைமாக்ஸ் காட்சிகளும், சாதீயத்தை முன்வைக்கும் பிற்போக்குத்தனமும் கெடுத்துவிடுகின்றன. படத்தின் முடிவில் மிஞ்சுவது வெறுப்பும், சாதிப்பெருமையும், பழி வாங்குதலை பாடமெடுக்கும் பிற்போக்குத்தனமுமே.
தேவர்சாதி மட்டுமல்லாது, சென்றதலைமுறையைச் சேர்ந்த எல்லா சாதிப்பெண்களுக்குமே முடிவெடுக்கும் உரிமை என்பது கிடையாது. ஒரு எல்லைக்குள் நின்றே தான் அவர்களால் செயல்பட முடியும். இங்கே சிவனம்மா கேரக்டர், அந்தவகையில் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் மனிதத்தன்மையை நிலைநாட்டும் வாய்ப்புள்ள ஒரே கேரக்டர், அந்த சிவனம்மா தான். ஆனால் படத்தின் முடிவு, அந்த நம்பிக்கையை சின்னாபின்னமாக்கி விடுகிறது. துரோகத்தின் கதை நமக்குப் புதிதல்ல. சுப்பிரமணியபுரம் எனும் உலக சினிமா அதை விலாவரியாகப் பேசியிருக்கிறது. அந்த துரோகத்தால் நாயகன் வீழ்ந்ததில், ஒரு செய்தி இருந்தது. வன்முறை என்பது திரும்பி வரமுடியாத ஒற்றையடிப்பாதை என்று முகத்தில் அறைந்து சொன்னது.

இங்கே மதயானைக்கூட்ட கதாநாயகன், அப்படி வழிதவறிய மனிதன் அல்ல. ஒரு சாமானியன். அந்த அப்பாவி மனிதனை இயக்குநர் சாகடிப்பதன்மூலம் சொல்ல வரும் செய்தி தான் என்ன? என்ன  ஆனாலும் அந்த சாதியினர் பழிக்குப்பழி வாங்கியே தீருவார்கள் என்கிறாரா? அல்லது அண்ணனின் பாசத்திற்கு முன்னே நியாய தர்மத்திற்கு இடமில்லை என்கிறாரா? ஒட்டுமொத்தமாக படம் சொல்ல வருவது இதைத் தானா? இதற்கா இந்த தரமான டெக்னிக்கல் உழைப்பு? தங்கத்திலே ஊசி செய்து, கண்ணிலே குத்துவதை எப்படிப் பாராட்டுவது?

தேவர் சாதியை எப்போதும் வீச்சருவா தூக்கும் சண்டியராகவே தமிழ் சினிமா சொல்கிறது. அமைதியான ஆள் என்று காட்ட பிராமண சாதியைக் குறிப்பிடுவதும், சண்டியர் என்று நிறுவ தேவர்சாதியைக் குறிப்பிடுவதும், கதை சொல்லலை எளிதாக்கும் காரணியாக இருக்கலாம். தமிழ் இலக்கிய உலகில் ஆரம்பித்து, இயக்குநர்-நடிகர்-கவிஞர் என எல்லா கலைகளிலும் தேவர்சாதியினர் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் என எல்லாமட்டத்தில் கல்வியில் தேர்ந்து நவீன உலகில் புகுந்துவிட்டார்கள். ஆனாலும் ஒருகூட்டம், இன்னும் பின் தங்கியே இருக்கிறது. அவர்களின் கதையைச் சொல்ல முயன்றால், அவர்களை மேம்படுத்தும் வழியுடன் கதையைச் சொல்வது தான் ஒரு நல்ல படைப்பாளிக்கு அடையாளமாக இருக்கும். ‘சபாஷ்..என்னமா வெட்டுறான்யா’ என பாராட்டுப்பத்திரம் வாசிப்பது போன்று எடுப்பது, கருத்தியல்ரீதியில் மிகமிக ஆபத்தானது.

தேவர் மகனில் கமலஹாசன், அவர்களை மிகுந்த கருணையுடன் அணுகி இருப்பார். அய்யோ..இன்னும் இப்படியே இருக்காங்களே எனும் கனிவு அங்கே இருக்கும். ‘எப்படி இருக்கோம் பார்த்தியா’ எனும் பெருமை பீத்தல் அங்கே இருக்காது. காட்டுமிராண்டிக் கூட்டம் என்று நேரடியாக வார்த்தையிலேயே திட்டி இருப்பார். அது ஒரு ஆசிரியன் மாணவனைத் திட்டிச் சரி செய்வது போல இருக்கும். அப்படி இருந்துமே, அந்தப் படம் தேவர்சாதியால் எப்படி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதும் அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும்போது, இப்படி நேரடியாகவே வன்மத்தையும் வெறுப்பையும் மட்டுமே வாழ்க்கை முறையாகக் காட்டுவதன் ஆபத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை ‘காட்டுமிராண்டிக்கூட்டம்..இப்படித்தான் வெட்டிக்கிட்டுச் சாவாங்க’ என்று ஆவணப்படுத்துவது மட்டுமே இயக்குநரின் நோக்கம் என்றால், அதைச் செவ்வனே செய்திருக்கிறார் என்று பாராட்டுவோம். ஆனால் அப்படிப்பட்ட படம், டாகுமெண்டரி தானேயொழிய, நல்ல சினிமா ஆகாது.

எழுத்தாளர் பாலகுமாரனின்  முதல் சிறுகதை 'வழி மயக்கம்’ வெளியான நேரம். அது ஒரு பெண்ணைப் பற்றி, ஆணின் நோக்கில் சொல்லப்பட்ட கதை. அது பத்திரிக்கையில் வெளியான சந்தோசத்தில், மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பார்க்கப் போனார். தன் கதை பற்றி அவரது அபிப்ராயத்தைக் கேட்டார். ஜெயகாந்தன் அவரை கிழிகிழியென்று கிழித்துவிட்டார். ’அந்த பெண்ணின் தாயாக நீ இருந்தால் இப்படி எழுதுவாயா? அன்பு என்பதை அடிப்படையாகக் கொள்ளாத, அறமில்லாத எதுவும் இலக்கியமாகாது’ என்று சொல்லி பாலகுமாரனை அனுப்பிவைத்தார்.

சிறந்த ஒரு திரைக்கதை ஆசிரியராக, இயக்குநராக தன்னை நிரூபித்திருக்கும் விக்ரம் சுகுமாரன் கற்றுக்கொள்ள வேண்டியதும் அது தான். மானுட நேயத்துடன் கூடிய கதையை உருவாக்குங்கள். ஒரு நல்ல உலக சினிமாவைப் படைக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை இந்த மாதிரி டெக்னிக்கல் தேனில் விஷத்தை ஊட்டும் படத்தினை எடுத்து வீணாக்காதீர்கள். பாலா, அமீர், சசிக்குமார், வெற்றிமாறன், மிஷ்கின் என இளம்படைப்பாளிகள் மூலம் தரமான படங்களும் இங்கே வரவேற்கப்படும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம், அடுத்து வருகின்ற படைப்பாளிகளுக்கு இருக்கிறது என்று ஒரு சினிமா ரசிகனாக நம்புகிறேன். விக்ரம் சுகுமாரனிடமும் இனி வரும் காலங்களில் அதையே எதிர்பார்ப்போம்.

மேலும் வாசிக்க... "மதயானைக்கூட்டமும் தேவர் மகனும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.