Saturday, November 30, 2013

2013 : சிறந்த 5 மொக்கைத் திரைப்படங்கள்

பதிவிற்கு போவதற்கு முன் ஒரு விளம்பரம்..

வெட்டி பிளாக்கர் நண்பர்கள் நடத்தும் வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி..விபரங்களுக்கு: http://velangaathavan.blogspot.com/2013/11/vettibloggers.html



இந்த வாரம் முழுக்க 2013ம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம். இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. அதில் நம்மை தியேட்டருக்கு இழுக்காத டப்பா படங்களை விட்டுவிட்டு, நம் கவனத்தைக் கவர்ந்த படங்களை மட்டும் இங்கே ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வோம்.  அந்த வரிசையில் இன்று நம்மை கதறக் கதற அலற வைத்த பெஸ்ட் 5 மொக்கைப் படங்களைப் பார்ப்போம், வாருங்கள்:

மொக்கை # 5: நய்யாண்டி

தேசிய விருது பெற்ற சற்குணமும் தனுஷும் இணைந்து, இப்படி ஒரு படத்தைக் கொடுப்பார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. தொப்புள் பிரச்சினை வேறு கிளம்பி, சீப் பப்ளிசிட்டியைக் கொடுத்தும் படம் தேறவில்லை. ஒரு மலையாளப்படமான ‘மேல் பரம்பில் ஆண்வீடு’-ன் ரீமேக் இது. ஆனால் அந்த படத்தை ஏற்கனவே பாண்டியராஜனை ஹீரோவாக வைத்து ’வள்ளி வரப் போறா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்கி விட்டார்கள் என்ற துயரமான செய்தி பின்னர் கிடைத்தது. 

இண்டர்வெல் விடும்போதே பலரும் தியேட்டரைவிட்டே எகிறிக்குதித்து ஓடும் கண்கொள்ளாக் காட்சிகளை தந்த படம் இது. ஏனோதானோவென எடுக்கப்பட்டது போல், பல காட்சிகளும் இருந்தன. தனுஷ்க்கு பெரிய அடி. மரியான் படமும் ஏறக்குறைய இந்த லிஸ்ட்டில் வர வேண்டியது என்றாலும், ஒளிப்பதிவு-இசை என சில விஷயங்களால் தப்பியது. இந்தப் படத்தில் எல்லாமே மொக்கையாகப் போய்விட்டது, சில பாடல்களைத் தவிர.

மொக்கை # 4: சுட்டகதை

சூது கவ்வும், பீட்சா ரேஞ்சில் பில்டப் செய்யப்பட்ட படம். நம்பி உள்ளே போனவர்களை, நசுக்கி வெளியே விட்டார்கள். படத்தில் ஒரு கேரக்டர்கூட சீரியஸ்னஸ் இல்லாமல், எல்லாருமே ஹெக்கேபிக்கே என ஏதோ மெண்டல் ஹாஸ்பிடலுக்குள் வந்த ஃபீலிங்கை ஏற்படுத்தினார்கள். 

படத்தைவிடவும் பெரும் கொடுமையாய் படம் பற்றிய அறிவுஜீவி விளக்கங்களும் இயக்குநர் தரப்பில் இருந்து வந்து குவிந்தன. காமிக்ஸ் வடிவில் எடுக்கப்பட்ட படம், ஜனங்களுக்குத் தான் அறிவில்லை என்று செல்வராகவன் ரேஞ்சுக்கு விளக்கம் வந்தது. (அதைப் படிச்சிட்டுத் தான் நான் படம் பார்த்தேன்!) தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்துதலில் காமிக்ஸை கனகச்சிதமாகப் பயன்படுத்துபவர், மிஷ்கின் ஒருவர் தான்.அவரது எல்லாப் படங்களையுமே காமிக்ஸ் ஆக்கியும் படித்துவிடலாம்.

இப்படி ஒட்டுமொத்தமாக லூசு கேரக்டர்களை மட்டுமே வைத்து நான் எந்த காமிக்ஸையும் படித்ததில்லை. காமிக்ஸிற்கும் சினிமாவின் காட்சிப்படுத்தலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதை விளக்குவது நம்மை பதிவின் ’உயர்ந்த’ நோக்கத்தை விட்டு வெளியே செல்ல வைக்கும் என்பதால், நாவலை நாவல் வடிவிலேயே எடுத்தால் எப்படி முட்டாள்தனமாகவே இருக்குமோ அப்படியே காமிக்ஸ் கதை என்று தான் நினைத்ததை இயக்குநர் சினிமா ஃபார்மேட்டுக்கு மாற்றாமல் அப்படியே எடுத்தது!

வழக்கமான ஹீரோ-பஞ்ச் டயலாக்-டூயட் இல்லாமல் எடுக்கப்படும் படங்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைத்தது இந்தப் படம். அந்த தவறைச் செய்ததாலேயே இந்த லிஸ்ட்டில் இந்தப் படத்தை கட்டாயம் சேர்க்க வேண்டியதானது.

மொக்கை # 3: அன்னக்கொடி
படத்தின் பூஜையில் இருந்தே பயங்கர பில்டப் செய்யப்பட்ட படம். ஆனால் படம் வெளியானபிறகு தான் தெரிந்தது, மகனை புரமோட் பண்ண பாரதிராஜாவின் இன்னொரு அட்டாக் என்று! எப்போதெல்லாம் இந்த வேலையில் இறங்குகிறாரோ, அப்போதெல்லாம் நாம் கதற வேண்டியதாகிறது. பாவம், ராதா மகள். அவரது உழைப்பு எல்லாம் வீணானது. படத்தில் ஹீரோ என்று ஒரு ’கொடுத்து வைத்த’ டம்மி பீஸும் இருந்தது.

ஆண்மையற்றவன், ஆனாலும் அயிட்டம்-ஹீரோயின் என எல்லாரையும் அணுகுபவன், கல்யாணமும் முடிப்பவன் என ஒரு குழப்படியான மனோஜ் கேரக்டரும், கில்மா ரேஞ்சு கதையுமே படத்தை பப்படம் ஆக்கியது. பொதுவாகவே ‘ஆண்மையற்றவன்’ என்ற கான்செப்ட்டை ரசிகர்கள் ரசிப்பதில்லை. கல்யாணமாகாத பலருக்கும் அந்த டவுட் உண்டென்பதால், இந்த டாபிக்கை மூன்று மணிநேரம் உட்கார்ந்து பார்க்க எவனும் வரமாட்டான். வந்தவனும் பாதியில் ஓடி விடுவான். இயக்குநர் வஸந்த எடுத்த ஒரு நல்ல படமும், இதனாலேயே தோல்வியைத் தழுவியது. அந்தப் படமாவது நல்ல மேக்கிங்..இங்கே அதுவும் இல்லை.

மொக்கை # 2: அலெக்ஸ் பாண்டியன்

மூன்று முகம் படத்தில் ரஜினி செய்த கேரக்டரால், தமிழ் சினிமாவில் அலெக்ஸ் பாண்டியன் என்ற பெயருக்கு ஒரு மரியாதை இருந்தது. அதை காலி செய்து, பேரைக் கேட்டாலே அலறும்படி ஆக்கியது இந்தப் படம். கார்த்தி-சந்தானம் காம்பினேசன் என்ற நம்பிக்கையில் படம் பார்க்கப்போனவர்கள் எல்லாம் நொந்து நூலாகும் வண்ணம், தெலுங்கு மசாலாப்படங்களை விடவும் மோசமான படமாக இது அமைந்தது.

கதையிலேயே பெரிய லாஜிக் மிஸ்டேக் இருந்தது. போலி மருந்துகளை தமிழகத்தில் விற்பனை செய்ய விரும்பும் ஒருவன், அதற்கு அனுமதி தர மறுக்கும் முதலமைச்சரின் மகளைக் கடத்தி மிரட்டுகிறான். பெயருக்கு அனுமதி தந்துவிட்டு, மகளை மீட்டவுடன் அனுமதியை ரத்து செய்வது பெரிய விஷயம் அல்ல. மருந்துகளை சீஸ் பண்ணவும் முடியும். ஒரு விஷயத்தை தமிழ்நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்ல வேண்டுமானால், மிரட்டலாமேயொழிய, உள்ளே வர மிரட்டுவது ஆப்பசைத்த குரங்கின் புத்திசாலித்தனம் தான். அதைவிடக் கொடுமை, அனுஷ்காவிற்கு கார்த்தி மேல் வரும் காதல். கார்த்தியும் ‘அப்படியா..சரி, ரொம்ப கெஞ்சுறே..நானும் லவ் பண்ணித்தொலைக்கேன்’ என்ற ரேஞ்சில் காதலை ஏற்றுக்கொள்வார்.

எந்தவித லாஜிக்கும் இல்லாத சண்டைக்காட்சிகளில் தான், மக்கள் மரணத்தின் எல்லையைத் தொட்டார்கள். எதிரே வரும் டாடாசுமோவின் டயரை கார்த்தி வெட்டியபோது, தங்கள் கழுத்தையே வெட்டியிருக்கலாம் என்ற ஃபீலிங் படம் பார்த்தோருக்கு வந்தது. இவ்வளவு ஆழத்திற்கு குழி பறித்துவிட்டு, மண்ணைப் போட்டு மூட, படத்தில் வந்த விஷயம் ஆபாசமான வசனங்கள். கார்த்தியைக் காப்பாற்றி வீட்டிற்கு கூட்டிவரும் ஒரு பெண்மணி, தன் மூன்று மகள்களை கார்த்தியுடன் அப்படி கும்மாளமடிக்க விடுவதும், அவரே எண்ணெய் தேய்த்துவிடுவதும் பிட்டுப்படங்களில் மட்டுமே காணக்கூடிய விஷயங்கள்.


மொக்கை # 1 : ஆல் இன் ஆல் அழகுராஜா

இன்னும் அதிர்ச்சி விலகவில்லை!...ராஜேஸ் படமா இது என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்தப் படம் அமைந்தது. கார்த்திக்கு இது மோசமான தோல்வி. சகுனிக்கு தியேட்டர் நிரம்பியது. அதில் உஷாரான பலர், அலெக்ஸ்பாண்டியனுக்கு வரவில்லை. அடுத்து அலெக்ஸ் பாண்டியனும் ‘அப்படி’ என்று ஆனது. எனவே ‘விமர்சனம் கேட்டுவிட்டு.படித்துவிட்டு பார்க்கப்பட வேண்டிய லிஸ்’ட்டில் கார்த்தி படங்களும் சேர்ந்தன. 

அழகுராஜாவில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பேசினார்கள், பேசினார்கள் பேசியே கொன்றார்கள். நமக்குத்தான் சிரிப்பு வரவேயில்லை. தியேட்டரில் ஒருவரை ஒருவர் திரும்பித் திரும்பி பார்க்கும்படி ஆனது. காஜல் அகர்வால் மட்டும் இல்லையென்றால், கடைசிவரை இந்தப் படத்தை பார்த்திருக்கவே முடியாது. எப்படி இதுபோன்று ஒரு படத்தை எடுத்தார்கள் என்று இன்னும் நமக்குப் புரியவில்லை. 

அலெக்ஸ் பாண்டியனிலாவது கார்த்தி ஏதாவது செய்தார். இதில் ஒன்றுமே இல்லை. அலெக்ஸ் பாண்டியன் படம் மாதிரி நம்மளை கட்டி வச்சு, ஒருநாள் முழுக்க அடிக்கிறதுகூடப் பரவாயில்லை. ஆனா ஒருநாள் முழுக்க நம்மை கட்டிவச்சு, ஒன்னுமே செய்யாம/பேசாம குறுகுறுன்னு நம்மளை பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி இருக்கும்? ‘டேய்..ஏதாவது பண்ணுடா’ என்று நாம் கெஞ்சியும் அங்கே ரியாக்சனே இல்லாமல் போனால்..அது தான் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. இதை காசு கொடுத்து அனுபவித்தோம் என்பது தான் ஜீரணிக்க முடியாத கொடுமை. எனவே தான் மொக்கைப் படங்களில் நம்பர் ஒன்னாக ஆனது ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’.

அடுத்த பதிவு : ஜாம்பவான்களைக் கவுத்திய பெஸ்ட் 5 படங்கள்

டிஸ்கி: இந்த வரிசைப்படுத்தல் என் தனிப்பட்ட ரசனை சார்ந்தது. மாற்று ரசனைக்கு எம் வந்தனங்கள்!
மேலும் வாசிக்க... "2013 : சிறந்த 5 மொக்கைத் திரைப்படங்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

வணிக சினிமா : திரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நல்ல சினிமாவுக்கு அடிப்படையாக இருப்பது திரைக்கதை. அந்த திரைக்கதைக்கு அடிப்படையாக இருக்கும் சில விஷயங்கள் பற்றியும், திரைக்கதை வடிவம் பற்றியும் இந்தத் தொடரில் பேசலாம் என்று இருக்கிறேன். ஒரு சினிமா ரசிகன் என்ற நிலையிலேயே இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கிறேன். இதுவரை நான் பார்த்த படங்கள் மற்றும் படித்த புத்தகங்களின் மூலம் நான் புரிந்துகொண்டிருப்பதையே இங்கே சொல்லப் போகிறேன். 

தமிழில் ஏற்கனவே நம் ‘வாத்தியார்’ சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி என்று எழுதியிருக்கிறார்.(அதை நான் படித்ததில்லை!) பதிவுலக நண்பர் கருந்தேள் ராஜேஸும் ‘திரைக்கதை எழுதுவது இப்படி’ என்று எழுதிக்கொண்டு வருகிறார். எனவே புதிதாக இன்னொரு தொடருக்கான அவசியம் என்ன என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆங்கிலத்தில் திரைக்கதை பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன; இன்னும் எழுதப்பட்டு வருகின்றன.

அதனோடு ஒப்பிடும்போது தமிழில் திரைக்கதை பற்றி வந்த புத்தகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே நான் மட்டுமல்ல, சினிமா மேல் ஆர்வம் உள்ள அனைவருமே இந்த டாபிக் பற்றி எழுதினாலும் தப்பில்லை என்றே நினைக்கின்றேன். மேலும் அதிகளவு இத்தகைய புத்தகங்கள் வருவது, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மேம்பெடுத்தும். அது திரைக்கதையின் முக்கியத்துவத்தை சினிமாத்துறையினருக்கு தொடர்ந்து நினைவூட்ட உதவும். சிலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் சீன் எழுதும் அவலத்தை ஒழிக்கும் என்று நம்புகிறேன்.

தொடருக்குப் போவதற்கு முன் நேர்மையாக சிலருக்கு நன்றி சொல்லி விடுவோம். ஏனென்றால் இந்த தொடரில் வரும் கருத்துக்களுக்கு அவர்களே அடிப்படை. அடியேன், வெறும் மீடியம் மட்டுமே.

1. என் அம்மா : நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே, ஸ்கூலில் இருக்கும் என்னை தியேட்டருக்கு கூட்டிச்சென்றவர். டீச்சரிடம் ‘ஊருக்குப் போறோம்’ என்று பொய் சொல்லிவிட்டு, அழைத்துச் செல்வார். நடிகர் திலகத்தின் பல நல்ல படங்களையும், ரத்தக்கண்ணீர், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற பொக்கிஷங்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர். எனவே சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்திய அம்மாவிற்கு நன்றி.

2. எனது கிராமத்து நண்பர்கள் : எங்கள் கிராமமான செண்பகப்பேரியில் கொத்துவேலை அல்லது தீப்பெட்டி ஆபீஸில் வேலை செய்வோரே அதிகம். நண்பர்கள் என்று நான் சொன்னாலும், உண்மையில் என்னைவிட நான்கைந்து வயது மூத்தவர்கள். அவர்கள் தினமும் இரவில் சிகரெட் குடிக்க ஊருக்கு வெளியே செல்வது வழக்கம்.(டாஸ்மாக் இல்லாத மரியாதையான காலம் அது!). அப்போது நானும் சும்மா கூடப் போவேன். அங்கே சினிமா பற்றியே பெரும்பாலும் பேச்சு ஓடும். புதிதாக படம் ரிலீஸ் ஆனது என்றால், இன்றைய ஃபேஸ்புக் விவாதம் போன்றே விரிவான அலசல் அங்கே நடக்கும். ‘இந்தப் படம் ஓடும்..ஓடாது’ என்று தெளிவாகச் சொல்வார்கள். அறிவுஜீவித் தனத்தால் பாதிக்கப்படாத சாமானிய ரசனையை அங்கே காணலாம். ஒரு வணிக சினிமாவில் மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்று புத்தகங்களை விட, அவர்களே உணர்த்தினார்கள்.

3. Aristotle : குருவெக்கெல்லாம் குரு. 2500 வருடங்களுக்கு முன்னால், நாடக இலக்கணங்கள் பற்றி இவர் எழுதிய ‘The Poetics' தான் இன்றைய எல்லா திரைக்கதை நூல்களுக்கும் அடிப்படை.

4. Syd Field : Screenplay-The foundations of screenwriting

4. Robert Mckee : Story_ Substance, Structure, Style and the principles of Screenwriting

5. Lajos Egri : Art of Dramatic Writing

ஆனால் மேலே குறிப்பிட்டவற்றை நேரடியாக நான் இந்தத் தொடரில் உபயோகப்படுத்தப்போவதில்லை. அவற்றில் இருந்து கற்றுக்கொண்டவை அறிந்தும் அறியாமலும் இங்கே வரும் என்பதாலேயே மொத்தமாக நன்றி சொல்லிக்கொள்கிறேன். 

திரைக்கதை பற்றிய புத்தகங்களில் என்னை அதிகம் பாதித்தது Blake Snyder எழுதிய Save the Cat தான். அந்த புத்தகம் அளவிற்கு எளிமையாக தெளிவாக எந்தப் புத்தகமும் சொன்னதில்லை. எனது அமெரிக்க நண்பர் மைக்கேலால் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகம் இது. நான் திரைக்கதை பற்றி முதலில் படித்த புத்தகமும் இது தான். அதன்பிறகே மேலே குறிப்பிட்ட புத்தகங்களை கண்டறிந்தேன். (உண்மையில் இது தலைகீழாக படிப்பது போல!). இந்த தொடரைப் படிக்கும் நண்பர்களுக்கு ப்ளேக் ஸ்னிடர் (Blake Snyder) எழுதிய கீழ்க்கண்ட புத்தகங்களைப் பரிந்துரைக்கிறேன்:

Save the Cat! The Last Book on Screenwriting You'll Ever Need (2005)
Save the Cat! Goes to the Movies: The Screenwriter's Guide to Every Story Ever Told (2007)
Save the Cat! Strikes Back: More Trouble for Screenwriters to Get Into… and Out Of (2009)

இந்த தொடரில் ப்ளேக் ஸ்னிடர் எழுதிய Save the Cat -லிருந்து சில பகுதிகள்; குறிப்பாக அவரது 21 Beat sheet கான்செப்ட்டை விளக்கும் பக்கங்கள், நேரடியாக மொழிபெயர்க்கப்படும். அவர்களின் புத்தகத்தின் எந்தப் பகுதியையும் எடுத்தாளும் அனுமதியை அவர்களிடம் வாங்கியிருக்கிறேன் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே இந்தத் தொடரில் வணிக சினிமாவுக்கான அடிப்படைத் தேவைகள் என்ன, ஏன் சில படங்கள் மட்டுமே நம்மை ஈர்க்கின்றன, எங்கே தவறு நடக்கிறது என என் சொந்த அனுபவங்கள்/படிப்பின் அடிப்படையிலும், திரைக்கதை சூத்திரங்களை Save the Cat புத்தகத்தின் அடிப்படையிலும் பார்ப்போம், வாருங்கள்.


மேலும் வாசிக்க... "வணிக சினிமா : திரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, November 26, 2013

இரண்டாம் உலகம் மற்றும் செல்வராகவன் எனும் மலராத பூக்கள்!

செல்வராகவனுக்கு இருக்கும் ‘ஓப்பனிங்’ எப்போதுமே நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக்கூடியது. ஏனென்றால் செல்வராகவன் குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக் பேசும் ஹீரோக்களை வைத்து படம் எடுப்பவர் அல்ல. அதே நேரத்தில் வீடு-பசி-உதிரிப்பூக்கள் போன்ற வாழ்வியல் தரிசனம் தரும் படத்தை தருபவரும் அல்ல. செல்வராகவனின் படங்களின் மையக்கரு அல்லது அவரது ஸ்பெஷாலிட்டி, தமிழ் சினிமா பேசத்தயங்கிய பாலியல் வறட்சியைப் பேசியது தான்.  இன்னும் சொல்வதென்றால், அவர் வணிக சினிமாவிற்குள்ளேயே, மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்பவர். எனவே அவருடைய படங்கள் உலக சினிமா/கலைப் படங்கள் கேட்டகிரி என்று சொல்வதைவிட, ஹாலிவுட் வணிக சினிமா கேட்டகிரியில் வருபவையே. தரமான வணிக சினிமாவைத் தர முயல்பவர் என்று சொல்லலாம். 
செல்வராகவன் கடைசியாக அனைத்துத் தரப்பினரும் மகிழும்படி கொடுத்த திரைப்படம், 7ஜி ரெயின்போ காலனி. அதற்கு முன்னால் காதல் கொண்டேன். புதியவகையான கதை சொல்லல்,காதலின் மெல்லிய உணர்வுகளை திரையில் கொண்டுவரும் நுணுக்கமான திறமை போன்றவற்றால், தமிழின் நம்பிக்கை தரும் இயக்குநராக செல்வராகவன் இடம்பிடித்தார். அதே நேரத்தில் சேது என்ற காதல் படம் மூலம் அறிமுகமான பாலா, காதலை உதறி அடித்தட்டு மக்களை நோக்கி தன் படைப்புத்திறனைச் செலுத்த ஆரம்பித்தார். செல்வராகவனும் ‘புதுப்பேட்டை’ மூலம் தான் ஒரு ‘கில்மாத் தர’ இயக்குநர் மட்டுமல்ல என்று நிரூபிக்கும் முயற்சியில் இறங்கினார்.

செல்வாவிற்கு பிரச்சினை ஆரம்பித்தது அங்கே இருந்து தான். உண்மையில் புதுப்பேட்டை, தமிழில் ஒரு உன்னதமான முயற்சி. ஒரு தாதாவின் வாழ்க்கையை, சென்னையில் இருண்ட பக்கத்தை யதார்த்தமாகச் சொல்ல முயன்ற படம். தமிழில் முதல் ‘நியோ நாய்ர் (Neo-Noir)' ஆக, ஆகியிருக்க வேண்டிய படம். இரண்டாம்பாதி திரைக்கதை சொதப்பலால், நல்ல முயற்சி என்ற அளவிலேயே அது முடிந்துபோனது.பின்னர் 5 வருடங்கள் கழித்து வந்த ஆரண்ய காண்டம், அந்த பெயரை தட்டிச் சென்றது. புதுப்பேட்டைக்கு வந்த விமர்சனங்கள் சொன்னது இது தான் : நல்ல முயற்சி, இரண்டாம் பாதியில் தான் திரைக்கதை தறிகெட்டு ஓடிவிட்டது. இருப்பினும் தவிர்க்க முடியாத படம்.
பின்னர் தெலுங்கில் ‘யாரடி நீ மோகினி’ எடுத்தார். தரத்தில், மேக்கிங்கில் அது ஒரு ஆவரேஜ் படம். அதை தன்னுடைய படமாக செல்வா காட்டிக்கொள்ள விரும்ப மாட்டார் என்றே நம்புவோம். பின்னர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்தார். தமிழில் ஒரு ஃபேண்டஸி படம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால் படம் பார்த்தபோது, செல்வாவை நினைத்து பரிதாபப்படவே முடிந்தது. நிச்சயமாக அதுவும் தமிழில் ஒரு நல்ல முயற்சி. இரண்டாம்பகுதிக்கு திரைக்கதை எழுதிவிட்டுத்தான் ஷூட்டிங் போனாரா என்று திகைக்கும் அளவிற்கு, பெர்ஃபக்சன் இல்லாமல் படம் அலைபாய்ந்தது. அது ஒரு அற்புதமான கதை. ’தங்களுக்குள் போரிட்ட சோழ-பாண்டிய வம்சங்கள் இப்போதும் இருந்தால்...இப்போதும் அந்த போர் தொடர்ந்தால்..’எனும் செமயான நாட் அது. நல்ல கதையும் ஃபேண்டஸியும் போதும் என்று திரைக்கதை பற்றி அதிகம் செல்வா, அலட்டிக்கொள்ளாததின் அவலமே ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம்.

அடுத்துவந்தது மயக்கம் என்ன. தமிழில் பியூட்டிஃபுல் மைண்ட் போன்று வந்திருக்க வேண்டிய படம். அந்த திரைப்படத்தின் பெரும்பாலான விமர்சனங்கள் சொன்னது இது தான் : முதல்பாதிக்காக பார்க்கலாம். இரண்டாம் பகுதியில் என்னென்னவோ நடக்கிறது. செல்வாவிற்கு ஒரு நல்ல அல்லது கெட்ட பழக்கம் உண்டு. தனது படத்தின் திரைக்கதையை அவரே முழுக்க எழுதுவாராம். உதவியாளர்களிடன் சீன் கலெக்ட் பண்ணுவதில்லை என்று படித்திருக்கிறேன். ஆரம்ப காலத்தில் புதிய சிந்தனையாக அவர் படங்கள் தெரிந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்போதும் அப்படித்தான் எழுதுகிறாரோ என்று சந்தேகம் வருகிறது.

இதுவரை படித்ததில் புதுப்பேட்டை-ஆயிரத்தில் ஒருவன் - மயக்கம் என்ன படங்களுக்குள் ஒரு துயரமான ஒற்றுமையை நீங்கள் கவனித்திருக்கலாம். அவை மூன்றுமே வித்தியாசமான முயற்சிகள், அடிப்படையில் நல்ல வலுவான கதை, நல்ல முதல் பகுதி, மோசமான இரண்டாம்பகுதி! துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் உலகத்திற்கும் இது பொருந்திப்போகிறது. 2006ல் வந்த புதுப்பேட்டையில் ஆரம்பித்து, 2013ல் வந்திருக்கும் இரண்டாம் உலகம் வரை ஒரே புராணம் தான் ‘நல்ல முயற்சி’. இன்னும் எத்தனை வருடங்களுக்கு செல்வா முயற்சி செய்துகொண்டே இருக்கப்போகிறீர்கள்?
உண்மையில் செல்வாவிற்கு என்ன தான் பிரச்சினை? அருமையான கருவை எடுத்துக்கொள்கிறார். அற்புதமான திரைக்கதை வடிவத்தையும்(நியோ நாய்ர்-ஃபண்டஸி என..) எடுத்துக்கொள்கிறார். ஆனால்...ஆனால் அவசரக்குடுக்கையாக, திரைக்கதையை முழுக்க எழுதுவதில்லை அல்லது அரைவேக்காட்டுத்தனமாக, மோசமான ஃபினிஷிங் உடன் எழுதுகிறார். முக்கால்கிணறு தாண்டியதுமே, அவருக்கு ஓவர் கான்ஃபிடென்ஸ் வந்துவிடுகிறது. அவரே ‘எப்பேர்ப்பட்ட முயற்சி..என்னா ஒரு கதை..என்னா ஒரு மேக்கிங்’ என்று புல்லரித்துப்போகிறார். சினிமா என்பது கதையோ, மேக்கிங் ஸ்டைலோ அல்ல; திரைக்கதை தான் சினிமா. முழுமையின்றி அந்தரத்தில் தொங்கும், விடை காணப்படாத கேள்விகள் ஒட்ட்டடை போல் படிந்திருக்கும் ஸ்க்ரிப்ட்டை வைத்துக்கொண்டு, ‘எவ்வளவு பெரிய முயற்சி..இதை குறை சொல்கிறீர்களே?’ என்று அழுவதில் அர்த்தம் இல்லை.

காதல் கொண்டேன் வெற்றிவிழா நிகழ்ச்சியை டிவியில் பார்த்தபோதுதான், அது ஒரு லோ பட்ஜெட் படம் என்றே தெரிந்தது. துல்லியமான திரைக்கதையே படத்தை பிரமாண்டமாகக் காட்டியது. படத்தின் பட்ஜெட் ஒரு கோடிக்கும் கீழ் தான். ஆனால் இன்று 60 கோடிகள் கிடைத்தும், அந்த திருப்தியை நமக்கு செல்வாவால் ஏன் கொடுக்க முடியவில்லை? கதையிலும் ’முழுமையான’ திரைக்கதையிலும் பிரமாண்டத்தைக் கொண்டுவந்தாலே போதும், 6 கோடியில் அற்புதமாக படம் எடுத்துவிடலாம். இல்லையென்றால் வெறுமனே கதையும், காட்சிகளில் பிரமாண்டமும் மட்டுமே போதும் என்பவர்களுக்கு மட்டுமே செல்வாவின் படங்கள் அற்புதமாகத் தோன்றும்.

ஃபேண்டஸி படம் பற்றி செல்வா என்ன வகையான கருத்தைக் கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவதார் படம் தான் ஃபேண்டஸியின் உச்சம். ஆனால் மிக எளிமையான கதை. (ஒரு பதிவுலக நண்பர் வியட்நாம் காலனி படத்தின் கதைக்கும், அவதார் கதைக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கியிருந்தார். பெயர் மறந்துவிட்டது). அந்த எளிமையான கதைக்குப் பின் ஒரு வலுவான குறியீடு இருந்தது.

 ‘உங்களை நாகரீகமாக்குகிறோம்’ என்ற பெயரில் வேட்டையாடப்பட்ட செவ்விந்தியர் முதல் ஆப்பிரிக்கர்வரை பலரின் துயரத்தை அந்தப் படம் சொன்னது. நாகரீகம் என்ற பெயரால் அழிக்கப்பட்ட மனிதர்கள், கலைகள். கலாச்சாரங்கள் அனைத்திற்கும் அவதார் கதை பொருந்தும். அது தான் அந்த படத்தின் ஆன்மா. அது தான் நம்மை முழு திருப்தியுடன், தியேட்டரில் இருந்து அனுப்பி வைத்தது. இல்லையென்றால் இரண்டாம் உலகத்தில் கிடைத்த வெறுமையான உணர்வு தான், அவதாருக்கும் கிடைத்திருக்கும். ஃபேண்டஸி படம் என்பது கற்பனையான உலகத்தை, உண்மையான ஆன்மாவுடன் சிருஷ்டிப்பது. சிஜிக்காரனை மட்டும் நம்பி எடுப்பது ஃபேண்டஸி படம் அல்ல, பொம்மைப் படம்.
ஒரு படத்தின் கமர்சியல் வெற்றி என்பது வேறு விஷயம். வெறும் மழையாலேயே ஓடாமல் போன படங்களின் சோகக்கதையெல்லாம் இங்கே உண்டு. அந்த நாள் முதல் ஆரண்ய காண்டம் வரை வணிகரீதியில் தோற்றுப்போன தரமான படங்களும் இங்கே உண்டு. ஆனால் அந்த படத்தைப் பார்த்ததுமே அந்த இயக்குநர்கள் மனநிறைவடைந்திருப்பார்கள், நல்ல சினிமாவுக்கு ஏங்கும் ரசிகர்களும் அதே உணர்வை அடைந்திருப்பார்கள். செல்வாவின் சமீபத்திய படங்கள், அத்தகைய நிறைவை அளிக்கின்றனவா?  சுருக்கமாகக் கேட்பதென்றால், காதல் கொண்டேன் படம் கொடுத்த நிறைவு, செல்வாவிற்கு இந்த படங்களில் கிடைத்ததா?

இங்கே கதை/திரைக்கதையையும் ஒருவரே செய்வதால், விமர்சகர்கள் திரைக்கதையை விமர்சிப்பதோடு செல்வாவை விட்டுவிடுகிறார்கள்.  20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் உலகம் 25-30 கோடியில் முடியலாம். ஆனால் 60 கோடி செலவாகியிகிறதென்றால், ஒரு இயக்குநராக செல்வா தோற்றுவிட்டார் என்றே அர்த்தம். தெளிவான திட்டமிடலும் ஒரு இயக்குநருக்கான அடிப்படைத் தேவை. ’இரண்டாம் உலகத்திற்கு வரவேற்பில்லை என்றால், இனி சினிமாவே எடுக்க மாட்டேன்’ என்று செல்வா பேட்டியளித்திருந்தார். நிரந்தர ஓய்வில் அல்ல, ஒரு நீண்ட ஓய்வில் போய் செல்வராகவன் தன்னைத் தானே இத்தகைய கேள்விகளால் சுயபரிசோதனை செய்வது அவசியம். இன்னும் செல்வராகவனை நாம் நம்புவதாலேயே, இந்த வேண்டுகோள்!


மேலும் வாசிக்க... "இரண்டாம் உலகம் மற்றும் செல்வராகவன் எனும் மலராத பூக்கள்!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, November 25, 2013

தமிழ்ஸ்ஸ்.காமில் "அந்த நாள் " - திரை விமர்சனம்


தமிழ்ஸ்ஸ்.காமில் நான் எழுதிவரும் 'தமிழில் ஒரு உலக சினிமா' தொடரில் இந்த வாரம் : அந்த நாள்

லின்க்: http://tamilss.com/2013/11/25/t-o-u-c-antha-naal/

 
மேலும் வாசிக்க... "தமிழ்ஸ்ஸ்.காமில் "அந்த நாள் " - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, November 23, 2013

இருக்கு..ஆனா இல்லை - ஆடியோ ரிலீஸும் நானும்

குவைத்தில் ‘இருக்கு ஆனா இல்லை’ படத்தின் ஆடியோ ரிலீஸ் நடப்பதாக நியூஸ் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. ‘யார் இவங்க..இந்த பாலைவனத்துல ஏன் ரிலீஸ் பண்றாங்க?’ என்று யோசிக்கும்போதே, பிரபல சினிமா இணையதளமான தமிழ்ஸ்ஸ்.காமில் இருந்து தொடர்பு கொண்டார்கள். நிகழ்ச்சியை கவர் செய்து தருவதாக ஒத்துக்கொண்டேன். நிகழ்ச்சி நடக்கும் இட விவரங்களையும் அளித்தார்கள். பார்த்தால், நம்ம பக்கத்து ஏரியா, மங்காஃப்.
அந்த ஏரியாவில் இருக்கும் நண்பர் சந்துருவைக் கூப்பிட்டு ‘ஏஞ்சாமி, அங்கே கேம்பிரிட்ஜ் ஸ்கூல் எங்க இருக்கு?’ என்று கேட்டேன். அவர் ‘அதை ஏன் நீ கேட்கே?’ என்றார். பிறகு விவரத்தைச் சொன்னதும், ‘ஆமா..இன்விடேசன் என்கிட்ட இருக்கு’என்றார். ‘அப்படியா..ரொம்ப தேங்ஸ் பாஸ்’ எனும்போதே ‘ஆனா, உன்னையெல்லாம் கூட்டிப்போக மாட்டேன். நீ யோக்கியன் மாதிரி விமர்சனம் எழுதுவே, அப்புறம் என்னையும் சேர்த்து கும்மிடுவாங்க. ஓடிப்போயிரு’ என்றார். அடப்பாவிகளா, யோக்கியனா இருக்கிறது ஒரு குத்தமாய்யான்னு நினைச்சுக்கிட்டு, ’படத்துக்குத்தான்யா விமர்சனம் எழுதுவோம். பங்சனுக்கெல்லாம் எழுத மாட்டோம்’ என்றேன். பிறகு பெரிய மனதுடன், ’வந்து தொலை’ என அழைத்துச் சென்றார்.

நிகழ்ச்சி நடந்த ஆடிட்டோரியம் கொஞ்ச நேரத்தில் நிறைந்துவிட்டது. எப்படியும் 500 பேர்களாவது வந்திருப்பார்கள். பிறகு தான் தெரிந்தது, படத்தின் தயாரிப்பாளர்கள் நான்குபேருமே குவைத் வாழ் தமிழர்கள் என்று. எனவே தமிழ்சொந்தங்கள் திரண்டு வந்து, தங்கள் ஆதரவைக் காட்டிவிட்டார்கள். நம்ம பி.டி...அதாங்க ப்ரியதர்ஷிணி தான் நிகழ்ச்சித் தொகுப்பு. பளிச்சென்று வந்திருந்தார்.

ஆதித்யா டிவியில் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ நிகழ்ச்சியில் கலக்கும் ஆதவன், இதில் ஹீரோவுக்கு ஃப்ரெண்டாக நடிக்க்கிறாராம். எனவே அவரும் பி.டி.யுடன் நிகழ்ச்சித் தொகுப்பில் சேர்ந்துகொண்டார். செம ரகளையான மனுசன். கடைசிவரை நிகழ்ச்சி சுவாரஸ்யமாகப் போனதுக்கு ஆதவனும் ஒரு காரணம். கண்ணுக்கு பி.டி, காதுக்கு ஆதவன் என நல்ல காம்பினேசன்!

ஹீரோ புதுமுகம் ஆனா புதுமுகம் இல்லை. ஜெயா டிவியில் முன்பு ‘டேக் 5 ‘ என்று ஒரு நிகழ்ச்சி வந்ததாம். அதன் வீஜே அவர் தானாம். ஜெயா டிவி பார்க்கும் அளவிற்கு நமக்கு மனதில் தெம்பில்லை என்பதால், நான் பார்த்ததில்லை. பேர் விவாந்த் என்றார்கள். ஆனால் மனுசன் நன்றாகப் பேசினார். ‘ஒரு ஹீரோவா நான் வெளில தெரியறதுக்குப் பின்னாடி கேமிரா மேன், இயக்குநர்னு எவ்வளவோ பேரோட உழைப்பு இருக்கு. அவங்களுக்கு நன்றி’ என்றார். என்ன ஒன்னு, வந்த எல்லாருமே, ஹீரோயின்ஸ் உட்பட தமிழில் பேச, அண்ணாத்த மட்டும் கொஞ்சம் பீட்டர் விட்டார். 

இயக்குநர் சரவணன், மாடர்ன் தியேட்டர்ஸ் குடும்பத்தைச் சார்ந்தவராம். ரொம்ப அமைதியான மனிதர் என்று எல்லாரும் புகழ்ந்தார்கள். அவரும் அப்படித்தான் இருந்தார். முதல் பட ஆடியோ பங்சன் என்பதால், கொஞ்சம் நெர்வஸாக இருந்தார். பிறகு நடந்தது ஹீரோயின்ஸ் அறிமுகப்படலம். (உய்ய்..உய்ய்!)

முதல் ஹீரோயின் ஈடன், கேரள தேசத்திலிருந்து புது வரவு. பார்த்தாலே கேரளா என்று தெரியும் அளவிற்கு, தமிழனுக்குப் பிடித்த அம்சங்களுடன் இருந்தார். இரண்டாவது ஹீரோயின் மனீஷா ஸ்ரீயும் ஈடனும் சேர்ந்து ஹீரோவுடன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்கள். அதிலும் ஈடனின் ஆட்டம் அபாரம். அந்த பாட்டு முடியவும், பக்கத்து ஏரியாவான அபுஹலிபாவில் இருந்து நண்பனின் ஃபோன் வந்தது, ‘மாப்ளை..இங்க திடீர்னு பூகம்பம்..’ என்று! ஈடனின் ஆட்டத்திற்கு எர்த் குவாக் கூட வரலேன்னா எப்படி என்று நினைத்துக்கொண்டேன். நண்பன் தொடர்ந்து ‘வீடெல்லாம் குலுங்குச்சு..அங்க என்ன நிலைமை?’ன்னான். ’இங்கயும் அதே நிலைமை தான்.’ என்றேன்!

படத்தின் ட்ரைலர் ஒளிபரப்பானது. செமயாக எடுத்திருந்தார்கள். த்ரில்லர் மூவி. கூடவே காமெடியும் இருக்கும்போல..எல்லாரும் ரசிக்கும்படி இருந்துச்சு, அந்த ட்ரைலர். படத்தோட பாடல்களும் அருமை. ஷமீர்னு புது மியூசிக் டைரக்டர். பார்க்க சின்னப்பையனாக இருக்கிறார். ஆனால் மியூஸிக்கில் கலக்கியிருகார். ‘இது என்ன?’ என்று ஒரு பாட்டு. பாடகர் தீபக் ஸ்டேஜில் பாடினார் பாருங்கள், எல்லாரும் அசந்துவிட்டார்கள். அப்படி ஒரு லவ் ஃபீல் அந்த பாட்டில். நிச்சயம் அது ஹிட் ஆகும்! நல்ல சிம்பிளான டியூன். அதே போன்றே ‘இருக்கு..ஆனா இல்லே’ன்னு ஒரு பாட்டு. நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகள்லாம், பின்னர் அந்தப் பாட்டைத்தான் முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். 

இந்த மியூசிக் டைரக்டருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஒரு ரவுண்டு வருவார். கடைசியில் இங்கே பிரபலமான உதயம் ரெஸ்டாரண்ட் சாப்பாடு. வந்த எல்லாருக்குமே சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த ரெஸ்டாரண்ட் ஓனரும் ஒரு தயாரிப்பாளராம். நன்றாக மொக்கிவிட்டு, வீடு வந்து சேர்ந்தோம்.

tamilss.com செய்திக்கு : http://tamilss.com/2013/11/23/iai-audio-from-kuwait/
மேலும் வாசிக்க... "இருக்கு..ஆனா இல்லை - ஆடியோ ரிலீஸும் நானும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, November 19, 2013

பாட்ஷாவும் நானும் - புத்தகம் ஒரு பார்வை

தமிழ் வணிக சினிமாவில் மறக்கமுடியாத படம், பாட்ஷா. ரஜினி ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரிட் படம் அது. எனவே பாட்ஷாவின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எழுதிவெளியான புத்தகம் என்பதால், பலநாட்கள் தேடி திருநெல்வேலியில் வாங்கினேன்.

முதலில் புத்தகத்தின் ஒரே ஒரு குறையைச் சொல்லிவிடுகிறேன். புத்தகத்திற்கு பெயர் 'பாட்ஷாவும் நானும்' என்பதற்குப் பதிலாக, 'ரஜினியும் நானும்' என்று தான் வைத்திருக்க வேண்டும். இயக்குநர் சூப்பர் ஸ்டாரை சந்தித்தது முதல், அண்ணாமலை-வீராவில் பணியாற்றிய அனுபவங்கள் வரை 100 பக்கங்களுக்கு சொல்லி முடித்தபிறகே பாட்ஷா கதைக்கு வருகிறார்.

ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம்/துரதிர்ஷடம் எப்படி அடிக்கும் என்பதுடனே புத்தகம் ஆரம்பிக்கிறது. கவிதாலயா தயாரிப்பில் ரஜினி நடிப்பில், வஸந்த் இயக்கத்தில் அண்ணாமலை படத்தின் பூஜை விளம்பரம் பத்திரிக்கைகளில் வெளியானது. நம்மைப் போன்றே சுரேஸ் கிருஷ்ணாவும் அதை பார்க்கின்றார். ஆனால் வஸந்த், இந்தப் படத்தை(!) இயக்க முடியாது என்றுகூறிவிட, சுரேஸ் கிருஷ்ணாவுக்கு அடிக்கிறது யோகம்.

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் படமான அண்ணாமலை எடுக்கப்பட்ட கதையைப் படித்தால், பகீரென்று இருக்கிறது. படத்தின் கதையைக்கூட முழுதாக முடிவு செய்யாமல்,திரைக்கதையும் இல்லாமல் அவசரகதியில் படம் அறிவிக்கப்படுகிறது. அறிவிக்கப்பட்ட இயக்குநரும் ஓடி விடுகிறார். எங்கேயோ இருக்கும் சுரேஸ் கிருஷ்ணாவை அழைத்து, ஒரு வரிக்கதையை மட்டும் சொல்லி ஷூட்டிங் ஆரம்பிக்கிறார்கள். ஒரு பெரிய இயக்குநரின் தயாரிப்பில், ஒரு பெரிய நடிகரின் நடிப்பில் உருவாகும்படத்திற்கு, இப்படியும் ஷூட்டிங் போவார்களா என்று கதிகலங்கும் அளவிற்கு இருந்திருக்கிறது நிலைமை. அண்ணாமலைக்கு மட்டும் தான் அப்படி போனார்களா அல்லது பல படங்களுக்கும் அப்படித்தான் போனார்களா என்று தெரியவில்லை. 

சுரேஸ் கிருஷ்ணா பொறுப்பேற்ற பிறகே ஷூட்டிங் ஒரு பக்கம் போய்க்கொண்டேயிருக்க, திரைக்கதையும் டெவலப் ஆகிறது. இப்படி அவசரகதியில் எடுக்கப்பட்டாலும், முழுமையடையும்போது ஒரு பெர்ஃபெக்ட் மசாலாப் படமாக உருவானது தான் ஆச்சரியம். ஒரு கமர்சியல் ஹீரோவின் படத்தில் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று புரிந்து, செண்ட்டிமெண்ட்-நகைச்சுவை-சவால்-சண்டை என எல்லாமே சரிவிகிதத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். 

முதன்முதலாக 'சூப்பர் ஸ்டார்' என்பதற்கு தேவாவின் இசையில் ஸ்பெஷல் டிசைன் உருவாக்கப்பட்ட கதையையும் சொல்கிறார் சுரேஸ் கிருஷ்ணா.  அப்படியெல்லாம் ஸ்பெஷலாக எதுவும் வேண்டாம் என்று ரஜினி சண்டையிட, குரு பாலச்சந்தர் 'நீ ஒத்துக்கிட்டாலும், இல்லேன்னாலும் நீ ஒரு சூப்பர் ஸ்டார் தான். ஏன் இதை டைட்டில்ல போட தயங்கறே?' என்று அறிவுரை சொல்லியபிறகே, வேறுவழியின்றி சம்மதிக்கிறார் ரஜினி. ரஜினிகாந்த் எனும் மனிதனின் பணிவு தான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்று நமக்குப் புரிகிறது.

ஹிந்தியில் அமிதாப்பிற்கு தம்பியாக ரஜினி நடித்த படம், ஹம். அது தான் பாட்ஷா படத்திற்கு இன்ஸ்பிரேசன். பாட்ஷாவில் வந்த புகழ்பெற்ற காட்சியான 'உண்மையைச் சொன்னேன்' போன்றெ ஒரு காட்சி, ஹிந்தியில் படமாக்கப்பட்டு படத்தில் இடம்பெறாமல் போயுள்ளது.அந்தக் காட்சியால் கவரப்பட்ட ரஜினி, அதை தமிழில் தான் பண்ண வேண்டும் என்று அப்போதே முடிவு செய்கிறார். அண்ணாமலை படம் முடியவுமே, ரஜினி சுரேஷ் கிருஷ்ணாவிடம் பாட்சா கதையின் அவுட் லைனைச் சொல்லி விடுகிறார். ஆனாலும் உடனே எடுத்தால் அண்ணாமலையுடன் கம்பேர் செய்வார்கள் என்பதால், இடையில் வீரா படத்தினை எடுக்க முடிவு செய்கிறார் ரஜினி. புத்தகம் வீரா படம் உருவான விதம் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.

’பாட்ஷா’ என்பது தான் படத்தின் பெயர் என்று உறுதியாக முடிவு செய்துவிடுகிறார். பின்னர் அதற்கு ஒரு காரணம் வேண்டும் என்பதால், சரண்ராஜ் கேரக்டர் கதையில் கொண்டுவரப்படுகிறது. முதல்பாதியில் அமைதியான ரஜினியை மட்டுமே காட்டுவது என்று முடிவு செய்கிறார்கள். ரஜினியை கம்பத்தில் கட்டி அடிக்கும் காட்சி எடுப்பதை அறிந்து, தயாரிப்பாளர் வீரப்பன் அலறுகிறார். ‘அவர் எவ்வளவு பெரிய ஸ்டாரு? அவரை அடிவாங்குற மாதிரி எடுக்கிறீங்களே? ரசிகர்கள் இதை எப்படி ஒத்துப்பாங்க?’ என்று சுரேஷ் கிருஷ்ணாவிடம் எகிறுகிறார். இவர் எல்லாக் காரண காரியங்களையும் எடுத்துச் சொன்னபிறகும், திருப்தியின்றி வானமே அதற்காக அழுவது போல் ‘புதுமையான’ மழை பேக்கிரவுண்ட் சேர்க்கப்படுகிறது. இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்களை விளக்கியபடியே செல்கிறது இந்தப்புத்தகம். 
இந்தப் புத்தகத்தில் நம்மை ஆச்சரியப்படுத்திய விஷயம் ஒன்று உண்டு. பொதுவாகவே  ரஜினிகாந்திற்கு கதை-திரைக்கதையில் பெரிய அறிவு கிடையாது என்ற பிம்பமே உலவுகிறது. அவர் எடுத்த வள்ளியும் அதற்கு ஒரு காரணம்.  ஆனால் இந்தப் புத்தகம் நமக்கு ரஜினியின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது. பாட்ஷா கெட்டப்பை ரஜினியே முடிவு செய்கிறார். அண்ணாமலை-வீரா-பாட்ஷா எனமூன்று படங்களிலுமே, குறிப்பாக பாட்ஷாவில் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியின்  பங்களிப்பு இருக்கிறது. எதை, எப்படிச் சொன்னால் சரியாக வரும் என்று யோசித்தே ஒவ்வொரு காட்சியையும் முடிவு செய்கிறார். குறிப்பாக'ரசிகர்களுக்குப் பிடிக்குமா?' என்ற ஒற்றைக் கேள்விதான், அவரது எல்லா முடிவுக்கும் அடிப்படையாக இருக்கிறது.

முள்ளும் மலரும் போன்ற தனக்குப் பிடித்த படங்களை விட்டுவிட்டு, ரசிகனையும் தயாரிப்பாளரையும் திருப்திப்படுத்தும் படங்களை தந்தால் போதும் என்று அவர் முடிவு செய்ததால்தான், சூப்பர் ஸ்டாராக ஆனார். நாம் நல்ல நடிகனை நாம் இழந்தோம் என்பதையே இந்தப் புத்தகம் சொல்லாமல் சொல்கிறது. சினிமா ரசிகர்கள் படிக்க வேண்டிய, விறுவிறுப்பான நடையில் ஒரு கமர்சியல் படக்கதை போன்ற பாணியில் எழுதப்பட்டிருக்கும் புத்தகம் தான் இந்த 'பாட்ஷாவும் நானும்'.

மேலும் வாசிக்க... "பாட்ஷாவும் நானும் - புத்தகம் ஒரு பார்வை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, November 18, 2013

தமிழ்ஸ்ஸ்.காமில் "முள்ளும் மலரும்" - விமர்சனம்


தமிழ்ஸ்ஸ்.காமில் நான் எழுதி வரும் 'தமிழில் ஒரு உலக சினிமா' தொடரில் இந்த வாரம் : முள்ளும் மலரும்

லின்க் :
http://tamilss.com/2013/11/18/mullum-malarum-t-o-u-c/


 
மேலும் வாசிக்க... "தமிழ்ஸ்ஸ்.காமில் "முள்ளும் மலரும்" - விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, November 15, 2013

தமிழ்ஸ்ஸ்.காமில் வில்லா (பீட்சா 2) - திரை விமர்சனம்

தமிழ்ஸ்ஸ்.காமில் எனது ‘வில்லா- விமர்சனம்’...

லின்க் கீழே :

http://tamilss.com/2013/11/14/villa-vimarsanam/
மேலும் வாசிக்க... "தமிழ்ஸ்ஸ்.காமில் வில்லா (பீட்சா 2) - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, November 12, 2013

எங்கள் ரஜினி ரசிகர் மன்றம் கலைக்கப்பட்ட கதை...

சிறுவயது முதலே நான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன். அது என் அம்மாவிடமிருந்து எனக்கு வந்த ரசனை. நடிகர் திலகம் நடித்த படங்களை விவரம் தெரியாத வயதிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் ஊரே சிவாஜி மன்றம்-எம்.ஜி.ஆர் மன்றம் என்று இரண்டாகப் பிரிந்துதான் இருக்கும். பொங்கல் திருவிழா நேரங்களில் பெரும் போட்டியும் அடிதடியும்கூட நடக்கும். எம்,ஜி,ஆர் அரசியலுக்குப் போக, சிவாஜிக்கும் வயசாக நாங்கள் அடுத்த தலைமுறை நடிகர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. 

ரஜினி-கமல் அல்லாத ஆவரேஜ் நடிகர்களுக்கு எங்கள் ஊரில் ரசிகர் மன்றங்கள் முளைத்து எழுந்தன. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நானும் இன்னும் இரண்டு சீனியர்களுமாக, சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர் மன்றம் வைப்பது என்று முடிவு செய்தோம்.
மற்ற மன்றங்கள் எல்லாம் நிரந்தரமாக போர்டு மாட்டும் அளவிற்கு முன்னேறிக்கொண்டிருந்தன. எனவே நாங்கள் தற்காலிகமாக ஒரு சுவற்றில் மன்ற விவரங்களை எழுதி ஆரம்பிப்போம் என்று முடிவு செய்தோம். ’பாயும்புலி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’ என்ற பெயரையும் சுவற்றில் எழுதி, கூடவே தலைவர்-சீனியர் 1, செயலாளர்-செங்கோவி, பொருளாளர்-சீனியர் 2 என்றும் எழுதிவிட்டு கெத்தாக வீடு வந்து சேர்ந்தோம்.
நாங்கள் வீடு வரும் முன்னே, மன்றம் திறக்கப்பட்ட(!) செய்தி, வீடு வந்து சேர்ந்துவிட்டது. அம்மா பயங்கர அதிர்ச்சியில் இருந்தார். அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் அழுவது போல் கேட்டார் ‘ ஏம்பா.எங்க ஐயாக்கு (சிவாஜிக்கு) ரசிகரா இருந்துட்டு எப்படிப்பா உன்னால அந்த பரட்டைத்தலையனை ரசிக்க முடியுது?’.
என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வயது வித்தியாசம் அதிகம். அப்பா தியாகராஜபாகவதரின் ரசிகர். ‘இப்போல்லாம் என்ன நடிக்கானுக..எவனோ பாடுறான், எவனோ வாயசைக்கான்..இதா நடிப்பு. எங்க பாவதரு(!) பாட ஆரம்பிச்சா...’ என்று அவர் குத்துவது நடிகர் திலகத்தை! எனவே சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக அவரின் முகத்தைப் பார்க்காமல் இருப்பதே, நம் மனநலனுக்கு நல்லது என்று முடிவு தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன். அப்போது ‘அய்யோ..அம்மா’ என்று கத்தியபடியே மன்றத் தலைவர், டவுசரைக் கையில் பிடித்தபடி எங்கள் வீட்டைக் கடந்து ஓடினார். பின்னாலேயே தடிமனான அவர் அண்ணன்.
ஊரில் செல்வாக்குப் பெற்றிருந்த இன்னொரு புது மன்றத்தின் தலைவர் அந்த அண்ணன். எனவே அந்த மன்றத்துக்குப் போட்டியாக இன்னொரு மன்றத்தை தம்பியே ஆரம்பிப்பதை அவர் எப்படி ஒத்துக்கொள்வார். எனவே பனைமட்டையால் மட்டுமல்லாது செண்ட்டிமெண்டாலும் தம்பியை அடித்தார். ‘ஏலே, நீயே இப்படிக் கிளம்புனா ஊருல ஒருபய என்னை மதிப்பானாலே? எங்க ஆளு(நடிகர்) நம்ம ஜாதிக்காரன். அவனை நம்மளே ஆதரிக்கலேன்னா எப்படிலே? நீ எவனுக்கு வேணா ரசிகனா இருந்துட்டுப் போ..ஆனா மன்றம் ஆரம்பிக்காத..எம்மன்றத்துல சேந்துடு’ என்று அவர் போட்ட டீலிங்குக்கு தலைவரும் ஒத்துக்கொள்ள, எங்கள் மன்றம் ஆரம்பித்த ஒரேநாளில் கலைக்கப்பட்டது. 
அத்தை பொண்ணை நினைச்சாலே மறக்க மாட்டோம், சூப்பர் ஸ்டாரை எப்படி மறப்போம்? எனவே எங்கள் மன்றத்தை மனசுக்குள்ளேயே வளர்த்துக்கொண்டு வந்தோம். ஆனாலும் மன்றத்தலைவர் முழுக்க கழண்டு கொண்டார். ஏதோ ரகசிய உளவாளிகள் போல நானும் பொருளாளரும் மட்டும் அவ்வப்போது மன்றத்தை முன்னேற்றுவது பற்றி பேசிக்கொள்வோம். காலம் உருண்டோடியது. ஃபேமஸ் நடிகர் எனும் நிலையிலிருந்து சூப்பர் ஸ்டார் எனும் நிலைக்கு ரஜினி உயர்ந்தார். நாங்களும் டவுசர் போடும் வயதிலிருந்து பேண்ட் போடும் வயதிற்கு வந்து, அந்த பேண்ட்டை அவிழ்க்கும் வயதை வந்தடைந்தோம். இனிமேல் யாருக்கும் பயப்பட வேண்டாம், வெளிப்படையாக மன்றத்தை ஆரம்பிப்போம் என்று பொருளாளரும் நானும் முடிவு செய்தோம். ஆனால் அதற்கும் மல்லு-கில்மாப் படங்களின் வடிவில் சோதனை வந்தது.
அப்போதெல்லாம் கேபிள்/டிஷ் டிவி கிடையாது. எனவே மற்ற மன்றத்தினர் பக்கத்து டவுனிலிருந்து 100 ரூபாய் கொடுத்து டிவியும் டெக்கும் வாடகைக்கு எடுத்து வருவார்கள். வீடியோ கேஸட் ஒன்றுக்கு 5 ரூபாய் என்று ஞாபகம். நான்கு கேஸட்களை வாங்கிவருவார்கள். மூன்று கேஸட் (அந்த நடிகரின் படம்) தெருவில் வைத்து போடப்படும். மூன்றுபடம் முடிந்ததும், அதிகாலையில் வேறெங்காவது வைத்து அந்த நாலாவது கேஸட் போடப்படும். அது மன்றக் கண்மணிகளுக்கான மல்லு-கில்மாப் பட ஸ்பெஷல் ஷோ. அதற்காகவே மன்றத்தில் உறுப்பினரான சிங்கங்களும் உண்டு. எனவே அந்த சிங்கங்களை சூப்பர் ஸ்டாரின் பக்கம் திருப்புவது எப்படி என்று யோசித்தோம். (பின்னாளில் ஷகீலா எனும் நடிகை, பல மலையாள சூப்பர் ஸ்டார்களை இதே ஸ்டைலில் அலறவைத்தது ஞாபகம் வருகிறதா?).
நாமும் 3+1 கேசட்களை வாங்கி, மன்றத்தை பெருக்குவோம் என்று முடிவு செய்தோம். இப்போது வறுமை எங்கள் மன்றத்துக்கு குறுக்கே நின்றது. 120 ரூபாய் வேண்டும். மன்றத்துக்கு மேலும் 2 நல்லபிள்ளைகள் வந்து சேர்ந்தார்கள். இந்தமுறை நானே தலைவரானேன். சீனியர்2 பொருளாளர். இன்னொரு அசடை செயலாளராக்கினோம். முதலில் மன்றத்துக்கு நிதி சேர்ப்பது என்று முடிவு செய்தோம். பொருளாளர் கொத்துவேலை, மற்ற எல்லாருமே ஸ்கூலில்தான் படித்துக்கொண்டிருந்தோம். எனவே வாரம் ஐந்து ரூபாய் மன்றத்துக்கு தருவது என்று முடிவு செய்தோம். நிதி மேலாண்மையை பொருளாளர் பார்த்துக்கொண்டார். வாரம் 20 ரூபாய்..120 ரூபாய் தொட்டுவிடும் தூரம்தான் என்று சேமிக்க ஆரம்பித்தோம்.
பாயும்புலி பிராண்டிவிட்டதால், ‘மன்னன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’ என்று பெயரை அப்டேட் செய்துகொண்டோம். முதலில் 4 கேஸட், அப்புறம் தான் மன்றப்பெயரை வெளியில் சொல்வது என்று கொள்கை முடிவெடுத்தோம். தினசரி இரவு சந்தித்து மன்ற நடவடிக்கைகளை(!) கலந்தாலோசிப்பது என்று முடிவு செய்தோம். நாங்கள் ஸ்கூல் முடிந்து சீக்கிரம் வந்ததால், எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் சீனியர் கொத்துவேலையும் பார்த்துவிட்டு, மன்ற நடவடிக்கையிலும் பங்கெடுப்பது சிரமமாக இருந்தது. இரவு லேட்டாக வேறு வர ஆரம்பித்தார். வேறு ஆளிடம் பொறுப்பை மாற்றலாம் என்றால், சிறுவயது முதலே நம்முடன் மன்றத்தில் இருப்பவராச்சே என்று பொறுத்துக்கொண்டேன். தலைமைக்குப் பொறுமை அழகு!

ஆறாவது வாரத்தில் பொருளாளர் ஆளையே காணோம். இரவு வீட்டுக்கு வருவதே 9 மணிக்கு மேல் தான் என்று தெரிந்தது. அவருடன் வேலை பார்ப்பவர்களிடம் விசாரித்ததில் கோவில்பட்டி பஜாரில் சுற்றுவதாக அறிந்தோம். ஆனாலும் ஆறாவது வார இறுதியில் ஞாயிறு இரவு ஆளை வீட்டிற்கே சென்று, கூட்டி வந்தோம். ‘அண்ணே, ஆறு வாரம் ஆயிடுச்சு. இந்தாங்க இந்த வார பங்கு. அடுத்த வாரம் ஜெகஜோதியா மன்றத்தை ஓப்பன் பண்ணிடுவோமா?’ என்று கேட்டேன். அவர் நெளிந்தபடியே ‘ஆரம்பிச்சுடலாம் தம்பி..ஆனா இப்போ படம் போட வேண்டாம்’ என்றார். ‘ஏன்..ஏன்..ஏன்’ என்று மூன்றுபேருமே தனித்தனியே கத்தினோம்.
‘அது பார்த்துக்கோடா தம்பி..மன்றக்காசு கொஞ்சம் செல்வாகிடுச்சு பார்த்துக்கோ..அதான் ஒரு மாசம் கழிச்சு...’
‘யோவ், மன்றமே ஆரம்பிக்கலை..அதுக்குள்ள என்னய்யா செலவு வந்துச்சு?’ என்றோம்.
‘மன்றச் செலவு இல்லப்பா...நம்ம பெரியசாமி ஹோட்டல்ல கொத்துபுரோட்டா நல்லாயிருக்கும் பார்த்துக்கோ..ரொம்பநாளா சாப்பிடணும்னு ஆசை. அதனால..’
‘அதனால என்னய்யா? கொத்துபுரோட்டாவே 5 ரூபாக்குள்ள தானே..போனாப் போவுது’
’ஆமாடா தம்பி..ஒருநாளு சாப்பிட்டா 5 ரூபா தான்..அது பார்த்துக்கோ, நல்லா டேஸ்ட்டா இருந்தது பார்த்துக்கோ...’
‘யோவ், இப்போ எவ்வளவு தான்யா இருக்கு?’
‘15 ரூபா தாம் தம்பி இருக்கு’
‘அடப்பாவி..அப்போ 15 + இந்த 15, மொத்தம் 30 தான் இருக்கா?’
‘இல்லைடா தம்பி..அது பார்த்துக்கோ..மொத்தமே இந்த 15 தான் இருக்கு’.
அந்த ஆள்மீது பாய்ந்து அப்போதே கொத்துப்புரோட்டா போட்டோம். பொருளாளர் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடினார். ‘அடச்சண்டாளா..கடைசீல இந்த கொத்துபுரோட்டாக்காகத்தான் சின்ன வயசுல இருந்தே மன்றத்துல இருந்தியா?’ என்று நான் யோசிக்கும்போதே மீதி இரண்டு பலியாடுகளில் செயலாளர் ஆடு அழத்தொடங்கியது.
‘போச்சுண்ணே..எல்லாம் போச்சு’
‘விடுறா..விடுறா’
‘இல்லைண்ணே..எத்தனை ஆசையா உங்க மன்றத்துக்கு வந்தேன் தெரியுமா? அந்த *** மன்றக்காரங்கிட்ட ஒரு கேள்வி கேட்டேன்ணே..சின்னக்கேள்வி தான்..ஏம்பா, ப்ளூபிலிம், ப்ளூபிலிம்னு சொல்றாங்களே..அது படம் ஃபுல்லா ப்ளூ கலர்லயேவா எடுத்திருப்பாங்கன்னு கேட்டேண்ணே..அந்த ***ப்பய, அஞ்சு நிமிசம் விடாமச் சிரிச்சாண்ணே. அதான், இங்கயாவது தெரிஞ்சுக்கலாம்னு வந்தா..’
‘ஆ..ஆ..என் தங்கமே.அழாதடா செல்லம்..அழாத..அண்ணனுக்கும் அதே டவுட்டு தான். நான் என்ன அழவா செய்றேன். அழக்கூடாது’ என்று ஆறுதல் சொல்லி, மன்றத்தைக் கலைத்தேன்.
இவ்வாறாக எங்கள் சூப்பர் ஸ்டார் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்படும் முன்பே ஜாதிக்கொடுமையாலும் கொத்துப்புரோட்டாவாலும் கலைக்கப்பட்டது. கடைசிவரை நிறைவேறாத கனவாகவே அது போய்விட்டது.
ஆனாலும் என் மனதில் வளர்ந்து நிற்கிறது, ரஜினி ரசிகர் மன்றம்!


அந்த புரோட்டாக்கடை
மேலும் வாசிக்க... "எங்கள் ரஜினி ரசிகர் மன்றம் கலைக்கப்பட்ட கதை..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

31 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, November 7, 2013

பாண்டிய நாடு - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
நான் இருக்கும் ஊரில் நல்ல படங்களை ரிலீஸ் பண்ணுவதில்லை என்று ஒரு நல்ல கொள்கையை வைத்திருக்கிறார்கள் போலும்..ஆரண்ய காண்டம், கும்கி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என எதுவுமே இங்கே ரிலீஸ் ஆவதில்லை. அந்த வரிசையில் பாண்டிய நாடு. அவங்க ரிலீஸ் பண்ணலேன்னாலும், நாம சும்மா இருந்திட முடியுமா?..கடமைன்னு ஒன்னு இருக்கே...!

ஒரு ஊர்ல..:
எந்த வம்பு தும்புக்கும் போகாத, பயந்த சுபாவமுள்ள விஷாலின் அண்ணன் வில்லன் கோஷ்டியினரால் கொல்லப்படுகிறார். அதற்கு ஒரு பக்கம் விஷாலும், இன்னொரு பக்கம் அவரது அப்பாவும் பழிவாங்க கிளம்புகிறார்கள். இறுதியில் வென்றார்களா என்பதே கதை.

உரிச்சா....:
ஓப்பனிங் சாங், வெறுப்பேற்றும் பஞ்ச் டயலாக் ஏதும் இல்லாமல், ஒரு சோதா ரவுடியிடம் சப்பென்று அடிவாங்கியபடியே அறிமுகம் ஆகிறார் விஷால். அந்த ஒரு காட்சியிலேயே அவரது கேரக்டர் விளக்கப்பட்டுவிடுகிறது. தன் மேல் வீட்டில் வாடகைக்கு இருக்கும் லட்சுமி மேனனை விஷால் லவ்ஸ் விடுவதும், லட்சுமி மேனனை ரூட் விடும் இன்னொரு பையனை, தனது நண்பன் விக்ராந்த் மூலம் அடித்து விரட்டிவிட்டு, லட்சுமி மேனனிடம் பெயர் வாங்குவதும் செம கலகலப்பு.

இந்த அழகான காதல்கதை ஒரு பக்கம் போகும்போதே, இன்னொரு ரவுடியின் கதையும் அவனை எதிர்த்துப் பலியாகும் விஷாலின் அண்ணனின் கதையும் சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் நான் மகான் அல்ல டெம்ப்ளேட் தெரிந்தாலும், இடைவேளைக்குப் பின், ஒரு சாமானியக் குடும்பம் எப்படி ஒரு தாதாவின் சாம்ராஜ்யத்தை வீழ்த்தியது என்று சொல்லியதில் ஜெயிக்கிறார் சுசீந்திரன்.

பாரதிராஜாவை விஷால் காப்பாற்றும் காட்சி, பரபரப்பின் உச்சம். முடிந்தவரை யதார்த்ததுக்கு அருகிலேயே பயணிக்கும் திரைக்கதை தான் இந்தப் படத்தின் பெரும்பலம். சூரியை அடக்கி வாசிக்க வைத்திருப்பதும் ஆறுதலாக உள்ளது.

ஹீரோ-ஹீரோயின் காதலை விடவும், விக்ராந்த்-அமுதா ஜோடியின் காதல் மனதைத் தொடுகிறது. தமிழ்சினிமாவில் இது ஒரு புதுமைக் காதல் தான்.

விஷால்:
முதலில் ஒரு தயாரிப்பாளராக விஷாலின் இந்த முயற்சிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்களைச் சொல்லிவிட வேண்டும். நண்பனைச் சண்டை போட விட்டுவிட்டு டீ குடிப்பதும், கடைசிவரை ஹீரோயிசமே இல்லாமல் நடித்திருப்பதும் ஒரு வெற்றிக்காக மனிதர் எந்தளவுக்கு ஏங்கிப்போயிருக்கிறார் என்று காட்டுகிறது. முதல் கொலைமுயற்சியில் குன்னூரில் அவர் காட்டும் பதட்டம் நிறைந்த ஆக்சனாகட்டும், பாரதிராஜாவைக் காப்பாற்றுகையில் பாசத்தின்பிடியில் தன்னை மறந்து அப்பாவைக் காப்பாற்ற போராடும் பாடி லாங்குவேஜும், கிளைமாக்ஸில் ஆவேசம் கொண்டவராக வில்லனை அடித்து நொறுக்குவதாகட்டும் செம பெர்ஃபார்மன்ஸ். இந்த மூன்றுகட்டத்திலும் அவர் மாறிக்கொண்டே வருவதை வசனம் மூலமாக அல்லாமல், பாடி லாங்குவேஜ் மூலமே காட்டி அசத்துகிறார். 

லட்சுமி மேனன்:
கும்கியில் அறிமுகம் ஆனதால், கும்கி போன்றே ஆகிவிடுவார் போல..முகம் உப்பிக்கொண்டே போகிறது. மேலும் முகம் மட்டுமே உப்பிக்கொண்டே போகிறது. இது நல்லதற்கல்ல என்று யாராவது அவரிடம் சொன்னால் தேவலை. விதவிதமான எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கும் திறமை படைத்த நல்ல நடிகை. ஆனாலும் இதில் ஊறுகாயாகத்தான் அவர் நடிப்பை பயன்படுத்தி இருக்கிறார்கள். மெயின் கதையில் அவருக்கு வேலை இல்லை. கிடைத்த கேப்பில், நம் மனதைக் கவர்கிறார்.

பாரதிராஜா:
நாம் எதிர்பாராத ஆச்சரியம், பாரதிராஜா எனும் நடிகனை இந்தப் படம் வெளிக்கொண்டு வந்திருப்பது தான். அன்பான, நடுத்தரக் குடும்ப அப்பா கேரக்டரை கண்முன்னே நிறுத்துகிறார். உணர்ச்சிவசப்பட்டுப் பேசும்போது, ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ’ சாயல் வருகிறது. அந்த நடிகர் இவரிடம் இருந்துதான், அந்த மாடுலேசனைப் பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன். பையனைக் கொன்றவர்களைக் கொல்ல வேண்டும் என அவர் எடுக்கும் முயற்சிகளும் அவரது பரிதவிப்பும் அருமை. 

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- ஓசியில் நெட்டில் பார்த்துவிட்டு, நொட்டை சொல்லலாமா? (உண்மையில் பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை.)

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- விஷால் + பாரதிராஜா நடிப்பு
- இமானின் பாடல்கள் + கதையுடன் பயணிக்கும் பாடல்வரிகள்
- தந்தையை இழந்த குழந்தை, தன் பர்த்டே வீடியோவைப் பார்க்கும் வசனமற்ற அந்தக் காட்சி
- க்ரிப்பான + யதார்த்தமான திரைக்கதை
- நடிகர்களிடம் தேவையான ரியாக்சனை மட்டுமே பெற்றிருக்கும் சுசீந்திரனின் இயக்கம்

பார்க்கலாமா? :

 பார்க்க வேண்டிய படம்!

மேலும் வாசிக்க... "பாண்டிய நாடு - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, November 6, 2013

மலையாளத்திலேயே தமிழ்சினிமா எடுத்தால் என்ன?

ஒரு பக்கம் விஷ்ணுபுரம், காடு, அறம் போன்ற உயரிய படைப்புகளைப் படைத்துக்கொண்டே, இன்னொரு பக்கம் எதையாவது சொல்லி ரகளையைக் கிளப்பிவிடுவது எழுத்தாளர் ஜெயமோகனின் ஸ்டைல். அந்த வகையில் இப்போது ஒரு அற்புதமான(!) எழுத்துச் சீர்திருத்தத்தைச் சொல்லியிருக்கிறார். அதில் இருக்கும் அபத்தங்களை ஒதுக்கிவிட்டுப் பார்க்கையில், நாம் மேலும் முன்னெடுக்க வேண்டிய பல சீர்திருத்தங்கள் தமிழ்நாட்டில் இருப்பது தெரிய வந்தது. அதில் ஒன்றை இங்கே அலசுவோம்.

மிழ்நாட்டில் ஒரு மல்லு பட போஸ்டரைப் பார்த்தேன். வெற்றிகரமான இரண்டாவது வார போஸ்டர் அது. பரபரப்பாக ஓடும் ஒரு தமிழ்ப்படமே, இரண்டு வாரம் தான் ஓடுகிறது; அதில் பாதி, விமர்சனம் படிக்காமலே புக்கிங் செய்து சிக்கிக்கொள்ளும் கூட்டத்தால் ஓடுபவை.  ஏன் இந்த நிலைமை என்று சிந்தித்தேன்.

நம் இளைய தலைமுறை ஏராளமாகப் படம் பார்க்கிறது; ஆனால் தமிழ்ப்படம் பார்ப்பதில்லை. காரணம், பாலியல் கல்வி எனப்படும் வாழ்க்கைக்கல்வியை அவை போதிப்பதில்லை. வயது வந்த வாலிபருக்கு, வாழ்க்கைக் கல்வி அவசியம் என்பது நிறுவப்பட்டுவிட்டது. அது தெளிவான உண்மையும்கூட. வாலிபத்தின் போக்கு அது. மல்லுப் படங்களே அத்தகைய கல்வியை இளைஞர்களுக்குப் புகட்டுகின்றன. அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.

ஆனாலும் ஃபேஸ்புக்கில் கடலை போட தமிழ்ப்படம் பார்ப்பதும் கட்டாயமாகிறது. விளைவாக, வாலிபர்கள் தமிழ்ப்படத்தையும் வேண்டா வெறுப்பாகப் பார்த்து வருகிறார்கள். ஆனால் அதில் அவர்களுக்கு கவனம் நீடிப்பது இல்லை.

அவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன? இளமையில் இரண்டு மொழிகளின் படங்களைப் பார்ப்பதில் இருக்கும் சிரமம்தான் என்று சொல்லலாம். அதிலும் மலையாளம் முழுதாகப் புரியாமல், அதிலிருந்து வாழ்க்கைக்கல்வியைக் கற்றுக்கொள்வதன் அபாயத்தை நீங்கள் உணர வேண்டும். நல்லவேளையாக சேட்டன்கள் தமிழ்ப்படம் போல் கில்மாப்படங்களை சிக்கலான கதை வடிவில் எடுப்பதில்லை.

எப்போதும் எளிமையான கதைகள் தான். ஒரு வயோதிக கணவன். அவனுக்கு கும்மென்று ஒரு மனைவி. பக்கத்து வீட்டில் ஒரு கட்டைப் பிரம்மச்சாரி. இந்த எளிய வடிவத்தைத் தொலைத்ததாலேயே தமிழ்சினிமா இன்று இளைஞர்களின் கவனத்தைப் பெற முடியாமல் போயிற்று எனலாம்.

மல்லு சினிமாவுக்கும் மொழிக்குமான உறவு என்பது அந்த முடியாத கணவனுக்கும் நாட்டுக்கட்டை மனைவிக்கும் இடையேயான உறவு போன்றது தான். எனவே தான் பாதி புரிந்தும் புரியாத நிலையிலும், நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று வாலிபர்கள் அத்தகைய படங்களைக் கொண்டாடுகிறார்கள். இதைத்தான் சமூகவியல் ஆய்வாளரான ஃபூஷேல் மூக்கோ “ரசனை என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார்.

இந்நிலையில், இந்திய வாலிபர்கள் இளமையில் ஒரே சமயம் இரண்டு மொழிகளின் முன்னால் நிறுத்தப்படுகிறார்கள். இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. எனவே தான் அனைத்து தமிழ்ப்படங்களையும் மலையாளத்திலேயே எடுத்துவிட்டால், இந்த சிக்கல் தீரும் என்கிறேன். 

தமிழ்-மலையாளச் சிக்கல் மட்டுமல்லாது, இந்த இணைய உலகில் இது மேலும் பல சிக்கல்களுக்கு இட்டுச் செல்கிறது. யூடியூப்பில் Love Day (Hindi Movie)-Hot shakeelaa என்று பார்த்ததும் அதை ஓப்பன் செய்யும் ஒரு இளைஞன், அது தன் சிறு வயதிலேயே பார்த்துச்சலித்த லயனம் படத்தின் டப்பிங் என்று தெரியும்போது, அடையும் விரக்தியும் வேதனையும் எழுத்தில் சொல்ல முடியாதது. எனவே தான் சொல்கிறேன், எல்லாருமே மலையாளத்தில் மட்டுமே படங்களை எடுத்தால் இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

’ஆஹா..இவன் தமிழ்சினிமாவை அழிக்கப் பார்க்கிறான்..தமிழ் கலாச்சாரமே பாழாகிவிடும். இனி தமிழ்க்கதாநாயகிகளும் மாராப்பு இல்லாமல் டிங்கென்று நிற்க நேரிடும்’என்றெல்லாம் சில வயதான அசடுகள் கூக்குரலிடலாம். ஆனாலும் இதில் இருக்கும் இரு நல்ல விஷயங்களை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

உடனடியாகச் செய்யக்கூடியதல்ல இது. முதலில் எஸ்.ஏ.சந்திரசேகர்-சாமி போன்ற நல்ல இயக்குநர்களின் படங்களை மலையாளத்தில் மட்டுமே எடுக்க ஆரம்பிக்கலாம். பொருத்தமாகவும் இருக்கும். பின்னர் படிப்படியாக எல்லாப் படங்களையுமே மல்லுமயமாக்கி விடலாம்.

இதைப் படித்ததும் உங்களைப் போன்ற அசடுகளுக்கு என்னவிதமான நாறக்கேள்விகள் தோன்றும் என்பதையும் நான் யோசித்துவிட்டேன். கேட்டால், அதற்கு இன்னும் நாறத்தனமாக பதில் சொல்ல சித்தமாக இருக்கிறேன். எமது தரப்பின் நியாயத்தை நீங்கள் உணர, ஆண்டவன் அருள் பாலிக்கட்டும்.

மேலும் வாசிக்க... "மலையாளத்திலேயே தமிழ்சினிமா எடுத்தால் என்ன?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, November 2, 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
நகைச்சுவைப் பட இயக்குநர் என்றால் சுந்தர்.சிக்கு அப்புறம் நம் நினைவுக்கு வருவது ராஜேஸ் தான். அந்த அளவுக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்து நம் மனதைக் கொள்ளையடித்த அவரும் சகுனி-அலெக்ஸ்பாண்டியன் தோல்விக்குப் பின் ஹிட் கொடுக்கவேண்டிய கார்த்தியும் இணையும் படம் என்பதால் ஏக எதிர்பார்ப்பு. ஆரம்பம் படம் பார்க்கப் போகையில்கூட கொஞ்சம் பயம் இருந்தது. ஆனால் ராஜேஸ்-கார்த்தி-சந்தானம் கூட்டணி என்றதும் குஷியாக ஓடி.......

ஒரு ஊர்ல..........:
லோக்கல் சேனல் ஒன்று நடத்திவரும் கார்த்தியின் லட்சியம், அந்த மொக்கைச் சேனலை நம்பர் 1 சேனலாக்கிவிட்டுத்தான் கல்யாணம் முடிப்பது என்ற உறுதியுடன் இருக்கிறார். ஆனாலும் படத்தில் ஹீரோயின் என்று ஒருவர் இருப்பதால், காதலில் விழுகிறார். சரி, ஃபேமிலி மெம்பர்ஸை 5 ஆக்கிட்டு. சேனலை நம்பர் 1 ஆக்கலாம்னு அப்பா-அம்மா ஆசியோட முடிவு பண்றார். அப்போத்தான் அந்த பயங்கர உண்மை தெரியவருது. ஆமாங்க, ரெண்டு குடும்பத்துக்கும் ஃப்ளாஷ்பேக்லயே தகராறு. அப்புறம் என்ன, அதையும் தாண்டி காதல் ஜெயிச்சதான்னு அவங்க சொல்றதுக்குள்ள, எல்லாரும் தியேட்டர் காம்பவுண்ட்டைத் தாண்டி ஓடறாங்க!

உரிச்சா....:
யப்பா...சாமீ..இப்போத்தான் நய்யாண்டின்னு ஒரு மொக்கைகிட்ட மாட்டி சிக்கி சின்னாபின்னமானோம். அதுக்குள்ள அதைவிட டபுள் தமாக்கா-வா இதை இறக்கியிருக்காங்க. இன்னும் அதிர்ச்சியாத்தான் இருக்கு, நம்ம ராஜேஸ் படமா இதுன்னு. 

சேனலை நம்பர் 1 ஆக்கவும், ஹீரோயினை கரெக்ட் பண்ணவும் ஹீரோக்கு உதவ வழக்கம்போல் சந்தானம். ஆனா படம் முழுக்க ரெண்டுபேருமே வாங்க-போங்கன்னு பேசிக்கிறதால பழைய கெமிஸ்ட்ரி மிஸ்ஸிங். சரி, ஏதாவது உருப்படியா பண்றாங்களான்னா அதுவும் இல்லை. படம் ஆரம்பிச்சு அரைமணி நேரம் இவங்க ரெண்டுபேரு மட்டுமே ஸ்க்ரீன்ல இருக்காங்க.ஆனாலும் சிரிப்பு..ம்ஹூம்.

இடையில் சேனல் விளம்பரத்துக்காக, சந்தானத்துக்கு பெண்வேடமிட, கோட்டா சீனிவாஸ் சந்தானம்மீதே ல்வ்ஸ் ஆவது தான் முதல்பாதியில் ஒரே ஒரு காமெடி. உண்மையில் அவர்கள் இருவர் வரும் காட்சிகள் எல்லாமே சூப்பர் தான். ரின்காஜல் அகர்வாலுக்கு தான் ஒரு நல்ல பாடகின்னு நினைப்பு இருக்கிறதும், கார்த்தி அதை உடைக்கிறதும் ஓகே. ஆனாலும் சுவாரஸ்யம் மிஸ்ஸிங்க். ஒருவழியாக லவ் ஓகே ஆகி, அப்பா பிரபுவிடம் சொன்னால், அவர் இரண்டாம்பாதியில் அவரது ஃப்ளாஷ்பேக்க்கை ஓப்பன் செய்கிறார்.

இரண்டாம்பாதியில் வரும் எஸ்.ஜே.பாஸ்கர்-காஜல் காமெடி சீன்கள் அட்டகாசம். அங்கே மட்டுமே ராஜேஸ் தெரிகிறார். ஃப்ளாஷ்பேக்கில் இளம்வயது பிரபுவாக கார்த்தியே நடித்திருப்பது நல்ல ஐடியா. கார்த்தியும் கலக்கியிருக்கிறார். 80களில் வந்த படம் மாதிரியே ஃப்ளாஷ்பேக்கை எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் காமெடி என்று பெரிதாக ஏதுமில்லை, குடும்பங்களுக்கிடையே சண்டைக்கான காரணமும் புஸ்ஸாக இருக்கிறது. ஃப்ளாஷ்பேக் முடிந்து மீண்டும் கார்த்தி சந்தானத்தின் உதவியுடன் எப்படியோ காதலில் ஜெயித்துத் தொலைக்கிறார். விடுங்கய்யா..

கார்த்தி:
இந்த நல்ல நடிகருக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. அலெக்ஸ்பாண்டியன் படத்தில் எப்படி நடித்தார் என்று அதிர்ச்சியான நமக்கு, இந்தப் படத்திலேயே நடிப்பவர் அதில் நடிக்க மாட்டாரா என்று தெளிவு பிறக்கிறது.

இளைய ‘இளைய திலகமாக’ அவர் வரும் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. முடிந்தவரை பிரபு போல் செய்திருக்கிறார். ரப்பப்பா பாடல் காட்சியில் அப்படியே 1980களை கண்முன் நிறுத்துகிறார். ஆனாலும் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் தான்.

சந்தானம்:

ஒரு சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க முடிகிறது. புதிதாக டயலாக் டெலிவரி செய்ய முயற்சித்திருக்கிறார். ஆனால் எடுபடவில்லை. எப்போதும்போல் அடுத்தவரை கலாய்க்கும் கவுண்டமணி ஸ்டைல்தான் இவருக்கு ஓகே ஆகும்போல் தெரிகிறது. இவரும் கார்த்தியும் பேசும் இடங்களில் சிரிப்பே வரவில்லை.(படத்தில் 70% காட்சிகள் அது தான்!)

காஜல் அகர்வால்:

படத்தில் ஒரே ஆறுதல், இந்த ஸ்வீட் தான். படத்தில் அவர் சேலை கட்டிவரும் அழகே தனி. நஸ்ரியாவை இவரிடம் டியூசன் எடுக்க அனுப்பலாம். எஸ்.ஜே. பாஸ்கரிடம் இவர் பரத நாட்டியம் சீரியஸாக கற்றுக்கொள்ளும்போது தியேட்டரில் வெடிச்சிரிப்பு. படத்தில் உள்ள உருப்படியான 15 நிமிடங்களில் இவர் 10 நிமிடம் வருகிறார். 

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- அதை திரும்ப நினைச்சுப் பார்க்கக்கூட நான் விரும்பலை!

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- கார்த்தியின் பிரபு கெட்டப்
- சந்தானம்-கோட்டா காமெடி
- காஜல்-எஸ்.ஜே.பாஸ்கர் காமெடி
- இளையராஜா ஸ்டைலில் போடப்பட்டிருக்கும் பாடல்கள்..என் செல்லம், ரப்பப்பா என தமனின் இசையில் எல்லாப் பாடல்களும் சூப்பர். 

பார்க்கலாமா? :

பார்க்கலாமாவா?மனசாட்சி இருந்தா இப்படிக் கேட்பீங்களாய்யா?..போங்கைய்யா!

ஃபேஸ்புக்கில் தொடர : https://www.facebook.com/sengovipage

மேலும் வாசிக்க... "ஆல் இன் ஆல் அழகுராஜா - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, November 1, 2013

ஆரம்பம் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
பில்லா படத்தின் வெற்றிக்குப் பின் அஜித்-விஷ்ணுவர்த்தன்-யுவன்சங்கர் ராஜா கூட்டணி இணையும் படம் என்பதால் படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செஞ்சாங்களான்னு ஏற்கனவே ஏகப்பட்ட விமர்சனம் படிச்சு குழம்பிப்போன உங்களை, என் பங்குக்கு.......

ஒரு ஊர்ல.....................:
ஆண்ட்டி-டெரரிஸ்ட் டீம்ல...ஆண்ட்டிக்கும் டெரரிஸ்டுக்கும் இன்னா லின்க்க்குன்னு கன்பியூஸ் ஆகாதீங்கய்யா..அதை தீவிரவாத தடுப்புப் படைன்னு வச்சிக்குவோம். அதுல வேலை பார்க்குற ஆப்பீசர் அஜித், அரசியல்வாதிகள்+அதிகாரிகள் பண்ற புல்லட்-புரூஃப் ட்ரெஸ் ஊழலினால் தன் நண்பனையும் நண்பனின் குடும்பத்தையும் இழக்கிறார். அதனால அதுல சம்பந்தப்பட்டவங்களை எப்படிப் பழிவாங்குறார், ஊழல் பணத்தை எப்படி மீட்கிறார் என்பதே கதை.

உரிச்சா....:
படம், அரசியல்வாதிகளைப் பழிவாங்க அஜித் செய்யும் அதிரடிகளுடன் ஆரம்பிக்கிறது. அஜித்துக்கு வில்லத்தனமான ரோல் நன்றாகவே செட்டாகும் என்பதால், முதல்பாதி முழுக்க ஒரு தீவிரவாதி போன்ற தோற்றத்தைத் தரும்வகையிலேயே கொண்டு சென்றிருக்கிறார்கள். அதற்கு ’கம்ப்யூட்டர் மூளை’ கொண்ட ஆர்யாவின் உதவி தேவைப்பட, அவரது காதலியைப் பிடித்துவைத்து மிரட்டி, எல்லா ஹேக்கிங் வேலைக்கும் ஆர்யாவை யூஸ் பண்ணுகிறார்கள்.

நயன்தாரா-ஆர்யா உதவியுடன் முதல்பாதியில் அஜித் செய்யும் வேலைகள் அட்டகாசம். சீரியஸான அஜித்தை ஜாலியான ஆர்யா சமன் செய்கிறார். கூடவே ’கெக்கேபிக்கே’ அசடாக டாப்ஸியும் சேர்ந்து கொள்ள, பல காட்சிகளில் கலகலப்பு. அதிலும் ஆர்யாவின் காலேஜ் ஃப்ளாஷ்பேக் புது சிந்தனை தான். ரசிக்க முடிகிறது. காலேஜில் மொக்கையாக இருந்த ஆர்யா, பின்னர் ஹேண்ட்சம் ஆகிவிட்டார் என்பதை லாஜிக்கலாக ஓகே என்று ஒரு ஆணாக புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆஹா..தலயை விட்டுட்டு வேற எதையோ பார்த்துக்கிட்டிருக்கமே..படம், இடைவேளை வரை செம பாஸ்ட். எதற்கும் துணிந்த அஜித்தும், எதையுமே ஜாலியாக அணுகும் ஆர்யாவும் பட்டையைக் கிளப்புகிறார்கள். ஆர்யா, அஜித்தை போலீஸில் மாட்டிவிடுவதோடு, இடைவேளை! (அப்போது அஜித் ‘இது முடிவல்ல..ஆரம்பம்’ என்று சொல்வதால்தான், படம் ஆரம்பம் என்று பெயர்பெற்றது என்பதையும் அவசியம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.)

இரண்டாம்பாதி நயன்தாரா  ஆர்யாவிடம் ‘டேய் அவர் யாரு தெரியுமா..அவர் ரேஞ்சு புரியுமா’ன்னு ஃப்ளாஷ்பேக்கை ஓப்பன் பண்ணுவதுடன் ஆரம்பிக்கிறது. (நமக்கு சில சிக்கல்களும் இங்கே தான் ஆரம்பம்.) அந்த ஃப்ளாஷ்பேக்கில் அஜித்-ராணா நட்பு நன்றாகவே உணர்த்தப்படுகிறது. ஆனால் ஃப்ளாஷ்பேக்கின் நீளம் அதிகம். அதில் ஒரு பாடல் வேறு. ஐந்து பாட்டு ரெகார்டு செய்தால், அதைப் படத்தில் வைத்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லை. அஜித் முதல்பாதியில் செய்யும் காரியங்களை, மிகவும் சரியாக நியாயப்படுத்துகிறது அந்த ஃப்ளாஷ்பேக். மும்பை அட்டாக்கையும் புத்திசாலித்தனமாக அதில் நுழைத்திருக்கிறார்கள். அதன்பின் ஆர்யா திருந்தி(!), அஜித்திற்கு உதவ முன்வருகிறார்.

அதன்பிறகு லாஜிக் என்பதைப்பற்றி, பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. அப்ரூவராக ஆன ஆர்யாவும் போலீஸும் அதை சுத்தமாக மறந்து விடுகிறார்கள். மும்பை போலீஸ் பிடியிலிருந்து தப்பிய அஜித், ஏர்போர்ட் வழியே துபாய்க்கு கேஷுவலாக (ஆமாம் பாஸ், ஸ்லோமோசன் தான்!) போகிறார். அங்கே ஒரு பேங்க் மேனேஜரை அவர் ரூமிலேயே அடித்துப்போட்டுவிட்டு, மேனேஜராக உட்காருகிறார். 

மும்பையில் இருக்கும் அஜித்+அரசியல்வாதியும், துபாயில் இருக்கும் தீவிரவாதிகளின் தலைவனும் திடீரென இமயமலை(?)க்குக் கீழே சந்தித்து, டுமீலுகிறார்கள். கூடவே மும்பை போலீஸும் அங்கே ஆஜர்!..ஆனாலும் இத்தகைய லாஜிக் மீறல்கள், சராசரி ரசிகனுக்கு பெரிய பிரச்சினை இல்லை தான். 

இடைவேளையில் ஆரம்பித்து இமயமலைவரை காட்சிகள் வேகமாகவே நகர்கின்றன. சுபா திரைக்கதை எழுதும் எல்லாப் படங்களிலேயும் ஒரு பிரச்சினை உண்டு. அவர்களிடம் கொஞ்சம் சரக்கு உண்டு. எனவே கோப்பை நிறைந்து ஓடினாலும், இருப்பதை முழுவதும் ஊற்றியே தீருவோம் என்று செய்வது அவர்கள் வழக்கம். இதிலும் அப்படியே. இன்னும் கொஞ்சம் இரண்டாம்பாதியில் கத்தரி போட்டிருக்கலாம். கடைசி 20 நிமிடங்கள் தேவையற்ற-லாஜிக்கற்ற இழுவை தான்.

அஜித்:
AK  எனும் பெயரில்வரும் அஜித் குமார் எப்போதும்போல் செம ஸ்டைலாக இருக்கிறார். என்னதான் மற்றவர்கள் ஓட்டினாலும், ஸ்லோமோசனில் அவர் நடக்கும் அழகுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. முதல்பாதியில் காட்டும் அசால்ட்டான நடிப்பாகட்டும், இடைவேளைக்குப் பின் ’சீஃப்’-ஆக டைரக்ட் செய்வதாகட்டும், தல ராக்ஸ்! தமிழில் ரகுவரனுக்குப்பிறகு, ஹாலிவுட் லுக் உள்ள நடிகர் என்று அஜித்தை தாராளமாகச் சொல்லலாம். 

மல்ட்டி-ஹீரோ படங்களை யாரும் எடுப்பதில்லை. அதனாலேயே எடுக்கமுடியாமல் போன ஸ்க்ரிப்ட்டுகள் ஏராளம். ஆனால் அஜித் தான் துணிந்து அத்தகைய ஸ்க்ரிப்ட்டில் நடிக்கிறார். அதற்கு ஈகோ இல்லாத தன்மையும், அவரது தன்னம்பிக்கையும் தான் காரணம். தன்னம்பிக்கை அற்றவர்களின் வயித்தெரிச்சல் புலம்பல்களான ‘என்னய்யா..ஆர்யாக்கு அப்பாவா அஜித்து? ஆர்யா தான் ஹீரோவாமே..அஜித் இனி அவ்ளோதானா?’ போன்றவற்றை அஜித் கண்டுகொள்ளாமல், இந்த ஆரோக்கியமான விஷயத்தைத் தொடரவேண்டும். இதில் அவருக்கு ஜோடி-காதல் கண்றாவியெல்லாம் கிடையாது. இருந்தும் அவர் கலக்குகிறார்.

தலை நரைத்த வயதான கேரக்டர் என்பதால் தொப்பை ஒன்றும் பெரிதாக டிஸ்டர்ப் செய்யவில்லை. மேலும் தொப்பை என்பது சராசரி தமிழனின் அடையாளம். எனவே அதில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனாலும் அந்த ஓப்பனிங் சாங்கை தவிர்த்திருக்கலாம். பார்க்கிற நமக்கே கஷ்டமா இருக்கு!

ஆர்யா:

இன்றைக்கு ஜாலியான பையன் கேரக்டருக்கு ஆர்யா தான் சரியான சாய்ஸ். படத்தை கலகலப்பாக கொண்டு செல்வதே அவர் பேசும் டயலாக்ஸ் தான். அஜித்திடம் மாட்டிக்கொண்டு, முதல்பாதியில் அவஸ்தைப்படுகையில் செமரகளை. 
நயன்தரா-டாப்ஸி:
எப்படி இருந்த நயந்தாரா இப்படி ஆகிவிட்டார்?.. இங்கே குவைத்தில் அது கட். நல்லவேளை தப்பித்தோம், இல்லையென்றால் மேலும் பல தொங்கல்களை தெரிந்துகொள்ள வேண்டி வந்திருக்கலாம். படத்தில் அவருக்கும் காதல் என்று ஏதும் இல்லை என்பதாலும், அந்த கேரக்டருக்கு செட் ஆவதாலும் ஒரு நல்ல நடிகையாக அவரை ரசிக்க முடிந்தது.

டாப்ஸி லூசுப்பெண்ணாக வந்தாலும், அந்த கேரக்டரைசேசன் சூப்பர். ஆனாலும் இந்தப் பெண்ணிடம் அப்படி என்ன இருக்கிறதென்று வாய்ப்பு தருகிறார்களோ புரியவில்லை. என்னமோய்யா...!

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- இரண்டாம் பாதியில் தான் தெரியும் டைரக்டர் விஷ்ணுவர்த்தனுக்கே உரிய அச்சுப்பிச்சுத்தனம். ‘இருக்கட்டும்..இருக்கட்டும்..அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க’ எனும் அசட்டு மனோபாவம் அவரது முந்தைய படங்களில் உண்டு. இதிலும் தொடர்கிறது.

- ஓப்பனிங் சாங் + பெல்லி டான்ஸ்

- இழுவையான கிளைமாக்ஸ்

- லாஜிக்கே இல்லாத பின்பாதிக் காட்சிகள்

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- அஜித்..அஜித்....அஜித்

- ஜிவ்வெனப் பறக்கும் முதல்பாதி

- என் ஃபுயூஸ் போச்சே பாடலும் ஹே..ராமா(கட்டான) பாடலும்.

- கிளைமாக்ஸில் அஜித் பேசும் டயலாக்

- செம ஸ்டைலிஷான மேக்கிங்.

பார்க்கலாமா? :

தாராளமாக பார்க்கலாம் - படம் மொக்கையல்ல, ஆவரேஜும் அல்ல..அதற்கும் மேலே!

மேலும் வாசிக்க... "ஆரம்பம் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.