Saturday, December 10, 2011

பிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) _ நிறைவுப் பகுதி


அன்பு நண்பர்களுக்கு,

வர்ணம், இடஒதுக்கீடு என்று நாம் பேசிக்கொண்டே போனாலும், ஜாதி/ஜாதிப்பற்று/ஜாதி வெறி பற்றிப் பேசாமல் இந்த விவாதத்தை முடிப்பது முறையாகாது. 

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என ஆரம்பித்து பல்வேறு விதங்களில் ’ஜாதியே இல்லை’ என்று சொல்லப்பட்டு வந்தாலும், ஜாதி என்பது இன்னும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஜாதியை ஒழிப்பது என்பதன் சாத்தியம் பற்றி இன்னும் சந்தேகம் கொள்ளவே வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம், பெரும்பாலான மக்கள் இன்னும் ஜாதியைக் கைவிடத் தயாராக இல்லை என்பதே.

ஜாதி ஏன் நம் மக்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்று யோசிக்கிறேன்...

ஜாதி என்பது சமூகத்தை மேல்கீழாக அடுக்கும் அவலமான ஒன்றாக இருக்கும் அதே நேரத்தில், அதே ஜாதி தான் நம் வம்சத்தின் நீட்சியாக இருக்கிறது. ஜாதியைத் தூக்கி எறிதல் என்பது நம் பாட்டனை-பூட்டனை-முன்னோரை தூக்கி எறிவதாய் ஆகிவிடுமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

சிவகங்கை தான் எங்கள் பூர்வீகம்..அந்த வானம் பார்த்த பூமியில் பிழைக்க வழியின்றி தெற்கு நோக்கி நகர்ந்தனர் என் முன்னோர். அவர்களின் அந்த முடிவும், அதன்பிறகான அவர்களின் உழைப்புமே இன்றைய என் நிலைக்கு அடிப்படை. என் தந்தையார் இருந்த ஒரு காட்டையும் விற்றே என்னைப் படிக்க வைத்தார். இவ்வாறு பலரின் தியாகங்களும், கடின உழைப்பும் சேர்ந்ததே என் வம்சம். அதுவே என் ஜாதியில் ஒரு அங்கம். ஜாதியைக் கைவிடு எனும்போது, இவர்களை என்ன செய்வது?

அதே நேரத்தில், படித்த நாகரீக மனிதனாக ஜாதிய ஏற்றத்தாழ்வால் ஏற்பட்ட/படுகின்ற அவலங்களை ஏற்றுக்கொள்வதும் நம்மால் இயலவில்லை. ஏறக்குறைய படித்து, கிராமச் சூழலில் இருந்து வெளியேறும் பலரும் சந்திக்கும் அறச்சிக்கல் இதுவே.
நீங்களும் இதையே வேறுவிதத்தில் உணர்ந்திருப்பீர்கள். பலரும் வெளியில் ஜாதியை ஒழிப்பதாகப் பேசிவிட்டு தனக்கோ தன் குழந்தைகளுக்கோ திருமணம் முடிக்கையில், கவனமாக தன் ஜாதியிலேயே மணம் முடிப்பதைப் பார்க்கிறோம்(நான் உட்பட). இளம்பருவத்தில் ஜாதியை ஒழிப்போம் என்று கோஷமிட்ட பலரும் வயதான காலத்தில் ஜாதிப்பற்றில் மூழ்குவதையும் நாம் பார்க்க்கிறோம்.

என் நண்பர் ஒருவர் தீவிரமான பகுத்தறிவுவாதி. ஆனால் சீமானைக் குறை சொல்லிப் பேசினால்/எழுதினால் மட்டும் டென்சன் ஆகிவிடுவார். ‘சீமானே மாற்றுசக்தி’ என்று தீவிரமாக நம்பினார்/நம்puகிறார். எனக்கு நீண்டநாள் கழித்தே சீமானின் ஜாதியும் நண்பரின் ஜாதியும் ஒன்று என்று தெரிந்தது. இதேபோன்று பிரபலங்களைத் தாங்கிப்பிடிக்கும் ஆட்களில் பெரும்பாலானோரின் ஜாதி, அந்தப் பிரபலங்களின் ஜாதியாகவே இருப்பதைக் காணலாம். ஏதேனும் ஒரு வடிவில் ஜாதியுணர்வு, நம் மக்கள் மறைத்தாலும் வெளிப்பட்டுவிடுகிறது.

ஜாதி என்ற கத்தியின் கைப்பிடியாக வம்ச நீட்சியும், கூர்முனையாக ஏற்றத்தாழ்வும் இருக்கிறது.எனவே ஜாதியை ஒழிப்பது என்பது சிக்கலான ஒன்றாகவே இன்னும் இருக்கிறது. ‘இந்த ஜாதிமுறை இப்படியே நீடிப்பது சரிதானா?’ என்ற நியாயமான கேள்வியும் நம்மை உலுக்குகின்றது.(இதைப்பற்றி ஜெயமோகனும் ஒரு பதிவு எழுதியிருந்தார்..படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..)

இப்போது ஜாதிய அடையாளங்களை வெளியே காண்பிப்பதில், சொல்வதில்  நாம் தயங்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. முன்பெல்லாம் நேரடியாக ‘நீ என்ன ஜாதி’ என்று கேட்பார்கள். இப்போது கேட்பதில்லை அல்லது சுற்றி வளைத்துக் கேட்கின்றனர். பெரியாரால் விளைந்த நன்மைகளுள் ஒன்றாக இதனைக் கொள்ளலாம். 

சமூக ஜாதிய அடுக்கில் நடுவில் உள்ளவன் என்ற முறையில் இருபக்கத்தையும் நான் உணர்ந்தே இருக்கின்றேன். பிராமணர்களின் ஜாதி வெறி எங்கள் மேல் காட்டப்பட்டதையும் அனுபவித்துள்ளேன். என் சுய ஜாதியினர் தன் ஜாதிவெறியை தாழ்த்தப்பட்டோர் மேல் காட்டுவதையும் கண்டுள்ளேன். அதுவே இந்த ஜாதி முறைகள் பற்றிய மறுபரிசீலனையை நாம் செய்வது அவசியம் என்று எண்ண வைத்தது.நம்மை ஒருவன் தன் ஜாதியைக் காரணமாகக் காட்டி அவமானப்படுத்தும்போது ஏற்படும் அவமானமும் கோபமுமே, நாம் பிறரிடம் நம் ஜாதியைப் பற்றிக் காட்டும்போது ஏற்படும் என்ற ‘அறிவு’, நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.

நிலப்புரபுத்துவக் காலகட்டத்தில் சரியாக இருந்த பல விஷயங்கள், இந்த நவீன ஜனநாயகக் காலகட்டத்தில் தவறானதாக ஆகிவிட்டதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் செய்தது சரி தான் என்றால் ‘ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை’ என்று ஒளவையார் தான் பாட வேண்டிய அவசியம் என்ன? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி அக்ரகாரத்தை விட்டே துரத்தப்பட்டது ஏன்? நம் முன்னோர்கள் செய்தது சரி தான் என்று இன்னும் பிடிவாதமாகச் சாதிப்பது, நம்மிடையே எவ்வித நல்லுறவையும் ஏற்படுத்தாது. நம் முன்னோர் அவர்கள் காலகட்டத்தில் கூறப்பட்ட சமூக ஒழுங்கின்படி, சில விஷயங்களைக் கடைப்பிடித்தனர். அதனை இனியும் தொடர்வது இக்காலகட்டத்திற்கு ஒவ்வாத ஒன்று என்பதை நாம் முதலில் மனதார ஒத்துக்கொள்ள வேண்டும்.

இன்று கல்வியும் பணமுமே ஒருவரது வாழ்நிலையை தீர்மானிக்கிறது. இனியும் ஜாதிய ஏற்றத்தாழ்வை நாம் தொடர முடியாது, தொடரவும் கூடாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஜாதிகளுக்கிடையிலான உறவு என்பது சர்ச்சைகளற்ற இயல்பான ஒன்றாக ஆக முடியும்.பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் தங்களுக்கிடையே உறவை/நட்பைப் பேணுவதில் பெரிய சிக்கல் இல்லை. அதே எண்ணத்துடன் பிற பிரிவுகளில் உள்ள ஜாதிகளுடனும் பழகுவது அவசியம் ஆகிறது.அதற்குத் தடையாக இருப்பது நம் ஜாதியினர்/முன்னோர் செய்ததெல்லாம் சரி தான் என்று நாம் நம்புவதும், அதே முறையை தொடர விரும்புவதுமே.

பிற ஜாதிகளுடனான உறவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் வாசந்தி எழுதிய ஒரு கதை ஞாபகத்திற்கு வரும்..

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகன், ஆதிக்க ஜாதி பண்ணையாரை அவர் வீட்டில் சந்திப்பான். அவர் ‘உட்காருங்க தம்பி..நான் ஜாதியெல்லாம் பார்ப்பதில்லை’ என்று உபசரிப்பார். பிறகு கிளம்பி வெளியே வரும்போது, அங்கே கிணற்றடியில் இருக்கும் பாத்திரத்தை கதாநயாகன் ’பண்ணையார் அனுமதியின்றி’ தொட்டுவிடுவான். ‘யாரைக் கேட்டடா தொட்டாய்?’ என்று பண்ணையார் அடிக்கப் பாய்ந்துவிடுவார்.

அதாவது, சம உரிமை என்பது நாங்களாக மனமிரங்கிப் போடும் பிச்சை என்ற ஆதிக்க சாதி மனோபாவத்தை தெளிவாகக் காட்டிய கதை அது. (கதைப் பெயரோ, முழுக்கதையோ ஞாபகம் இல்லை..சாரி). முற்போக்கு வாதிகளாக காட்டிக்கொள்ளும் ஆதிக்க சாதியினர் செய்வதும் ஏறக்குறைய இதையே..’நான்லாம் ஜாதி பார்க்கறதில்லைப்பா..தயங்காம என் வீட்டுக்கு வா..கூச்சப்படாம உட்கார்ந்து சாப்பிடு’ என்பது போன்ற பேச்சுகள், மனதில் இன்னும் படிந்திருக்கும் ஜாதிய அழுக்கை காட்டுபவையே.

எனவே நாம் இத்தைய போலி முற்போக்கு வாதியாக ஆகிவிடாமல் தவிர்ப்பது அவசியம். அதற்கான உண்மையான வழி ‘நாம் ஒரு ஜாதியில் பிறந்தாலேயே உயர்ந்தவர் ஆகிவிட மாட்டோம். அது நம் நடத்தையால், எண்ணத்தால் வருவது. உள்ளே நாம் யாரோ அதுவே நம் ஜாதி’ என்று உளமார நாம் உணர்வதே ஆகும். உங்களுடன் இத்தனை நாள் விவாதித்ததில் நாம் அத்தகைய எண்ணவோட்டத்தில் தான் இருக்கிறோம் என்று உணர்ந்துகொண்டேன். அது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

ஜாதியை தற்போதைய சூழலில் ஒழிக்க முடியாவிட்டாலும் (ஏன் ஒழிக்கவேண்டும் என்று இன்னும் நமக்கு முழுதாக புரியாவிட்டாலும்), ஜாதிய ஏற்றத்தாழ்வை நம் மனதில் இருந்து அகற்றுவது அவசியம் ஆகிறது. ஏறக்குறைய 17 வருடங்களாக என் பிறந்த மண்ணை விட்டு வெளியே நான் இருக்கின்றேன். இங்கே ஜாதிய அடையாளம் தேவைப்படவேயில்லை. இத்தனை வருடங்களில் என் ஜாதி என்ன என்பதை நான் வெளிப்படுத்திக்கொண்டதும் இல்லை. இவ்வளவு விவாதித்தும் நீங்களும் என் ஜாதி என்ன என்று கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை. இதுவே ஜாதியின், ஜாதிய அடையாளத்தின் தேவை சமூகத்தில் தீர்ந்துகொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

தற்போதைய நிலையில் நான் கோவில்பட்டிக்காரன் என்பதை என்ன உணர்வோடு நான் நினைக்கின்றோனே அதே உணர்வோடே ’ நான் *** ஜாதிக்காரன்’ என்றும் நினைக்கின்றேன். கோவில்பட்டியிலும், அந்த ஜாதியிலும் பிறந்தது இயல்பாக நடந்துவிட்ட ஒன்று. கோவில்பட்டிக்காரன் மட்டுமே புத்திசாலி-நல்லவன்-உயர்ந்தவன் என்று நினைப்பது எவ்வளவு அறியாமையோ, அதேயளவு அறியாமை ‘இந்த ஜாதி மட்டுமே உயர்ந்தது’ என்று நம்புவதும்.

இந்த விவாதத்தில் இருக்கும் நாம், சமூகத்தை தலைகீழாகப் புரட்டிப்போட முயலும் புரட்சியாளர்கள் அல்ல..சாமானியர்களே என்பதாலேயே வெளிப்படையாக இவற்றைப் பேசுகின்றேன்..நம் மனசாட்சிக்கு உட்பட்டு, நியாய-தர்மத்துடன் கூடிய வாழ்வை வாழ்வதற்கான முயற்சியில் இருக்கும் மனிதர்கள் தானே நாம்..அத்தகைய நியாய வாழ்விற்கு ஒத்துவரும்வரையே ஜாதிக்கு நம் வாழ்வில் இடம் உண்டு.

நீங்கள் தொடர்ந்து இந்த விவாதத்தைப் பொதுவில் வைக்கச் சொல்கிறீர்கள்..நாம் பேசுகின்ற பாஷை எந்த அளவிற்கு படிப்போர்க்குப் புரியும் என்று தெரியவில்லை..’ஜாதிக்கான இடம் நம் வாழ்வில் என்ன? அது சார்ந்த விஷயங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன?’ என்று மதநம்பிக்கையுள்ள - ஜாதி வட்டத்திற்குள்ளும் உள்ள சாரசரி மனிதர்கள் பேசிக்கொண்டதன் தொகுப்பு என்று இதைச் சொல்லலாமா? இதைப் பொதுவில் வைப்பதன்மூலம், இதேபோன்ற வசைகளற்ற விவாதம் படிப்போரிடையே நடைபெறும் என்று நம்புகிறீர்களா என்ன..!

’என் முன்னோர்கள் செய்தது அனைத்தும் சரி தான்’ என்று பேசுவதோ, ’உன் முன்னோர் கெட்டவர்கள்..அதனால் நீயும் கெட்டவனாகத்தான் இருப்பாய்’ என்று நம்புவதோ இருசமூகங்களுக்கிடையில் நல்ல உறவை ஒருபோதும் ஏற்படுத்திவிடாது.

முடிவாக நாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம், நம் முன்னோர்கள் நவீன ஜனநாயகத்தை புரிந்துகொள்ளாமல் பழைய நினைவுகளுடன் பல தவறுகளைச் செய்தார்கள் என்பதையே. அடுத்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அந்தப் பழைய தவறுகளையும் அதனால் விளைந்த வெறுப்பையும் இனியும் நாம் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிடக்கூடாது.

அதுவே நாம் அனைவரும் இதைப் படிப்போர்க்குச் சொல்லும் செய்தியாக இருக்கட்டும்.

அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
செங்கோவி

மேலும் வாசிக்க... "பிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) _ நிறைவுப் பகுதி"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, December 7, 2011

பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்...


பத்திரிக்கைகளில் எட்டாம் பக்கச் செய்தியாக ’பிரசாந்த் திருமணம் செல்லாது - கோர்ட் அறிவிப்பு’ சென்ற வாரம் வெளியானது. பல வருடப் போராட்டம், அவமானத்திற்குப் பின் ஒருவழியாக பிரசாந்த் நல்ல தீர்ப்பைப் பெற்றிருக்கிறார். 2005ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அனைத்துத் தரப்பினரின் வாழ்த்துகளுடன் நடந்த பிரசாந்த்-கிரகலட்சுமி திருமணம், இப்படி ஒரு கொடுமையான முடிவைச் சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

திருமணம் முடிந்து ஹனிமூன் எங்கு போவது என்பதிலேயே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூர் தான் போக வேண்டும் என்று அடம்பிடித்த கிரகலட்சுமி, அங்கு சென்ற பின் போனில் யாருடனோ மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்க, பிரசாந்த் அதைக் கண்டித்ததில் ஆரம்பித்தது பிரச்சினை. பிரபல நடிகர்-காதல் இளவரசன் என்ற இமேஜ் அப்போது பிரசாந்திற்கு இருந்ததால், பிரச்சினையை வெளியே வாய் விட்டுச் சொல்ல முடியாத நிலைமை.

தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் சந்தேகம் அளிப்பதாய் இருக்கவே, பிரசாந்த் அவரைக் கண்டிக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. அதற்கான பிரதிபலனாய் ‘வரதட்சணைக் கொடுமை’ என பிரசாந்த் மேல் மட்டுமல்லாமல் அவரது தாய், தங்கை, தந்தை ஆகியோர் மேலும் புகார் கொடுத்தார் கிரகலட்சுமி. நிம்மதியாய் நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல், வழக்குக்காக அலைய வேண்டியதானது. அப்போது பத்திரிக்கைகளும் கண்டபடி எழுதித் தள்ளின. அதைப் படித்த பலரும் ‘அப்பவும் நடிகர்-இவரும் நடிகர்..ஆனாலும் பணத்தாசையால் இப்படி வரதட்சணை கேட்டு கொடுமை செய்திருக்கிறார்களே’ என்றே நினைத்தனர்.கொடுமையான ஆணாதிக்கவாதியாக பிரசாந்தும் தியாகராஜனும் சித்தரிக்கப்பட்டனர்.

அதன்பிறகும் பிரசாந்த் தரப்பில் இருந்து சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை. அதன்பிறகு தீர விசாரித்தபிறகே ‘கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர்’ என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளியே வந்தது. ஏற்கனவே பதிவுத் திருமணம் செய்திருப்பதால், பிரசாந்துடன் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனாலும் கிரகலட்சுமி உயர்நீதி மன்றம் முதல் சுப்ரீம்கோர்ட் வரை இழுத்தடித்ததில் இப்போது தான் கோர்ட்டே மனமிரங்கி பிரசாந்த்தை அந்தப் பெண்ணிடம் இருந்து விடுதலை செய்துள்ளது.

பிரசாந்த்தின் (முன்னாள்) மனைவி(?) யின் துணிச்சல் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு மாநில முதல்வரின் தலைமையில் நடக்கும் திருமணத்தில், தைரியமாக ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தும், அதை மறைத்து மணமேடையில் உட்கார்ந்தார் என்றால்.........உண்மையிலேயே தைரியலட்சுமி தான்.

செய்யாத தவறுக்காக கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக கோர்ட் கேஸ் என்று அலைந்த பிரசாந்த்தை, மேலும் புண்படுத்தும்விதமாக மீடியாக்களும் அவரைக் குற்றவாளி போல் விரட்டி விரட்டி போட்டொ/ வீடியோ எடுத்து அவமானப்படுத்தின. இப்போது அவர் நிரபராதி என்று கோர்ட் சொல்லிவிட்டாலும், இத்தனை நாள் பிரசாந்த்தின் குடும்பம் பட்ட அவமானத்திற்கும், அதனால் அவர்கள் அடைந்த வேதனைக்கும் என்ன பதில்? இத்தனை நாள் பெரும்பாலான மக்களும் அவரை தவறான மனிதராக நினைத்தற்குக் காரணம் தான் என்ன?

ஒரு பெண் அழுதுகொண்டே ஏதாவது கூறினால், அது உண்மையாகத்தான் இருக்கும் என்ற அறியாமை கலந்த அறிவுஜீவித்தனமே அதற்கான காரணம். பிரசாந்த் வழக்கு விசாரணை பற்றிய செய்திகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதற்குக் காரணம் என் சொந்த வாழ்வில் நான் பார்த்த ஒரு மனிதரின் கதை தான்...

என் சின்னம்மா இரு குழந்தைகளை தவிக்கவிட்டு, திடீரென இறந்தததால், சித்தப்பா பலரின் வற்புறுத்தலுக்குப் பின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள என்று ஒரு பெண்ணை மணந்துகொண்டார். அது பெண் அல்ல பேய் என்று மணந்த கொஞ்சநாளிலேயே தெரிந்து போனது. ‘நான் ஏன் இந்தச் சனியன்களைப் பார்க்க வேண்டும்?’ என்று அவர் குழந்தைகளைக் காட்டிக் கேட்க, அவர் கோபப்பட ரசாபாசம் ஆனது. இரண்டு வருடப் போராட்ட வாழ்க்கைக்குப் பின் அவர் அந்தப் பெண்ணை முறைப்படி கோர்ட்டில் விவாகரத்து செய்தார். அந்தப் பெண்ணும் மனமொத்து விவாகரத்தும், பணமும் வாங்கிக்கொண்டார்.

அதன்பிறகு தான் கொடுமை ஆரம்பித்தது. நினைத்தால் ஏதாவது போலீஸ் ஸ்டேசனுக்குப் போவார் அந்தப் பெண். ‘என் புருசனும் அவன் அம்மா-அக்காக்கள்-அய்யா எல்லாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தறாங்க’ என்று கம்ப்ளைண்ட் செய்வார். போலீஸும் உடபே வந்து மொத்தக்குடும்பத்தையும் ஸ்டேசனுக்குக் கொண்டுபோய் விடும். லேடி போலீஸ் ஸ்டேசன் என்றால் சித்தப்பாவிற்கும், அவர் குடும்பத்திற்கும் அடி உறுதி. 

.’வரதட்சனையா கேட்கிறீங்க..காசு வேணும்னா அக்கா-தங்கச்சிகளை வச்சு **** பண்ணுலே..” என்ற ரேஞ்சில் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பார்கள். பின்னாலேயே நாங்கள் யாராவது விவாகரத்துத் தீர்ப்பை எடுத்துக்கொண்டு ஓடுவோம்.

அதைப் பார்க்கக்கூட போலீசார் விரும்ப மாட்டார்கள். கெஞ்சிக்கூத்தாடி, அவர்களிடம் விவரம் சொன்னபின் ‘அப்படியா..ஏன்மா இப்படிக் கம்ப்ளைண்ட் பண்ணே?” என்றால் ‘கோர்ட் சொன்னாலும் அவர் தான் என் புருசன்’ என்பார் அந்தப் பெண்மணி. ‘அப்போ சேர்ந்து வாழறியா’ என்றால் ‘முடியாது’ என்பார். முடிவில் போலீசார் ‘மறை கழன்ற கேஸ்’ என்று நினைத்து அந்தப் பெண்ணை அனுப்பி வைத்து விடுவார்கள்.

ஒருமுறை இருக்கன்குடிக்கு குடும்பத்தோடு சாமி அவர் சாமி கும்பிடப் போக, பின்னாலேயே இந்தப் பெண்மணி போய் ‘என்னை என் புருசனும், அவர் குடும்பமும் அடித்துவிட்டார்கள்’ என்று கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டார். போலீசாரும் இவர்களைப் பிடித்து, அடித்து உள்ளே உட்கார வைத்துவிட்டார்கள். பிறகு கோவில்பட்டியில் இருந்து தீர்ப்பு நகலைக் கொண்டு சென்ற பிறகே, அவர்களை ரிலீஸ் செய்தார்கள்.

வெவ்வேறு போலீஸ் ஸ்டேசன்களில், வெவ்வேறு காரணம் சொல்லி கம்ப்ளைண்ட் கொடுப்பார். 

இது ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல..17 வருடங்களாக நடந்தது. அவரும் அந்தக் குடும்பமும் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. சித்தப்பா இறந்தபிறகே இந்தத் தொல்லை தீர்ந்தது.

’வரதட்சணைப் புகார்களில் 80% பொய்ப்புகார்கள் தான்’ என்பதை நம் சுப்ரீம் கோர்ட்டே ஒத்துக்கொண்டது. எனவே வரதட்சணைப் புகார் வந்தால், மணமகன் குடும்பத்தாரை கைது செய்யக்கூடாது என்று சமீபத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

வாசகர்களில் ஆரம்பித்து போலீசார் வரை பெண் என்றால் யோசிக்காமல் ‘இரங்குவதற்கு’ என்ன காரணம் என்று பார்த்தால்....

ஏழைங்க எல்லாம் நல்லவங்க..பணக்காரங்க எல்லாம் கெட்டவங்க.

கிராமத்து மக்கள் எல்லாரும் நல்லவங்க..பட்டணத்து ஆட்கள் எல்லாம் கெட்டவங்க..

- என்பது போன்ற கெட்டிப்பட்ட சிந்தனைகள் தான் காரணம் என்று தோன்றுகிறது. அத்தகைய முன்முடிவுகள் எத்தனை அபத்தமானவை என்று பலமுறை நம் கண் முன்னே நிரூபிக்கப்பட்டாலும், அத்தகைய சிந்தனைகளை நாம் மாற்றிக்கொள்வதே இல்லை.

பிரசாந்த் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு பொய்யானது என்று அவரது தங்கை பெயரையும் வழக்கில் சேர்த்தபோதே புரிந்துவிட்டது. அப்போது கோவையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

மேலே எழுதியிருக்கும் எல்லாவற்றையும் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிடம் சொன்னபோது, ‘இது பிற்போக்குச் சிந்தனை..பெண்கள் நல்லவர்கள்..ஆண்கள் அயோக்கியர்கள்..ஆ..ஊ’ என்று ஒரு பெண் குதித்தார். கூடவே சில பெண்ணியவாதிகளான ஆண்களும் குதித்தார்கள். புகாரால் பாதிக்கப்படும் மணமகன் வீட்டுப் பெண்கள் பற்றி, கொஞ்சமும் இவர்கள் கவலைப்படுவதே இல்லை..அந்த பெண்ணியவாத ரகசியமும் நமக்குப் புரிவதே இல்லை.

ஆதிக்கம் என்பது இனத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், பணத்தின் பெயரால் மட்டுமல்ல பால்(செக்ஸ்)-ன் பெயராலோ நடத்தப்படும்போதும், அதைத் தயங்காமல் கண்டிக்க வேண்டும் என்பதே நம் கொள்கை. ஏன் கண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கு மேலே சொன்ன உதாரணங்களே போதுமானவை.

மேலும் வாசிக்க... "பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

42 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, December 6, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_7

செங்கோவி,

//அரசும் அத்தகைய வசதி படித்தோரை விலக்க, வருமானச் சான்றிதழ் பெறும் முறையை ஏற்கனவே வைத்துள்ளது. //

நீங்கள் சொல்வது வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிலா?  பள்ளியிலோ / கல்லூரியிலோ இது நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை. 

//உங்கள் சமூகத்துப் பெரியவர்கள் / ஜாதிச் சங்கங்கள் மூலம் ‘இனிமேல் நம்மை விட பொருளாதாரத்தில் தாழ்ந்த பிராமணர் வந்தால், நாம் உடனே போட்டியில் இருந்து விலகி அவர்களுக்கு வழி விடுவோம்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதற்கு பெருவாரியான வசதி + படித்த பிராணக் குடும்பங்கள் என்ன எதிர்வினையாற்றும் என்று சொல்ல முடியுமா?//

இது எல்லா சமூகங்களிலுமே அவசியமாக ஏற்படவேண்டிய மாற்றம். இதெல்லாம் நடக்கும் என்று நம்புவோம்.  இந்த சிந்தனையைப்பரப்ப நம்மால் ஆன முயற்சிகளை செய்யலாம்.

இங்கே நீங்கள் எழுதிய அனைத்துமே மாற்றுக்கருத்து இல்லாமல் ஏற்கவேண்டியதே.  வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை விட்டுத்தள்ளுங்கள்.  அதை நான் எதிர்க்கவில்லை.  படிப்பு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை இல்லையா?  அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா?

ஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்?  ஒரு ஊரில் ஒரே ஒரு அரசு கல்லூரியும் மற்றும் நிறைய தனியார் கல்லூரிகளும் இருப்பது ஏன்?  எல்லாருமே வேலைக்குப்போக வேண்டும் என்ற நோக்கத்தில் படிப்பதில்லை.  

என்கூட படித்த நிறைய தோழிகள் படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாவது என்பதில் தெளிவாக இருந்தனர்.  வேலைக்குப்போக வேண்டும் என்ற குறிக்கோள் எல்லாரிடமும் இல்லை.  அப்படி இருக்க வேலைவாய்ப்பில் எல்லாருமே போட்டிக்கு வரப்போவதில்லை.  ஆனால் படிப்பு அப்படியா?  ஒவ்வொருவரும் ஒரு டிகிரியாவது முடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்தானே?  இப்போது அது அவசிய தேவையாகவும் ஆகிவிட்டதுதானே?

மேலும் எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு விஷயம் (இதை நான் வாதத்திற்காக எழுதவில்லை, உங்கள் கருத்தை அறியவே எழுதுகிறேன்), இப்படி தமிழ்நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட / சாத்தியப்படாத திறமையுள்ள அநேகம் பேர் (இதில் என் சமூகத்தை குறிப்பிடவில்லை, பொதுவாகவே சொல்கிறேன்) வெளி மாநிலங்களுக்கோ / நாடுகளுக்கோ வேலை தேடி ஓடிவிடுகிறார்களே?

இது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா?

அன்புடன்
*******
 -----------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு நண்பருக்கு,

 //நீங்கள் சொல்வது வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிலா?  பள்ளியிலோ / கல்லூரியிலோ இது நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை.  //

பள்ளி / கல்லூரிக்கும் அது உண்டு. நான் படித்தபோது (நியாயமான) வருமானச் சான்றிதழ் பெற 30 ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். இப்போது எவ்வளவோ?

//படிப்பு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை இல்லையா?  அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா?  ஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்? //

உங்கள் கேள்வி நியாயமானது தான். முதலிலேயே சொன்னபடி10% மக்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாவது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாததாக உள்ளது. நாம் மேலே விவாதித்தபடி, படிப்படியாக இடஒதுக்கீட்டு பயனாளர்கள் குறைக்கப்படுவதே இதற்கான தீர்வு.அதை கட்டாயமாக மாற்ற முடியாது. இயல்பாகவே அந்த மாற்றம் நடக்க வேண்டும்.

//இப்படி தமிழ்நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட / சாத்தியப்படாத திறமையுள்ள அநேகம் பேர் (இதில் என் சமூகத்தை குறிப்பிடவில்லை, பொதுவாகவே சொல்கிறேன்) வெளி மாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ வேலை தேடி ஓடிவிடுகிறார்களே?  இது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா? //

தமிழ்நாட்டில் பிரபல ஐ.டி.கம்பெனியில் என் நண்பன் ஒரு அமெரிக்க மருத்துவமனையை மேம்படுத்த புராஜக்ட் செய்துகொண்டிருக்கிறான். நான் சிங்கப்பூரில் ஒரு கப்பல் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்தேன். நாங்கள் கட்டிய கப்பல், நம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக, நம் கோதாவரி படுகையில் பெட்ரோல் எடுக்கிறது. இது தான் தாராளமயமாக்கலுக்குப் பின்னான இன்றைய நிலை. ஒருவன் இங்கேயே இருப்பதால், இந்தியாவை முன்னேற்றுகிறான் என்று அர்த்தம் இல்லை. வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவிற்கு பயனில்லை என்றும் அர்த்தம் இல்லை. 

மேலும் இந்தியாவிற்கு அந்நிய முதலீட்டை அளிப்பதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போன மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

மேலும், எல்லோருக்கும் இங்கேயே வேலை செய்யும் அளவிற்கு இங்கே வேலை வாய்ப்புகளும் இல்லையே..அது திரும்ப நம்மை 1980க்குத் தானே கொண்டு செல்லும்? அப்படிப் பல திறமைசாலிகள் ஓடியபின்னும் ‘இந்தியா - சீனா’ தான் அடுத்த பொருளாதார சக்திகள் என்றுதானே அந்த ஓடிப்போன திறமையாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளே சொல்கின்றன?

நான் வேலை பார்த்த வெளிநாடுகளில் என்னுடன் சீனாக்காரன், ஃபிலிப்பைன்ஸ்காரன், இங்கிலாந்துக்காரன் என பல்வேறு நாட்டுக்காரனும் ‘ஓடி வந்து’ வேலை செய்தார்கள்/செய்கிறார்கள். 

அதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்? அவர்களால் சீனா/ஃபிலிப்பைன்ஸ்/இங்கிலாந்து முன்னேற்றம் தடைபட்டுவிட்டது என்றா? அவர்கள் திறமையை வெளிப்படுத்த அங்கே வாய்ப்பில்லை என்றா?

இந்த ‘ஓட்டத்திற்கு’ அடிப்படைக் காரணம் துட்டு தானெயொழிய ‘திறமையை வெளிப்படுத்தும் அவா’ அல்ல. இங்கேயே மாதம் 2 லட்சம் சம்பளம்..ஒரு வேலையும் செய்ய வேண்டாம்..ப்ளாக் படித்தால் போதும் என்றால், ‘அதெல்லாம் முடியாது..நான் திறமையை வெளிப்படுத்தணும்’ என்று யாராவது ஓடுவார்களா என்ன?

அத்தகைய ஓட்டங்கள் எங்கும் நடப்பது, தவிர்க்க முடியாதது..திரைகடல் ஓடியும் திரவியம் தேடுதல் முற்காலத்தில் இருந்தே நடைபெறும் விஷயம்.

எனவே ஓட விரும்புவோர் ஓடட்டும். அதை அனுமதிப்பதும் ஜனநாயகம் தான்.

அன்புடன்
செங்கோவி

----------------------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம் செங்கோவி!

//வேலை தேடி ஓடிவிடுகிறார்களே?//

இந்த ஓடிவிடுகிறார்கள் என்பதை நான் சாதாரண அர்த்தத்திலேயே சொன்னேன், நீங்கள் எதுவும் தவறாகப்புரிந்துகொள்ளவில்லையே?  நானும் வெளிநாட்டில் தான் வெளியிலேயே இருக்கிறேன்.  நான் சொன்னது எனக்கும் சேர்த்தே.

உண்மையிலேயே நான் இதை ஒரு கருத்துப் பரிமாறுதலாகத்தான் நினைக்கிறேன்.  முதலிலேயே சொன்னதுபோல் இதை இன்னும் ஆழமாகப்புரிந்து கொள்ளும் முயற்சிதான் இது.

//வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவிற்கு பயனில்லை என்றும் அர்த்தம் இல்லை. மேலும் இந்தியாவிற்கு அந்நிய முதலீட்டை அளிப்பதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போன மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. //

இது எனக்கும் புரிகிறது.  நான் இழப்பு என்றே குறிப்பிட்டிருந்தேன்.  அவர்களால் பயனில்லை என்று சொல்லவில்லையே.  வெறும் பணம் அதாவது அந்நிய முதலீடு மட்டும் வந்தால் போதுமா?  

உதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள்.  அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது?  எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா?  ஐ.டி. துறை நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறது, உண்மைதான்.  ஆனால் மற்ற துறைகள்? 

கட்டுமானத்துறையில் சிறந்த பலர் வெளிநாட்டில்தானே வேலை செய்கின்றனர்?  அவர்களை வைத்து இந்தியாவை மேம்படுத்த முடியாதா?  இந்தியா குடிசைகளால் நிரம்பியிருக்கக் காரணம் என்ன?  மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால் இப்போது சோனியாவுக்கு மருத்துவம் பார்த்தவர் கூட ஒரு இந்தியர் என்று படித்தேன்.  புற்றுநோய் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதாக.  

ஆனால் இந்தியாவில் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டரின் தரம் உங்களுக்குத் தெரிந்ததுதானே?  நிறைய சிறந்த மருத்துவர்களும் இருக்கிறார்கள்.  நான் எல்லோரையும் சொல்லவில்லை.  ஆனால் பெரும்பான்மையானவர்கள்?  

இந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் போய்விட்டு ஒருமுறை அவதிப்பட்ட அனுபவத்தை வைத்தே இதை சொல்கிறேன். 

இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?

அன்புடன்,
********
----------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு சகோ,

//வெறும் பணம் அதாவது அந்நிய முதலீடு மட்டும் வந்தால் போதுமா?  உதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள்.  அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது?  எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா?  //

வேண்டும் தான்..ஆனால் அமெரிக்கா அளவிற்கு விஞ்சானத்திற்கு செலவளிக்க நாம் இன்னும் தயாராகவில்லை. நமது மக்களின் அடிப்படைத் தேவைகளே தீர்க்கப்படாத நிலையில் அதிக நிதியை விஞ்சானத்திற்கு ஒதுக்குவது சாத்தியமும் அல்ல.

அவ்வாறு இருக்கும்போது, குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்தவும் முடியாது. திறமையை வெளிப்படுத்த வாய்ப்பில்லாததால் மட்டுமே ஓடுவதாக உங்கள் கருத்து தொனித்தது. அதனாலேயே பணம் இந்த விஷயத்தில் முக்கிய காரணி என்று சொன்னேன்.

அப்துல் கலாம் போன்றோர் இங்கிருந்தே தன் திறமையை வெளிப்படுத்திய்வர்கள் தானே..

அவர்கள் ஓடுவதற்குக் காரணம் ஜாதி-இட ஒதுக்கீடு போன்றவற்றை விட அதிக சம்பளம் தர முடியாத, ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க முடியாத நம் அரசின் நிதிநிலைமையே முக்கியக் காரணம். விண்வெளி ஆராய்ச்சியை விடவும் அடிப்படைக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது நம் வளர்ச்சிக்கு அவசியம்.

எனவே தான் சொன்னேன்..ஒடுவதும் தவறல்ல..அரசின் நிலையும் அப்படியே.

இருப்பினும், இவ்வாறு இங்கு படித்தோர் வேறு யாருக்கோ வேலை செய்வது அடிப்படையில் நமக்கு இழப்பு தான்.

நான் ஏற்கனவே சொன்னபடி, நாசா போன்ற இடங்களில் எல்லா நாட்டவருமே வேலை செய்கிறார்கள். எனவே இது இட ஒதுக்கீடு மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. முழுக்க இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டாலும், ஓடுவதற்கு வேறு காரணங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்படும்.

மேலும், என்ன தான் ஒருவர் 50 வருடம் நாசாவில் இருந்தாலும் அவரை இந்தியன் என்று தானே நாமும் சொல்கிறோம், அமெரிக்கர்களும் சொல்கிறார்கள்.

நம்மால் என்ன சம்பளம்/நிதி ஒதுக்க முடியுமோ, அதைக்கொண்டு முன்னேற வழிவகைகளைப் பார்ப்பதே நல்லது. அதில் வரும்/வந்து கொண்டிருக்கும் முன்னேற்றமே போதுமானது. அமெரிக்கா போல் பொருளாதாரப் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாமல் நாம் தப்பிக்க அதுவே உதவும்.

//இந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் போய்விட்டு ஒருமுறை அவதிப்பட்ட அனுபவத்தை வைத்தே இதை சொல்கிறேன். //

அரசு அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் போன்றவை சீர்திருத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால் அதற்கும் நம் விவாதப்பொருளான ‘ஜாதி-வர்ணம்-இட ஒதுக்கீட்டிற்கும்’ நேரடிச் சம்பந்தம் இல்லையே...அது எல்லா ஜாதிகளும் உணரும் பிரச்சினை தானே..

அன்புடன்
செங்கோவி


(தொடரும்)
மேலும் வாசிக்க... "பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_7"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, November 25, 2011

மயக்கம் என்ன - திரை விமர்சனம்


ருமை அண்ணன் செல்வராகவனும் தங்கத் தம்பி தனுஷும் இணையும் மூன்றாவது(4வதும்) படம் என்பதாலும், செல்வராகவன் மீண்டும் ’பாலியல் வறட்சி’ மேட்டரை கையில் எடுத்திருப்பதாலும் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதாலும் படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால்....................அவ்வ்!


முதல்ல கதையைச் சொல்ல முயற்சி பண்றேன்..

இது தமிழ்சினிமாவுலேயே வராத கதைன்னு தைரியமாச் சொல்லலாம்..தனுஷும் அவர் தங்கச்சியும் அப்பா-அம்மா இல்லாதவங்க..ஃப்ரெண்ட்ஸ் சப்போர்ட்ல ‘வாழ்றாங்க’..பீர் தான், சிக்கன் பிரியாணி தான்..நல்ல வாழ்வு..சுந்தர்ங்கிற மாக்கான் தான் க்ளோஸ் ஃப்ரெண்டு..அவர் அப்பாவும் ஒன்னா தண்ணி அடிக்கிற அளவுக்கு நல்லா பழகுறாரு..அந்த மாக்கான் ஃப்ரெண்டு ஒரு ஃபிகரை கூட்டிக்கிட்டு வந்து ‘இது நான் லவ் பண்ற பொண்ணு..லவ்வுக்கு ஒத்துக்கலை..டேட்டிங்குக்கு மட்டும் தான் ஒத்துக்கிச்சுன்னு சொல்றாரு..ஃப்ரெண்ட்ஸும் ரொம்ப நல்ல பொண்ணு-னு அதை குரூப்ல சேர்த்துக்கறாங்க.(குரூப்ல பொண்ணுங்களும் உண்டு). 

அப்புறம் பீர், விஸ்கின்னு நல்லா பழகுறாங்க..அந்தப் பொண்ணுக்கும் தனுஷுக்கும் ஒத்துக்கலை..முட்டிக்குது..மோதல் என்ன ஆகும்?..அப்புறம் தான் ஆடியன்சுக்கே தெரியுது, அது தான் ஹீரோயின்னு..ஏன்னா அதுவரைக்கும் மாக்கான் நண்பன் தான் அதை தடவுறாரு..(இதான் கலாச்சார அதிர்ச்சியோ...)

நண்பன் காதலியை லவட்டலாமா? நம்ம கலாச்சாரம் என்ன, பண்பாடு என்ன?-ன்னு தனுஷ்க்கு ஃபீலிங். கூடவே லவ் ஃபீலிங்கும். பொண்ணும் மாக்கான்கிட்ட தெளிவா மேட்டரைச் சொல்லாம அவன் காசுலேயே ஊர் ஊராச் சுத்தி தண்ணி அடிச்சுக்கிட்டே, லுக் விட்டுக்கிட்டே தனுஷை லவ் பண்ணுது..ஒரு 'அரை சீன் படம்' ரேஞ்சுக்கு இந்தக் கதை ஒரு பக்கம் போகும்போதே, மெயின் கதை(?) இன்னொரு பக்கம் ஓடுது..(கதை மட்டும் தான் அப்படி..சீனும் இல்லை!!)

அது என்னன்னா, தனுஷ் ஒரு ஃபோட்டோகிராஃபர்..புகழ்பெற்ற ஃபோட்டோகிராஃபரான ஒரு பெருசை (பேர் மறந்திடுச்சு..) ரோல் மாடலா நினைச்சு அவர் கிட்ட அசிஸ்டெண்டா சேர முயற்சி பண்றாரு..நேஷனல் ஜாக்ரஃபி, டிஸ்கவரில நம்ம ஃபோட்டோவும் வரணும்னு ஆசைப் படுறாரு..அந்த பெருசு ‘போய் பறவைகளை ஃபோட்டோ எடுத்துக் காட்டு..அதைப் பார்த்துட்டு முடிவு சொல்றேன்னு தனுஷ்கிட்டச் சொல்ல, நம்மாளும் சூப்பரா படம் எடுத்துக்கொடுத்தா, அந்தப் பெருசு அதை தன்னோட படம்னு சொல்லி ரிலீஸ் பண்ணிடுது..அந்தப் படம் என்னமோ ஒரு பெரிய பரிசையும் வாங்கிடுது..

என்னென்னமோ நடக்குதே..அப்போ கண்டிப்பா என்னமாவது நடக்கும்னு நாம நிமிர்ந்து உட்காருதோம்..கூடவே ஒரு சந்தோசம், செல்வராகவன் வக்கிரம் இல்லாம படத்தைக் கொண்டு போறாரேன்னு..அப்படில்லாம் விட்டுடுவாரா...

தனுஷும் ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்தியாயா (என்னா பேரு!)-வும் ஒரு சீன்ல..ச்சே..ச்சே..சீன் இல்லீங்க..ஒரு காட்சில உணர்ச்சி வசப்பட்டு டபக்குன்னு கட்டிப்பிடிக்கிறதை மாக்கான் நண்பன் பார்த்துடுறாரு...சின்ன சண்டை, நீயெல்லாம் நண்பனா டயலாக்ஸ் பேசிட்டு தனுஷ் ரிச்சாவைக் கட்டிக்கிடறாரு..மாக்கான் நண்பன், தனுஷோட தங்கச்சியை கட்டிக்கிடறாரு..(ஆமாம்யா..இதுக்கே அதிர்ச்சியானா எப்படி?)...

இப்போ தனுஷ் ஃபோட்டோவைக் காட்டி பெருசு பெரிய விருது வாங்குச்சா..அதை பேப்பர்ல பார்க்கிற தனுஷ், பால்கனில இருந்து தலைசுத்தி கீழ விழுந்து மண்டை சிதறுது..

மூன்று வருடங்களுக்குப் பிறகு...(அப்படித் தான் போட்டாங்க..)......

தனுஷ் மெண்டல் ஆகிடுதாரு..பொண்டாட்டியை (அதான்யா, ஹீரோயினை) போட்டு அடிக்காரு..(அய்யோ..) கேர்ல் ஃப்ரெண்ட் கல்யாண ரிசப்சன்ல மாப்பிளை மண்டையை உடைக்காரு..(அய்யய்யோ)..

தனுஷ் ஃப்ரெண்ட்ல ஒருத்தர் ஹீரோயினுக்கு ஆறுதல் சொல்றேன்னுட்டு அப்படியே இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்து ‘உன்னை நான் வச்சிக்கிறேன்’-ங்கிறதை டீசண்டா சொல்றாரு..(இப்போ அய்யய்யோவை வாய் விட்டே சொல்லலாம்..)..அய்யய்யோ...படம் பார்க்க வந்ததுக்கு இன்னும் என்னென்ன கண்றாவியெல்லாம் பார்க்கணுமோன்னு பதறுனோம்..

ஆனா அந்தப் பொண்ணு பத்தினி..”டேய், எவ்னோ டேட்டிங் வான்னு கூப்பிட்டதும் நடுராத்தில அவன் பின்னாடியே வந்தவ தாண்டா நான்..அவன் காசுலேயே பீர் அடிச்சு,அவன் ஃப்ரெண்ட்டையே கரெக்ட் பண்ணவ தாண்டா..அதுக்காக என் புருசனை விட்டுக்கொடுப்பேன்னு நினைச்சுடாதே..”-ன்னு (பயப்படாதீங்க..இது என் டயலாக் தான்..அது இதையே வேற மாதிரி டீசண்டா) சொல்லிடுது. அந்த நல்ல நண்பனும் ‘சாரி’ன்னு சொல்ல இதுவும் ‘ஓகே..இதை நீயும் மறந்திடு, நானும் மறந்திடுவேன்..நீ எப்பவும்போல அடிக்கடி என் வீட்டுக்கு வா(!!)’ன்னு சொல்லிடுது..

அடுத்து.....................மாசமா இருக்கிற ஹீரோயின் வயித்துல மெண்டலா திரியற தனுஷ் ஒரே மிதி..கரு ரத்தமா போகுது...தரையெல்லாம் ரத்தம்..அய்யோ, அம்மா-ன்னு ஹீரோயின்கூடச் சேர்ந்து ஆடியன்சும் கத்துறாங்க.. கதறுதாங்க..அந்தம்மா உடம்பு சரியாகி வீட்டுக்கு வருது..தனுஷ் அந்த ரத்தத்துக்குப் பக்கத்துலேயே படுத்திருக்காரு..அது வாளி நிறைய தண்ணியும், ப்ரெஷும் எடுத்து தேய் தேய்னு தேய்ச்சுக் கழுவிக்கிட்டே 10 நிமிசம் பேசி அழறாங்க..சாப்பிட்டுப் போன நமக்கு குடலைப் புரட்டிடுச்சு..உஸ்ஸ்ஸ்...

இவ்ளோ விஷயம் நடக்குன்னா செல்வராகவன் என்னமோ சொல்ல வர்றாரு...என்னவா இருக்கும்-னு யோசிக்கிட்டே கண்டினியூ பண்ணா..

அடடே..என்ன ஆச்சரியம்..தனுஷ் திடீர்னு தெளிவாகிடுதாரு..அவர் ஃபோட்டோ குமுதம் அட்டைல வந்து, அப்படியே உலகம் பூரா சுத்தி, அந்த பெருசை விட பெரிய ஃபோட்டோகிராஃபர் ஆகி ஆஸ்கார் மாதிரி பெரிய பரிசை ஜெர்மன் போய் வாங்கிடுதாரு..

அப்புறம் தான் நாங்க எதிர்பார்த்த முக்கியமான விஷயமே வந்துச்சு..ஆமாங்க..படம் முடிஞ்சுடுச்சு!

எப்பவும் நான் படத்தோட கதையை விமர்சனத்துல சொல்றதில்லை..ஆனா எவ்வளவு யோசிச்சும், இந்தப் படத்தோட கதை என்ன, என்ன தான் சொல்ல வந்தாங்கன்னு புரியாததால, பார்த்ததை அப்படியே எழுதி இருக்கேன்..உங்களுக்காவது ஏதாவது புரிஞ்சா சொல்லுங்க..

படத்துல நல்ல விஷயம்னா பாடல்கள் தான்..ஜி.வி.பிரகாஷ் அருமையா டியூன் போட்டிருக்கார்..பிண்ணனி இசையும் நல்லா இருந்துச்சு..குறிப்பா ‘வெண்ணிலவே’ பாட்டுக்கு குடிச்சுட்டு மாக்கான் - ரிச்சா - தனுஷ் ஆடி முடிக்கவும் வந்த பிண்ணனி இசை.

அடுத்து ராம்ஜியின் ஒளிப்பதிவு..படமே ஃபோட்டோகிராஃப்ர் பத்தின படம் என்பதால் கேரளா-கர்நாடகான்னு அழகான லொகேசனா தேடி எடுத்திருக்காங்க..

தனுஷ் நல்ல நடிப்பு தான்..அண்ணன் படம் என்பதால் அடக்கியே வாசிச்சிருக்காரு..

ஹீரோயின் ரிச்சா முதல்ல பார்க்கும்போது சாதாரணமா தெரிஞ்சது..போகப்போக ‘நல்ல ஃபிகரா’ தெரிய ஆரம்பிச்சுடுச்சு..நல்லா முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது..அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்.

‘இது அடுத்த தலைமுறைக்கான படம்’னு செல்வராகவன் சொன்னாரு..அப்பவே உஷார் ஆகியிருக்கணும்..அம்பது வருசம் கழிச்சு பார்க்கவேண்டிய படத்தை அவசரப்பட்டு, இப்பவே பார்த்துட்டேன்..

வேற என்ன சொல்ல..........?
மேலும் வாசிக்க... "மயக்கம் என்ன - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

68 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, November 23, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_6

அன்பு நண்பர்களுக்கு,

சமூகங்களை வரலாற்றுப் பின்புலத்திலும், பொருளாதார அடிப்படையிலும், கல்வி கற்பதில் அவர்களுக்கு உள்ள சிரமத்தின் அடிப்படையிலும் ஆராய்ந்தபின்னரே, இடஒதுக்கீடு தேவை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஆனாலும், எல்லா பிராமண சாதிக்குடும்பங்களும் பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் நல்ல நிலைமையில் இருந்தவை அல்ல. இழவு வீட்டில் தோசம் கழித்து 50-100 வாங்கி சாப்பிட்டே கடைசிவரை வறுமையில் வாழ்ந்த அய்யரை எனக்குத் தெரியும். கணவன் சரியில்லாத நிலையில் இட்லிக்கடை வைத்துப் பிழைத்த மாமியும் எங்கள் பகுதியில் உண்டு.

பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும், வசதியில் கல்வியில் முன்பே முன்னேறிவிட்ட குடும்பங்களும் இங்கு உண்டு. பெரிய பிஸினஸ்மேனின் பிள்ளைகூட அரசு வழங்கும் இலவச பாடப்புத்தகத்தை வாங்கிவிட்டு, அதை எடைக்குப்போட்டு காசு வாங்கி சினிமாவுக்குப் போன கதை நான் அறிவேன்.

ஆனால் இவையெல்லாம் சதவீத அடிப்படையில் பார்த்தால், மிகக்குறைவே. 1930களில் 90% பிராமண சமூகம் கல்வி கற்று நல்ல நிலையிலும், 90% பிற சமூகங்கள் கல்வியறிவற்று மோசமான நிலையிலும் இருந்ததால்தானே, இடஒதுக்கீடு கோரிக்கையே எழுந்தது?

ஜனநாய அரசு பெரும்பான்மை மக்களின் நிலையையே கணக்கில் கொள்ளும். அதுவே பல்வேறு சமுதாயங்கள் வாழும், சரியான ஜாதிமுறைக் கணக்கீடுகள் இல்லாத இந்தியாவில் சாத்தியம் ஆன விஷயம்.

அரசும் அத்தகைய வசதி படித்தோரை விலக்க, வருமானச் சான்றிதழ் பெறும் முறையை ஏற்கனவே வைத்துள்ளது. லஞ்சம் காரணமாக அது சரியானமுறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், தற்போதைய கணிணி உலகில் வரி செலுத்துதல் ஆன் லைன் மயமாகிவிட்ட சூழலில், பெருவாரியான பிற்படுத்தப்பட்டோரை வடிகட்ட முடியும் என்றே நம்புகிறேன்.

அமைப்பு சாரா தொழிலில் உள்ளோரின் உண்மையான வருமானத்தை கணக்கிடுவதும், கண்காணிப்பதுமே இப்போதைய பிரச்சினை.

பெருவாரியான பிற்படுத்தப்பட்ட சமூகங்களை முன்னேற்றும் நோக்கிலேயே இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அந்த நோக்கம் சரியாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து மேலெழுந்துவந்த விஞ்சானிகளே சாட்சி.

உண்மையில் இடஒதுக்கீடு நிரந்தரமான திட்டமாக கொண்டுவரப்படவில்லை. 10 வருடங்களுக்கு மட்டுமே என்று ஞாபகம். அதற்குள் இந்தச் சமூகங்கள் முன்னேறிவிடும் என்று நம்பப்பட்டது. 

ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வரலாற்று நோக்கில் 10 வருடம் என்பது சிறுதுளி.

என்னைப்பொறுத்தவரை இரண்டு தலைமுறைகளுக்காவது இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றேன். அது தெளிவாக அவர்களுக்குச் சொல்லப்பட வேண்டும். 

ஆனாலும் தனிமனித உயர்வு என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை ஜோதிடம் அறிந்த நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே 100% முன்னேற்றம் என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று. ஆனாலும் பெருவாரியான குடும்பங்களை முன்னேற்ற இடஒதுக்கீடு உதவவே செய்கிறது.

இரண்டு தலைமுறைகளாக இடஒதுக்கீடு போன்ற அரசு சலுகைகளை உபயோகித்து, மேலெழுந்துவிட்ட குடும்பங்கள், தங்களை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கிக்கொள்ள வேண்டும். அதுவே அதே ஜாதியில் கீழ்நிலையில் வாழும் மக்களுக்கு, அவர்கள் செய்யும் கைம்மாறு.

நல்ல வேலையிலும், வசதியுடனும் உள்ள ஒருவர், இடஒதுக்கீட்டை உபயோகித்தால், முதலில் அவர் தன் ஜாதிக்கே கெடுதல் செய்கிறார். உண்மையில் அதற்கான எதிர்ப்புக்குரல் அந்த ஜாதிகளில் இருந்தே எழுந்து வரவேண்டும்.

வசதிபடைத்த பிற்படுத்தப்பட்டோரும் இட ஒதுக்கீட்டை உபயோகிப்பதால், இடஒதுக்கீட்டால் தங்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுவதாக நீங்கள் புலம்புகிறீர்கள். உண்மையில் அவ்வாறு முதலில் புலம்ப வேண்டியதும் ,போராட வேண்டியதும் அந்த சமூகத்து அடித்தட்டு மக்கள் தான்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சரியான முறை என்று நான் நினைக்கவில்லை. இன்று நல்ல வசதியுடன் இருக்கும் ஒருவர், ஓரிரு வருடங்களில் வீழ்ந்துவிடுவதை நாம் பார்க்க்கின்றோம். மேலும், இட ஒதுக்கீடு என்பதன் அடிப்படையே கல்விச்சூழலுக்குப் பழக்கமில்லாத சமூகங்களை சலுகை மூலம் முன்னேற்றுவதே.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கோருவோரிடம் பொதுவாக நான் ஒன்று கேட்பது உண்டு.

“நீங்கள் ஒரு வேலைக்கு/காலேஜ் சீட்டிற்கு அப்ளை செய்கிறீர்கள். 100 இடங்கள் அங்கு உள்ளன. உங்கள் ஜாதிக்கு இடஒதுக்கீட்டின்படி 5 இடங்களே ஒதுக்கப்படும். அங்கே உங்கள் ஜாதியைச் சேர்ந்த 50 பேர் வந்திருக்கிறார்கள். வசதியான 45 பேர் (நீங்கள் உட்பட) 90% மார்க்குடன் நிற்கிறீர்கள். வசதி குறைவான, வேலை செய்துகொண்டே படித்த பிராமண வீட்டுப் பிள்ளைகள் 5 பேர் 75% மார்க்குடன் வந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் நீங்கள் பரந்த மனதுடன் அந்த வேலையை ஏழைப் பிராமணர்களுக்கு விட்டுக்கொடுப்பீர்களா?”

உங்கள் சமூகத்துப் பெரியவர்கள் / ஜாதிச் சங்கங்கள் மூலம் ‘இனிமேல் நம்மை விட பொருளாதாரத்தில் தாழ்ந்த பிராமணர் வந்தால், நாம் உடனே போட்டியில் இருந்து விலகி அவர்களுக்கு வழி விடுவோம்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதற்கு பெருவாரியான வசதி + படித்த பிராமணக் குடும்பங்கள் என்ன எதிர்வினையாற்றும் என்று புரிகிறதல்லவா?

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று தீவிரமாக பொதுமேடைகளில் பேசும் உங்கள் தலைவர்கள், வசதியானவர்களே. அவர்கள் தற்போதைய சமூகம் சார்ந்த இட ஒதுக்கீட்டுடன் பொருளாதார இடஒதுக்கீட்டையும் சேர்த்து நடைமுறைப்படுத்த குரல் கொடுப்பார்களா? ஏழைப் பிராமணருக்கு நீங்களே இடம் கொடுக்கவில்லையென்றால், பிற ஜாதியினர் எப்படி இடம் கொடுப்பார்கள்?

பொருளாதார இட ஒதுக்கீடு கோருவோரின் நோக்கம் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிப்பது தான். அதற்காகவே அவர்கள் பொருளாதார இடஒதுக்கீடு என்று கூக்கிரலிடுகிறார்கள். தற்போதைய நிலையில் பொதுப்பிரிவிலேயே ஏழ்மைநிலையில் உள்ள பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு கோரலாம்.

உண்மையில் இடஒதுக்கீடுத் திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய நேரம் தான் இது. இன்னும் சில வருடங்களில் வசதியான தன் ஜாதியினரை நோக்கி, ஏழை சாதியினர் தங்கள் வாய்ப்பு பறிக்கப்படுவதாக கூக்குரல் எழுப்பலாம். எழுப்ப வேண்டும்.

அதன்மூலமாக ஏற்கனவே இடஒதுக்கீட்டின் மூலம் கல்விச்சூழலுக்குள் வந்துவிட்ட குடும்பங்கள், பிற ஏழைக் குடும்பங்களுக்கு வழி விட வேண்டிய கட்டாயம் உருவாக்கப்படவேண்டும்.

பொருளாதார ரீதியில் மட்டுமே இடஒதுக்கீடு என்றல்லாமல் பொருளாதார ரீதியிலும் இட ஒதுக்கீடு என்பதே இப்போதைய தேவையென்று நினைக்கின்றேன்.

அனைத்து ஜாதிகளாலும், பிராமண ஜாதி உட்பட, இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தையும் முக்கியக் காரணியாக சேர்க்க போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அது நடைமுறைப்படுத்தப்பட்டால், தானாகவே பல குடும்பங்கள் இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்படும். அதன்மூலமாகவே இடஒதுக்கீட்டுப் பயனாளர்களைக் குறைக்க முடியும்.

அதுவே இடஒதுக்கீட்டு விகிதத்தை குறைக்கவும் வழிசெய்யும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக உயர்வு தாழ்வற்ற சமுதாயமாக நம்மை மாற்றும்.

அன்புடன்
செங்கோவி


(தொடரும்)

மேலும் வாசிக்க... "பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_6"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

மழலை உலகம் மகத்தானது...(தொடர் பதிவு)

இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த இளம்பதிவர்(!) கிஸ்ராஜா (K.S.S.Rajh)-க்கு நன்றியைச் சொல்லிக்கொண்டு...


மழலை உலகம் மகத்தானது_பகுதி-1














சாரி...18+.....!!!









மழலை உலகம் மகத்தானது_பகுதி-2:
மழலைகளைப் பற்றிய பதிவென்றால், அவர்களை எப்படி வளர்ப்பது, எப்படிக் கவனிப்பது என்று எழுதவே தோன்றுகிறது. அதைவிடவும் சுவாரஸ்யமாய் இருப்பது, தற்கால குழந்தைகளின் கவனிப்புத்திறன் தான்..

எனது ஒன்றரை வயது மகனைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு பீரோவைத் திறப்பதை ஒருமுறை பார்த்துவிட்டால், அடுத்து அவனே அதைச் செய்துவிடுகிறான். எங்கள் வீட்டு டிவி ஸ்டேண்டில் கீழே புத்தக செல்ஃபும் உண்டு.அதை கண்ணாடிக் கதவால் பூட்டிக்கொள்ள முடியும். அதைப் பூட்ட சாவி கிடையாது. கொஞ்சம் நுணுக்கமான ப்ளாஸ்டிக் லாக் தான். அதை தெரியாமல் ஒருமுறை அவன்முன் திறந்து மூடி விட்டேன். முடிந்தது கதை. அடுத்த 5 நிமிடங்கள் போராடி, அதைத் திறந்துவிட்டான்.

இதை என் நண்பரிடம் சொன்னபோது அவர் “அதாவது பரவாயில்லைங்க..ஒருதடவை என் மொபைல் கீழே விழுந்து மூடி,பேட்டரி, மொபைல் என மூன்றாகப் பிரிந்துவிட்டது. அதை என் பையன் முன்னாடி ஃபிக்ஸ் பண்ணிட்டேன்.பிடிச்சது வினை..இப்போ கொஞ்சம் அசந்தா, என் மொபைலை எடுத்து தரயில ஒரே போடு..மூணாப் பிரிஞ்சதும் அவனாவே ஃபிக்ஸ் பண்ணிட்டு ‘அப்பா..இந்தா’-ன்னு பெருமையாத் தர்றான்..” என்றார்.

இந்தத் தலைமுறைக் குழந்தைகள் நம்மைவிடவும் புத்திசாலியாக இருப்பதாகவே தோன்றுகிறது..தொழில்நுட்பப் புரட்சியைப் புரிந்துகொள்ளும் வயதில்லை இப்போது..இப்போதே இப்படி என்றால், வரும்காலத்தில் நமக்கே பாடம் சொல்லித் தந்து ‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா’ போல் ஆவது நிச்சயம் தான்..
எனது மகன் ஒரு வயது வரை இந்தியாவில் இருந்தான்..அங்கே அவனுடன் விளையாட குழந்தைகள் கூட்டம் அதிகம். கூட்டாஞ்சோறு சாப்பிடும் ஆசையில் அப்போதே தானே சாப்பிடவும் பழகிக்கொண்டான்..எப்போதும் விளையாட்டு, சுறுசுறுப்பு..அவனை இங்கே அழைத்து வரும்போது, எங்களுக்கே கவலையாக இருந்தது. ‘இங்கே வந்து அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறானோ’ என்று.

ஏனென்றால் இங்கே வளரும் குழந்தைகள், தாயின் இடுப்பை விட்டு இறங்குவதே இல்லை. 2 வயது தாண்டியபின்னும் சொந்தமாக எதையுமே செய்ய முடியாத் சவலைப்பிள்ளைகளாகவே இந்த வெளிநாட்டு தமிழ்க்குழந்தைகள் வளர்கின்றன. அதற்கான முக்கியக் காரணம் உடன் விளையாட யாரும் அற்ற நிலைமை தான்..ஒரு அப்பார்ட்மெண்ட்டில் எப்படியும் 3-4 குழந்தைகள் உள்ளன. அவர்களை ஒன்றாக விளையாட விட்டாலே போதுமானது. அதைக்கூட அவர்கள் செய்வதில்லை என்பது தான் சோகம்.

இதுபற்றி ஒருவரிடம் கேட்டபோது ‘எங்க ஃப்ளோரில் இருக்கிறவங்க ரொம்ப டீசண்டானவங்க. அமைதியா இருப்பாங்க..நம்ம குழந்தைங்க கத்துனா நியூசென்ஸா இருக்கும்..இதென்ன நம்ம ஊரா? அதான் பையனை கண்டிச்சு வளர்க்கிறோம்..சத்தம் போடவே மாட்டான்..வெரி காம்..டீசண்டா இருக்கணும், இல்லியா?’ என்றார். ‘டீசண்டா; இருக்கிறோம்ங்கிற பேரில் குழந்தைகளை அடக்குவது சரியா? குழந்தைகள் என்றால் சத்தம் போட்டு விளையாடத்தானே செய்யும்? அப்படியென்றால் எல்லாக் குழந்தைகளுமே இண்டீசண்ட் தானா?’ என மனதில் கேள்விகள் எழுந்த வண்ணமே இருந்தன.

விளையாடுவதற்கு குழந்தைகள் இல்லாத நிலையில், குழந்தையை குழந்தையாகவே வைத்திருக்க பெற்றோரும் குழந்தை போல் விளையாடுவது அவசியம் ஆகிறது. தினமும் ஆஃபீசில் இருந்து வந்தபின் குறைந்தது ஒரு மணிநேரமாவது மகனுடன் விளையாட வேண்டியுள்ளது. சினிமா பாட்டுக்கு மகனும் நானும் டான்ஸ் ஆடுவதில் ஆரம்பித்து விளையாட்டுச் சாமன்களை வைத்து விளையாடி முடிப்போம். 
எங்கள் குழந்தை விளையாடுவதைப் பார்த்து, மற்றொரு தாயும் ‘மனமிரங்கி’ தன் மகனை என் மகனுடன் விளையாட அனுமதித்திருக்கிறார். ஆனாலும் பிற குழந்தைகளின் உலகம், அம்மாவின் இடுப்பிலும், அப்பாவின் தோளிலுமே முடிந்து போகிறது. ‘இண்டீசண்ட்’ பேச்சு வாங்கியபின், யாரிடமும் ‘குழந்தையை விளையாட விடுங்க’ என்று சொல்லவே தயக்கமாக உள்ளது.

’சம்பாதிக்க வேண்டும், நம் லைஃப் ஸடைல் மாற வேண்டும், வாழ்க்கையை நன்றாக வாழ வேண்டும்’ என பெரிய பெரிய குறிக்கோள்களுடன் வெளிநாட்டிலும் சிட்டிகளிலும் வாழ்கிறோம். அந்த குறிக்கோள்கள் நியாயமானவை தான். அதற்காக மழலைகள் உலகத்தை ஒரு அறைக்குள் சுருக்குவது சரிதானா? நாம் ஓடி விளையாடி, மண்ணில் புரண்டு அனுபவித்த சந்தோசத்தை நம் குழந்தைகளும் அனுபவிக்க வேண்டாமா?’ என்ற கேள்வியே நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது. 


----------------------------------------------------------------------------------------------------------------------------


இந்தப் பதிவைத் தொடரும்படி குழந்தைகள் மேல் பிரியம் உள்ள அனைத்துப் பதிவர்களையும் அழைக்கிறேன்.

மேலும் வாசிக்க... "மழலை உலகம் மகத்தானது...(தொடர் பதிவு)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, November 21, 2011

அதிமுக ஆட்சியில் சந்தோசமாய் இருப்பது எப்படி?

உஸ்ஸ்ஸ்...அப்பப்பா..மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கப்பா..’இந்தம்மா வந்தாலே இப்படித்தான்..ஏன் தான் இப்படிப் பண்ணுதோ?’ அப்படீங்கிற மாதிரி டயலாக்ஸ் திரும்பவும், திரும்பின பக்கமெல்லாம் கேட்க ஆரம்பிச்சுடுச்சு. ‘அம்மா திருந்திட்டாங்க’ன்னு சந்தோசமா சர்ட்டிஃபிகேட் கொடுத்த பலரும், திருதிருன்னு முழிக்க வேண்டிய நிலைமை..

உண்மையில் ஜெ.ஆட்சியில் சந்தோசமாய் வாழ முடியாதா?...முடியும்..நிச்சயம் முடியும்..அம்மையார் மாறப்போவதே இல்லை என்று ஆனபின், நாம் அம்மைக்கு ஏற்றபடி மாறிக்கொள்வது தானே முறை? அதற்கான வழிமுறைகளை ஆராய்வோம், வாருங்கள்.

நம்பிக்கை :
மனுசனுக்கு தும்பிக்கையைக் கொடுக்காத ஆண்டவன், நம்பிக்கையைக் கொடுத்தான். ஏன்..ஏன்..ஏன்? நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு அடிப்படை. வேப்பங்காய் எப்படி இனிக்கும்? இந்தம்மா எப்படி நல்லது செய்யும்?-னு நினைக்கிறது தான் உங்களோட அடிப்படைப் பிரச்சினை. முதல்ல நீங்க அம்மையை நம்பணும். அதிமுககாரங்க மாதிரி அவங்க என்ன பண்ணாலும் அது சரியாத் தான் இருக்கும்னு நினைக்கணும்.

‘இவங்களுக்கு நம்ம கஷ்டம் புரியப்பொறதும் இல்லை..திருந்தப்போறதும் இல்லை’ன்னு ஒரேயடியா முடிவு பண்ணிடக்கூடாது.

ஜென் ல ஒரு தியான வழிமுறை உண்டு..என்னன்னா ஈரச்சட்டையைப் போட்டுக்கிட்டு, இமயமலைல நின்னுக்கணும். மனசுல ’சுத்திலும் ஹீட்டா இருக்கு’-ன்னு தீவிரமா நினைக்கணும். அப்படி நினைக்கிறது மூலமா, பாடி அதாவது உடம்பு ஹீட்டாகி சட்டையே காஞ்சிடணும்..அப்படிச் செய்றவன் தான் நல்ல சீடன்.

அதே மாதிரி தான் நீங்களும் செய்யணும்..நேரா பால்கனிக்குப் போங்க..உள்பக்கமா காலைப் போட்டுட்டு, வெளிப்பக்கமா உடம்பைப் போட்டு தலைகீழாத் தொங்குங்க.(பெண்கள் இதைத் தவிர்க்கவும்) இப்போ மனசுல ‘அம்மா நல்லவங்க..நல்லது தான்

செய்வாங்க’ன்னு திரும்பத் திரும்ப தீவிரமா நினைங்க..அது உங்க ஆழ்மனசுல பதிஞ்சிருச்சுன்னா, நீங்க தான் நல்ல தமிழ்க் குடிமகன்.

மீடியா:
உங்க சந்தோசத்தைப் பறிக்கிறதுல முக்கியப் பங்கு வகிக்கிறது இந்த மீடியாக்கள் தான்..ஜெ.ஆட்சி வந்தாச்சுன்னா சண்டிவி, கலைஞர் டிவி, முரசொலி போன்ற எதிர்க்கட்சி ஊடகங்களை பார்க்கவே பார்க்காதீங்க. ஜெயா டிவி மட்டும் பாருங்க..’தமிழ்நாட்டுல பாலாறும் தேனாறும் ஓடுது’ன்னு சொல்வாங்க. கேட்கவே சந்தோசமா இருக்கும். என்ன ஒன்னு, தமிழ்நாட்டுல பூகம்பமே வந்தாலும் அசராம முதல்ல அம்மா அறிக்கையைத் தான் படிப்பாங்க..அதை மட்டும் கொஞ்சம் சகிச்சுக்கணும்.

அப்புறம் விகடன், துக்ளக் மாதிரி அம்மாவுக்கு சொம்படிக்கிற பத்திரிக்கைகளைப் படிங்க..இப்போக்கூடப் பாருங்க..பால்விலை-மின்கட்டணம்-பஸ் கட்டணம் மூணையும் உயர்த்த முன்னாடி அவ்ளோ யோசிச்சாங்களாம்..’இப்படி ஏத்துறமே, மக்கள் கஷ்டப்படுவாங்களே’ன்னு அம்மைக்கு ஒரே கவலை. அதிகாரிங்க, மந்திரிங்கல்லாம் ’வேற வழியே இல்லைம்மா..கடும் நிதிநெருக்கடி’ன்னு எடுத்துச் சொன்னாங்களாம்..விகடன்ல போட்டிருக்காங்க..அறிவிச்சப்புறம் அம்மை மூணுநாளா சரியாச் சாப்பிட்டிருக்க மாட்டாங்க போல..இப்படி எந்த முதல்வர் இருப்பாங்க சொல்லுங்க..கேட்கவே பெருமையா இல்லை?

அதைவிட்டுட்டு, முரசொலி மாதிரி பத்திரிக்கைகளைப் படிச்சீங்க, தொலைஞ்சீங்க.’கடும் நிதிநெருக்கடியா? அப்போ ஏன் இந்தா இருக்கிற பெங்களூருக்கு ஹெலிகாப்டர்ல போனாரு? ட்ரெய்ன்ல போக வேண்டியது தானே?”-ன்னு ஆரம்பிச்சு நாறக்கேள்வி கேட்பாங்க..நீங்களும் படிச்சுட்டு ‘அதானே’-ன்னு டென்சன் ஆகிடுவீங்க..இது தேவையா?

அதனால அடுத்த நாலரை வருசத்துக்கு ஜெயா டிவியும் நமது எம்ஜிஆரும் போதும் நமக்கு!

துணிச்சல் :
அம்மையாரோட மற்ற குணநலன்களை அப்பப்போ நினைச்சுக்கிறதும், அவங்களைப் பத்தி நல்லபடியா நினைக்க உதவும். உதாரணமா அவங்களோட துணிச்சலை நினைச்சுக்கோங்க..’தைரியலட்சுமி’ன்னு சூப்பர் ஸ்டாரே பாராட்டுனதையும் ஞாபகத்துல

வைங்க. இந்த மாதிரி துணிச்சலான முதல்வர் ஆட்சியில் வாழறதை நினைச்சு, உங்க உள்மனசு பெருமைப்படும்.

கலைஞர் ‘அய்யோ..கொல்றாங்களே’ன்னு கத்துனமாதிரி அம்மையாயர் ஏன் அப்பப்போ ‘அய்யோ...புலிகள் கொல்லப்போறாங்களே’ன்னு கத்துறாங்க?...தைரியலட்சுமி ஏன் இந்தியால இருக்கிற பெங்களூருக்குப் போக பல அடுக்குப் பாதுகாப்பு கேட்டாங்க? ஏன் கோர்ட்டுக்குப் போக பயந்துக்கிட்டு 108(?) வாய்தா வாங்கி வாய்தா ராணி-ன்னு ஏன் பேர் வாங்குனாங்க? - இப்படியெல்லாம் யோசிச்சீங்கன்னா நல்லாவே இருக்க மாட்டீங்க..திரும்பவும் போங்க பால்கனிக்கு!

அறிவுஜீவி :
பொதுவா வெள்ளையா இருக்கிறவன் புத்திசாலின்னு ஒரு நம்பிக்கை நமக்கு உண்டு. அதைத் தீவிரமா நம்ப வேண்டிய நேரம் இது. கலைஞர் மாதிரி அம்மையார் தற்குறி இல்லே..கலைஞர் மூணாப்பு தான் படிச்சிருக்காரு (9ஆம் வகுப்புன்னும் சொல்வாங்க..SSLC ஃபெயில்னும் சொல்வாங்க).ஆனால் அம்மையார் கான்வெண்ட் படிப்பை முடிச்சவர்..அதனால இவர் தானே பெரிய புத்திசாலி.

’அப்போ டிகிரி படிச்ச வைகோ - ராமதாஸ் மாதிரி ஆட்கள் அம்மையாரைவிட புத்திசாலியா?.ஹே..ஹே’-ன்னு சிரிக்கக்கூடாது. ’ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது, அனுபவமே நல்ல ஆசான்’-ன்னு கேள்விப்பட்டதில்லையா நீங்க?
சோ, இப்படி ஒரே நேரத்தில் படிப்பின் பெருமையை பறைசாற்றுபவராகவும், கல்வியின் கையாலாகாத்தனத்தை உணர்த்துபவராகவும் இருக்கும் ஒரே முதல்வர் நம் அம்மையார் தான்..அவர் காலத்தில் நாம் வாழ்வதே நமக்குப் பெருமை.(இப்படீல்லாம் யோசிக்கணும்..அப்போத் தான் மனசு ஆறுதல் ஆகி கெக்கேபிக்கே-ன்னு நாலரை வருசத்தை ஓட்டமுடியும்.)

தாயுள்ளமும் கருணையுள்ளமும் கொண்ட அம்மையார் ஏதாவது செய்கிறார் என்றால், அதில் ஒரு ஆழ்ந்த பொருள் இருக்கும் என்று இப்போதாவது கொஞ்சமாவது நம்புகிறீர்களா? அந்த நம்பிக்கையை இப்போ அப்ளை பண்ணுவோம்...

பால்விலை :
ஏன் அம்மையார் பால்விலையைக் கூட்டியிருப்பார்?..ம்.....

ஒரு பாட்டில் தண்ணி விலை பன்னெண்டு ரூபாய்..(எங்க..எங்க-ன்னு பறக்க்க்கூடாது..நான் சொன்னது டாஸ்மாக் தண்ணியை இல்லை..மினரல் வாட்டர்)..தண்ணி இந்த ரேட்ல வித்தா, பால்ல தண்ணி கலக்குற பால்காரங்களுக்கு எப்படிக் கட்டுபடியாகும்?..அதனால் தான் கூட்டிட்டாங்களோ?

அப்புறம், அழகு கெட்டுப்போகும்னு சில பெண்கள் தாய்ப்பால் தர்றதில்லை..ஆவின் பால் தான்..அவங்களை திருத்தறதுக்காகத் தான் அம்மையார் தாயுள்ளத்தோட பால்விலையைக் கூட்டியிருப்பாங்களோ?

காபி, டீ குடிச்சு பலபேரு உடம்பைக் கெடுத்துக்கறாங்க..அதை நிறுத்தறதுக்காக, பால் விலையை உயர்த்தி இருக்கலாம், இல்லியா?

பஸ் கட்டணம் :
நாட்டுல சின்னப் பசங்களுக்குக் கூட சர்க்கரை வியாதி மாதிரி பல பிரச்சினைகள்..காரணம் சரியான உடற்பயிற்சி இல்லை..காலையில் நடந்தாலே போதும்னு டாக்டர் சொன்னாலும் யாரும் கேட்கறதில்லை..அதான் டாக்டர்.ஜெயலலிதா தீவிரமா யோசிச்சு பஸ் டிக்கெட்டை கூட்டிட்டாங்க..

நாம நடக்கணும்..நல்லா இருக்கணும்-னு நினைக்கிற ஒரு நல்ல உள்ளத்தை பழிக்கிறது சரியான்னு உங்க மனசாட்சிகிட்டயே கேட்டுக்கோங்க..

‘பஸ் கட்டணத்தை சாயந்திரம் அறிவிச்சுட்டு, நடுராத்திரியே அமுல்படுத்திட்டாங்களே..செய்தி மக்களை சென்றடையவாவது டைம் கொடுக்க வேண்டாமா? முதல்நாள் மக்கள் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா?’-ன்னு சில பொறாமைபிடிச்ச எதிர்க்கட்சிக்காரங்க கேட்கிறாங்க..என்ன அநியாயம்யா..ஒரு முதல்வர் விரைந்து செயல்படுவதைப் பாராட்ட மனசில்லைன்னாலும், திட்டாமலாவது இருக்கலாமில்ல? பிரதமர் மாதிரியே செயல்படாத முதல்வரா அம்மையாரை ஆக்கிடலாம்னு பார்க்கிறீங்களா?

மக்கள் நலப் பணியாளர்கள் :
அடுத்து, மக்கள் நலப்பணியாளர்களை வேலையை விட்டு தூக்கிட்டாங்கன்னு ஒரே ரகளை. இந்தப் பதிவை இதுவரைக்கும் படிச்ச உங்களுக்கு, மண்டைல பல்பு எரிஞ்சு, ஏன் தூக்குனாங்கன்னு புரிஞ்சிருக்கும்..புரியாத ஆட்கள் மட்டும் அடுத்த பத்தியைப் படிங்க..

திமுக ஆட்சில மக்கள் நலமா இல்லை..அதனால அவங்களை நலமானவர்களா ஆக்கறதுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டாங்க. இப்போ அதிமுக ஆட்சில மக்கள் நலமாத் தானே இருக்காங்க? அப்புறம் எதுக்கு வேஸ்ட்டா மக்கள் நலப் பணியாளர்கள்?

மேலும் வாசிக்க... "அதிமுக ஆட்சியில் சந்தோசமாய் இருப்பது எப்படி?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

54 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, November 17, 2011

பிராமண நண்பருக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_5

வணக்கம் செங்கோவி!

//எனவே இனி உடலால் உழைக்கும் அனைவரும் சூத்திரர்களே.  அதுவே இன்றைய யதார்த்தம். கீழ்மட்டத் தொழில்களாக கருதப்பட்ட கழிவறையை சுத்தம் செய்வது, சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள். //

இது முழுக்க முழுக்க உண்மை.  தனது வேலைகளை தானே செய்துகொள்வது வரவேற்கத்தக்கதே.

 பிராமணர்கள் மற்ற ஜாதியினருக்கு இழைத்த கொடுமைகளை நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.  அவர்கள் மேல் தவறில்லை என்று கண்டிப்பாக நான் சொல்லமாட்டேன்.  நான் தஞ்சையில் மூன்றாவது - நான்காவது படித்துக்கொண்டிருந்தபோது சுவரெங்கும் 'பாப்பான் குடுமியை / பூணலை பிடுங்கி எறி' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும்.  

அதற்கு ஒருமுறை என் தாத்தா (கோயிலில் குருக்களாக இருந்தவர்) சொன்னது இன்னும் என் நினைவில் உள்ளது.  'எப்போதும் தலைகால் புரியாமல் ஆடக்கூடாது.  அடுத்தவனைத் துச்சமாக நினைப்பதும் / நாம் எதோ சிறந்த பிறவிகள் என்ற நினைப்பு கூடாது.  

பிராமணர்கள் முன்னர் செய்த வினை, எதுவுமே நிலையில்லை என்பதை உணராமல் ஆட்டம் போட்டதற்கு இப்போது இதையும் பொறுமையாக அனுபவித்துதான் தீரவேண்டும்' என்று.  மேலும் அவர் சொன்னது ' அவன் மேல என்ன தப்பு இருக்கு, இத்தனை நாளாக மனதில் இருந்த வெறுப்பு இப்போது வெளியேறுகிறது' என்றார். 

//இங்கே திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பில்லை. அதிக மார்க எடுத்த எனக்குத் தானே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்? - இந்த வாதம் பலவிதங்களில் திரும்பத் திரும்ப உங்களால் வைக்கப்படுகின்றது. //

இங்கே நான் மாறுபடுகிறேன் செங்கோவி!  நானும் மார்க் அடிப்படையில் முன்னுரிமை கொடுப்பதை ஆதரிக்கவில்லை.  என்னோடு படித்த நிறைய பெண்கள் மனப்பாடம் செய்தே (சில சமயம் கணிதத்தைக்கூட) நிறைய மார்க் வாங்கிவிடுவார்கள் (இது எல்லா ஜாதியினருக்கும் பொருந்தும்). 

ஆனால் ஏதாவது நுணுக்கமான கேள்வி ஆசிரியர்கள் கேட்டால் பதில் சொல்லத் திணறுவார்கள்.  முதலில் இந்த மனப்பாடம் செய்து பாஸ் ஆகும் முறையை ஒழித்துக்கட்டவேண்டும்.  (என் கனவுகளில் ஒன்று ஒரு பள்ளி ஆரம்பிப்பது, கண்டிப்பாக வியாபார நோக்குடன் அல்ல, அதில் என்னென்ன செய்யவேண்டும் என்று கூட நிறைய யோசித்து வைத்திருக்கிறேன்.  அதை ஆரம்பிக்க பணம் தேவை, மேலும் வேலையை விடவேண்டும்.  இப்போது அந்த ரிஸ்க் எடுக்கும் நிலையில் நான் இல்லாததால் பொறுமையாக இருக்கிறேன், ஆனால் எப்படியும் இன்னும் சில வருடங்கள் கழித்தாவது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது).

நான் சொல்வது ஒருவருக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ, அதை ஜாதி/மத வித்தியாசம் பார்க்காமல் செய்யவிடலாமே?  நான் மற்ற ஜாதியினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக எதிர்க்கவில்லை.  அவர்களுக்கு இது நீங்கள் எழுதியது போல் அவசியம் தேவை என்ற புரிதல் எனக்கு இருக்கிறது.  

உதாரணமாக எனக்கு கணிதம் நன்றாக வரும்.  ஆசிரியை ஒரு கணக்கு போட்டு புரிய வைத்தவுடனேயே, மீதி எல்லாம் நானே போட்டு விடுவேன்.  (இதை பெருமைக்காக நான் சொல்லவில்லை).  ஒருவருக்கு எதில் திறமை இருக்கிறதோ அதில் மேலே வளர இடம் கொடுக்கலாமே என்பதுதான் என் வாதம்.  ஒருவருக்கு படிப்பில் சுத்தமாக ஆர்வம் இல்லாமல் ஓவியம் வரைவதில் இருக்கலாம்.  அவரை அதில் ஊக்குவிக்கலாமே?  வரலாற்று வகுப்பு என்றாலே தூங்கி வழியும் எனக்கு அதைக்கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்?  

நான் இட ஒதுக்கீட்டை தவறு என்று சொல்லவில்லை.  அதில் உள்ள அபத்தங்களைத்தான் தவறு என்கிறேன்.  என் சக தோழிகள் college முதல்வரை சந்தித்து வேண்டுகோள் விடுக்குமாறு சொன்னார்கள்.  நானும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே போனேன். 

பிரின்சிபால் என்னிடம் சொன்னது 'என்னம்மா பண்ண முடியும்?  வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இப்படித்தான் நாம் நினைப்பது போல் நடக்காது.  எது நமக்கு கிடைத்திருக்கிறதோ அதிலேயே ஆர்வத்துடன் ஈடுபடு.  நானும்தான் law படித்தேன். ஆனால் இங்கே கல்லூரி முதல்வராக அமர்ந்திருக்கிறேன்' என்றார்.  இன்னொரு விஷயமும் சொல்லவேண்டும்.  

இந்த விஷயத்தில் எனக்கு ஒரு மறக்க முடியாத வாழ்க்கைப்பாடம் கிடைத்தது.  அப்போது அந்த வயதில் ரொம்ப பீல் செய்தாலும் போகப்போக இந்த விதி/ஜோதிடம் பற்றி படிக்க ஆரம்பித்ததும் 'எல்லாம் நல்லதிற்கே' என்ற ஒரு மனோபாவம் இப்போதெல்லாம் வந்துவிட்டது.  அதன்பின் அதே வரலாறைப்படித்து பி ஏ முழுமைக்கும் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றது எல்லாம் தனிக்கதை. 

முன்பே சொன்னதுபோல் தனியார் கல்லூரியில் (அ) அஞ்சல்வழியிலோ நினைத்ததைப்படிக்க முடியாத குடும்ப சூழல்.  அப்படி எல்லாருடைய ஆவலையும் ஒரு கல்லூரியில் நிறைவேற்ற நடைமுறை சாத்தியம் இல்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டியது யார்?  அரசாங்கம்தானே?  இன்னொரு கல்லூரியை நிறுவலாமே?  

என்னுடன் முதல் க்ரூப்பில் படித்த அனைத்து மாணவிகளும் அதே தொடர்புடைய படிப்பைத் தொடர்ந்தபோது (மருத்துவம், பொறியியல், இயற்பியல் என) நானும் இன்னும் சில மாணவிகளும் வேறு வழியில்லாம வரலாறு, பூகோளம், எகோநோமிக்ஸ் எனப்படித்தோம். 

இங்கே கல்வியை வியாபாரமாக்க வழி அமைத்ததும் இந்த அரசாங்கம்தானே?

//அவர்களின் வழிகாட்டலால் அந்த குரூப் வேணும், இந்த குரூப் வேணும் என்று கேட்கும் அளவிற்கு உனக்கு அறிவிருக்கிறது. எங்களுக்கு என்னென்னெ குரூப் இருக்கிறதென்று சொல்லவே ஆள் இல்லை.//

இதை ஒத்துக்கொள்ளலாம்.  ஆனால் எல்லா பிராமணரது குடும்ப நிலையும் நீங்கள் சொல்வது போல் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.  எனது பெற்றோர்களும் அதிகம் படிக்கவில்லை.  எனது மாமா இரண்டு பேர்கள் படித்து நல்ல வேலையில் இருந்தனர்.  

சித்தப்பா கல்லூரி பேராசிரியராக இருந்தார்.  ஆனாலும் எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்பதுதான் உண்மை.  சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதெதற்கோ apply செய்தேன்.  அதில் ஒன்று polytechnic .  அதில் எனக்கு சீட்டும் கிடைத்து வந்து சேருமாறு அழைப்பு வந்தது.  அப்போது என்னவென்றே தெரியாது.  உறவினர்களைக்கேட்டபோதும் அவர்களுக்கும் அதைப்படித்தால் என்ன வேலைக்குப்போகலாம் என்று தெரியவில்லை.  

ஆனால் எல்லாரும் ஒருமித்த குரலில் ஒன்று சொன்னார்கள்.  பெண்களுக்கு அது சரிப்பட்டுவராது என்று.  அதைக்கேட்ட நானும் அதே முடிவுக்கு வந்துவிட்டேன்.  பிறகு வேலைக்கெல்லாம் போனபிறகுதான் அதைப்பற்றி புரிந்தது.  என் கணவரின் அனுபவம் வேறுவிதமானது.  அவருக்கு போலிசாக வேண்டும் என்ற ஆசையில் CRPF ல் (அவர் இருந்தது டெல்லியில்) தேர்வு பெற்றுவிட்டார்.  

ஆனால் அவர்கள் லஞ்சமாக பத்தாயிரம் ரூபாய் கேட்டதால் (அப்போதைய அவரின் பொருளாதார நிலையில் இதெல்லாம் நடக்காத விஷயம்) வந்த வாய்ப்பை விட்டுவிட்டார்.  நீங்கள் சொல்லும் அதே டயலாக் என் வீட்டிலும் கேட்கும் வேறுவிதமாக.  டிகிரி படிச்சு என்ன பண்ணப்போறா, பேசாம கல்யாணம் செய்துவை.  (யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடிவிட்டால் என்பது போன்ற கீழ்த்தரமான டயலாக் வரை).

//அவர்களின் வழிகாட்டலால் அந்த குரூப் வேணும், இந்த குரூப் வேணும் என்று கேட்கும் அளவிற்கு உனக்கு அறிவிருக்கிறது. எங்களுக்கு என்னென்னெ குரூப் இருக்கிறதென்று சொல்லவே ஆள் இல்லை.//

நீங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பதை நான் முழுமையாக மறுக்கவில்லை என்பதையும் சொல்ல விரும்புகிறேன். 

//இந்தச் சூழ்நிலையில் படித்து 70% மார்க் வாங்குபவன் புத்திசாலியா? அனைத்து வசதிகளோடும், படிக்க தனியறை, வழிகாட்ட சொந்தபந்தங்கள், சுற்றிலும் படிப்பில் போட்டி போடும் சொந்தங்கள், டியூசன்கள் -//

இந்த பொருளாதார வசதிகள் எல்லா குடும்பத்திலும் இல்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். 

இன்னொரு விஷயம், பிராமணர்கள் என்றாலே நல்ல குடும்ப சூழல் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  என் வீட்டிலேயே சாராயத்துக்கு அடிமையாகி உயிரை இழந்த இரண்டு சித்தப்பாக்கள் (அம்மா/அப்பா வழியில்) உண்டு.  அதில் ஒரு சித்தப்பா இறந்தபோது பையனும் / பெண்ணும் குழந்தைகள்.  அவர்களை வளர்க்க என் சித்திதான் மிகவும் சிரமப்பட்டார். அவரது முப்பதாவது வயதிலிருந்து இன்னமும்.  

அப்படி இருக்க எல்லா பிராமணர்களுமே நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது.  என் அப்பாவுக்கும் குடிப்பழக்கம் உண்டு, ஆனால் அது எங்களைப்பாதிக்காத வரையில் வெளியோடு நின்றது.  என் தாத்தா (அப்பா வழி) ஏகப்பட்ட தனது சொத்துகளை சீட்டாட்டம்/சூதாட்டத்திற்கு அடிமையாகி இழந்தவர். 

//எனவே தான் மார்க் மட்டுமே பார்க்கப்படாமல், அவனது பின்புலமும் பார்க்கப்படவேண்டிய அவசியம். அதைச் செய்வதே இட ஒதுக்கீடு.//

இதை நான் முன்பே குறிப்பிட்டபடி எதிர்க்கவில்லை.  ஆனாலும் இப்போதுள்ள முறையில் மாறுதல்கள் தேவை.  எல்லா சாதியினரது பொருளாதார நிலையையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

----------------------- நேற்று பஞ்சாங்கத்தை எடுத்து மாமியார் திவசம் எப்போது வருகிறது என பார்த்துக்கொண்டிருந்தேன்.  அதன்மேலே ஒரு வரி (இத்தனை நாளாக கவனிக்கவில்லை) 'இந்த உலகத்தில் பிராமணனாக பிறக்க செய்ததற்கு கடவுளே உனக்கு நன்றி' அப்படின்னு.  

படிச்சதும் சிரிப்பு வந்தது.  சும்மா இதை பகிர்ந்துக்கதான் எழுதினேன்.

அன்புடன்
********

---------------------------------------------------------------------------------------------------

 sengovi blog to *****:

அன்பு நண்பர்களுக்கு,


//இங்கே நான் மாறுபடுகிறேன் செங்கோவி!  //

இடையில் நீங்கள் மாறுபட்டுச் சொல்லியுள்ள விஷயம் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வருவது இல்லையா? அது ஜாதி சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல..அனைத்து சாதிகளுக்கும் உள்ள பிரச்சினை தானே அது.

மற்றபடி நீங்கள் சொல்லிய அனைத்து உண்மைகளையும் நான் உணர்ந்தே இருக்கின்றேன்...

--செங்கோவி

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்புச் சகோதரிக்கு,

நண்பர் செங்கோவி சொன்னது போல்... பிராமணர்கள் கல்வியால் ஓரளவு தப்பிக்க முடிந்தது... வைசியர்கள் அவர்களும் தங்களிடம் இருந்த சொத்துக்களை கொண்டும்.. வர்த்தகத்தைக் கொண்டும் தப்பித்தார்கள்... அதிலே சத்திரியர்கள் தாம் பாவம்.. இதிலே நண்பர் சொல்லக் கூச்சப் பட்டுக் கொண்டும் ஒரு விஷயத்தை விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.. 

அது தென் மாவட்டங்களிலே குறிப்பாக மதுரை மாவட்டத்திலே பரமலைக் கள்ளர்கள் என்று ஒருப் பிரிவினர் இருக்கிறார்கள் அவர்களின் நிலை தான் மிகவும் கொடுமை.. உண்மையில் அவர்கள் வேறு வழயில்லாமல் அதிலும் வானமும் பொய்த்துப் போக கரிசல் நிலங்களிலே வருமானமும் இல்லாமல்.. திருடவே செய்து (குடும்பமே திருடும்) ஜீவனம் செய்தார்கள்.. வீரத்திற்கு பேர் போன பரம்பரை அவர்கள் உண்மையில் பாவம்... 

அவர்களை சுதந்திரத்திற்கு பின்பும் பல அடக்கு முறையிலே அரசாங்கமே கட்டிப் போட்டிருந்தது என்றும் அறிகிறேன்... யாரும் அவர்களை நம்புவதில்லை.... ஊரைவிட்டு வெழியே சென்றால் போலீசிடம் சொல்லிவிட்டுத் தான் போக வேண்டும் என்று இன்னும் பல அடக்கு முறைகள்.. 

இவைகள் யாவும் சரி தான் அதனாலே தான்.. பொருளாதார ரீதியில் சமூகத்தை அரசாங்கம் அணுக வேண்டும்.. சாதி தேவையில்லை.. என்று காலகாலமாக சமுதாய அக்கறை கொண்டவர்கள் சொல்லி வருகிறார்கள்... யார் கேட்பா? 

அது தான் இன்றைய அரசியலின் ஆணி வேர் அது போனால் அவர்கள் பிழைப்பில் மண் விழும்...

நன்றி. 

அன்புடன்
*********
மேலும் வாசிக்க... "பிராமண நண்பருக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_5"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

49 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.