Wednesday, February 27, 2013

தமிழ் சினிமா : ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?

இப்போதெல்லாம் யாராவது என்னிடம் ஏதாவது ஒரு விஷயம் பற்றி சீரியசாகப் பேசும்போது, அதற்குச் சம்பந்தமேயில்லாத வேறொரு விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறேன். (குறிப்பாக திருமணத்திற்குப் பின் தான் இந்த நிலை என்று சொல்லலாம்!)

சென்றவாரம் எங்கள் ஊரில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்துவரும் ஒரு அண்ணனிடம் போஃனில் பேசிக்கொண்டிருந்தேன். 'இப்போதெல்லாம் 30 லட்சரூபாய்க்கு மேற்பட்ட வீடுகள் விலை போவதில்லை' என்றும் ' சிறுபட்ஜெட் வீடுகளையே மக்கள் விரும்பி வாங்குவதால், அத்தகைய வீடுகளையே கட்டி, விற்றுக்கொண்டிருப்பதாகவும்' சொன்னார். நான் பதிலுக்கு 'அது சரி தான்ணே, கஸ்டமர் என்ன விரும்புறாங்களோ அதைக் கொடுப்பது தானே முறை' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தேவையேயில்லாமல் தமிழ்சினிமா ஞாபகம் வந்து தொலைத்தது.


தமிழ் சினிமாவும் ரியல் எஸ்டேட் போன்றே கோடிகளில் புரளும் ஒரு தொழில். ரியஸ் எஸ்டேட்டில் தோல்வி என்றால் நிலமாவது மிஞ்சும். ஆனால் தமிழ் சினிமாவில் தோல்வி என்றால் மிஞ்சுவது பிலிம் சுருள் தான். (டிஜிட்டல் உலகில் அதுவும் மிஞ்சாது என்றே நினைக்கிறேன்.).

அத்தகைய ரிஸ்க் நிறைந்த தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் படங்கள், கஸ்டமர்களான நம்மை திருப்திபடுத்தும்படியாக எடுக்கப்படுகின்றனவா என்று பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது.

பஞ்ச் டயலாக் பேசும் ஹீரோக்கள், 50 பேர் சேர்ந்தும் ஹீரோவை அடிக்க முடியாது அடிவாங்கி பறந்து போய் விழும் அடியாள்கள், கேண ஹீரோயின்கள் என்று நம்மால் ஒதுக்கித்தள்ளப்பட்ட விஷயங்களிலேயே இன்னும் தமிழ்சினிமா உழல்வதைப் பார்க்கையில் ஆச்சரியமே மிஞ்சுகிறது.


சென்ற வருட ஹிட் படங்களை மூன்று வகைக்குள் அடக்கலாம்:

துப்பாக்கி -சுந்தரபாண்டியன் (ஹீரோயிசம்)

ஓகேஓகே-கலகலப்பு-நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் (காமெடி)
பீட்சா / கும்கி (வித்தியாச கதைக்களன்)

தமிழ் சினிமா விமர்சகர்களிடையே உள்ள தவறான ஒரு புரிதல், ஹீரோயிசப் படங்கள் இனி வெற்றியடையாது என்பது. ஆனால் உண்மை வேறுவிதமாகவே உள்ளது. சென்ற வருட துப்பாக்கியும் சரி, சுந்தர பாண்டியனும் சரி ஹீரோயிசத்தை அடிப்படையாகக் கொண்டவையே.

இந்த ஹீரோயிசப் படங்களின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது 'கேரக்டர் ஐடென்டிபிஃகேசன்' எனப்படும் கதாபாத்திரங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்ளல்'' ஆகும். அதாவது அந்த ஹீரோ கேரக்டருடனேயே சாமானிய ரசிகன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளுதல். பெருவாரியான மக்களின் ரசனையைத் தீர்மானிப்பது இந்தக் காரணியே. சாமானிய ரசிகனால் ஒரு ஹீரோயிசப் படத்தின் ஹீரோவுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாவிட்டால் 'யார் வீட்டு எழவோ' என்ற பாணியில் தான் தியேட்டரில் உட்கார்ந்திருப்பான். வெளியில் வந்ததும் அவன் சொல்லும் வார்த்தையும் 'கொன்னுட்டாங்கடா மச்சான்' என்பதாகவே இருக்கும்.

ஹீரோயிசப் படங்களின் காலம் அவ்வளவு தான் என்று பலவருடமாக சொல்லப்பட்டு வந்தாலும் எம்ஜிஆர்-ரஜினி காலம் கடந்து விஜய்-அஜித் காலம் தாண்டியும் அத்தகைய படங்களின் வரவு தொடர்வது அதனாலேயே.

உதாரணமாக, சுந்தரபாண்டியன் படம் என்னை எவ்விதத்திலும் கவரவில்லை என்பதே உண்மை. அது பழைய சசி படங்களின் கலவையாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் என் கிராமத்து நண்பர்களிடம் பேசியபோது, அவர்கள் சுந்தர பாண்டியனை தங்களுக்கு நெருக்கமானவாக உணர்ந்திருப்பதைப் புரிந்துகொண்டேன்.

சென்ற வருட சூப்பர் ஹிட் படமாக துப்பாக்கியும், அதற்கு முந்தைய வருட சூப்பர் ஹிட் படமாக சிறுத்தையும் இருப்பதன் காரணம் அதுவே. மொத்தத்தில் அதிக லாஜிக் மீறல் இல்லாத, விறுவிறுப்பான திரைக்கதையால் பின்னப்பட்ட ஹீரோயிசப் படங்களுக்கு என்றும் நம் மக்களிடையே வரவேற்பு இருக்கும்.

ஹீரோயிசப் படங்களுக்கு அடுத்தபடியாக மக்களின் வரவேற்பைப் பெறுபவை காமெடிப் படங்கள் தான். ஆனால் ஒரு படம் முழுக்க காமெடியாக எடுப்பது அதிக ரிஸ்க் நிறைந்த விஷயம். ஏனென்றால் 75% காமெடிப் படங்கள், எடுத்து முடிக்கப்படும்போது மொக்கைப்படங்களாக ஆகும் வாய்ப்ப்பே அதிகம். (சமீபகாலத்தில் சுந்தர்.சி ஒருவர் தான் துணிந்து காமெடிப்படங்களை எடுக்கிறார்.)

வித்தியாசமான கதைக்களன் கொண்ட படங்களுக்கு அறிவுஜீவிகள் வட்டத்திலும், ப்ளாக்கர்கள் மத்தியிலும்(இரண்டும் ஒன்றல்ல!!) அமோக வரவேற்பு எப்போதும் உண்டு. ஆனால் அதை மட்டுமே வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதே சோகம். உதாரணமாக ஆரண்ய காண்டத்தைச் சொல்லலாம்.

ஆனால் சமீபகாலமாக இதிலும் நல்ல மாறுதல் தெரிகின்றது. அளவான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் வித்தியாசமான படங்கள் ஓரளவு வரவேற்புப் பெற்றாலே லாபமீட்டிவிடுகின்றன. உதாரணம் பீட்சா மற்றும் நடுவுல.....(ஆரண்ய காண்டத்தின் பிரச்சினை 4 கோடிக்கு மேல் நீண்ட அதன் பட்ஜெட் தான்!).

எனவே ஒப்பீட்டளவில் ரிஸ்க் குறைந்தவையாக ஹீரோயிசப் படங்களும், அதற்கடுத்து காமெடிப்படங்களும் இருந்த சூழ்நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கபடும் வித்தியாசமான படங்களும் மினிமம் கேரண்டி படங்களாக மாறி வருவது வரவேற்கத்தக்க விஷயம்.

வெற்றிப்படங்களை அலசும் அதே நேரத்தில் தோல்விப்படங்களையும் தோல்வியின் காரணிகளையும் நாம் கணக்கில் கொள்வது அவசியமாகிறது. சென்ற வருட தோல்விப்படங்களில் முக்கியமானவையாக பில்லா-2, மாற்றான், சகுனி போன்ற பெரிய பட்ஜெட் படங்களைக் குறிப்பிடலாம்.

இந்த படங்களின் தோல்விக்கு முக்கியக்காரணம், அவை ஹீரோவை மட்டுமே திருப்திப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது தான். அதுவும் பில்லா-2 திரைப்படமானது கேரக்டர் ஐடென்டிபிகேசனுக்கு கொஞ்சமும் இடமில்லாததாக, வித்தியாச கதைக்களனிலும் சேர்க்க முடியாததாக உருவாக்கப்பட்டிருந்தது. மாற்றானும், சகுனியும் ஓவர் கான்பிஃடென்ஸில் பஞ்சர் ஆன படங்கள்.

கடந்த சில வருடங்களாகவே ஓவர் ஹீரோயிசப் படங்கள் மண்ணைக் கவ்வுவதும், மினிமம் பட்ஜெட்டில் தயாரான மைனா போன்ற படங்கள் வெற்றிபெறுவதையும் சினிமாக்காரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சுறா, வில்லு போன்ற படங்களின் கதியைப் பார்த்தபின்னும் அலெக்ஸ்பாண்டியன்கள் உருவாவது எப்படி என்றே நமக்குப் புரியவில்லை.
மொத்தத்தில் ரசிகர்களாக நாம் எதிர்பார்ப்பது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அல்லது வித்தியாசக் கதைக்களனைக் கொண்ட படங்களையே.
தமிழ் சினிமா உலகும் ஹீரோக்களின் திருப்திக்காக படம் பண்ணுவதை விடுத்து, நம்மை திருப்திப்படுத்த படம் எடுத்தால் அது இருதரப்புக்குமே நன்மையாக முடியும்
மேலும் வாசிக்க... "தமிழ் சினிமா : ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, February 24, 2013

ஹரிதாஸ் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
இயல்பான நடிப்புக்குப் பேர்போன கிஷோர் ஹீரோவாக நடிக்கும் படம் + திருமணத்திற்குப்பின் சிநேகா நடிக்கும் படம் என்பதைத்தாண்டி, பெரிதாக எதிர்பார்ப்பை எழுப்பும் காரணிகள் இன்றி வெளியாகியிருக்கும் படம். ஆனாலும் கவனிக்கப்பட வேண்டிய படமாய் வெளிவந்துள்ளது இந்த ஹரிதாஸ்.



ஒரு ஊர்ல.....................:

என் கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் கிஷோரின் மகனுக்கு ஆட்டிசக் குறைபாடு. தனது என்கவுண்டர் திட்டப்படி ஒரு தாதா குரூப்பை அழிக்கும் அதே நேரத்தில், மகனை எப்படி சாதனையாளனாக ஆக்குகிறார் என்பதே கதை.

உரிச்சா....:

படம் இருவேறு தளங்களில் பயணிக்கிறது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டின் பரபரப்பான வாழ்க்கை மற்றும் ஆட்டிசக்குறைபாடுள்ள பையனின் தந்தையின் செண்டிமெண்ட் வாழ்க்கை என இருவேறுபட்ட சூழல்களை மிக யதார்த்தமாக காட்டியிருக்கிறார்கள்.

அதிலும் முதல் என்கவுண்டர் சீன், மிகவும் இயற்கையாக் உள்ளது. அதேபோன்றே சிநேகா கேரக்டரும்.ஹரிதாஸ் எனும் ஆட்டிசக்குறைபாடுள்ள சிறுவன், சாதனையாளனாக உருவெடுக்கும் காட்சிகளை மிக சுவாரஸ்யமாய்க் காட்டியிருக்கிறார்கள்.

கிஷோர் :


நடிக்கத் தெரிந்த நல்ல நடிகர். வில்லன் வேடத்திலேயே மிகைநடிப்பின்றி கலக்குவார். இதில் ஒரு நல்ல தந்தையாக, நேர்மையான போலீஸ்காரராக அப்படியே பொருந்திப்போகிறார்.

மழையில் நனைந்தபடியே பையனிடம் பேசும் காட்சி கவிதை. ஆனாலும் அந்தக் காட்சியில் குரலை இன்னும் மென்மையாக்கியிருக்கலாம்.

சிநேகா :
கல்யாணம் ஆகிப் போய்விட்ட சிநேகாவை தேடிப்பிடித்து கொண்டுவந்திருக்கிறார்கள். இந்தக் கேரக்டருக்கு சிநேகாவை விட்டால் வேறு பொருத்தமான நடிகை யார் இருக்கிறார்கள்?

ஒரு டீச்சராக இருப்பதில் ஆரம்பித்து பையனிடம் அட்டாச்மெண்ட் ஆகும் உணர்ச்சிகளை அட்டகாசமாக காட்டியிருக்கிறார்.சிநேகாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான் படம் இது. அதிலும் குழந்தையைத் தொலைத்துவிட்டு அழுதபடியே பேசும் காட்சியில் அப்படி ஒரு யதார்த்தம்.

ப்ரித்விராஜ் தாஸ் :

ஆட்டிசக்குறைபாடுள்ள குழந்தையாக நடித்துள்ள சிறுவன். யார் என்ன பேசினாலும் ரியாக்ட் செய்யாமல் அல்லது மிக தாமதமாகச் செய்யும் கேரக்டர். மிகவும் கஷ்டமான நடிப்பு. அருமையாகச் செய்திருக்கிறான். இவனிடம் மிகச் சரியாக வேலை வாங்கிய இயக்குநர் குமாரவேலும் பாராட்டுக்குரியவர்.


நெகடிவ் பாயிண்ட்ஸ் :


- குறைபாடுள்ள குழந்தைகளை அணுகுவது பற்றிய மனிதாபிமானம் போதிக்கும் படம், என்கவுண்ட்டரையும் போதிப்பது. அது வணிகரீதியில் படம் வெற்றியடைய உதவினாலும், கருத்தியல்ரீதியில் பெரிய முரணாக ஆகிவிட்டது.

- படம் இருவேறு தளங்களில் போகின்றது. இரண்டுமே அவ்வளவாக ஒட்டவில்லை. போலீஸ் கதை நடக்கும்போது ஏதோ ஒரு அந்நியத்தன்மை தெரிகிறது.

- அந்த போலீஸ் கதையின் கிளைமாக்ஸ்.

- சிநேகா உடன் வேலைபார்க்கும் டீச்சரை ஒருநேரத்தில் ஒருமையிலும், மற்றொரு நேரத்தில் மரியாதையுடனும் அழைப்பது போன்ற சில கண்டினியுட்டி மிஸ்ஸிங்ஸ்.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:


- நம்பிக்கை ஏற்படுத்தும் கதையினை எடுத்துக்கொண்டு, ஒரு நல்ல முயற்சியில் இறங்கியது.

- நறுக்குத்தெறித்தாற்போன்ற வசனங்கள்

- அன்னையின் கருவில் மற்றும் வெள்ள குதிர பாடல்கள்

- ரிலாக்ஸ் பண்ண வைக்கும் சூரியின் காமெடி

- அரசுப்பள்ளியில் வரும் மாணவர்கள்+தலைமையாசிரியை கேரக்டர்கள்

- ரத்னவேலுவின் கேமிரா

பார்க்கலாமா? :


ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னதற்காக நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய, பார்க்க வேண்டிய படம்.

மேலும் வாசிக்க... " ஹரிதாஸ் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, February 19, 2013

தமிழ் சினிமா : கற்பனைக்கும் காப்பிக்கும் நடுவே....

மீபகாலமாக தமிழ்சினிமாவின் மேல் அதிகளவு வைக்கப்படும் குற்றச்சாட்டு, காப்பியடித்தல். ஏதாவது ஆங்கிலப் படத்தையோ அல்லது உலகப்படத்தையோ சுட்டு தமிழ்சினிமா எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. இன்று இணைய வளர்ச்சியால் உலக சினிமா என்பது சாமானியருக்கும் எட்டும் விஷயமாக ஆகிவிட்டதாலேயே, மக்களால் குறிப்பாக நம் பதிவர்களால், எந்தப் படம் எங்கிருந்து சுடப்பட்டது என்று எளிதாக கண்டுபிடிக்கவும் முடிகிறது.

இருப்பினும் காப்பிக்கும் இன்ஸ்பிரேஷனுக்கும் ஒத்த சிந்தனைக்கும் இடையே உள்ள வித்தியாசம் புரியாமல் பலரும் விமர்சிக்கும் நிகழ்வும் இங்கே நடக்கிறது.

தமிழ்சினிமாவில் நிகழும் காப்பியடித்தலை இரண்டு வகைகளாகச் சொல்லலாம்.

முதலாவது, ஒரு படத்தை அப்பட்டாமாக (50%க்கு மேல்) காட்சிக்குக் காட்சி சுட்டு எடுப்பது. உதாரணமாக அமீரின் யோகியைச் சொல்லலாம். எவ்வித லஜ்ஜையும் இன்றி, அப்படியே ஜெராக்ஸ் எடுப்பதோடு நில்லாமல், இது தன் சிந்தனையில் உதித்த சரக்கு தான் என்று சாதிக்கும் வல்லமையும் இத்தகைய படைப்பாளிகளுக்கு உண்டு. அதுவே நம்மை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது என்றால் மிகையில்லை. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அடுத்தவகை காப்பியானது, ஒரு திரைப்படத்தின் சில/ஒரு காட்சியை மட்டும் சுட்டு எடுப்பது.

மொத்தத்தில் பல திரைப்படங்களின் காட்சிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக சுட்டு, இணைப்பது. அந்த குறிப்பிட்ட காட்சி, என்னுடைய சிந்தனையில் உதித்தது தான் என்று இயக்குநர் சாதிக்காதவரை, இது சகித்துக்கொள்ளக்கூடிய விஷயமே.(நமது படைப்பாளிகள் காப்பிரைட் பிரச்சினை போன்ற காரணங்களால், மூல திரைப்படத்தை சொல்ல முடியாத சூழல் இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. )

ஏனென்றால் ஒரு கதை அல்லது நாவல் உருவாக்கத்திற்கும் திரைக்கதைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ஒரு கேரக்டரின் சிந்தனை என்னவென்பதை நாவலில் சொல்லிவிட முடியும். ஆனால் திரைப்படத்தில் அவ்வாறு மைண்ட் வாய்ஸாக ஓரளவிற்கு மேல் சொல்ல முடியாது. அதற்காகவே சினிமா ஜாம்பவான்களின் படத்தை நம் படைப்பாளிகள் ரெபஃர் செய்கிறார்கள்.


சில சினிமா ஜாம்பவான்கள், திரைக்குறியீடுகள் மூலமாகவே அதைச் சொல்வதைப் பார்த்தால், நம் மக்களும் அதைப் பின்பற்றுவதில் தவறில்லை. எனவே ஒரு உணர்ச்சியை, சூழ்நிலையை நம் சூழலுக்கு ஏற்றாற்போல் காட்டுவதற்கு ஒரு பழைய/உலக திரைப்பட காட்சி உதவுமானால், அதை உபயோகிப்பது பெரிய தவறில்லை தான். உண்மையில் திரைக்கதை/இயக்கம் சொல்லித்தரும் எல்லா நிறுவனங்களிலும், இந்த ரெபஃரன்ஸ் செய்யும் விஷயத்தை கற்றுத் தருகிறார்கள்.

உதாரணமாக விருமாண்டியில் வரும் சிறைக்கலவரக் காட்சியானது ஸ்பார்டகஸ் திரைப்படத்தில் வரும் கலகக்காட்சியின் சாயலைக் கொண்டிருக்கும். கமலஹாசன் திறமையாக அந்தக் காட்சியை பயன்படுத்தியிருப்பார். இவ்வாறு ஓரிரு காட்சிகளை காப்பி செய்ததற்காக, நாம் ஒரு படத்தையே/இயக்குநரையே புறக்கணிப்பது சரியானதாக இருக்காது.

நம் மக்களை பெரிதும் குழப்பும் விஷயம், காப்பிக்கும் இன்ஸ்பிரேசனுக்கும் உள்ள நுண்ணிய வித்தியாசமே. இன்ஸ்பிரேசன் என்பது ஏதேனும் ஒரு கரு அல்லது காட்சி, படைப்பாளி மற்றொரு கதையை உருவாக்க உந்துதலாக இருப்பதே ஆகும்.

விருமாண்டி படத்தின் அடிநாதம், அகிராகுரேசேவாவின் ராஷமானை ஒட்டியிருக்கும். கஜினி படம், மெமென்டோவை தழுவியே இருக்கும். பேங்க் கொள்ளை எனும் கருவை வைத்து ஹாலிவுட்டில் எவ்வளவோ படங்கள் வந்துவிட்டன. இனியும் அவை வரவே செய்யும். அதற்காக 'அய்யோ..இது காப்பி..சுட்டுட்டான்' என்று ஹாலிவுட்டில் யாரும் கூக்குரல் எழுப்பி, படைப்பாளிகளை இம்சிப்பதில்லை. உண்மையில் அத்தகைய பொழுதுபோக்கு கருக்கள் எளிதில் காலாவதியாவதில்லை.

ஆனால் தமிழில் சமீபகாலமாக ஏதேனும் சிறிது ஒற்றுமை தென்பட்டால்கூட, 'அய்யோ திருடன்' என்று கத்தி ஊரைக்கூட்டும் போக்கு அதிகரித்துவருகிறது. இது நிச்சயம் தமிழ்சினிமாவிற்கு,குறிப்பாக வணிக சினிமாவிற்கு நல்லதே அல்ல. காப்பி-இன்ஸ்பிரேசன் என்பது பற்றியாவது நம் மக்களுக்கு கொஞ்சம் புரிதல் இருக்கிறது. ஆனால் 'ஒத்த சிந்தனை' பற்றி எவ்வித புரிதலும் இன்றி சிலர் பேசுவதைப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது.

ஒரு படைப்பு எவ்வாறு உருவாகிறது, அப்போது படைப்பாளியின்சிந்தனை செயல்படும் முறை என்ன, தன் சிந்தனைச் சிக்குகளிலிருந்து அவன் கோர்த்தெடுப்பது என்ன என்ற புரிதல், பெரும்பாலான சாமானியர்களுக்கு இல்லையென்பதே உண்மை. இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனால் அவ்வாறான ஆசாமிகள், எல்லாம் தெரிந்தவர்போல் தீர்ப்பு எழுதும்போது தான் பிரச்சினை வருகிறது. முதலில் எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டிய விஷயம், ஒரு கரு ஒருவரின் மூளையில் மட்டுமே வரும், அதே விஷயம் வேறொருவருக்கு வர வாய்ப்பே இல்லை என்று நினைப்பது மடத்தனம்.

'ஒற்றுமையாக நான்கு அண்ணன் தம்பிகள், அவர்களின் திருமணத்திற்குப் பின் அவர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகள் மற்றும் அதன் தீர்வுகள்' என்ற இந்தக் கரு ஒற்றை மூளையில் மட்டுமே உதிக்கக்கூடிய அற்புத விஷயமா என்ன? ஒரு ரோபோவிற்கு உணர்ச்சியிருந்தால் என்னாகும் என்ற யோசனையும் ஒருவருக்கு மட்டுமே வருமா என்ன?

'விபச்சாரக் கும்பலிடம் மாட்டிக்கொண்ட மகள்-மீட்கப் போராடும் அப்பா' என்பது மகாநதியின் கரு. அதன்பிறகு வந்த ஹாலிவுட் படமான டேக்கன் படத்தின் கருவும் அதுவே. (மகாநதியில் ரஜினி நடித்திருந்தால் என்று யோசித்தால், அதுவே டேக்கன்!). இதற்காக கமலை ஹாலிவுட்காரன் காப்பியடித்தான் என்று சொல்லிவிடமுடியாது.

அவ்வளவு ஏன், எனது முந்து சிறுகதையை படித்த நண்பர் ஒருவர், அந்த கதையின் கருவானது ஏற்கனவே காலச்சுவடில் வந்த ஒரு கவிதையைப் போன்று இருப்பதாகச் சொன்னார்.  எந்தக் கவிதை என்றும் அந்த நண்பருக்கு சரியாக ஞாபகமும் இல்லை.எனக்கு காலச்சுவடு படிக்கும் பழக்கம் இல்லை. எனவே ஒரே போன்ற விஷயம், இருவருக்கு தோன்றுவது இயல்பானதே. இன்னும் சொல்வதென்றால் பதிவுலகில் நான் எழுத நினைக்கும் சில விஷயங்களை, நான் நினைத்த அதே கோணத்தில் தம்பி ஜீ எழுதிவிடுவார். (அதே போன்றே அரசியல் பதிவுகளைப் பொறுத்தவரை ரஹீம் கஸாலி. ). அதற்குக் காரணம், ஜீயும் நானும் ஒரே விதமான இலக்கியவாதிகளை கடந்துவந்தவர்கள் என்பது தான்.

எனவே மட்டையடியாக காப்பி-இன்ஸ்பிரேசன் - ஒத்த சிந்தனை ஆகிய மூன்றையும் ஒன்றாக குழப்பிக்கொண்டு, தாக்குவதைத் தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான விமர்சனத்தை நாம் முன்வைத்தால், தமிழ்சினிமாவின் வளர்ச்சிக்கு பதிவுலகமும் கைகொடுத்தது போல் ஆகும்.
மேலும் வாசிக்க... "தமிழ் சினிமா : கற்பனைக்கும் காப்பிக்கும் நடுவே...."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, February 3, 2013

அரசியல் கொலைகள்: அல்லக்கைகளுக்கு ஒரு விண்ணப்பம்

எம்.ஜி.ஆர் வழில வேலை செய்ற விவசாயிகளைப் பார்த்தா, காரை நிப்பாட்டிடுவாராம். அவங்ககிட்ட இறங்கிப்போய் 'எப்படி இருக்கீங்க? தொழில் எப்படிப் போகுது? சம்பளம் என்ன?'ன்னு எல்லாம் கேட்டுட்டு, போகும்போது கை நிறைய பணத்தை அள்ளி திணிச்சுட்டுப் போவாராம். அவர்கிட்ட நேரடியா பணம் வாங்கினவங்களே சொல்லிக் கேட்டிருக்கேன்.


இந்த அரசியல் அல்லக்கைகளும் அவங்களோட 'அண்ணன்'களும், அதே மாதிரி எங்கயாவது விவசாயிகளைப் பார்த்த உடனே காரை விட்டு இறங்குவாங்க. கொடுக்கிறதுக்கு இல்லை, இருக்கிற நிலத்தையும் புடுங்கிறதுக்கு! எம்.ஜி.ஆர் கை கொடுத்துக் கொடுத்தே சிவந்துச்சுன்னா, இவங்க கை எடுத்து எடுத்தே சிவந்துச்சு, அந்த மக்களோட ரத்ததால! அதனால தான் அரசியல் கொலைன்னு செய்தி வரவும், யாருமே பரிதாபப்பட மாட்டேங்கிறாங்க.

இப்போ மறுபடியும் ஒரு அரசியல் கொலை நடந்திருக்கும் செய்தியினைக் கேட்டதும், செத்தவரின் குடும்பத்தை விடவும் யார் அதிகம் கவலைப்பட்டிருப்பார்கள் என்றால், அது நம்ம தமிழக காவல் துறை தான். ஏனென்றால்...

ஏன்னா ஒரு அரசியல் கொலை நடந்துச்சுதது. ஸ்காட்லாண்டுக்கு இணையான நமது காவல்துறையும் விசாரணையில் இறங்குச்சு. முதல்ல தொழில்போட்டியாளர்னு ஒருத்தரைப் பிடிச்சாங்க.  அவர் ‘என்னைவிட அவன் தான் அதிகம் பாதிக்கப்பட்டான்’ன்னு இன்னொரு ஆளை கைகாட்டினார். அவரோ ‘அது அந்த தெக்கத்தி ஆளு வேலையா இருக்கும்’ன்னு இன்னொருத்தரை கைகாட்டிவிட்டார். அவரு என்னடான்னா’ இலங்கைல உள்ள ஒரு குரூப் தொழில் போட்டீல பண்ணதாச் சொன்னார். அவங்களை நெருங்கினா, ‘இது இந்தோனேஷியா தொழில் மேட்டர்..அங்க போய் விசாரிங்க’ன்னு கைகாட்ட, நம்ம காவல்துறைக்கு தலைசுத்திடுச்சு.


அடுத்து போலீஸ்கார்க்கு ஒரு டவுட்டு..ஒருவேளை இது பொம்பளை மேட்டரா இருக்குமோன்னு. அதனால அந்த ஆளோட சின்ன வீடுகிட்ட விசாரிச்சாங்க. அது ‘எனக்குத் தெரியாது..ஒருவேளை சின்னசின்னவீடு சம்பந்தப்பட்டிருக்கலாம்னு சொல்லுச்சு. அதுகிட்டப் போய்க்கேட்டா, சின்னசின்னசின்னவீடுகிட்ட கேளுங்கன்னு சொல்லுச்சு.அப்புறம் சின்னசின்னசின்னவீடு, சின்னசின்னசின்னசின்னவீடு, சின்னசின்னசின்னசின்னசின்னவீடு-கிட்ட விசாரிச்சும், ஒரு பிரயோஜனமுமில்லை.

இப்போச் சொல்லுங்க, இப்படி ஏற்கனவே நொந்துநூடுல்ஸாகி இருக்கறவங்களுக்கு, மறுபடியும் ஒரு அரசியல்கொலைங்கவும் எப்படி இருக்கும்? பாவம் இல்லியா அவங்க. ஏதோ நாலஞ்சு பேருக்கு கெடுதல் பண்ணாங்கன்னா, விசாரிச்சு கொலையாளியைப் பிடிச்சுடலாம். ஆனா ஆயிரக்கணக்கான குடும்பத்தைக் கெடுக்கறவங்களைக் கொன்னவவங்களைப் பிடிக்கிறது லேசுப்பட்ட காரியமா? அந்த கேசுக்கே 2000 பேர்வரைக்கும் விசாரிச்சதா, தகவல் வந்துச்சு. மறுபடியும் இன்னொன்னுன்னா என்ன ஆகறது? அதனால அரசியல்வாதிகளுக்கு அல்லக்கைகளாத் திரியற, அரசியல் ரவுடிகளுக்கு சில வேண்டுகோள்களை வைக்கவே இந்தப் பதிவு.

அல்லக்கைகளே, இந்த கொலைகளுக்கெல்லாம் முக்கியக் காரணம் என்ன தெரியுமா? ‘இது நம்ம ஆட்சி இல்லை. இது அம்மா ஆட்சி. அதனால சட்டம் ஒழுங்கு சீரும்சிறப்பா இருக்கும்’ங்கிற உங்க தப்பான நம்பிக்கை தான் முக்கியக்காரணம்.

சமீபத்துல அம்மையார் பேட்டியை டிவில பார்த்திருப்பீங்க. ‘அந்த அமைப்புல ஏழரை லட்சம்பேரு இருக்காங்க. எங்கிட்டயோ 9226 போலீஸ் தான் எக்ஸ்ட்ராவா இருக்காங்க. வெறும் 9226 போலீஸை வச்சுக்கிட்டு, பேஃஸ்புக்ல, ட்வீட்டர்ல, ப்ளாக்ல எழுதுறவனை வேணா அரெஸ்ட் பண்ணி, படம் காட்டலாம். அந்த ஏழரை லட்சம்பேரு கலவரம் பண்ணா, என்னால எப்படி தடுக்க முடியும்?..”-ன்னு கேட்டு ஓன்னு ஒப்பாரி வச்சதை நீங்க பாத்தீங்க தானே?

இந்திய அரசியல் வரலாற்றிலேயே எந்த சி.எம்மும் இப்படி தான் ஒரு கையாலாகாத ஆளுன்னு ஒத்துக்கிட்டதில்லை. அப்படி ஒத்துக்க, நம்ம தைரியலட்சுமியால மட்டும் தான் முடியும். அதுவும் ஒரு பெருமை தானே?

அதனால தான் சொல்றேன் ,அல்லக்கைகளே முழிச்சிக்கோங்க. அம்மா ஆட்சிதானேன்னு நம்பி, ’காலையில வாக்கிங் போறது, பக்கத்து பெட்டிக்கடைக்கு பகல்ல போறது, சின்னவீட்டோட வீட்டுக்கு நைட்ல போறது’ போன்ற துடுக்குத்தனமா காரியங்களை முதல்ல நிறுத்துங்க.

 உங்களுக்கென்ன, ஒரு உசுரு..ஆனா நாங்க குறைஞ்சது ஆயிரம் போலீசாரை விசாரணைக்கு இறக்க வேண்டியிருக்கு. 9000-ல ஆயிரம் போனா 8000..இதே மாதிரி இன்னும் 8பேரு மண்டையைப் போட்டீங்கன்னா, அம்மையார் பக்கத்து ஸ்டேட்ல இருந்துதான் போலீசை கடன் வாங்க வேண்டியிருக்கும். அதனால உங்களுக்கு வைக்கிற முத கோரிக்கை, பழைய அம்மா ஆட்சி மாதிரி நினைச்சுக்கிட்டு, யாரும் கேசுவலா வெளில சுத்தாதீங்க. இது முத வேண்டுகோள்.

அடுத்து, நீங்கள்லாம் சாதாரண ஆளுங்க இல்லை..அரசியல் அல்லக்கைக..அதனால கணக்கு வழக்கு இல்லாம, கைமா பண்ணிக்கிட்டுத் திரியற ஆளுங்க. அதுல என்ன பிரச்சினைன்னா, திடீர்னு யாராவது உங்களை போட்டுட்டாங்கன்னா, முதல்ல நீங்க யார் குடும்பத்தையெல்லாம் கெடுத்தீங்கன்னு பெரிய லிஸ்ட் எடுக்கவேண்டியிருக்கு. அதுக்கே அஞ்சு வருசம் போதாதுல்ல? அதனால நீங்க ஒரு சகாயம் பண்ணனும் சாரே.

டெய்லி நைட் தூங்கறதுக்கு முன்னாடி சம்சாரத்துகிட்ட அன்னிக்கு காலைலே இருந்து எத்தனைபேரைக் கொன்னீங்க, எத்தனைபேரு கை-காலை எடுத்தீங்க, எத்தனை பேரு நிலத்தை அடிச்சுப்புடுங்கினீங்கன்னு ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருங்க. அப்போத்தான், நீங்க திடீர்னு மண்டையைப் போட்டாலும் சீக்கிரமா கொலையாளிகளைப் பிடிக்க முடியும். சம்சாரத்தை நம்ப முடியாதுன்னா, சின்னவீடுகிட்ட சொல்லுங்க.

அதுவும் வேணாம்னா, இன்னொரு ஐடியா இருக்கு. ஏதாவது அரசு வங்கில ஒரு பேங்க் லாக்கர் ஓப்பன் பண்ணுங்க. அதுல ஒரேஒரு டைரியை வாங்குங்க. வாராவாரம் பேங்க் பாஸ்புக்ல எண்ட்ரி போடற மாதிரி, உங்க டைரில பாவக்கணக்கை தப்பில்லாம எழுதி வைங்க. லாக்கர் ஓப்பன் பண்ணும்போதே, பேங்க் மேனேஜர்கிட்ட ‘என்னிக்காவது என்னை யாராவது போட்டுட்டாங்கன்னா (இதை கொலை என்று பொருள் கொள்க!), போலீஸ்கிட்ட என் லாக்கரை ஓப்பன் பண்ணிக்காட்டணும்'ன்னு கண்கலங்க சத்தியம் வாங்கிக்கோங்க.

எச்சரிக்கை: என்னிக்காவது நைட் அடிச்ச மப்பு கலையாம வாக்கிங் போயி, பாதை தெரியாம தொலைஞ்சு போயிட்டீங்கன்னா, அந்த பேங்க் மேனேஜர் அவசரப்பட்டு லாக்கரை ஓப்பன் பண்ணிடலாம். அதனால தெளிவா 'கண்டம்துண்டமா வெட்டப்பட்ட என் பொணத்தை கண்ணால பார்த்த அப்புறம் தான், போலீஸ்க்கு போகணும்னு தெளிவாச் சொல்லிடுங்க'.

இருக்கும்போது தான் இம்சை பண்றீங்கன்னா, செத்தும் தொல்லை கொடுக்காதீங்க. இது எங்களோட பணிவான வேண்டுகோள்.

கடைசிச் செய்தி: மம்மியோட பேட்டியைப் பார்த்துட்டு, கண் கலங்கி அந்த கூலிப்படையே சரணடைஞ்சிட்டதா நியூஸ் வந்திருக்கு. வெரிகுட். இதே மாதிரி ஏற்கனவே கொலை செஞ்ச கூலிப்படைங்களும், அடுத்து கொலை செய்யப்போற கூலிப்படைகளும் சரணடைவாங்கன்னு எதிர்பார்ப்போம். அந்த 9226 பேரையாவது நிம்மதியா இருக்க விடுங்கலெ!

மேலும் வாசிக்க... "அரசியல் கொலைகள்: அல்லக்கைகளுக்கு ஒரு விண்ணப்பம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, February 1, 2013

கடல் - திரை விமர்சனம்

 அதாகப்பட்டது... :
நம்ம கார்த்திக்கு மவனும், ராதா மவளும் சோடி போட்டிருக்கிற படம், அதுவும் மணிரத்னம் டைரக்சன்லன்னா சும்மாவா..ஏலெ, கேட்டதுமே ஜில்லுன்னு இருக்குல்லா? போதாததுக்கு லிப்-கிஸ்ன்னு வேற கிளப்பிவிட்டுட்டாங்க..நம்ம ஜெயமோகன் டயலாக் வேற.(அட, பயப்பாடாதீக பயபுள்ளைகளா..அவரு சினிமாக்கு மட்டும் தமிழ்ல தான் எழுதுவாரு..நம்புங்க!)..கொஞ்சநாளாவே இங்க நல்ல படங்கள்லாம் வர்றதில்லை, இது என்னாகுதோன்னு பயந்துக்கிட்டே இருந்தோம்..’யாரும் பாக்காத’ படமுல்லா..அதான் சட்டுப்புட்டுன்னு ரிலீஸ் பண்ணிப்புட்டாக.


ஒரு ஊர்ல.....................:

நல்லாக் கேட்டுக்கோங்க..நம்ம அர்ஜீனும், சிவப்ப்பழகன் அர்விந்தசாமியும் ஃபாதர் ஆகறதுக்கு படிக்காக..அய்யய்யோ, பாலியல் கல்வின்னு நினைச்சுப்புடாதீக மக்கா..இது சர்ச்-ல ஃபாதர் ஆகறதுக்கான படிப்பாக்கும்..அர்விந்தசாமி நல்ல புள்ளை, அர்ஜூனு சோக்காளி..படிக்க வந்த இடத்துல படிக்கிற சோலியை மட்டும்தானே பார்க்கணும்? அர்ஜூனு வேறொரு சோலி பாத்துப்புடுதாரு.அதை அர்விந்தசாமி பெரிய்ய ஃபாதர்க கிட்ட போட்டுக்கொடுத்துடுதாரு..அதனால அர்ஜூனு ஃபாதர் ஆக முடியாமப் போகுது..அப்போ அர்ஜூனு தொடைதட்டி சபதம் எடுக்காரு.’ஏலே அர்விந்தசாமி..உன்னையும் டர்ர் ஆக்குவேம்ல’ன்னு.

அப்புறம் பாத்தீகன்னா, அர்ஜூனு டான் ஆகிடுதாரு..அர்விந்தசாமி ஃபாதர் ஆகி(சர்ச்ல தான்), அர்ஜூனு ஊருப்பக்கமே வந்திடுதாரு..அப்புறமென்னலே, அன்புக்கும் வெறுப்புக்கும்-நன்மைக்கும் தீமைக்கும்-அதுக்கும் இதுக்கும் நடக்கிற ஃபைட் தாம்லெ படம்.


உரிச்சா....:

ஏலெ, இது மாதிரி யதார்த்தமா, உக்கிரமா ஒரு படம் பார்த்து எத்தனை நாளாச்சு..அதுவும் முத பாதி பாத்தீகன்னா, சர்ச்ச்ல காளியாத்தா சாமீ வந்த வந்தமாதிரி அப்படி ஒரு ஆக்ரோசம்..இடைவேளை விடற வரைக்கும் ராதா மவளோட லிப்-கிஸ்ஸே ஞாபகம் வரலைன்னா பார்த்துக்கோங்களேன்!

அரவிந்தசாமி ஃபாதரா ஊருக்கு வரும்போது, சர்ச் கிடக்கிற கெதியும், அந்த சனங்க பேசுற பேச்சும் நம்மளை அப்படியே படத்துக்குள்ள இழுத்துறுதுய்யா..என்ன இருந்தாலும் நம்ம பயலுவல்லா..சாமீன்னா பயந்து நடுங்காம, தோள்ல கைபோட்டுல்லா பேசுறாங்க..(இயேசுவையும் சர்ச்சையும் பத்தி ஆரம்பத்துல அந்த சனங்க நக்கலா பேசுறதுக்கு யாரும் பஞ்சாயத்தைக் கூட்டாம இருக்கணும். ஆனா ஒட்டுமொத்தமா ’அன்னை வேளாங்கண்ணி’ படம் தராத பக்தியெல்ல சொல்லுது!)

அந்த ஊருல ஏறக்குறைய அனாதையா சுத்துற பய மேல ஃபாதர் கருணை காட்டுறதும், அன்பாலயே அந்த பயல மாத்தறதும் கவிதை.கவிதை. (ஏ, உங்களுக்கு தனியா வேறெ சொல்லணுமாக்கும், அந்தப் பயதாம்லெ கார்த்திக்கு மவன் கௌதமு!).

அப்புறம் வாராரு அர்ஜூனு..வந்து அவரு பண்ற ஒரு காரியம் இருக்கே..ஏ, அதை வெளில சொல்றது தப்புல்லா..நமக்கே பக்குன்னுல்லா ஆயிடுச்சு..படத்துல ஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்குய்யா.அதெல்லாம் சொல்றது நியாயமில்லைல்ல..அரவிந்தசாமி திருத்துன பயலை, அர்ஜூனு திரும்ப ரவுடியா ஆக்க பாக்குதாரு..இன்னொரு பக்கம் ராதா மவளோட வெள்ளந்தியான அன்பு அந்த பையனுக்கு கிடைக்கு..அப்புறமென்ன, ஃபாதர்-மொதலாளி-ஹீரோயின்னு மூணுபேர்ல யாரு அதிக தாக்கத்தை ஹீரோ மேல உண்டாக்குதாங்கன்னு கதை பிச்சுக்கிட்டுப் போகுது.

ஆன ஒன்னுய்யா, இந்த மணிரத்னம் ரொம்ப நாளைக்கு அப்புறம் மனுசன் பாக்கும்படியா ஒரு படம் எடுத்துருக்காரு..வழக்கமா அவரு, இந்திக்கும் தமிழுக்கும் பொருந்தற மாதிரி ஒரு ‘ஜந்து’வைல்லா ரெடி பண்ணுவாரு..இது அப்படி இல்லை, படம்யா..படம்...கலக்கிப்புட்டாரு!


அரவிந்தசாமி :
இவரு சினிமாவே வேணாம்னு போனவருல்ல..ஏந்திடீர்னு வந்திருக்காருன்னு எனக்கு அப்பவே டவுட்ல..படத்தைப் பாக்கவுமில்ல தெரியுது..ஃபாதர்னா ஃபாதர்..அப்படி ஒரு தங்கமான ஃபாதர். ஆத்தீ, இப்படியாப்பட்ட நல்ல மனுசனையா நானா யோசிச்சேன் ல அப்படி எழுதுனோம்..சாமி..சாமி-ன்னு கன்னத்துல போட்டுக்கிட்டேம்லெ..அப்படி ஒரு நடிப்பு. இப்படி ஒரு கேரக்டெரு கொடுத்தா, எவம்தான் நடிக்க மாட்டேன்னு சொல்லுவாம்?. ஏ, இப்பச் சொல்லுதேம்ல..படத்துக்கு ஹீரோவே இந்த ’ஃபாதர் சாம்’ தாம்லெ!

கருணையின் வடிவமா காட்டுறதுக்கு இவரை விடச் சரியான ஆளு வேறெ யாரு இருக்கா? மணிரத்னம் லேசுப்பட்ட ஆளு இல்லவே!..எப்பிடி பிடிச்சாந்திருக்கார்
 பாத்தீகளா?

அர்ஜூன் :

நல்ல நடிப்பு தாம்லெ..ஆனாலும் இந்தாளு இப்படி ஒரு வில்லத்தனமா கேரக்டருக்கு எப்படி ஒத்துக்கிட்டாருன்னு தெரியலை..அப்படி ஒன்னும் வயசாகிடலையே..ரசினிக்கு சின்னப்பையன் தானெலெ?..ஆனாலும் அந்தாளு தைரியத்தைப் பாராட்டணும்..மனுசன் கொன்னுட்டாரு!

கௌதம் :
இந்தப் பையன் சிம்பு மாதிரி கெக்கெபிக்கேன்னு இருக்காரே..தேறுவாரான்னு நமக்கு டவுட்டாத் தாம்லெ இருந்துச்சு..ஆனாலும் அந்த சின்ன கொள்ளிக்கண்ணை வச்சுக்கிட்டே, பல எக்ஸ்பிரசனல்ல கொடுக்காரு..கண்ணீரே வத்திப்போன ஒரு சீவனாவும், அந்த பிரசவ சீனுல புதுசாப் பிறந்து அழுற மனுசனாவும்..அட, அட! மீனவப் பையன் வேசத்துக்கு ஓகே தாம்லெ..இதே மாதிரி நல்ல படமா நடிச்சா பையன் பொழச்சுக்கிடுவாரு!..ஒரு நடிகனா கார்த்திக்கு பேரை காப்பாத்திட்டாரு!


துளசி :


கொஞ்சம் மூளை வளர்ச்சி நின்னுபோன அல்லது மூளை உறைஞ்சு போன அல்லது லப்பாதிக்காஜக்கோமக்கா-ன்னு என்னமோ ஒரு பிரச்சினை உள்ள பிள்ளையா நடிச்சிருக்கு. ஏ, அதுக்காக கவலைப்பட வேணாம்..நமக்கு கிளிவேஜ் சீன் இருக்கு, கேட்டியளா? ஆனா ஒன்னு, இந்தப் புள்ளை நல்லா நடிக்குது..அக்காக்கு மேலெ,,அம்மாக்கு கீழன்னு வச்சிக்கோங்களேன்..மொத்தத்துல மொத படத்துல ராதா எப்படி இருந்துச்சோ, அப்படியே இருக்கு. இன்னும் ரெண்டு, மூணு படம் பண்ணாத்தான் தெரியும், தேறுதான்னு.
ஏ, நாம என்ன பெருசா கேட்கிறோம்? ஒரு ராதா மாதிரி பாக்குறதுக்கு அழகாவும் இருக்கிற, நடிக்கவும் தெரிஞ்ச நடிகை வேணும்னு ஆசைப்படறது தப்பா? ஏசைய்யா கண்ணைத் திறக்க மாட்டேங்கிறாரே? வேற வழியில்லை, பேசாம ராதாவையே டயட் இருக்கச் சொல்ல வேண்டியதாம் போல!

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- இந்த கதைக்கு தேவையே இல்லாத சில காதல் காட்சிகள் + டூயட்கள்..ஆனாலும் சினிமால்ல..என்ன செய்ய!

- கதாநாயகிக்கு என்ன நோய்(?)ன்னு என்னை மாதிரி ஆளுங்களுக்கும் புரியறமாதிரி சொல்லாம விட்டது.(சொல்லுதாங்கலெ,புரியலைல்ல.)

- ஏ, முடிச்சுப் போடறது ஒரு சுகம்னா முடிச்ச அவுக்கிறது தனி சுகம்னு ஏதோ மலையாள பிட்டு படத்துல சொல்லுவாகல்ல..அது சரி தாம்லெ..படத்துல நிதானமா, வலுவா முடிச்சு போட்டளவுக்கு, நிதானமா புடிச்ச அவுக்கலை பாத்துக்கோ..படத்தை முடிக்கணுமேன்னு, சினிமாத்தனமா ஒரு கிளைமாக்ஸ் ஃபைட் வச்சு, டபக்குன்னு முடிச்சை அவுத்துட்டாக. ஒரு நல்ல நாவலை படக்குன்னு முடிச்ச ஃபீலிங்யா.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- மணிரத்னத்தின் கச்சிதமான திரைக்கதை + இயக்கம்

- ராஜீவ் மேனனின் கேமரா..சும்மாவே மணி படத்துல கலக்குவாங்க..இதுல கடல் வேறெ..கேக்கணுமா? கொள்ளை அழகுல்லா..குறிப்பாக கிளைமேக்ஸ் சீன்..படத்துல ஹீரோயின்னா, அது கடல் தாம்லெ!

- ஏ.ஆர்,ரஹ்மான் இசைன்னா சொல்லவா வேணும்? பாட்டுகளும் பெக்கிரவுண்டு மூசிக்கும் பட்டயக்கிளப்புது. (அந்த டைட்டில் மியூசிக் மட்டும், அந்த சீன்களோட ஒட்டலை!)

- ஜெயமோகனின் கதை-வசனம்-திரைக்கதை : ’கதை வறட்சி, அதனால தான் இங்கிலிபீசு படத்தை சுடுதோம்’ன்னு சொல்றவங்க, கண்டிப்பா இந்தப் படத்தைப் பார்க்கணும். இலக்கியவாதிகளை எப்படி யூஸ் பண்றதுன்னும் மணிரத்னம்கிட்ட கத்துக்கணும். படத்தின் பெரும்பலமே இயல்பான வசனங்கள் தான்..’ஏலெ, மக்கா, நாற முண்டை’ என அப்படியே தெக்குப்பக்கம் போய் வந்த உணர்வைத்தரும் வார்த்தைப் பிரயோகம்..’தப்பு செய்றது நடக்கர மாதிரி, மனுசன்னு தானா வந்திடும்.’ என்பது போன்ற நறுக்கு தெறிச்ச மாதிரி வசனங்கள்.

மணியோ ஒத்தைவரி ஆளு..இவரோ எழுதித் தள்ளுற ஆளு..ரெண்டும் சேர்ந்து என்ன செய்துகளோன்னு ஒரு பயம் இருந்துச்சு. நம்ம தெக்கத்தி ஆளுக ஒத்தை வார்த்தைல பேசுனா நலலவா இருக்கும்..பரவாயில்லைய்யா, மணி நல்லா சுதந்திரம் கொடுத்திருக்காரு. இவரும் அடிச்சு விளையாடி இருக்காரு. (ஆதியில கோவில்பட்டித் தமிழா இருந்த என் தமிழ், அப்புறம் மெட்ராஸ் பாஷை மிக்ஸ் ஆகி, கூடவே கோயம்புத்தூர் ஸ்லாங்கும் கலந்து, இப்போ ஏதோ ஒரு தமிழ் பேசிக்கிட்டு திரியறேன். எனக்கே இந்தப் படம் பார்க்கவும் ஏலெ, மக்கான்னு தான் வருது பார்த்துக்கோங்க!)

அப்புறம்...:

எத்தனை நாளாச்சு இப்படி ஒரு மணிரத்னம் படம் பார்த்து? அந்த மனுசனை எல்லாரும் தலையில வச்சு ஆடுறதுலயும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்யுது.

மணி படம்னா சர்ச்சை இல்லாமலா?..ஆரம்ப காட்சிகளை மட்டும் பார்க்கிற மீனவ அமைப்புகளோ,சர்ச்களோ பஞ்சாயத்து கூட்ட வாய்ப்பு இருக்கு.அப்புறம் நம்ம இணைய புர்ச்சியாளர்கள் படத்தை நுணுக்கமா ஆராய்ச்சி, இதுவும் பார்ப்பனீய படமேன்னு சொல்லத்தான் போறாங்க.சரி, நமக்கும் பொழுதுபோகணுமில்லை..


பார்க்கலாமா? :
-  ஒரு கிறிஸ்தவ கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த உணர்வைத் தருவதாலும், அன்பையே போதிக்கும் கிறிஸ்தவத்தை முன்னிறுத்துவதாலும், அதன் பிரதிநிதிகளான ஃபாதர்கள்/ஸிஸ்டர்களின் தியாகத்தை, அதற்காக அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக நமக்கு உணர்த்துவதாலும்,அன்பு-அஹிம்சை-அறம் பற்றிய அடிப்படைக் கேள்விகளை நமக்குள் எழுப்புவதாலும்........

                     கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

மேலும் வாசிக்க... "கடல் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

40 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.