Monday, December 24, 2012

கேளுங்கள் தரப்படும் (கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்)

இந்திய ஞான மரபில் உள்ள ஞானிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், என் மனதுக்கு நெருக்கமானவராக நான் எப்போதும் உணர்வது  இயேசுநாதரைத் தான்.இந்திய ஞான நூல்களைப் படிக்கும் ஒருவருக்கு அடிப்படை ஆன்மீக அறிவு அவசியமாய் உள்ளது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அவை ஆன்மீகத் தேடல் கொண்டோருக்காக எழுதப்பட்டவை. 

பின்னர் புராணங்கள் அவற்றை எளிமைப்படுத்தினாலும், புராணங்களின் மறைபொருளை சரியானபடி உணர, ஆன்மீக அறிவு தேவையாகவே உள்ளது. அவ்வாறு அடிப்படைப் பயிற்சிகள் இல்லாமல், கீதையைவோ தம்மத்தையோ படிக்கும் ஒருவர் தவறான புரிதலுக்குச் செல்லும் வாய்ப்புகளும் அதிகம். (கீதை ஒரு கொலைநூல் என்று கண்டுபிடித்த புத்திசாலி சைண்டிஸ்ட்களை நினைவுகூறுங்கள்!)

ஆனால் வாழ்க்கையில் அடிபடாத சிறு வயதிலேயே இயேசுநாதரின் வார்த்தைகள் என்னை வசீகரித்திருக்கின்றன. அதற்குக் காரணமாக பின்னர் நான் புரிந்துகொண்டது, அவற்றின் எளிமை தான்.என் வாழ்வில் நான் முதன்முதலாகக் கேட்ட, இயேசுவின் வாக்கியம் ‘கேளுங்கள் தரப்படும்..தட்டுங்கள் திறக்கப்படும்..தேடுங்கள் கிடைக்கும்’ என்பது தான். புகழ்பெற்ற அந்த கிறிஸ்தவப்பாடல், இப்போதும் என் மனதை உருக்குவது, என் வாழ்வின் பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் வழித்துணையாய் வருவது.


கல்லூரி முடிந்து, உண்மையான உலகை நான் எதிர்கொண்ட காலம் தான், என் வாழ்வின் மோசமான காலகட்டம். சரியான வேலையும் அமையாமல், நண்பர்களுடன் தொடர்பும் இல்லாமல், குடும்பத்தின் அரவணைப்பும் இல்லாமல் தனித்துத் திரிந்த நாட்கள் அவை.அந்த நேரத்தில் ஆன்மீகப் புத்தகங்களை என்னை வாழ வைத்தன. அதன்பின், சில வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ஒன்றே ஒன்று தான்:

‘நாம் ஒரு விஷயத்திற்கு ஆசைப்படுகிறோம் என்றால் அதற்கு நம்மை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு தகுதிப்படுத்திக்கொண்டபின் இறைவனிடம் வேண்டினால் கேட்பது தரப்படும். பன்றிகளுக்கு முன் முத்தை யாரும் வீச மாட்டார்கள். நாம் நம்மை தகுதிப்படுத்திக்கொள்ளாதவரை எதுவும் நம்மை வந்தடையாது;வந்தாலும் நம்மிடம் நிலைக்காது.’

எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொறியியல் வாழ்க்கையிலும் பல சிக்கலான தருணங்கள் வருவதுண்டு.சில முக்கியமான பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் திணறும்போதோ அல்லது முடிவெடுக்க முடியாமல் தவிக்கும்போதோ எனக்கு கை கொடுப்பது இயேசுவின் அந்த வார்த்தைகள் தான்...’கேளுங்கள் தரப்படும்..தட்டுங்கள் திறக்கப்படும்..தேடுங்கள் கிடைக்கும்’. இந்த வார்த்தைகளை மனதிற்குள் சொல்லிக்கொள்ளும்போது, தன்னம்பிக்கை பிறக்கும். இறைவன் நம்மைக் கைவிட மாட்டான் என்று தோன்றும். அது உண்மையாகவும் ஆகும்.


பைபிளில் எனக்குப் பிடித்த பகுதி என்றால் மலைப்பிரசங்கம் தான். தன் வாழ்வின் செய்தியனைத்தையும் அந்த சொற்பொழிவிலேயே இயேசுநாதர் சொல்லிவிட்டதாகவே எனக்குத் தோன்றும். ‘’கேளுங்கள் தரப்படும்’-க்கு அடுத்த படியாக எனக்குப் பிடித்த வாக்கியம் ‘நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியாதிருக்கட்டும்.’ என்பது தான். இந்த உலகிற்கு வரும்போது ஆடைகூட இல்லாமல் தான் வந்தோம். இப்போது இங்கே நாம் பெற்றிருப்பது அனைத்தும், இந்த உலகிடமிருந்து பெற்றுக்கொண்டவையே. அப்படி இருக்கும்போது, பிறருக்கு உதவுவதை பெரிய விஷயமாகப் பேசுவது நகைப்புக்குரியது அல்லவா? மண்டை காய வைக்கும் ஆன்மீக விளக்கங்கள் ஏதுமின்றி, இயேசுநாதர் நேரடியாகவே சொல்கிறார் :தர்மத்தை மறைவாய் செய்யுங்கள். மறைபொருளை இறைவன் அறிவான்.


மலைப் பிரசங்கத்தின் வார்த்தைகள் அனைத்துமே எளிமையானவை, உண்மையானவை. நாம் இறைவனிடம் பலவாறு வேண்டிக்கொள்கிறோம். தினமும் வேண்டினாலும், வேண்டியது கிடைத்தாலும் நம் கோரிக்கைகள் தீர்வதேயில்லை. இறைவன் நம்மை நல்லபடியாக கவனித்துக்கொள்வானா என்ற கவலை, ஆன்மீகவாதிகளுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அத்தகைய நம்பிக்கை குறைந்தோர்க்கு, இயேசுநாதர் சொல்வது ஒன்று தான் : தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியென்றால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை, தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா?

மாபெரும் நம்பிக்கை தரும் விஷயத்தை எளிமையாகச் சொல்லிச் செல்லும் இயேசுநாதரின் மலைப்பிரசங்கத்தின் உச்சமாக நான் நினைக்கும் வரிகள் இவை தான்: பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம், நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்.

இந்த உலகம் மேன்மை பெற, இதை விடவும் நாம் வேறெதும் செய்ய வேண்டாம். நம் பொருளை பிறர் திருடக்கூடாது என்று நினைக்கிறோம்; நாமும் அப்படியே நினைப்போமாக! நம்மை யாரும் இழிவாக நடத்தக்கூடாது என்று நினைக்கின்றோம், நாமும் அப்படியே இருப்போமாக!

இந்த உலகிற்கு அன்பைப் போதித்த இயேசுமகான் அவதரித்த நன்னாளில், மலைப்பிரசங்கத்தை ஒரு முறையேனும் படிப்போம்.அந்த மாபெரும் ஞானியின் வார்த்தைகளை வாழ்வில் கடைப்பிடித்து, கடைத்தேறுவோம்.


நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

  1. இந்தப் பதிவில் என்னையே நான் உணர்கிறேன் மக்கா, மெய்சிலிர்த்தேன்...

    நானும் இந்த வாக்கியங்களையும் பாடல்களையும் கேட்டு திடன் கொண்டது உண்டு...!

    ReplyDelete
  2. ஆம், கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான், தட்டுகிரவனுக்குதான் திறக்கப்படுகிறது, தேடுகிறவன் எவனோ அவனே கண்டடைகிறான்....!

    ReplyDelete
  3. //MANO நாஞ்சில் மனோ said...
    இந்தப் பதிவில் என்னையே நான் உணர்கிறேன் மக்கா, மெய்சிலிர்த்தேன்...

    நானும் இந்த வாக்கியங்களையும் பாடல்களையும் கேட்டு திடன் கொண்டது உண்டு...!

    //

    நன்றிண்ணே..அன்பைப் போதிக்க வந்த மகானின் பிறந்த நாளை சிறப்பாகக் கொன்டாடுவோம்.

    ReplyDelete
  4. வணக்கம்,செங்கோவி!இயேசுபிரான் அவதரித்த நன்னாளில்,சிறந்ததோர் பகிர்வைக் கொடுத்திருக்கிறீர்கள்.'தட்டுங்கள் திறக்கப்படும்',எவ்வளவு சத்தியமான வார்த்தை!அனைவருக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  5. @Yoga.S.

    வணக்கம் ஐயா..பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  6. இதிலிருந்து சில நல்ல விஷயங்களை நான் எடுத்துகிட்டேன். ஆனா ஒன்னு செங்கோவி, நமக்கு எது பெஸ்டுன்னு நம்மை விட ஆண்டவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவன் கொடுப்பதையே மகிழ்ச்சியா ஏத்துக்கிறதே நல்லது.......

    Oh Lord!! Give me what you feel would be best for me!!

    ReplyDelete
  7. அருமையான பாடலும் மிகவும் சொற் சுவைமிக்கதும் மலைப்பிரசங்கம் அருமையான பகிர்வு .இன்நாளில் எல்லோரும் பாலகன் பிறப்பை கொண்டாடுவோம்.இனிய நத்தார் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  8. அருமையான பகிர்வு செங்கோவி.

    ReplyDelete
  9. அருமையான பகிர்வு செங்கோவி.

    ReplyDelete
  10. பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம், நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்.

    ReplyDelete
  11. சரியான கருத்து

    ReplyDelete
  12. ஆம், கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான், தட்டுகிரவனுக்குதான் திறக்கப்படுகிறது, தேடுகிறவன் எவனோ அவனே கண்டடைகிறான்....

    ஆமாங்க உண்மையிலும் உண்மைதான்

    ReplyDelete
  13. இயேசுவை பொறுத்தவரை கடவுள் இல்லை, அவர் ஒரு இறைத்தூதர், அவரின் வார்த்தைகள் இறைவனிடம் இருந்து வந்தமையால் தான் மிகவும் சக்திவாய்ந்தாக இருக்கிறது, இந்தியாவில் பல இறைத்தூதர்களை கடவுளாக சித்தரிப்பதில் பின்னணி இதுதான், எப்படி இருந்தாலும் வேதத்தின் படி சிலைவணக்கத்தை விட்டு மீண்டு உண்மை இறையை அறிவோம்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.